எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, May 19, 2012

ஆனந்தம், ஆனந்தம், ஆனந்தமே!


இந்த குருவைச் சந்திக்கும் மாயாவுக்கு அவருடைய ஜீன்ஸும், கதர் ஜிப்பாவும் மட்டுமின்றி அவர் கிராப்தலையுடனும், ஸ்போர்ட்ஸ் ஷூவுடனும் காணப்பட்டதும் ஆச்சரியத்தை அளிக்கிறது.  இந்த குரு “ஆன்மிகம்” பேசவும் இல்லை.  “பெண்மிகம்” தான் பேசுகிறார்.  ஆரம்பமே அதிர்ச்சியாக உள்ளது.  பெண்களின் பிரச்னைகள் அனைத்துமே “மென்” என்னும் பெயரில் ஆரம்பிப்பதைச் சுட்டிக் காட்டி அதிர வைத்தார்.  மென்ஸ்ட்ருவேஷன், மெனோபாஸ், மெண்டல் ஸ்ட்ரெஸ் என அனைத்துமே ஆண்களில் தான் ஆரம்பிக்கிறது என்பதாலேயே பெண்கள் ஆண்களோடு போட்டி போட ஆரம்பித்துவிட்டார்கள் என்பதை எடுத்துச் சொன்னார்.  பெண்கள் தங்களைச் சுதந்திரமானவர்களாகக் காட்டிக் கொள்ள ஆண்களோடு போட்டி போடுவது தேவையில்லை என்பதையும் கூறினார்.  ஏன் ஆண்களோடு போட்டி போட்டுக்கொண்டு அவர்களாகவே மாற வேண்டும்? பெண்ணோ, ஆணோ இறைவன் படைப்பு. வெவ்வேறு காரணங்களுக்காக வித்தியாசமாகப் படைக்கப்பட்டதை அப்படியே எடுத்துக்கொள்ள வேண்டும்.

சோதனைக்கு உள்ளாகும் பெண்கள் அதிலிருந்து சொந்தத் திறமையாலேயே மீண்டு வரவேண்டும்.  அது சில சமயங்களில், பல சமயங்களிலும் அவர்கள் திறமையை மீறியதாய் இருக்கும்தான்.  வாழ்க்கை என்பது ஒத்து வாழ்வதில் மட்டுமில்லாமல் ஒருவர் இன்னொருவரிடம் இருக்கும் குறை,நிறைகளை அலசிப் பார்த்துக் கேள்வி கேட்டுத் தெரிந்து கொண்டால் தான் நல்லது. ஒருவரை ஒருவர் எந்தக் கேள்வியும் கேட்காமல் இருவர் சேர்ந்து வாழ்வதில் சுதந்திரம் இல்லை.  கணவனோ, மனைவியோ ஒருவரை ஒருவர் குற்றங்குறைகளைத் தட்டிக் கேட்க வேண்டும்.  அப்போது தான் வாழ்க்கை முன்னேற்றத்துக்கு நல்லது.  ஆண்களின் உலகில் பெண்ணாக இருப்பது கடினம் என்பதோடு அந்தப் பெண்மையைக் காப்பது அதை விடக் கடினம்.  பெண் என்னும் தன்மையைப் புரிந்து கொண்டு பெண்ணாகவே ஆணை எதிர்கொள்ள வேண்டும்.

இங்கே குருஜி மாயாவுக்கு மீராவை உதாரணம் காட்டிப் புரிய வைக்கிறார்.  கிருஷ்ணனையே நினைக்கும் மீராவுக்குக் கல்யாணம் செய்து வைத்தும் குடும்பத் தலைவியாக இருந்து கொண்டே கண்ணன் மேல் காட்டிய பக்தியையும் விடாமல் எல்லாச் சோதனைகளையும் வென்று வந்து கண்ணனோடு ஐக்கியமானதை எடுத்துச் சொல்கிறார்.  ஒரு மீராவால் முடிந்தது உன்னால் முடியாதா?  நீ யாருக்கும் தீங்கு விளைவிக்கும் செயலைச் செய்யவில்லை.  ஆகவே எதைக் குறித்தும் கவலை வேண்டாம்.  நீ நீயாக இரு.  நீ சமூகத்தின் அங்கம் என்னும் நினைப்பை விட்டுவிட்டு உன் போன்றவர்களின் தொகுப்பே சமூகம் எனப் புரிந்து கொள்.  இவரை குரு என அவர் சொல்லிக் கொள்ளாவிட்டாலும் அனைவரும் அப்படியே அழைக்கின்றனர்.  ஆனால் இவருக்கும் ஈகோவோ என்னும்படியாக சினிமா நடிகையைக் காக்க வைக்கிறார்.  ஆனால் குருவோ ஒழுங்கு முறை என்பது தனிப்பட்ட ஒரு நபர் தன்னுடைய சொந்த ஆர்வங்களை ஒரு குழுவிற்காக விட்டுக் கொடுக்கிறது தான் என்கிறார்.   அதோடு நடிகைக்குத் தன்னை எல்லாரும் கவனிப்பது உள்ளூரப் பிடித்தே இருந்தது என்றும் அவளுடைய ஆனந்தமானது அவள் சம்பாதிக்கும் பணம், காசிலோ, சொத்துக்களிலோ, விலை உயர்ந்த கார்களை வாங்கிச் சேர்ப்பதிலோ இல்லை என்பதை அவள் இப்போது தான் புரிந்து கொள்ள ஆரம்பித்திருப்பதையும் சுட்டிக் காட்டுகிறார்.

மாயாவுடன் வேலை செய்யும் பேராசிரியை மூலமாக நம்மிடையே உள்ள நான்கு கதவுகள் கொண்ட ஜன்னலைக் காட்டி அதை விளக்கும் விதம் அருமை. ஒரு ஜன்னல் நமக்கும் தெரியாது, மத்தவங்களுக்கும் தெரியாது.  இருண்டிருக்கும்.  அடுத்ததோ மத்தவங்களுக்குத் தெரியாது; நமக்கு மட்டும் தெரியும்.  இது நாம் மறைத்தது.  அடுத்தது மத்தவங்களுக்குத் தெரிஞ்சது; ஆனால் நமக்குத் தெரியாதது.  இது நமக்கு மறைக்கப் பட்ட ஒன்று.  ஒரே ஒரு கதவு தான் நமக்கும், மத்தவங்களுக்கும் தெரிஞ்சதா இருக்கும்.  அது தான் நாமும், அவங்களும் ஒருவரோடொருவர் பகிர்ந்து கொண்டது.  எல்லாக் கதவையும் திறக்கச் சொல்கிறார் குருஜி!  கதவைத் திற! காற்று வரும்னு புரிஞ்சுண்டா நான் பொறுப்பில்லை! :P  ஆணோ, பெண்ணோ, முக்கியமாய்ப் பெண்கள், குடும்பத் தலைவிகள் தனக்கு என ஒரு நாளில் ஒரு மணி நேரத்தையாவது செலவழிக்கப் பழக வேண்டும்.  அதே போல் வாரம் ஒரு நாள் சமையல் வேலையிலிருந்தும் ஓய்வு எடுக்கலாம்.  இது என் போன்றவர்களுக்குச் சிரமமான ஒன்று.  அவரவர் விருப்பம்.  ஒரு நாளில் ஒரு மணி நேரமாவது தனக்காகச் செலவழித்துக்கொண்டு தனக்காச் சிந்திக்கும் வழக்கத்தையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.  குழந்தைகளைப் போல அந்த அந்தக் கணத்திலேயே வாழ்க்கையை அனுபவித்துக்கொண்டு ரசித்துக் கொண்டு வாழப் பழக வேண்டும்.

6 comments:

  1. குழந்தைகளைப் போல அந்த அந்தக் கணத்திலேயே வாழ்க்கையை அனுபவித்துக்கொண்டு ரசித்துக் கொண்டு வாழப் பழக வேண்டும்.


    "எண்ணங்கள் -ஆனந்தம், ஆனந்தம், ஆனந்தமே!"

    ReplyDelete
  2. மிக விரிவான விமர்சனம் செய்து எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளீர்கள்.

    ReplyDelete
  3. வாங்க ராஜராஜேஸ்வரி, வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  4. வாங்க ஶ்ரீராம், நாலைந்து நாட்களாய்க் காணோம்னதும் பிசி அல்லது உடம்பு சரி இல்லையோ? னு நினைச்சேன். அப்புறமாத் தான் ரா.ல. பதிவிலே பார்த்தேன் உங்களை. :))))) பிசியா இருக்கும்னு நினைச்சேன்.

    ReplyDelete
  5. இத்தனை விரிவாக எழுதி இருக்கிறீர்களே கீதா. மஹா பொறுமை.மீண்டும் இந்தப் புத்தகத்தைப் படிக்கவேண்டும் என்கிற ஆசை வருகிறது.

    ReplyDelete
  6. வாங்க வல்லி, பொறுமையெல்லாம் எதுவும் இல்லைங்க. எனக்கு எந்த அளவு புரிஞ்சிருக்குனு ஒரு அலசல் அவ்வளவே. :))))))

    ReplyDelete