எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, August 04, 2012

உபநயனம் என்றால் என்ன 6


வாமன அவதாரத்தில் வாமனனாக வந்த மஹா விஷ்ணுவுக்கு உபநயனம் நடந்தபோது சூரியன் காயத்திரியை உபதேசம் செய்ததாகவும்,  உபவீதத்தை ப்ரஹஸ்பதியும்; மேகலையை கச்யப ப்ரஜாபதியும்; நீண்ட ஆயுள், யஷஸ் தரும் மான்தோலை பூமிதேவியும்; நல்ல புத்தி, வேதத்தை காத்தல் இதன் பொருட்டு பலாச தண்டத்தை ஸோமனும்; இந்திரிய நிக்ரஹத்தைத் தர கௌபீனத்தை அதிதியும்;   குடையை தேவலோகமும்; தீர்த்த பாத்திரத்தை ப்ரம்மாவும்; சுத்தம் தரும் குச புற்களை ஸப்த ரிஷிகளும்; ஜப மாலையை ஸரஸ்வதியும் பிட்சை எடுக்கும் பாத்திரத்தை குபேரனும்; உலகுக்கே தாயாரான உமாதேவி பிக்ஷையையும் அளித்ததாகச் சொல்லி இருக்கிறது.  இவ்வளவு சக்தி வாய்ந்த உபநயனம் என்பது வெறும் பூணூலைப் போடும் ஒரு நிகழ்ச்சி மட்டுமில்லை என்பதைப் புரிந்து கொள்வோம்.  தற்காலங்களில் கெளபீனத்துக்குப் பதிலாக வெண்பட்டு வந்துவிட்டது;  அதே போல் பெற்றோரும் ஆடம்பரமாகவே ஒரு திருவிழாவைப்போலவே உபநயன சமஸ்காரத்தை நடத்துகின்றனர்.  யாருக்கும் இதன் அருமை தெரியவில்லை என்றே சொல்ல வேண்டும்.

இந்த ப்ரஹ்மோபதேசம் தான் உபநயனத்தில் மிக முக்கியமான சடங்கு ஆகும்.   கூடி இருக்கும் பெரியோர்களிடம் அநுமதி பெற்றுக்கொண்டு,  நவக்ரஹங்களுக்கு வழிபாடுகள் செய்து அவற்றைத் திருப்தி செய்து, ஆசாரியருக்குப் பாத பூஜை செய்து,  அவரிடம், “ஸாவித்ரியை எனக்கு உபதேசம் செய்யுங்கள்.” என விண்ணப்பிக்க வேண்டும்.  வெண்பட்டால் தந்தை, குரு, மாணவன் மூவரையும் மூடிக் கொண்டு உபதேசம் நடக்கும்.  குரு உபதேசம் செய்ததும், பலாச தண்டம் எடுத்துக் கொண்டு மாணவனே ஆசாரியருக்கு தக்ஷிணை கொடுப்பான்.  பின்னர் குருவானவர் சூரிய வழிபாட்டைப் பற்றியும் சொல்லிக் கொடுப்பார்.  மந்திரங்கள் மூலம் பல்வேறு விதமான உபதேசங்கள் செய்வார்.  பிரமசரியத்தை அநுஷ்டிக்கும் விதம் குறித்தும் சொல்லிக் கொடுப்பார்.   பிரமசரியம் அநுஷ்டிக்கும் மாணவன் பிக்ஷை எடுக்க வேண்டும்;  பிக்ஷை எடுத்தே உணவு உண்ண வேண்டும் என்று சொல்வார்.  மாணவன் “அப்படியே செய்வதாக” வாக்குக் கொடுப்பான்.  இதன் பின்னரே மாணவன் பிக்ஷை எடுக்க வேண்டும்.  முதல் பிக்ஷை தாயார் இருந்தால் தாயாரும், பின்னர் பிக்ஷையை மறுக்காத எந்தப் பெண்மணியானாலும் பிக்ஷை இடலாம்.  அதன் பின்னர் தந்தை இன்னும் வேறு யாரேனும் பிக்ஷை இட்டால் வாங்கிக் கொண்டு ஆசாரியரிடம் அதைக் காட்டி அவர் அநுமதி கொடுத்த பின்னரே உணவு உட்கொள்ள வேண்டும்.  இதுதான் நடைமுறை.

இப்போதெல்லாம் இப்படி நடைபெறுவதில்லை.  பிக்ஷை என்னமோ எடுக்கிறாங்க தான்.  அரிசியும் போடுவார்கள் தான்.  ஒவ்வொரு கிண்ணம் அரிசியும் தனியாக அவரவர் கொண்டு வந்து போட்டுக் கொண்டிருந்தது போய்விட்டது இப்போதெல்லாம்.  அதற்குப் பதிலாக உபநயனம் நடக்கும் வீட்டுக்காரர்களே குறிப்பிட்ட அளவு அரிசியை ஒரு பெரிய அடுக்கில் அல்லது அண்டாவில் வைத்துவிடுகிறார்கள்.  யாருக்கெல்லாம் பிக்ஷை போட ஆசையோ அவர்கள் எல்லாம் அந்த அண்டாவில் இருந்து எடுத்துப் போட்டுக் கொண்டிருக்க வேண்டியது தான்.  திரும்ப அதே அண்டாவில் கொட்டப்பட்டு மீண்டும் வேறு யாரானும் அதே அரிசியை பிக்ஷை போடுவார்கள். இவை சமீப காலங்களில் நடைபெறுகிறது.   எங்கள் பக்கம் பிக்ஷை இடுகையில் கையில் மட்டைத்தேங்காயோடு வெள்ளிக்காசு ஒன்றும் வைத்துக்கொண்டு பிக்ஷை இடுவார்கள்.  இப்போதெல்லாம் மட்டைத்தேங்காய் வைத்துக்கொள்வது குறித்து யாருக்கும் தெரியவில்லை.  காசு வைத்துக்கொள்வது என்பது ஒரே காசைத் திரும்பத் திரும்ப பிக்ஷை இடும் அனைவரும் பயன்படுத்துகின்றனர்.  :((  


உபநயனம் முடிந்ததும் அந்த பிரமசாரி உப்பு, காரம் மிதமான அளவில் உள்ள உணவையே உட்கொள்ள வேண்டும் .  மிகவும் ஆசாரமாக இருப்பவர்கள் உப்பு, காரத்தையே விலக்குவார்கள்.  குறைந்தது மூன்று நாட்களாவது பிக்ஷை எடுக்க வேண்டும்.  அரிசியாகவோ, அன்னமாகவோ பிக்ஷை எடுக்கலாம்.  சந்தியா உபாசனையை விடாமல் செய்ய வேண்டும்.  காலையில் தினம் சமிதா தானம் செய்ய வேண்டும்.  பகலில் உறங்கக் கூடாது.  நான்கு நாட்கள் உபநயனத்தன்று அணிந்த அதே துணியை அணிய வேண்டும்.  நான்காம் நாள் ஆசாரியர் வேறு துணியை உடுத்தக் கொடுத்ததும் துணியை மாற்றலாம்.  நான்காம் நாள் பலாச கர்மா என்பது நடக்கும்.  இப்போதெல்லாம் அது யாருக்கும் தெரியாது.  ஆசாரியரோடு சென்று  தேவதைகளை ஆவாஹனம் செய்து பழைய பலாச தண்டத்தை விட்டு விட்டு, புதியதாக ஒன்று எடுத்துக்கொள்வார்கள்.  இது தான் பலாச கர்மா.  இதற்கு கிழக்கு அல்லது வடக்குத் திசையில் செல்லவேண்டும் என்றும் புரச மரத்தடியில் மண்ணால் பிரணவ தேவி, ஷ்ரத்தா தேவி, மேதா தேவி ஆகியோருக்குத் திட்டுகள் அமைத்து மந்திரங்களால் போற்றி ஆவாஹனம் செய்து வழிபடுவார்கள் என தி.வா. சொல்கிறார்.

இந்த உபநயனம் நடைபெறும் முன்னரே வீட்டில்  இருந்த பெரியோர்களில் சுமங்கலிகளாக இறந்த பெண்மணிகளை நினைத்து சுமங்கலிப் பிரார்த்தனை எனச் செய்வதுண்டு.  இதற்கு நாள் பார்க்க வேண்டும்.  சாதாரணமாக புதன், வெள்ளி, திங்கள் கிழமைகளில் தான் செய்வார்கள்.  இதை உபநயனத்துக்குக் குறிப்பிட்டிருக்கும் நாளுக்கு முன்னாலேயே செய்து விட வேண்டும்.  இதை அடுத்து வெங்கடாசலபதி சமாராதனையும் பல வீடுகளில் வழக்கம் உண்டு.  அநேகமாய் வெள்ளிக்கிழமை சுமங்கலிப் பிரார்த்தனையும், சனிக்கிழமை சமாராதனையும் செய்வார்கள்.  இதை எல்லாம் செய்து முன்னோர்களிடமும், கடவுளிடமும் உபநயனம் நல்லபடியாக முடியப் பிரார்த்திப்பார்கள்.   பூணூல் இல்லாமல் செய்யும் எந்தக் கர்மாவும் பலனைத் தராது என்பதாலேயே பூணூலே போடாத ஆண்களுக்கும் தேவைப்பட்ட நேரத்தில் சட்டைக்கு மேலேயாவது பூணூலை மாட்டிச் செய்ய வைக்கிறார்கள்.  இதை பிரம்ம சூத்திரம் என்றும் சொல்வதுண்டு.  இதுவே மனிதனின் மனதை ஒருமைப் படுத்தி அவன் தவத்தைக் காக்கும் கவசமாகச் செயல்படுகிறது என்பது ஆன்றோர் வாக்கு.


சரி, இப்போ காயத்ரி அல்லது சரஸ்வதி என்றால் என்னனு பார்ப்போமா?





ஓம்  பூர்: புவ: ஸுவ:  தத் ஸவிதுர் வரேண்யம் 
பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ: யோந: ப்ரசோதயாத்

இதுதான் மந்திரம்.  எல்லா பூஜைகளிலும் முதன் முதல் சொல்லப்படுவதும் இதுவே.  இதைச் சொல்லாமல் எந்த வழிபாடும் ஆரம்பிக்காது.  இதில் இருந்தே  இதன் முக்கியத்துவம் தெரிகிறது அல்லவா?  இதைக் கண்டறிந்தவர் விஸ்வாமித்திரர்.  இந்த காயத்ரி மந்திரம் ஜபிக்கப்பட்ட பின்னரே மற்ற மந்திரங்கள் சொல்லி எந்த வழிபாடும் ஆரம்பிக்கும்.  பெண்களால் செய்யப்படும் வழிபாடுகள் உள்பட.   பெண்களும் அவர்கள் செய்யும் எந்த வழிபாட்டிலும் இந்த மந்திரத்தை முதலில் சொல்ல வேண்டும்.  இந்த மந்திரத்திற்கு காயத்ரி என்ற பெயரைத் தவிர சாவித்ரி, சரஸ்வதி என்ற பெயர்களும் உண்டு.  ஏனெனில் இந்த மந்திரத்தைக் காலையில் காயத்ரிக்காகவும், நண்பகலில் சாவித்ரிக்காகவும், மாலையில் செய்யும் சந்தியாவந்தனத்தில் சரஸ்வதிக்காகவும் ஜபிக்க வேண்டும் என்பார்கள்.  அதே போல ஜபிக்கும் முறையும் காலையில் கிழக்குமுகமாக சூரியனைப் பார்த்துக் கொண்டு கைகளை முகத்துக்கு நேரே கூப்பியும்,  நண்பகலில் கிழக்குப் பார்த்து அமர்ந்து கைகளை மார்புக்கு நேரே கூப்பியும், சூரிய அஸ்தமனம் ஆகும் மாலை நேரத்தில் மேற்கு முகமாக அமர்ந்து கைகளை நாபிக்கு நேரே கூப்பியும் இருந்த வண்ணம் ஜபிப்பார்கள்.

24 அக்ஷரங்கள் கொண்ட இதில் "ௐ" என்ற பிரணவம் தவிர 3 வ்யாஹ்ருதிகள், 3 பாதங்கள் இருப்பதாய்ச் சொல்வார்கள்.  இதைச் சொல்லும் முறையும் இருக்கிறது.  எனக்கு அவ்வளவெல்லாம் தெரியாது.  ஆனால் அவசரம் அவசரமாக ஜபிக்கக் கூடாது.  மனம் ஏதோ ஒன்றை நினைத்திருக்க கடனுக்கு காயத்ரியை ஜபிக்கலாகாது.


இதன் பொருளானது பூ உலகம், மத்ய உலகம், மேல் உலகம் மூன்றுக்கும் சக்தியான அந்தப் பரம ஜோதி ஸ்வரூபத்தைத் தியானிப்போம்.  அந்த சக்தியை தியானிப்பதால் நமக்கு ஞானமாகிய வெளிச்சம் கிட்டட்டும்.  என்பதுவே.



இந்த வருட காயத்ரி ஜபம் அன்று இதை வெளியிட நினைத்தேன்.  முடியவில்லை. :(  ஆனாலும் இதன் பிறகாவது அனைவரும் சொல்லும் காயத்ரி மந்திரத்தைப்பொருளுணர்ந்து அனைவரும் சொல்லி லோக க்ஷேமத்துக்குப் பிரார்த்திப்போம்.  


அனைவரும் நலமான வாழ்க்கை வாழப் பிரார்த்தனைகளுடன் உபநயன சம்ஸ்காரம் பற்றிய பதிவு முடிவடைந்தது.




தகவல்கள் உதவி:  தெய்வத்தின் குரல், திரு திவாஜி, திரு சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்.

14 comments:

  1. THelivana vilakam. ippa pala per kalyanthappathan poonal pottukaranga. appadiye munnadi pottukittalum nithyakarma panrathu illai. :(

    palaruku ithu oru sadangau avvalave

    ReplyDelete
  2. தெரிந்தது, தெரியாதது, மறந்தது எல்லாம் படித்துத் தெரிந்து கொண்டேன். அவசரமாகச் சொல்லக் கூடாது. சரி, ஆனால் இந்தக் காலத்தில் கடிகாரத்தில் ஒரு கண்ணும் கையில் ஆயிரத்தெட்டின் கணக்குமாக வைகை வேகத்தில்தான் சொல்ல வேண்டியிருக்கிறது! எல்லாம் கடமையாகி விட்டது!பொருளுணர்ந்து, பெருமையுணர்ந்து சொல்வார் பெரும்பாலும் யாருமில்லை!

    ReplyDelete
  3. சிறப்பான தொடர். பல விஷயங்கள் எல்லோருக்கும் புரியும்படி சொன்னது நன்று...

    ReplyDelete
  4. நன்றி எல்கே. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  5. வாங்க ஸ்ரீராம், இது அவசர யுகம்; எல்லாமே அவசரம் தானே.

    ReplyDelete
  6. நன்றி வெங்கட்.

    ReplyDelete
  7. பதிவு விவரமாக இருக்கிறது.

    பாரம்பரியம் சடங்கு தொடர்ச்சி இதையெல்லாம் தவிர இதனால என்ன பலன் என்று எப்போதுமே எனக்கு தோன்றி வந்திருக்கிறது.

    ReplyDelete
  8. பொருள் சரி, பெருமை என்னனு தெரியலியே ஸ்ரீராம்?

    ReplyDelete
  9. அப்பாதுரை, அப்படி சாதாரணமாக நினைக்கக் கூடாது. உண்மையில் இதன் சிறப்பு யாருக்கும் தெரியலை. அதைத் தான் ஸ்ரீராம் பெருமை என்கிறார். க்ஷத்திரியர்கள் உடல்ரீதியான பாதுகாப்பைத் தருகிறார்கள் எனில் பிராமணர் மனரீதியான பாதுகாப்பையும், ஆன்ம பலத்தையும் உலகுக்கு அளிக்கிறார்கள். உலக க்ஷேமம் தான் பிராமணனின் குறிக்கோளாக இருந்தது; இருக்கவேண்டும். தற்கால கட்டத்தில் வியாபாரமாக மாறிவிட்டது. :(((( என்றாலும் எனக்குத் தெரிந்து பல ஐடி ப்ரொஃபஷனல்களில் இருந்து மருத்துவர்கள் வரை தற்காலத்தில் இதன் பெருமையை உணர்ந்து மாறி வருகிறார்கள் என்பதையும் பார்த்து வருகிறேன். ஆகவே கொஞ்சம் நம்பிக்கையும் இருக்கிறது.

    ReplyDelete
  10. பேருந்தில் பயணிக்கும் பொழுது மனதிற்குள் காயத்ரி ஜபிக்கலாம் என்று கேள்வி பட்டிருக்கிறேன். அது சரியா தவறா என தெரியவில்லை.... தினமும் காலை பண்ணுவேன்.. மாலை ..வீட்டுக்கு வரதே இரவுதான் அப்புறம் எங்க பண்ண

    ReplyDelete
  11. நான் பல நாட்கள் காயத்ரி ஜபம் செய்யாமல் விட்டுவிட்டேன் நான் மருபடியம் உபதேதம் பெற்று செய்யவேண்டுமா எப்படி என்று கூறவும் நன்றி

    ReplyDelete
    Replies
    1. @Rsn. Rameshachar, வேண்டியது இல்லை. ஒரு நல்ல நாளில் காலை உங்கள் குலதெய்வத்தைப் பிரார்த்தித்துக் கொண்டு காயத்ரியை ஜபிக்க ஆரம்பிக்கவும். முதலில் 108 சொல்ல முடியுமா எனப் பாருங்கள். இல்லைனா 16, 24 எனக் கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பித்துச் சொல்லி வரவும். பயணங்களிலும் விடாமல் மனதுக்குள் சொல்லி வாருங்கள். வாழ்த்துகள்.

      Delete
  12. நான் பல நாட்கள் காயத்ரி ஜபம் செய்யாமல் விட்டுவிட்டேன் நான் மருபடியம் உபதேதம் பெற்று செய்யவேண்டுமா எப்படி என்று கூறவும் நன்றி

    ReplyDelete
  13. நான் பல நாட்கள் காயத்ரி ஜபம் செய்யாமல் விட்டுவிட்டேன் நான் மருபடியம் உபதேதம் பெற்று செய்யவேண்டுமா எப்படி என்று கூறவும் நன்றி

    ReplyDelete