எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, August 27, 2010

பட்டாம்பூச்சிக்கும் உணர்வு உண்டு! 7

ரமேஷ் தொலைபேசியை எடுத்துக் கடைசியாக வில்லன் பேசிய எண்ணுக்கு அழுத்திவிட்டு, "327" என்றான். மறுமுனையில் என்ன சொன்னார்களோ தெரியவில்லை, ரமேஷின் முகம் மிகப்பிரகாசமாக இருந்தது. "எப்படி வழி?" என்று கேட்டான். பின்னர் தொலைபேசியை வைத்துவிட்டு வித்யாவிடம், "அது ஒரு ஓட்டல் அறை எண். ஓட்டல் பெயர் ப்ரின்ஸி ஸ்டார் என்பதாகும். இங்கே தான் பக்கத்திலே அடுத்த தெருவிலே இருக்காம். " என்றான். உடனே ஒரு எண்ணம் தோன்ற வித்யாவை, "நீ இங்கே இரு. அவன் வந்தால் எப்படியாவது சொல்லிச் சமாளி. நான் போய்ப் பார்த்துட்டு வரேன்." என்று கிளம்பினான். வித்யாவோ அவனைத் தனியாக அனுப்பப் பயந்தாள். "அதெல்லாம் முடியாது ரமேஷ், நானும் வருவேன்." என்று சொல்லிய வண்ணம் கூடவே வந்தாள். ரமேஷ் எவ்வளவோ சொல்லியும் அவள் கேட்கவில்லை. "ஒருவேளை அங்கே குழந்தை இருந்தாளென்றால்?? நான் அவளைப் பார்க்கணும்." இப்போது மறுக்க முடியவில்லை அவனால். இருவரும் சென்றனர். ரிசப்ஷனில் அறை எண் 327 பற்றிக் கேட்டனர்.

பின்னர் அங்கிருந்த லிப்டில் ஏறி மூன்றாம் மாடிக்குச் சென்று, அறையையும் கண்டு பிடித்துவிட்டனர். உள்ளே நுழையணும். ஆனால் பூட்டி இருக்குமோ? தள்ளிப் பார்த்தார்கள். ஆம் பூட்டித் தான் இருந்தது. ரமேஷ் மட்டும் மறுபடி கவுண்டருக்குப் போய், "327, சாவியை உள்ளேயே வைச்சுட்டேன் போல, மாஸ்டர் கீயைக் கொடுங்க!" என்று கேட்க, மும்முரமாகக் கணக்கு எழுதிக் கொண்டிருந்த அந்த ரிசப்ஷனிஸ்ட் அவனைச் சரியாகப் பார்க்காமலேயே சாவியைக் கொடுத்தான். இதயம் படபடவென அடித்துக்கொள்ள மெல்ல மெல்ல சத்தமே இல்லாமல் அறையைத் திறந்தார்கள். உள்ளேயும் நுழைந்தனர். விருந்தினர் வந்தால் பேசுவதற்கென போடப் பட்டிருந்த சோபாக்களைத் தாண்டி அறையின் மையப் பகுதிக்கு வந்தாயிற்று. அடுத்துக் குளியலறை ஒரு பக்கம் இருந்தது. பெரிய வார்ட்ரோப் இன்னொரு பக்கம். குளியலறையை ரமேஷ் மெல்லத் திறந்து பார்த்தான். இது வரை யாரையும் காணவே இல்லையே? என்றால்? குழந்தை எங்கே?? அந்தப் பெண் எங்கே? அதற்குள்ளாக வார்ட்ரோபைத் திறந்த வித்யா, "வீல்" என அலறினாள்.

" அமைதி, அமைதி, அமைதி, திருமதி ரமேஷ் அவர்களே! என்னைத் தான் தாங்கள் கடந்த நாலு மணி நேரமாய்ப் பார்க்கிறீர்கள். இப்படிப் பயந்தால் எப்படி??" ரமேஷ் ஆத்திரத்துடன் திரும்ப அந்தப் பெரிய வார்ட்ரோபில் ஒரு பக்கம் சட்டைகள், பாண்ட்கள் மாட்டப் படும் இடத்தில் ஒளிந்து கொண்டிருந்த வில்லன் வெளியே வந்தான். "நினைச்சேன், இரண்டு பேரும் இங்கே தான் வருவீங்க என்று. உங்க குழந்தையை இடம் மாத்தியாச்சு!" என்றான் சற்றும் இரக்கமில்லாமல். "இப்போ எங்கே எங்க குழந்தை? என்று வித்யா கேட்க, அவன் அசட்டையாக வித்யாவை ஒரு பக்கமாய்த் தள்ளி விட்டான். அவன் கையில் நவநாகரீக உடை ஒன்று. அதை வித்யாவிடம் கொடுத்தான். வித்யா கேள்விக்குறியோடு பார்க்க, "உனக்குத் தான், இதை அணிந்து கொண்டு வா. நாம் ராயல் மெரிடீயன் ஓட்டலில் நடக்கும் டிஸ்கோவுக்குப் போகிறோம். இது டிஸ்கோவுக்கு ஏற்ற உடைதானே?" வித்யா அந்த உடையைத் தூக்கி வீசி எறிந்தாள். "பளார்!" இரு கன்னத்தையும் பிடித்துக்கொண்டு வித்யா அங்கே இருந்த கட்டிலில் விழுந்தாள். ரமேஷ் அவன் மீது ஆத்திரத்தோடு பாய, அவன் ரமேஷையும் அடிக்க, பதறிய வித்யா தடுக்க அவளுக்கு மேலும் அடிகள் விழுந்தன. ரமேஷால் பொறுக்க முடியவில்லை. ஏதேனும் ஆயுதம் கிடைத்தால் ஒரே போடாகப் போட்டுவிட்டு ஜெயிலுக்குப்போய்விடலாமா என்று கூட எண்ணினான்.

ஆனால் அதற்குள் வித்யா, அந்த உடையைப் பொறுக்கிக் கொண்டு குளியலறைக்குச் சென்று உடையை மாற்றிக்கொண்டு மேலே ஒரு துண்டால் போர்த்திக்கொண்டு வந்தாள். அவளுக்கு என்னதான் படித்து வேலை பார்த்தாலும் கண்ணியமான ஆடைகளே பழக்கம். இப்படி எல்லாம் அங்கங்கள் தெரியும்படி உடுத்திப் பழக்கம் இல்லை. ஆனால் வில்லனோ, கடுமையாக, "அந்தத் துண்டை எடு! வா என்னுடன்! திருவாளர் ரமேஷ் அவர்களே! ஒரு மணி நேரம் டிஸ்கோவில் இருப்போம். இப்போ நேரம் சரியாக பத்து மணி ஆகிறது. பதினொரு மணிக்கு நாங்கள் அங்கிருந்து கிளம்பிவிடுவோம். ஆகவே இன்னும் ஒரு மணிநேரத்துக்குள்ளாக அங்கே வந்தாயானால் உன் மனைவியை நீ அழைத்துச் செல்ல முடியும். நானே கொண்டு விட்டாலும் விடுவேன். ஆனால் ஒரு செகண்ட் பிந்தினாலும் உன் மனைவி உனக்குச் சொந்தம் அல்ல." என்றான். ரமேஷ் ஆத்திரத்தோடு, "ஒரு மணி நேரம் என்ன? உனக்கு முன்னாலேயே நான் போய்க் காத்திருப்பேன்." என்று சொல்ல, 'ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்??? இல்லை தம்பி, இல்லை! நீ உன்னுடைய காரிலே வரும் எண்ணம் இருந்தால் அதை விட்டு விடு. உன் மனைவி அந்தக் காரில் என்னோடு வருகிறாள். இரு, இரு, சட்டைப் பையில் ஏதானும் பணம் வைத்திருக்கிறாயா எனக்குத் தெரியாமல்?? " ஒரு கையால் வித்யாவைத் துப்பாக்கியைக் கொண்டு பயமுறுத்திக்கொண்டே இன்னொரு கையால் ரமேஷை சோதனைபோட்டான். அவன் கையில் பயன்படுத்த முடியாத க்ரெடிட் கார்டுகளைத் தவிர வேறேதுவும் இல்லை என்று கண்டதும் சிரித்தான். "இது! இது தான் நல்ல பையனுக்கு அடையாளம்! ஒரு மணி நேரம், ஒரு மணி நேரத்திலே வந்துடு தம்பி!" தர தரவென்று வித்யாவை இழுத்துக்கொண்டு சென்றான் அவன்.

ரமேஷ் அங்கிருந்து கிளம்பி ராயல் மெரிடியன் ஓட்டலை நோக்கி நடந்தான். கால்கள் கெஞ்சின. மணி பார்க்கலாம் என்றாலும் அதுவும் இயலவில்லை. உத்தேசமாய் மணியைத் தெரிந்து கொண்டு நடந்தான். ஒரு வழியாய் ஓட்டலை அடைந்து விட்டான். ஓட்டல் லவுஞ்சில் மணி பதினொன்று ஆகி ஐந்து நிமிடம் ஆகப் போகிறது. ரமேஷ் பதறினான். டிஸ்கோ நடக்கும் இடம் கேட்டுக் கொண்டு ஓடினான். அங்கே யாரும் இல்லை. ஹாலே காலி! ஒவ்வொரு இடமாய்த் தேடினான். திரும்ப கார்கள் நிறுத்தி இருந்த இடத்துக்கு வந்து, தங்கள் காரைத் தேடினான். அப்போது தான் அவன் கார் பாதாளத்தில் இருந்த பார்க்கிங் ஏரியாவில் இருந்து வந்து கொண்டிருந்தது. ரமேஷ் ஓட்டமாய் ஓடினான்.

கார் ரமேஷைப் பார்த்ததும் நின்றது. கதவைத் திறந்த வித்யாவைப் பார்த்த ரமேஷ் பின்னால் இருந்த வில்லனிடம், "நான் அப்போவே வந்துவிட்டேன். விடு என்னையும், என் மனைவியையும். இதோடு போகட்டும்." என்று சொன்னான். "உன் மனைவியைக் கேள். அவளை நான் எவ்வளவு மரியாதையோடு நடத்தினேன் என்று." என்றான் வில்லன். ரமேஷ் வித்யாவைப் பார்க்க அவளும் ஆமோதித்தாள். இப்போது அவனையே சிறிது நேரம் உற்றுப் பார்த்த வில்லன், "சரி, காரில் ஏறி உட்கார். நீ உன் குடும்பத்துக்காக எது வேண்டுமானாலும் செய்வாய் அல்லவா?" மீண்டும் கேட்டான்.

"என்ன எதிர்பார்க்கிறாய் என்னிடம்??? ஏற்கெனவே நான் சம்பாதித்த பணம், நகைகள், சேமிப்புப் பத்திரங்கள் எல்லாம் போயாச்சு. எல்லாவற்றுக்கும் மேலே என்னோட வேலை அதுக்கே உலை வைத்துவிட்டாய்! என் மனைவியையும் அபகரிக்கப் பார்த்தாய்! இன்னும் என்ன செய்தால் எங்களை விடுவாய்??"

கலகலவெனச் சிரித்த வில்லன், " காரை நீயே ஓட்டு ரமேஷ். நான் வழி சொல்கிறேன்." என்றான். அவன் வழி சொல்லக் கார் கிழக்குக் கடற்கரைச் சாலையில் பறந்தது. சற்று நேரத்தில் ஒரு பண்ணை வீடு வந்தது. மிகவும் அழகான பண்ணை வீடு. யார் அந்த வீட்டில் இருக்கக் கொடுத்து வைத்திருக்காங்களோ என்ற எண்ணம் ரமேஷின் மனதில் உதயம் ஆயிற்று. அடுத்த கணம் காரை அந்தப் பண்ணை வீட்டில் நிறுத்தச் சொன்ன வில்லன். ரமேஷின் கையில் தன் துப்பாக்கியைக் கொடுத்தான். "இதோ பார்! இதில் குண்டுகள் இருக்கின்றன. உனக்கு எதிரேயே நிரப்பி இருக்கிறேன். பார்த்திருப்பாய் அல்லவா? நீ இந்த வீட்டுக்குள் சென்று இந்த வீட்டில் தற்சமயம் இருக்கும் ஒரு நபரைச் சுட்டுக் கொல்ல வேண்டும். அவ்வளவே!" என்றான்.

தூக்கி வாரிப் போட்டது ரமேஷுக்கு. என்னமோ அல்வா சாப்பிடு என்கிறாப்போல் அல்லவா சொல்கிறான்?? என்ன இது? ஏதோ சிக்கலில் மேலும் மாட்டிவிடப் போகிறான் போல் தெரிகிறதே? ரமேஷ் உறுதியாக மறுத்தான். என்ன ஆனாலும் சரி, நான் இதற்கு ஒத்துக்கொள்ள மாட்டேன் என்று நினைத்த வண்ணம் திட்டவட்டமாய் மறுத்தான்.

4 comments:

  1. super fasst express. enna nadakuthunu puriyala

    ReplyDelete
  2. சற்றும் எதிர் பாராத திருப்பங்கள் !
    கதையும் ராக்கெட் வேகத்தில் போய் கொண்டு இருக்கிறது !

    வித்யாவை கொடுமை படுத்தும் வில்லனை மூன்சிலேயே குத்தற மாதிரி ஏதாவது செய்யுங்க கீதாம்மா


    உங்களால் எதாவது ஊகிக்க முடிகிறதா தங்க மணி (ATM )!!

    ReplyDelete
  3. ம்ஹூம் தலைவி இதோ மாதிரி போயிக்கிட்டே இருந்தா சரியில்லைன்னு தோணுது.

    கதையாக இருந்தாலும் இந்த மாதிரி தொடர்ந்து தொல்லைகளை படிக்க முடியவில்லை.

    சீக்கிரம் ஏதாச்சும் வழியை சொல்லுங்க ;)

    ReplyDelete
  4. தொடர்ந்து படித்து வருகிறேன்...

    ReplyDelete