எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, April 29, 2014

ஈயம், பித்தாளைக்குப் பேரீச்சம்பழம் வேண்டாங்க! இங்கே கொடுங்க!

 

இந்தப் படம் ஏற்கெனவே போட்டுட்டேன்.  திரு இன்னம்புரார் வீட்டுச் சந்திப்பில் கலந்து கொண்டபோது அரிசி உப்புமா பண்ணி எடுத்துச் சென்றேன்.  அப்போ இந்தப் பெரிய உருளியில் செய்தேன்.  இதில் செய்தால் எத்தனை மணி நேரம் வைத்திருந்தாலும் களிம்பு ஏறிக் கைத்துப் போகாது.  கைக்காத வெண்கலம் என்றே சொல்வோம் இதை.  இவை அதிகமாய்க் கிடைக்குமிடம் முன்னெல்லாம் நாகர்கோயில்.  நாகர்கோயில் வெண்கலம் என்றும் சொல்வார்கள்.  என்னுடைய வெண்கலப் பானை, வெண்கல உருளி எல்லாமும் நாகர் கோவில் வெண்கலம் தான்.



படத்தில் முன்னால் தெரிவது பித்தளைத் தாம்பாளம். ஒரு லிட்டர் தண்ணீர் கொள்ளுமளவுக்கு ஆழமானது.  இதில் சாப்பாடுகள் வைக்க முடியாது.  பூஜை, தர்ப்பணம் இன்ன பிறவற்றிற்குப் பயன்படுத்துகிறோம்.  பின்னால் தெரியும் வெண்கலப்பானை கால்படி வெண்கலப்பானை என்று பெயர்.  ஆனால் நல்ல அரிசி என்றால் கால்படி போட முடியாது.  கால்படி என்பது மெட்ராஸ் வழக்கில் இரண்டு ஆழாக்கு ( 400) கொள்ளளவு.   தென்மாவட்ட வழக்கில் இரண்டு அரைக்கால்படி உழக்கால் போட்டால் கால்படி. அதே (400) கொள்ளளவு.  சொல்வது தான் மாறுபடும். பக்கத்தில் உள்ளது சின்ன உருளி. இதுவும் வெண்கலம் தான்.  இதிலும் உப்புமா, பொங்கல் போன்றவை செய்யலாம்.  குழம்பு வைக்கலாம். மேலுள்ளதிலும் குழம்பு வைக்கலாம்.  இனிப்புகள் செய்ய சர்க்கரைப் பாகு வைத்துக் கிளறலாம்.  அடிப்பிடிக்கும் பயம் இல்லாமல் கிளற முடியும்.  மேலுள்ள உருளியில் தான் முதல் முதல் கோதுமை அல்வாவும், மைசூர்ப்பாகும் செய்யக் கற்றுக் கொண்டேன்.


மாக்கல் சட்டி இது.  கல்சட்டி சமையல் என்றாலே தனி ருசி தான்.  இன்று கூட முருங்கைக்காய்க் குழம்பு இதில் தான் செய்தேன்.  கீரை மசிப்பதெனில் கல்சட்டி தான்.  ஊறுகாய்கள், உப்பு, புளி, மாவடு போட்டு வைக்கலாம்.  இதைவிடப் பெரிய கல்சட்டி எல்லாம் எங்க வீட்டில் இருந்தன.  என்னைக் கேட்காமலேயே எல்லாத்தையும் கொடுத்துட்டாங்க.  இது நான் ரொம்ப ஆசைப்பட்டுக் கும்பகோணத்தில் வாங்கினது.  வாங்கினதும் எண்ணெயில் மஞ்சள் பொடியைக் குழைத்துக் கல்சட்டியில் தடவி ஊற வைக்க வேண்டும்.  பின்னர் இரண்டு, மூன்று நாட்களுக்கு அரிசி கழுவிய கழுநீரை ஊற்றி ஊற வைக்க வேண்டும்.  அதன் பின் சமைக்கத் தொடங்கலாம்.  அடுப்பில் போட்டு அடியில் தாளிதம் செய்து குழம்பு வைக்கலாம்.  புளிக்காய்ச்சல், மிளகு குழம்பு, மாங்கொட்டைக் குழம்பு போன்றவை செய்யலாம்.  ருசியில் நிச்சயம் மாறுபாடு இருக்கும்.  அதுவும் குமுட்டி அடுப்பில் கல்சட்டி போட்டுச் செய்தால் அந்த ருசி தனி.


இடப்பக்கம் தெரியும் சின்ன ஜாடி உப்பு ஜாடி.  கல்யாணம் ஆகிக் குடித்தனம் வந்தப்போ ரங்கநாதன் தெரு பழைய ரத்னா ஸ்டோரிலே வாங்கியவை இவை.  இதிலே ஒன்று உடைந்து விட்டது.  மூடி இருந்தது.  அதை எங்க பையர் விளையாடி உடைத்தார்.  நடுவில்  நீலக்கலரில் இருப்பது அமெரிக்காவில் எங்க பெண் என் ஜாடிப் பைத்தியத்தைப் பார்த்துட்டு வாங்கிக் கொடுத்தாள்.  சின்னதில் இருந்து பெரிசு வரைக்கும் கிட்டத்தட்ட ஏழோ என்னமோ.  ஶ்ரீரங்கம் வருகையில் அங்கே உறவினருக்கு இரண்டைக் கொடுத்துவிட்டேன்.   இப்போ இதில் புளி போட்டு வைக்கிறேன்.  அன்றாடத் தேவைக்கான புளி இதில் இருக்கும்.   அடுத்து இருக்கும் உயரமான ஜாடி ராஜஸ்தானில் ஊறுகாய்க்கு என வாங்கினது.  அதுவும் பல வருடங்கள், பல ஊர்கள் கண்டுவிட்டது.  இப்போ மொத்தப் புளியையும் அதில் அடைத்து வைக்கிறேன்.



மாவடு போட்டு வைக்கவென சென்னை ஈவ்னிங் பஜார் கண்ணாடிக்கடையில் வாங்கிய பாட்டில் இது.  இன்னொன்றும் உண்டு.  அதில் போன வருஷத்து மாவடு இருக்கிறது.  இதில் இந்த வருஷத்து மாவடு.  ஊறுகாய்களைக்குளிர்சாதனப் பெட்டியில் வைக்கும் வழக்கம் இல்லை.  மாசக்கணக்கா இருந்தாலும் வெளியேயே வைக்கிறேன்.  சரியான உப்பு, காரம், எண்ணெய், கடுகுப்பொடி போன்றவை போட்டுவிட்டால் பல வருஷங்கள் ஆனாலும் கெட்டுப் போகாது.  போன வருஷத்து ஆவக்காய் மிஞ்சி விட்டால் இந்த வருஷம் அதில் வெல்லத்தைப் பாகு வைத்துக் காய்ச்சி ஆற வைத்துச் சேர்த்து ஜீரகப் பொடியைப் போட்டு வைப்பேன்.  சப்பாத்திக்கு, பரோட்டாவுக்குத் தொட்டுக்க சைட் டிஷோடு இதுவும் துணையாக இருக்கும். நாளாக ஆக வெல்லத்தில் ஊறி இனிப்பு, புளிப்பு, காரம் சேர்ந்த கலவையாக சுவை தூக்கி அடிக்கும்.  இப்போ ரங்க்ஸுக்கு இனிப்புச் சேர்க்கக் கூடாது என்பதால் அந்தத் திப்பிச வேலை எல்லாம் பண்ணமுடியலை.  குமுட்டி அடுப்பு இன்னொரு நாள் போடுகிறேன்.


இன்னும் ஈயச் செம்பு இருக்கிறது.  அதில் தான் தினம் ரசம் வைக்கிறேன்.  வரும் விருந்தினருக்குத் தக்கவாறு ரசம் வைக்க வித்தியாசமான அளவுகளில் ஈயச் செம்பு, ஈய அடுக்கு இருக்கின்றன.  அவற்றைப் பின்னர் பகிர்கிறேன்.  வெளியே சின்ன ஈய அடுக்குத் தான் நாலு பேருக்கு ரசம் வைக்கும் அடுக்குத் தான் இருக்கு.  அதைப் படம் எடுக்க மறந்துட்டேன். 


ராஜலக்ஷ்மி உப்பை ஜாடியில் போட்டு வைக்க வேண்டியதன் அவசியம் குறித்து ஒரு பதிவு எழுதி இருந்தார்.  அதன் பின்னூட்டங்களில் பாரம்பரியப் பாத்திரங்கள் குறித்த பேச்சு வர  அதைத் தொடர்ந்து நான் தினமும் புழங்கும் சில பாரம்பரியப் பாத்திரங்கள் இங்கே படங்களில்.  இப்போதைய நான் ஸ்டிக் உலகில் இவற்றின் பெயர் தெரிந்தவர் மிகக் கொஞ்சமாகவே இருப்பார்கள்.  இன்னும் பெரிய திருச்சூர் உருளியும் இருக்கிறது.  அதை எல்லாம் தினமும் புழங்க முடியாதென்பதால் பெட்டியில் இருக்கு.  வெளியே எடுத்தால் படம் எடுத்துப் போடறேன்.

17 comments:

  1. அருமையான ஜாடிகள். ராஜல்க்ஷ்மி பரமசிவம் அவர்களிடம் திருகு ஜாடிப்பற்றி சொல்லி இருந்தேன் நீங்கள் படமே போட்டு விட்டீர்கள்.

    அம்மாவீட்டில் பெரிது பெரிதாக திருகு மூடி போட்ட ஜாடிகள் உண்டு, உப்பு, புளி, நல்லெண்ணெய், ஊறுகாய் போட இருக்கும்.

    எனக்கு ஆப்பிள் ஜாடிகள் இரண்டு வாங்கி கொடுத்தார்கள் அதில் தான் இத்தனை வருடமாய் உப்பு, புளி வைக்க பயன் படுத்துகிறேன். சிறிய எண்ணெய் ஜாடி உண்டு அதில் சுட்ட எண்ணெய் ஊற்றி வைப்பேன்.
    என் மாமியார் வீட்டிலும், அம்மாவீட்டிலும்(அம்மா வீட்டு கல்சட்டி கொஞ்சம் குறுகலாய் உயரமாய் இருக்கும்) கல்சட்டி நீங்கள் காட்டியது போல் உண்டு. மாமியார் வீட்டு கல்சட்டி இப்போது மொட்டை மாடியில் மண் வைத்து ஏதோ செடி இருக்கிறது. அம்மாவோட கல்சட்டியில் அண்ணி புளி வைத்து மரத்தட்டால் மூடி வைத்து இருக்கிறார்கள்.
    ஈய சட்டிகள் கேட்பார் இல்லாமல் மூலையில் கிடந்து பின் காணமலே போய் விட்டது அம்மாவீட்டில்.

    வெண்கலஉருளி, வெண்கல பானை எல்லாம் அருசி பாயாசம், பொங்கல் , திருவாதிரைகளி கிண்ட உபயோக படுகிறது என் வீட்டிலும்.
    நமக்கு பின்னால் இந்த பழமையான பாத்திரங்கள் கடைக்கு தான் போகும்.

    ReplyDelete
  2. ஆஹா... பொக்கிஷங்கள்.

    எங்கள் வீட்டில் கற்சட்டி இருந்தது. நடுவில் உடைந்த பிறகு வேறு வாங்கவில்லை. கற்சட்டி சமையலின் சுவையே தனிதான். அதில் வெந்தயக் குழம்பு, மிளகுக் குழம்பு செய்து இரண்டு நாள் அதிலேயே வைத்திருந்தாள் அதன் சுவை அலாதி. கற்சட்டியில் சமைத்தபின் அதை இறக்கி வைப்பதுதான் அந்நாளில் சிரமம். சூடு இறங்க ரொம்ப நேரம் ஆகும் என்பதால் தொடவே முடியாது!

    ஈயச் சொம்பில் ரசம் வைத்துச் சுவைத்து ரொம்....ப நாளாச்சு!

    பித்தளைப் பாத்திர உபயோகமும் அப்படியே.

    ReplyDelete
  3. உருளி நீங்கள் சொல்வது போல் உப்புமா கிளற, அல்வா கிளற என்று உபயோகிக்கிறேன். கல் சட்டி இருந்தது தான் உடைந்து போய் விட்டது. வாங்க வேண்டும் என்று சில நாட்களாக சொல்லிக் கொண்டு இருக்கிறேன். உங்கள் படத்தைப் பார்த்ததும் வாங்கியே தீர வேண்டும் என்று முடிவே எடுத்து விட்டேன்.
    பசி பத்திரங்களின் அணிவகுப்பு அசத்தல் கீதா மேடம்.

    ReplyDelete
  4. வாங்க கோமதி, வரவுக்கு நன்றி. ஆமாம் நமக்குப் பின்னால் இவை எல்லாம் கடைக்குத் தான் போகப் போகின்றன. :)))

    ReplyDelete
  5. பித்தளைப் பாத்திரம் சமைக்கப் பயன்படுத்த வேண்டுமெனில் ஈயம் பூசி இருக்கணும் ஶ்ரீராம் இப்போல்லாம் ஈயம் பூசறவங்களைத் தேடிக் கண்டு பிடிக்க வேண்டி இருக்கே!

    ReplyDelete
  6. வாங்க ராஜலக்ஷ்மி, குழுமத்திலும் இங்கேயும் வந்து கருத்துப் பகிர்ந்ததுக்கு நன்றி.

    ReplyDelete
  7. இங்கே தான் ஆளே இல்லை. அங்கே என்னமோ எல்லாருமாச் சேர்ந்து கருத்துச் சொல்லி அமர்க்களப்படுத்திட்டாங்க. :))))ஆனால் பார்வையாளர்கள் இங்கே அதிகம். பார்வையாளர்கள் அதிகமா இருந்தாலே பின்னூட்டம் கம்மியா வருது. இது என்ன கணக்குனு புரியலை. :))))

    ReplyDelete
  8. எங்க வீட்டில வெண்கல உருளிகள் ஒன்றிரண்டு உள்ளது. தைப்பொங்கல் அதில்தான் வைப்பார்கள். கல்சட்டி, ஜாடிகளும் இருந்தன. இப்போது உடைந்து போய்விட்டது. ஒரு ஜாடி பூச்சட்டியாக உருமாறி விட்டது. பழங்கால பொருள்களின் அருமை இப்போதைய ப்ளாஸ்டிக் பொருட்களில் கிடைக்குமா? பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  9. ஒவ்வொன்றும் பொக்கிசங்கள்...

    /// மாசக்கணக்கா இருந்தாலும் கெட்டுப் போகாது.... /// உங்களின் கைப்பக்குவம் + செய்முறை அப்படி...

    ReplyDelete
  10. கல்சட்டி, ஜாடி.... இதெல்லாம் எங்கள் வீட்டிலும் இருக்கிறது. அம்மா இன்னமும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

    இங்கே முன்பெல்லாம் பீங்கான் ஜாடிகள் கிடைத்தது. இப்போது எல்லாம் பிளாஸ்டிக் மயம்!

    ReplyDelete
  11. சின்ன வயதில் நான் பார்த்த பொருட்களை இங்கு உங்கள் பதிவில் பார்க்கும் போது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. இன்னும் ஈயச் செம்பில்தான் ரசம் வைக்கிறீர்கள் என்றபோது எனக்கு ஆச்சரியம்தான். பதிவுக்கு நன்றி!

    ReplyDelete
  12. வாங்க சுரேஷ், உருளியில் பொங்கலா? அல்லது வெண்கலப்பானையை உருளினு சொல்றீங்களா? புரியலை. :) வரவுக்கு நன்றிங்க.

    ReplyDelete
  13. வாங்க டிடி, யாரா இருந்தாலும் செய்யறபடி செய்தால் நல்லாவே வரும். :)))

    ReplyDelete
  14. வாங்க வெங்கட், ப்ளாஸ்டிக் அரக்கனை ஒழிச்சால் தான் நிம்மதி! :(

    ReplyDelete
  15. வாங்க தமிழ் இளங்கோ அவர்களே, முதல் வரவு?? வரவுக்கும், கருத்துக்கும் நன்றி. படங்களில் உள்ள எல்லாப் பாத்திரங்களும் அன்றாடப் பயன்பாட்டில் உள்ளவையே.

    ReplyDelete

  16. பாரம்பரிய பாத்திரங்கள். இவையெல்லாம் என் தந்தைவழிப் பாட்டி வீட்டில் பார்த்திருக்கிறேன், இன்னும் ஒரே ஒரு சிறிய வெண்கலப் பானை என் மனைவி பொங்கல் அன்று உபயோகிப்பாள்.கறட்டி மண்ஜாடி ஒரு சிலது இப்போதும் புழக்கத்தில் இருக்கிறது பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  17. அருமையான வெண்கல உருளி, குழம்பு வைக்க வெணகல சட்டி(சரியான பெயர் தெரியல) வாங்கி வந்து விட்டேன்.முழுமையான உபயோகத்தை தோழிகள் பகிரவும். நன்றி.

    ReplyDelete