எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, November 12, 2015

இதெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லை!

நான் மதுரை, நம்ம ரங்க்ஸ் கும்பகோணம்னு எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கும். முழுக்க முழுக்க மாறுபட்ட குணாதிசயங்கள். பழக்க, வழக்கங்கள், பேச்சுக்கள், வழக்கு மொழிகள், வட்டார வழக்குச் சொற்கள்னு எல்லாமும் எனக்குக் கல்யாணமாகிப் போனப்போ ரொம்பப் புதுசாவே இருந்தது. அதுவும் எங்க வீடுகளிலே மிஞ்சிப் போனால் மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி சம்பந்தங்கள் தான். அநேகமா எல்லாப் பழக்கங்களும் ஒன்றாகவே இருக்கும். பேச்சின் தொனியையும், ஒரு சில வட்டார வழக்குச் சொற்களையும் தவிர! கோலம் போடுவதிலிருந்து வேறுபாடுகள் உண்டு. மதுரைப்பக்கம் இரட்டைக் கோலம், தஞ்சைப் பக்கம் ஒற்றைக் கோலம் பெரிதாகப் போடுவது. இப்போல்லாம் இந்த வழக்கப்படியே நானும் போட ஆரம்பிச்சிருக்கேன். அதே போல் அமாவாசை என்றாலும் மதுரைப்பக்கம் கோலம் உண்டு. அதிலும் தர்ப்பணம் முடித்துக் கட்டாயமாய்க் கோலம் உடனே போட்டாகணும். ஆனால் தஞ்சைப்பக்கம் அமாவாசை அன்று கோலம் கிடையாது. தீபாவளியும் அமாவாசையும் சேர்ந்து வந்தால் விதிவிலக்கு.

ஆகவே கல்யாணம் ஆகிப் போனப்போ ஒருத்தருக்கொருத்தர் அனுசரிப்பது என்பது இரண்டு பக்கமும் கொஞ்சம் சிரமம் தான்.  பெரிய பித்தளைத் தாம்பாளங்களைத் தான் நாங்க தாம்பாளம் எனச் சொல்வோம். சாப்பிடும் தட்டுக்களை தட்டு என்றே சொல்வோம். ஆகவே கல்யாணம் முடிந்து, கிரஹப்பிரவேசம் ஆன மறுநாள் எல்லோரும் ஊருக்குப் போனதும் என் மாமியார் இலை பத்தலைனால் மத்தவங்களுக்குத் தாம்பாளத்தைப் போடுனு சொன்னதும் எனக்கு அதிர்ச்சி! ஹிஹிஹி, கலாசார அதிர்ச்சினு வைச்சுக்குங்களேன்! அதே போல் தோசைக்குத் தொட்டுக்கத் தக்காளிச் சட்னி தான் எங்க வீட்டிலே பண்ணுவாங்கனு தெரிஞ்ச எங்க மாமியார் வீட்டிலே அதே அளவுக்குக் கலாசாரத் தாக்குதல்! என்னத்தைச் சொல்றது. தேங்காய்ச் சட்னி தான் நல்லா இருக்கும்னு அவங்களும், தக்காளிச் சட்னிக்கு என்னோட ஓட்டுனு நானும் சொல்லக் கடைசியில் இரண்டையும் அரைச்சுட்டு யாருக்கு எது பிடிக்குதோ அதுனு ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.

அதே சமயம் சாப்பாட்டில் தக்காளி சாதம்,  வெஜிடபுள் புலவ்  என்று நான் செய்தால் மாமியாருக்கு அதிர்ச்சியாக இருக்கும். மத்தவங்களை அதை எல்லாம் சாப்பிடாதே என்றே சொல்வாங்க. ஆனால் எப்படி இருக்குனு பார்க்க ஆவல் கொண்டவங்க அதையும் மீறிச் சாப்பிடுவாங்க. இப்படியாகக் கொஞ்சம் கொஞ்சமாக அவங்க சமையலை நானும் என்னோட சமையலை அவங்களும் அங்கீகரிக்க ஆரம்பிச்சோம். இப்போ என்னோட வழக்கம் என்னனா சாதாரண நாட்களிலே எங்க வீட்டுப் பழக்கப்படியோ, அல்லது புக்ககத்து வழக்கப்படியோ சமையலைச் செய்தாலும் விசேஷ நாட்களிலும், விரத நாட்கள், முக்கியமான வழிபாடுகளில் புக்ககத்து வழக்கமே பின்பற்றி வருகிறேன். சிராத்தம் போன்ற நாட்களிலும் புக்ககத்து வழக்கமே.  அதே சமயம் எங்க மாமியாரும் இப்போ மாறிக் கொண்டு அல்லது மாற்றிக் கொண்டு எப்போவானும் வெங்காயம் போடாமல் தக்காளி சாதம், வெஜிடபுள் புலவ், மசாலா சேர்க்காத சாம்பார் சாதம்னு செய்ய ஆரம்பிச்சதோடு இல்லாமல் சாப்பிடவும் செய்யறாங்க. வெங்காயம், பூண்டு இல்லாமல் தான்.

அதே போல் நான் கந்த சஷ்டி கவசம் சொன்னாலே ஆச்சரியமாகப் பார்க்கும் எங்க மாமியார் பின்னாட்களில் அதையும் ஒரு வழிபாட்டுக்குரிய தோத்திரமாக ஏற்றுக் கொண்டு சொல்ல ஆரம்பிச்சிருக்காங்க. இப்படிப் பெரியவங்க என்னோட கருத்துகளை ஏற்றுக் கொண்டதோடு அல்லாமல் நானும் முக்கியமான காலங்களில் குறிப்பாகப் பண்டிகைகள், விசேஷங்கள், கல்யாணங்கள், குலதெய்வப் பிரார்த்தனைகள், சிராத்தம் போன்ற தினங்களில் பெரியவங்க ஆலோசனைகளைக் கேட்பது உண்டு. என்றாலும் அங்கொன்றும், இங்கொன்றுமாக அபிப்பிராய பேதங்கள் வரும் தான். வராமல் இருக்க நாம் ஒன்றும் கடவுளர் இல்லை! சாதாரண மனிதர்கள் தானே!

குடும்ப வாழ்க்கையிலேயே இப்படி எல்லாம் இருக்கிறது. அனுசரிப்பு என்பது இன்னமும் தேவை! இன்னமும் நடைபெற்றுக் கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் வாழ்க்கை வண்டி ஒழுங்கான பாதையில் செல்லும்; செல்ல முடியும். அப்படி இருக்கையில் ஒரு நாடு என்பது எவ்வளவு பெரிய பொறுப்பு! அதை வழி நடத்திச் செல்லும் பிரதமர் புதிய கருத்துகளைக் கொண்டிருப்பதும், புதிய பாதையில் நடை போடுவதும் புதிதே அல்ல. ஆனால் அதை அவர் சார்ந்த கட்சியின் மூத்தோர்கள் கண்டிக்கிறார்கள் என்றால் அவர்கள் வந்த பாதை அப்படி! திடீரெனப் புதியதொரு பாதைக்குச் செல்வதையோ, புதியதொரு கருத்தையோ அவங்க ஏற்க மறுக்கிறாங்க. என்றும் சென்று கொண்டிருக்கும் தடத்திலேயே செல்ல வேண்டும் என்பது அவர்கள் எண்ணம். வீட்டிற்குப் புதிதாக வந்திருக்கும் மருமகள் யார்  என்ன  கேலி செய்தாலும் வீண் பேச்சுக்களைச் சொன்னாலும் பதில் சொல்லாமல் இருப்பதைப் போலப் பிரதமர் எதற்கும் பதில் சொல்லாமல் அவர் வழியில் செல்வதை எதிர்க்கின்றனர்.

பொதுவாக வீட்டுப் பெரியவங்களைச் சிறியவர்கள் தாங்கள் ஒரு ஸ்திரமான நிலைக்கு வந்துவிட்டால் யோசனை கேட்பதோடு நிறுத்திக் கொள்வார்கள். பின்னர் செயலாற்றுகையில் அவர்கள் யோசித்துத் தற்காலச் சூழ்நிலைக்கேற்பத் தான் முடிவெடுப்பார்கள். அதற்காக அவர்கள் செல்லும் பாதை தவறெனச் சொல்ல முடியுமா?  அதிலும் அக்கம்பக்கம் அண்டை நாடுகளில் இருந்தெல்லாம் நட்புக்கரங்கள் நீட்டிய வண்ணம் நமக்குச் சாதகமான சூழ்நிலைகள் உருவாகின்றன என்பதே செல்லும் பாதை சரியானது என்பதால் தானே! இன்று நம் நாடு ஊழல்கள் குறைந்துள்ள நாடு என்னும் தர வரிசையில் சீனாவை முந்திக் கொண்டிருக்கிறது. இது ஊடகங்களால் பேசப்படவில்லை என்பதால் உண்மை இல்லை என ஆகிவிடாது! இதே போல் வளர்ச்சிகள் மெல்ல மெல்ல உருவாகுகின்றன. ரயில்வே துறையிலும் சுரேஷ் பிரபு வியத்தகு மாற்றங்களைச் செய்து வருகிறார். வண்டி கிளம்ப அரை மணி முன் கூடக் காலி இருக்கும் இடங்களுக்கு முன்பதிவு செய்து கொள்ளும் வசதி புதிதாக உருவாக்கப்படுகிறது. ஆனால் ரயில் முன்பதிவை ரத்து செய்தால் கிடைக்கும் தொகையில் தான் முரண்பாடு. சாமானியர்களுக்கு அதில் பெருத்த அடி விழும்

இப்படிச் சில குறைகள் இருந்தாலும் பொதுவாக நிறைகளே அதிகம் காணப்படுகின்றன. ஒரு பெரிய பட்டியலே இருக்கு! இந்தச் சமயம் கட்சியின் மூத்தோர்கள் தங்கள் கட்சியின் இளையவர்களான பிரதமரிலிருந்து மற்ற மந்திரிகளைச் சாடுவது கட்சியின் மேலும் நாட்டின் மேலும் உள்ள அக்கறையினால் தான். நம் வீட்டில் தாத்தா இருந்தால் நாம் இரவிலோ அல்லது அடிக்கடியோ வெளியே செல்லும்போது கட்டாயம் கேள்வி கேட்பார். அந்தக் கேள்வி நமக்குப் பிடிக்காது தான். ஆனால் அதற்காக வாயை மூடிக் கொண்டு தாத்தா இருக்க மாட்டார். நாமும் சும்மா இருக்க மாட்டோம். உரிமையிலும், கோபத்திலும் வெடுக்கெனப் பேசுவோம். இது எங்கும் நடப்பது தான். ஆனால் ஊடகங்கள் இதைப் பெரிதாகத் தூக்கிக் கொண்டு அலைகின்றன. இவற்றுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பதே நல்லது. இது ஒரு குடும்பச் சண்டை! குடும்பம் பெரிய குடும்பம். நாமும் அதில் அங்கத்தினர்கள் என்பதால் கொஞ்சம் கவலை! மற்றபடி பயப்படும்படி எதுவும் இல்லை என்பதே உண்மை!



28 comments:

  1. சட்னியில் எல்லாம் சண்டை வருமா என்ன? :))

    குடும்பத்தில் ஆரம்பித்து நாட்டு நடப்பில் முடிச்சிட்டீங்க!

    ReplyDelete
    Replies
    1. வரும், வரும், எல்லாவற்றிலும் வரும்! எல்லாம் மனது ஏற்கும் வரை தான். ஏற்று விட்டால் பின்னர் பிரச்னை இல்லை! :)

      நாடும் ஒரு குடும்பம் தானே! பெரிய குடும்பம்! :)

      Delete
    2. என்னோட கடைசி நாத்தனார் இன்று வரை தேங்காய்ச் சட்னிக்குப் பொட்டுக்கடலை சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பார். இத்தனைக்கும் அவங்க புக்ககத்தில் தேங்காய்ச் சட்னி பொட்டுக்கடலை சேர்த்துத் தான் அரைப்பாங்க. ஆனால் அவங்க பொட்டுக்கடலை சேர்த்தாலே அந்தச் சட்னியைத் தொடக் கூட மாட்டாங்க! :) சில நேரங்களில் சில மனிதர்கள்!

      Delete
  2. வீட்டையும், நாட்டையும் ஒப்பிட்டு பிரமாதமாச் சொல்லிட்டீங்க, கீதா! பெரியவர்கள் தங்களது கருத்துக்களை மாற்றிக்கொள்ள ரொம்பவே யோசிப்பாங்க. 'அந்த காலத்துல...' ன்னு ஆரம்பிப்பாங்க. அவங்க அப்படித்தான். அவங்களுக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையைக் கொடுத்துட்டு நாம செய்ய வேண்டியதை செய்து கொண்டு போகவேண்டியதுதான். காலப்போக்கில் நாம செய்ததிலும் நன்மை இருக்குன்னு ஒத்துப்பாங்க. ஒத்துக்கலைன்னாலும் நாம செய்தது சரி என்று நாம் சந்தோஷப்பட வேண்டியதுதான்.
    இதைப்போலத்தான் எல்லாக் காலங்களிலும் நடந்து வருகிறது. மோதியின் விஷயத்திலும் இதுதான் நிஜம்.
    வேண்டுமென்றே குற்றம் சொல்லுகிறவர்களைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டாம்.

    ReplyDelete
    Replies
    1. பிரமாதமா எல்லாம் சொல்லலை. உண்மையில் சொல்ல வந்தது வேறே! அதைத் தவிர்த்துவிட்டேன். :) மிக லேசாகத் தொட்டும் தொடாமலும் சொல்லிச் சென்று விட்டேன். பாராட்டுக்கு நன்றி.

      வீட்டுப் பெரியவங்களுக்கு அவங்களைக் கேட்காமல் நாம் ஏதேனும் செய்தால் எவ்வளவு கோபமும், வருத்தமும் வரும்! அவங்களை நாம் மதிக்கலைனு சொல்லிடுவாங்க! இல்லையா? அதே தான் இங்கேயும்! :)

      Delete
  3. எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ முடித்து விட்டீர்கள். அம்மா நமக்கு அரசியல் வேண்டாம். நாம் பாட்டுக்கு சமையல் பக்தி பயணம் போன்ற கட்டுரைகளை எழுதிவிட்டு சாம்பசிவனே என்று இருந்து விடுங்கள்.

    --
    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. :) நன்றி ஐயா! இதை அரசியல்னு சொல்ல முடியாது! :) பொதுவான எண்ணங்கள் தானே!

      Delete
  4. ///இன்று நம் நாடு ஊழல்கள் குறைந்துள்ள நாடு என்னும் தர வரிசையில் சீனாவை முந்திக் கொண்டிருக்கிறது. இது ஊடகங்களால் பேசப்படவில்லை என்பதால் உண்மை இல்லை என ஆகிவிடாது!///

    உண்மை ! உண்மை! " குடும்பத்தில் சண்டை " என்று ஊடகங்கள் கூக்குரலிடுவது அவர்களுக்கு அரசாங்கத்தில் குறை சொல்ல ஒரு விஷயம் கிடைத்து விட்டதே என்கிற சந்தோஷத்தில் தான்.
    ஊடகங்களின் சாயம் வெளுக்க ஆரம்பித்து விட்டது. உண்மை மக்களுக்கு வெகு விரைவில் புரிந்து விடும்..
    அதே போல் பெரியவர்களின் கண்டிப்பும் நம்மை நல்வழிப்படுத்தத் தான் என்கிற உண்மை புரிய வேண்டியவர்களுக்கு புரிகிறது. ரஞ்சனி சொல்வதைப் போல் வேண்டுமென்றே குற்றம் சொல்பவர்களைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை. அதைத் தான் நம் பிரதமரும் செய்கிறார்.

    அருமையான ஒரு பதிவு. வாழ்த்துக்கள்!
    தொடருங்கள்.....

    ReplyDelete
    Replies
    1. ஊடகங்களின் செய்திகளையும், பேட்டிகளையும் பார்ப்பவர்கள் வெறும் 13 லட்சம் பேர் மட்டுமே என்று ஒரு புள்ளி விபரம் சொல்வதாக ஃபேஸ் புக்கில் பார்த்தேன். ஆனாலும் அவங்க கூச்சல் ரொம்பவே அதிகம். கவைக்கும் உதவாத விஷயத்தை வைத்துக் கொண்டு வாரக்கணக்கில் ஓட்டுகிறார்கள். வின் டிவியில் இல.கணேசனின் பேட்டியை எத்தனை பேர் பார்த்திருப்பார்கள்? சிறிதும் ஆரவாரம் இல்லாமல் உண்மையைத் தெளிவாக எடுத்து உரைத்தார். பேட்டி கண்டவரும் அவர் பேச இடம் கொடுத்து முழுதும் கேட்டுவிட்டுத்தன் கருத்தைப் பகிர்ந்தார். பேட்டி எனில் அப்படி இருக்க வேண்டும். சும்மாவானும் உணர்வுகளைத் தூண்டி விடுகிற மாதிரி இருக்கக் கூடாது! :))

      Delete
  5. குடும்பம் பற்றி நீங்கள் சொல்வதில் உடன்படுகிறேன்! என் மனைவி கரூர், நான், திருவள்ளூர், ஏகப்பட்ட குழப்பங்கள் பேச்சுவழக்கில், வாசல்படி- நிலைப்படி, மனைக்கட்டை- பலகை, இப்படி பல சொல்லலாம், சமையலிலும் அங்கு நிறைய பச்சை மிளகாய் சேர்க்கிறார்கள், மசாலாவும் எங்கள் அம்மாவிற்கு மசாலாவே உதவாது. இதனால் நிறைய குழப்பங்கள். இருந்தாலும் தள்ளிக்கொண்டு போகிறது வாழ்க்கை. அதே சமயம் பி.ஜே.பி நிர்வாகம் எதிர்பார்த்த அளவு இல்லை. மத்தியிலும் சரி, மாநில அளவிலும் சரி அரசாங்கம் செயல்படும் விதம் எனக்கு சுத்தமாய் பிடித்தமாய் இல்லை!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், ஊர் விட்டு ஊர் மாறிக் கல்யாணம் செய்து கொள்வதிலேயே இவ்வளவு சிக்கல்கள், குழப்பங்கள்! இதிலே நாடு விட்டு நாடு, மாநிலம் விட்டு மாநிலம் திருமணம் செய்து கொள்பவர்கள் சந்தோஷமாகத் தான் இருக்கிறார்கள். அதான் ஏன் எனப் புரியவில்லை. ஆனால் நான் ரொம்பவே சிரமப்பட்டேன். :) மற்றபடி பிஜேபி நிர்வாகம் குறித்து ஆதாரபூர்வமான தகவல்கள் இல்லாமல் நான் ஏதும் சொல்லவில்லை என்பதை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். உங்கள் கருத்து உங்களுக்கு! அதில் எனக்கு எவ்விதமானப் பிரச்னையும் இல்லை தம்பி! :)

      Delete
  6. குடும்பத்தில் பழக்க வழக்கங்கள் மாறு படுவதும் அதை நாம் தேவைக்கேற்ப மாற்றிப் கொள்வதும் சகஜம் தான்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், பல விஷயங்களில் இப்படித் தான் நானும் மாற்றிக் கொண்டிருக்கிறேன். என் கணவரும் மாற்றிக் கொண்டிருக்கிறார். ஆனால் சுற்றி இருப்பவர்கள் தலையீடு தான் மிகப் பெரிய பிரச்னை! :))

      Delete
  7. அட நம்ம ஊரு..என்ன ஒரு 2 1/2 மணிநேரம் பிரயாணம் செஞ்சா திருநெல்வேலி அதுதான் எங்க ஊரு...ஆனா பிறந்து வளர்ந்தது நாகர்கோயில்...இருந்தாலும் பழக்கவழக்கங்கள் கொஞ்சம் கேரளம் கொஞ்சம் திருநெல்வேலி என்று கலந்து கட்டி....புகுந்த வீடு காவேரிக்கரை...ஸோ உங்களைப் போலத்தான் முதலில்...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்க கீதா! பெயரில் மட்டுமில்லாமல் இதிலும் நீங்கள் எனக்குத் துணையாக இருப்பது குறித்து சந்தோஷம்! :) அநேகமாக மதுரை, திருநெல்வேலி, ராமநாதபுரம் பழக்கங்கள் அதிகம் மாறாது. :)

      Delete
  8. ம்... எதற்கும் பொறுமை ரொம்பவே வேண்டும்...!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், பொறுமை இருக்கணும்! :) நன்றி டிடி.

      Delete
  9. அந்தக் காலத்துலே ஊரை விட்டு இன்னொரு ஊர் லே பொண்ணு எடுத்தா எல்லாமே மாறித்தான் இருக்கும்.
    நாங்கள் எல்லாம் சோழ தேசத்து வடமா அப்படின்னு எங்க மாமியார் பீத்திக்கறது உண்டு.
    அவர்கள் வீடுகளில் பேசும் சொற்தொடர்கள் பல எங்களுக்கு அன்னியமாக இருக்கும். வீட்டிலே நடக்கும் எல்லா நிகழ்ச்சிகளிலும் அவர்கள் சம்பிரதாயம் ஒன்று எங்கள் வீட்டு பாரம்பர்யம் ஒன்னு இருக்கும்.
    பாலோடு சிறிது மோர் சேர்த்து தயிர் ஆக்குவதற்கு எங்கள் வீட்டில் அமுது ஆக்கு என்பார்கள். அவர்கள் வீட்டில் உரை குத்துவது என்பார்கள்.
    நாங்கள் தட்டு என்போம். அது என்ன தட்டு , தாம்பாளம் என்று சொல்லுங்கோ என்பார்கள்.

    என் அம்மா எதையுமே இல்லை இன்று சொல்ல மாட்டார். நிறைஞ்சிருக்கு என்பார். அவ வர்கள் வீட்டிலோ ஏனம் காலியா இருக்கு என்பார்கள்.

    இது போன்ற எதுவுமே இந்தக் காலத்து ஜனங்களுக்கு இல்லை.

    இராத்திரி 10 மணிக்கு வீட்டுக்கு வரும் ஐ.டி ஹஸ்பன்ட் , என்னடி இன்னிக்கு என்ன என்று கேட்க,
    "என்னடா, நீ ஒன்னும் வாய்ண்டு வல்லியா..சரி, பரவாயில்லை டா, வண்டியை எடு, சரவணா போய்ட்டு வருவோம். " என்கிறாள் இந்தக் காலத்து மீனாச்சிகள்.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
    Replies
    1. வாங்க சு.தா. இங்கே கொஞ்சம் மாற்றம். நாங்க வடதேசத்து வடமா! அவங்க சோழ தேசம்! அதெல்லாம் பிரச்னையே இல்லை. சாப்பாடு பரிமாறுதல், சாப்பிடும் நேரம், படுக்கும் நேரம்னு எல்லா அடிப்படைகளும் மாறி இருந்தது. எங்க வீட்டிலே ஒரேயடியா எதையும் பரிமாறக் கூடாது! நான் பரிமாறுவதில் கெட்டிக்காரி என எங்க வீட்டில் வாங்கிய பெயர் அங்கே பிரயோஜனப்படவே இல்லை! :) அங்கே போடும்போதே நிறையப் போடணும்! நான் நிதானமாப் பரிமாறியதில் மனசே ஆகலை என்ற நல்ல பெயர் கிடைச்சது! :) அதே போல் சாம்பார் குத்து என்பார்கள்! ஒரு கணம் ஒண்ணும் புரியாது! அப்புறமாத் தான் சாம்பாரை இலையில் சாதத்தின் மேல் விடச் சொல்கிறார்கள் என்பதே உறைக்கும். மாங்காய்ப் பச்சடி குழம்பு சாதத்துக்குத் தொட்டுக்குவாங்க! எங்க வீட்டில் மாங்காய்ப் பச்சடி பண்ணுவதே சிராத்தம் அன்று மட்டுமே! வற்றல்கள் போட்டால் தான் நாங்க வற்றல் குழம்பு என்போம். இவங்க நிறைய நேரம் வற்ற வற்றக் கொதிக்கிற குழம்பை வத்தக் குழம்பு என்பாங்க! எல்லாமும் வத்தக் குழம்பு தான். முருங்கைக்காய் வத்தக் குழம்பு, கத்திரிக்காய் வத்தக் குழம்பு, கொத்தவரை, அவரைக்காய்களில் வத்தக் குழம்பு, அப்பளக் குழம்பும் வத்தக் குழம்பு தான்! :) நீங்க சொல்றாப்போல் இந்தக் கால இளம் ஜோடிகளுக்கு இந்தப் பிரச்னை இல்லை. வரும்போதே ஆர்டர் பண்ணிடுவாங்க! இல்லைனா போய்ச் சாப்பிட்டு வருவாங்க தான்! :)

      Delete
    2. இந்தக் கருத்தைப்பதிந்து வெளியிடுகையில் ப்ளாகர் "A Network change was detected!"அப்படினு சொல்லி மறுப்புத் தெரிவித்தது. என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை, கருத்தைக் காபி கூடப் பண்ணலையேனு நினைச்சு மீண்டும் பின்னால் போனால், நல்லவேளை முழுக் கருத்தும் வந்துடுச்சு! :) இது போகுதா பார்க்கணும். :)

      Delete
    3. இது பழைய இடுகைதான். ஆனால் ஒரு சந்தேகம். நான் திருனெவேலி. வெண்டைக்காயை சிறு துண்டுகளாக வறுத்து, தேங்காய் ப.மிளகாய் அரைத்து, மோரில் கலக்குவதை நாங்கள் வெண்டைக்காய் கிச்சடி என்போம். என் ஹஸ்பண்டு கும்பகோணம். அவள், வெண்டைக்காய் பச்சடி என்பாள் (என் வாழ்'நாளில் கிச்சடி என்ற வட'நாட்டு ஐட்டத்தைக் கல்யாணத்துக்கு அப்புறம்தான் கேள்விப்பட்டேன்). நாங்கள் மாங்காய் பச்சடி (வருடப்பிறப்பு) மட்டும்தான் பச்சடி என்போம். நானும் ரொம்ப நாள் கிச்சடி என்பேன், அவள் பச்சடி என்று சொல்லித்தான் பரிமாறுவாள். குழந்தைகளெல்லாம் ஆனபின், பசங்களும் பச்சடி என்று சொல்ல ஆரம்பித்து நானும் மாறிவிட்டேன். உள்ளூர எனக்கு வருத்தம்தான், எங்கள் வழக்கமான பேர் போய்விட்டதே என்று. வெண்டைக்காய் கிச்சடியா பச்சடியா? நீங்கள் சொல்லுங்கள்.

      Delete
    4. மலையாளப் பக்கமும் பறங்கிக்காய்ப் பச்சடியைக் கிச்சடினே சொல்வாங்க. :) இது அவரவர் வழக்கம். ஆனால் நான் கூடியவரை புக்ககத்துப் பழக்கங்களை முக்கியமானவற்றுக்குக் கடைப்பிடித்து விடுவேன். பிரச்னை இருக்காது பாருங்க! :)

      Delete
  10. வெரி இன்ட்ரஸ்டிங்க். சூர்ய சிவா சாருக்கு நீங்க கொடுத்த ரிப்ளை பின்னூட்டம், உங்க பதிவு படிக்க சிரிப்பாக இருந்தாலும் நீங்க "சொல்லுவதும் உண்மைதான். எங்க பக்கம் தட்டு( சாதம் சாப்பிடுவது) " தாலம்" ஆகிவிடும் டிபன் ஐட்டம் சாப்பிடும்போது. வட்டை லோட்டா ன்னு சொல்லக்கூடாதாம் டபரா டம்ளர்னு தான் சொல்லணுமாம். தயிர் சாதத்துக்கு தொட்டுக்க பொரிச்ச அப்பளம் சேத்துப்பாங்க. அதுவும் மாநிலம் விட்டு மாநிலம் மாறி இருந்தா. இன்னமும் பல வேடிக்கைகளை சமாளிக்கணும். பசங்கலாம் பத்து பசை ன்னா கை கொட்டி சிரிப்பாங்க. காலத்துக்கு ஏத்தாப்ல நாமும் மாறிக்கொண்டு வருகிறோம். இதுதான் யதார்தம்.

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா, தேசம் தோறும் பாஷை வேறு என்பார்கள். :)

      Delete
  11. அனுசரிச்சுண்டு போறது தான் வாழ்க்கை. நமக்கு கல்யாணமான காலத்துல பெரியவாளுக்கும் அந்த அனுசரிச்சுண்டு போகணும் accept பண்னனும்கர பெருந்தன்மை இருந்ததோ நாம பிழைத்தோமோ! இப்ப சில இடங்கள்ள சில மனிதர்களிடம் ரெண்டு பக்கமும் அந்த அனுசரணை பாக்க முடியறதுமில்லை.ஏட்டிக்கு பூட்டி என்ன நல்லது தரும்?

    ReplyDelete
    Replies
    1. இப்போ என்ன அப்போவே பல பெரியவங்க அனுசரிப்பே இல்லாமல் தான் இருந்திருக்காங்க! :( மருமகள் கொஞ்சம் மாற்றிச் சமைத்தால் அவ பழக்கத்தைக் கொண்டு வந்துடறானு சொல்லுவாங்க. :(

      Delete