எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, October 30, 2019

ஒரு மழை நேரத்தில் பார்த்த படம்!

தீபாவளி தினத்தன்று மத்தியானம் 3 மணி அளவில் பொண்ணு வீட்டில் பையர் கொண்டு வந்து விட்டார். அவங்க அங்கிருந்து வீட்டுக்குக் கிளம்பும்போது குஞ்சுலு எங்க இருவர் கையையும் பிடித்துக் கொண்டு பிடித்து இழுத்தது. "கம்" "கம்" என்றும் சொன்னது. நாங்க அதோட வரலைனு தெரிஞ்சதும் முகம் ரொம்பவேச் சின்னதாகப் போய்விட்டது. அவங்களை வழி அனுப்பப் போகும்போது படி இறக்கம் தெரியாமல் காலை வைத்ததில் எனக்குக் காலில் இழுத்துக்கொண்டு வந்துவிட்டதால் நான் உள்ளே வந்து உட்கார்ந்துட்டேன். அவங்க என்னைத் தேடி இருக்காங்க! :(

அப்பு ரொம்ப பிசி. உட்கார நேரமில்லை. பள்ளியிலிருந்து வரச்சேயே ஏதேனும் ஒரு வகுப்புக்கு அவ அம்மா கொண்டு விடப் போக வேண்டி இருக்கு. அதன் பின்னர் ஆறரைக்கு அது வந்து வீட்டுப்பாடங்கள் முடிச்சுட்டுச் சாப்பிட்டுப்படிக்க வேண்டி இருக்கு. சில சமயங்கள் ஒன்பது மணி வரைக்கும் படிக்க வேண்டி இருக்கு. காலையிலும் சீக்கிரம் எழுந்து கொண்டு பள்ளிக்குத் தயார் செய்துக்கணும். ஆக எல்லோரும் ரொம்ப பிசியாக இருக்காங்க இங்கே. அங்கே மருமகள், பையரும் இப்படித் தான். மருமகளுக்கு வீட்டு வேலைகளோடு குழந்தையைப் ப்ளே ஸ்கூலில் கொண்டு விடுவதும் கூட்டி வருவதும் நடுவில் வீட்டுக்குத் தேவையான சாமான்கள் வாங்கக் கடைகள் செல்வதும் சரியாக இருக்கும். பையருக்கு அலுவலக வேலை ஒழிந்து ஆசுவாசமாக உட்கார்ந்தே நாங்க பார்க்கவில்லை. அவரிடம் முன் கூட்டி நேரம் குறித்துக்கொண்டு தான் பேச வேண்டி இருக்கும். அவ்வளவு வேலை! :( நடுவில் எங்கானும் வெளி ஊர்ப்பயணங்கள் அலுவலகம் சார்பாக!

நேற்று இங்கே பெண் ஏதானும் படம் பாருனு ஒரு ஹிந்திப் படம் போட்டுப் பார்க்கச் சொன்னாள். த்ரில்லர் படம் தான். படத்தின் பெயர் "இட்டிஃபாக்"

Theatrical Poster of Ittefaq

2017 ஆம் ஆண்டில் வந்த படம். விநோத் கன்னாவின் பிள்ளை அக்ஷய் கன்னா நடிச்ச படம். படத்தின் கதை ரொம்பவே எளிமை, ஆனால் திக் திக்! ஆரம்பத்தில் "விக்ரம் சேதி" என்னும் இந்தியப் பாரம்பர்யம் கொண்ட ஆனால் இங்கிலாந்து வாழ் ஆங்கில எழுத்தாளர். முதல் நாவல் வெளியீட்டிலேயே பெரும்புகழ் அடைந்தவர். எக்கச்சக்கமானப் பெண் ரசிகைகள். மும்பையின் பிரபலமான காவல்துறை அதிகாரி ஆன "தேவ்" (அக்ஷய் கன்னா) என்பவரின் மனைவி கூட விக்ரம் சேதியின் ரசிகை. கணவருடன் அதைப் பற்றி விவாதிப்பாள். ஆனால் அந்த விக்ரம் சேதியே இப்போது மனைவியைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுக் காவல் துறையால் கைது செய்து அழைத்துச் செல்கையில் தப்பி ஓட, காவல் துறை துரத்திப்  பிடிக்க முயற்சிக்கையில்  காவல்துறை வாகனத்தை ஓர் இளம்பெண் வந்து தடுத்து நிறுத்தித் தன்னுடைய குடியிருப்புக்கு அழைத்துச் செல்ல அங்கே இன்னொரு கொலை. அந்த இளம்பெண்ணின் கணவன் வக்கீலான சேகர் சின் ஹா கொலைசெய்யப்பட்டுக் கிடக்கிறார். விக்ரம் தான் கொன்று விட்டதாக அந்தப் பெண் குற்றம் சாட்ட அங்கே திகைத்து நின்று கொண்டிருந்த விக்ரம் சேதியைக் காவல் துறை இரண்டாம் முறையாக இன்னொரு கொலைக்கும் குற்றம் சுமத்தி அழைத்துச் செல்கிறது.

ittefaq க்கான பட முடிவு

ஆனால் சேகர் சின் ஹாவின் மனைவிக்கு இன்னொருவருடன் தொடர்பு இருந்ததால் அவளே தன் கணவனைக் கொன்றிருக்கலாமோ என அவளும் கைது செய்யப்படுகிறாள். இருவரையும் விசாரணை செய்யும் அதிகாரியான "தேவ்" (அக்ஷய் கன்னா) கடைசியில் விக்ரமின் நாவல் ஒன்றின் மூலமாகவே உண்மையான குற்றவாளி யார் எனக் கண்டு பிடிக்கிறார். இதற்கு நடுவில் "சந்தியா" என்றொரு இளம்பெண்ணும் தற்கொலை செய்து கொள்ள அதற்கான காரணத்தைக் கண்டு பிடிக்க முயலும் காவல் துறை அதிகாரி தேவுக்கு அந்தப் பெண் சில நாட்கள் முன்னர் பலரால் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்ட பெண் என்பதும் அவளை வைத்தே தன்னுடைய மூன்றாவது நாவலை விக்ரம் சேத்தி எழுதி இருப்பதும் அதில் சந்தியாவின் பெயரை வெளியிடவில்லை என அவளுக்கு வாக்குக் கொடுத்துவிட்டுப் பின்னர் அவள் பெயரைப் பத்திரிகைகள், ஊடகங்களுக்கு விக்ரம் சேதி சொல்லிவிட்டதாகவும் அதனால் ஏற்பட்ட அவமானம் தாங்க முடியாமல் அவள் தற்கொலை செய்து கொண்டுவிட்டதாகவும் அவள் தகப்பனார் கூறுகிறார்.இதைக் குறித்து விக்ரமிடம் விசாரித்ததில் அதைச் செய்தது தன் மனைவி எனவும் அவளுக்கும் தனக்கும் இதனால் சண்டை எனவும் சொல்கிறார். தலை சுற்றும் காவல் துறை அதிகாரி கடைசியில் உண்மையைக் கண்டு பிடித்துக் குற்றவாளியைக் கைது செய்யப் போகையில் குற்றவாளி தப்பி விடுகிறான் அதுவும் காவல் அதிகாரி தேவுக்கு விஷயத்தைத் தெளிவாக விளக்கி விட்டு!

ittefaq க்கான பட முடிவு

கடைசிவரை தொய்வில்லாமல் எடுத்திருந்தார்கள். மும்பையின் மழைக்காலம் ஆரம்பித்த மூன்று நாட்களில் கதை நடக்கிறது. மூன்றாம் நாள் முடிந்து விடுகிறது. நடிகர்களோடு மும்பையின் மழையும் சேர்ந்து நடித்துள்ளது. மழைக்காலத்தை மிக அருமையாகக் கண்ணெதிரே கொண்டு வந்துள்ளார்கள். படத்தில் பின்னணி இசை கூட சத்தமாக இல்லாமல் மென்மையாகக் காதுக்குத் தொந்திரவு கொடுக்காமல் அமைத்திருக்கிறார்கள். ஒரு காதல் காட்சியோ, டூயட்டோ, குழுவாக நடனங்களோ எதுவும் இல்லை. முழுக்க முழுக்க எளிமையான செட் அல்லது அந்த அந்த இடங்களிலேயே எடுத்திருக்கிறார்கள். எல்லாம் இயல்பாகச் செய்திருக்கிறார்கள். இதையே தமிழில் எடுத்திருந்தால் வக்கீல் சேகரின் மனைவி மாயாவாக நடிப்பவரை அவரின் காதலனோடு ஒரு டூயட்டாவது பாட வைத்திருப்பார்கள், அதுவும் வெளிநாட்டில்! கடைசியில் மும்பை விமான நிலையக் காட்சி மிக மிகநன்றாக எடுக்கப்பட்டிருக்கிறது. கடைசி நிமிடம் வரை திக், திக் கடைசியில் குற்றவாளி தப்புவதில் காவல் துறை அதிகாரிக்கு ஏற்படும் ஏமாற்றம் நமக்கும்.

அதிலும் இங்கேயும் இப்போது 2 நாட்களாக மழை பொழிவதால் மழையை அனுபவித்துக்கொண்டே படத்தையும் பார்த்தேன். ஒரு நல்ல படம் பார்த்த மன நிறைவு! முக்கியமாக மிகை நடிப்பு இல்லாமல் இயல்பாக வந்துவிட்டுப் போகிறார்கள். யாருமே நடிக்கவில்லை. தேவின் மனைவியாக முன்னர் "சாந்தி" ஹிந்தித் தொடரில் சாந்தியாக நடித்த மந்திரா பேடி வருகிறார். ஷாருக்கானும் அவர் மனைவியும் தயாரித்த படமாம் இது. முன்னர் ராஜேஷ் கன்னா, நந்தா நடித்து இதே போல் ஓர் படம் வந்து பார்த்திருக்கேன்.  யாஷ் சோப்ரா எடுத்திருந்தார் அந்தப் படத்தை. அதைப் போலத் தான் இதுவும் கிட்டத்தட்ட என்றாலும் படப்பிடிப்பும் கதையம்சமும் நடிகர்களின் நடிப்பும் பொருந்திப் போகிறது.

33 comments:

  1. //அதோட வரலைனு தெரிஞ்சதும் முகம் ரொம்பவேச் சின்னதாகப் போய்விட்டது. // - படிக்கும்போதே கற்பனை செய்ய முடியுது. உங்களுக்கும் ரொம்ப கஷ்டமாக இருந்திருக்கும். ஆமாம் சுட்டிப்பெண் உங்களைக் கையைப் பிடித்ததா இல்லை மாமாவையா?

    ReplyDelete
    Replies
    1. இருவரின் கையையும் பிடித்து இழுத்தது நெல்லை! இதில் என்ன சந்தேகம் உங்களுக்கு? :))))) இங்கே குழந்தை படிப்பில் பிசியாக இருப்பதால் மத்தியானங்களில் வெறுமையாகத் தான் இருக்கிறது. பெண்ணும் குழந்தையைச் சிறப்பு வகுப்புகளுக்கு அழைத்துச் செல்ல, திரும்பி வீட்டிற்கு அழைத்துவரனு போக வேண்டி இருக்கு. ஆகவே நாங்க இருவர் தான் அநேகமாக!

      Delete
  2. //ஆக எல்லோரும் ரொம்ப பிசியாக இருக்காங்க இங்கே.// - வார இறுதியில் ஒருவேளை நேரம் கிடைக்குமோ குழ்ந்தையுடன் பேசிச் சிரிக்க?

    மற்றபடி வார நாட்களில் எப்படி பொழுது போக்கறீங்க? போன பயணத்தில் செய்ததுமாதிரி, ஏரிக்கரையில் எடுக்கும் புகைப்படங்கள் வரலையே

    ReplyDelete
    Replies
    1. நெல்லைத்தமிழரே, இந்த முறை வந்ததுமே பலத்த மழை ஒரு வாரத்துக்குனு எச்சரிக்கை கொடுத்திருந்தாங்க. ஆகவே வெளியே போகலை. அதன் பின்னர் மாமா மட்டும் ஏரிக்கரை வரை போய் உட்கார்ந்துட்டுத் திரும்பிட்டார். அதுவும் சில நாட்கள் தான். தொடர்ந்து போகலை. இப்போ மறுபடி மழை 3 நாட்களாக. மதியம் நான் கணினியில் உட்காருவேன். அவர் ஐபாட் பார்த்து/படிச்சுட்டுக் கொஞ்ச நேரம் படுப்பார். நானும் சிறிது நேரம் படுப்பேன். சாயந்திரம் ஒவ்வொருத்தரா வீட்டுக்கு வரப் பொழுது போயிடும்.

      Delete
  3. /2017 ஆம் ஆண்டில் வந்த படம்// - இப்படி எங்களுக்கு ஹார்ட் அட்டாக் வரச் செய்யலாமா? நீங்க பொதுவா 1930க்கு முன்னால வெளிவந்து பொதுகைல வரும் படங்களுக்குத்தானே விமர்சனம் எழுதுவீங்க. இப்படி லேடஸ்ட் (2017?) படத்துக்கு விமர்சனம் எழுதினா நாங்க எந்த தியேட்டருக்குப் போய்ப் பார்க்கிறது?

    ReplyDelete
    Replies
    1. நெ.த. ஒரு நாள் உட்கார்ந்து பொதிகையைப் பாருங்க! புரியும். எப்படி எல்லாம் நிகழ்ச்சிகள் வருதுனு. பொதிகைன்னா அவ்வளவு கேவலமா? நிகழ்ச்சிகளே பொதிகையிலும், மக்கள் தொலைக்காட்சியிலும் தான் பார்க்கும்படி இருக்கும்.

      Delete
  4. /மழையை அனுபவித்துக்கொண்டே படத்தையும் பார்த்தேன். // - கூட பஜ்ஜி, வடைலாம் செய்துவைத்துக்கொண்டே படம் பார்த்தீங்களா? மழைக் காலமே..

    ReplyDelete
    Replies
    1. பஜ்ஜி, வடையெல்லாம் இல்லை. அங்கே இந்தியாவில் ஸ்ரீரங்கத்திலோ, அம்பத்தூரி இருக்கையிலோ மழைன்னா இம்மாதிரி ஏதாவது பண்ணுவேன். இங்கெல்லாம் இவங்க ஆயில் ஃப்ரீ உணவுகள் தான்.

      Delete
  5. விமர்சனம் ஆவலைத் தூண்டி விட்டது பார்க்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. உண்மையில் பார்க்கக் கூடிய படம் தான்.

      Delete
  6. அமேசான் பிரைமில் இது இருக்கிறது என்று ஞாபகம்.  கதைசுருக்கம் படித்த மாதிரி இருக்கிறது.  உங்களுக்கு அமேசான் ப்ரைம் வருமாயின் தெலுங்கு 'எவரு' பாருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. அமேசானில் தான் பொண்ணு பார்க்கச் சொன்னாள். ஆனால் அதில் எந்தப் படமும் எனக்கு அவ்வளவாப் பிடிக்கலை. ஆகவே நெட்ஃப்ளிக்ஸில் பார்த்தேன். எவரு தெலுகுப் படமா? பார்க்கிறேன். உங்களுக்கு மொழி தெரியும். ஆனால் எனக்குத் தகராறு.

      Delete
  7. தமிழிலும் சில தரமான த்ரில்லர்கள் வந்துள்ளன.  'தெகிடி' பாருங்கள்.  அப்புறம் 'சதுரங்க வேட்டை', தடம், ஆகியவை பார்க்கலாம்.  மாயா கூட ஓரளவு பார்க்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. மாயா முன்னரே இருமுறைக்கும் மேல் பார்த்துட்டேன். வேண்டாம், வேண்டாம், மற்றப் படங்களை முயற்சி செய்யறேன். யப் தொலைக்காட்சியில் பார்க்கணும் இதெல்லாம் இருக்கானு! நெட்ஃப்ளிக்ஸில் இருப்பதாய்த் தெரியலை.

      Delete
  8. ஆபீஸ் வேலைக்கு கூட போயிட்டு வந்துடலாம் ஆனால் இந்த குழந்தைகளை பள்ளியில் இருந்து கூட்டி வருவது அதன் பின் ஈவினிங்க் க்ளாஸுக்கு கூட்டி சென்று வெயிட்டிங்க் பண்ணி மீண்டும் கூட்டி வருவது போன்ற செயல்கள் கஷ்டம் அதனால் உங்கள் மருமகளுக்கு ஒரு சல்யூட்

    ReplyDelete
    Replies
    1. பையரின் பெண்ணுக்கு 3 வயது தான். ப்ளேஸ்கூல் தான் போகிறாள் குழந்தை. பெண்ணிற்குத் தான் இம்மாதிரிக் குழந்தைகளைக் கொண்டு விடுவதும் கூட்டி வருவதுமான வேலை! கூடவே வீட்டில் ஒரு நாய் வேறே! அதை வேறே தினம் 3 தரம் வெளியே அழைத்துச் செல்வதும் (தோட்டத்துக்குள் தான்) உணவு அளிப்பதும் கொண்டு விடுவதும், மாலை அதனுடன் விளையாடுவதுமாகப் பொழுது பறக்கிறது.

      Delete
    2. உங்க பொண்ணு நாய் வைச்சுருக்காங்களா அப்படின்னா அவங்க எங்க நெருங்கிய சொந்தமாகிவிட்டாங்க

      Delete
    3. //http://sivamgss.blogspot.com/2014/02/blog-post_6626.html// ஹாஹாஹா, தமிழரே, இது அவங்க பாரம்பரியம்னு நினைக்கிறேன். ஏனெனில் நம்ம ரங்க்ஸுக்கும் நாய்கள் என்றால் உயிர்! கல்யாணம் ஆனதில் இருந்தே நாய் வளர்ப்பு உண்டு. எங்க பொண்ணு பிறந்தப்போ அவர் அவளுக்கு வாங்கிக்கொடுத்த உயிருள்ள பொம்மை ஓர் நாய்க்குட்டி தான். பல நாய்கள் வளர்த்திருக்கோம். கடைசியில் மோதி என்னும் நாய் வளர்த்து அது இறந்த பின்னர் இனி நாயே வேண்டாம்னு இருக்கோம். இப்போ அடுக்கு மாடிக்குடியிருப்பு வாசம் வேறே. நாய் வளர்க்க முடியாது. ஆகவே பெண் வளர்ப்பதில் அதிசயமே இல்லை. படங்கள் எல்லாம் எடுத்திருக்கேன். இன்னொரு பதிவில் போடறேன். கொடுத்திருக்கும் சுட்டியில் போய்ப் பார்த்தால் மோதியைப் பார்க்கலாம். கழுத்தில் மணி எல்லாம் கட்டி அழகு பார்ப்பார்.

      Delete
  9. 'பேத்தி கையை பிடித்து அழைத்தாள்' என்று படித்தவுடன் இன்னும் கொஞ்ச நாள் அங்கு இருந்து இருக்கலாம் நீங்கள் என்று நினைத்தேன். மீண்டும் அங்கு போய் இருப்பீர்கள் அல்லவா?

    அப்பு மற்றும் எல்லோரும் பிசி என்றாலும் நாம் அங்கு போய் பார்த்து கொள்ளமுடிகிறதே!

    மகனும் இப்படித்தான் அவனுக்கு பிடித்த படம் நல்ல படம் என்று தெரிந்தால் நம்மை பார்க்க சொல்வான்.


    //மழை பொழிவதால் மழையை அனுபவித்துக்கொண்டே படத்தையும் பார்த்தேன்.//

    நல்ல விமர்சனம்.

    ReplyDelete
    Replies
    1. பிள்ளைக்கும் அது தான் எண்ணம் கோமதி. ஆனால் பெண்ணுக்கு நாங்க வரலைனு வருத்தம், அதுவும் நாங்க தீபாவளிக்குப் பையர் வீட்டிலே இருப்போம்னு சொன்னதுக்கும் அவளுக்கு வருத்தம். ஆகவே காலை அங்கே, மாலை இங்கேனு முடிவு பண்ணினோம். டிசம்பரில் கார்த்திகை வரை இங்கே இருப்போம். கார்த்திகைக்குப் பிள்ளை வீட்டிற்குப் போயிடுவோம். அப்புறமாப் பொங்கல் கழிந்து கொஞ்ச நாட்கள் பெண் வீட்டிற்கு வந்து இருந்துட்டுத் திரும்பப் பிள்ளை வீட்டிற்குப் போய் ஊருக்குக் கிளம்பும் நாட்கள் வந்துடும். நம்மவர் நாட்களை நிஜம்மாவே எண்ணிக் கொண்டிருக்கார். :)))))

      Delete
  10. நல்ல விமர்சனம்.

    "இட்டிஃபாக்" - இத்தேஃபாக்! எதிர்பாராத விதமாக என்ற அர்த்தம் கொண்ட உருது வார்த்தை!

    மகன் வீட்டிலிருந்து மகள் வீட்டுக்கு... எஞ்சாய்.

    பணிச்சுமை - இப்போதெல்லாம் இப்படித்தான். ஒன்றும் செய்வதற்கில்லை.

    ReplyDelete
    Replies
    1. நன்றி வெங்கட், நான் கேள்விப்பட்டிராத/கேட்டிராத வார்த்தை. படத்தின் பெயரை எழுத்தில் பார்த்துட்டுச் சொல்லி இருக்கேன். திருத்தியதற்கு நன்றி. ஆனால் அர்த்தம் புரிந்தது. :)))) படம் நன்றாகவே இருந்தது. நேற்றும் அந்தாதூன் படம் பார்த்தேன். ஆயுஷ்மான் குரானா இப்போதைய பிரபலமாமே! அவர் நடிச்ச படம். தபுவும் உண்டு. எனக்கு தபுவையும் பிடிக்கும். இந்தப் படமும் அருமை!

      Delete
  11. இக்காலம் எங்கும் பிஸி.

    மழையுடன் படமும். மகிழ்ந்திருங்கள்.

    ReplyDelete
  12. 24 மணி நேரமும் வேலைதான். அங்கே எல்லோருக்கும்.
    இங்கே அதுக்கு மேலே இருக்கு. ஓட்டம், ஓட்டம்.
    நான் இங்க வந்து காப்பான், அப்பா, இதெல்லாம் பார்த்தேன்.
    இந்தத் தண்ணீர் ஒத்துக் கொள்ளாமல் வயிற்று வலி வந்து விட்டது.
    வினாயகர் தான் காப்பத்தணும் மிச்ச நாட்களை.

    குழந்தைகளுக்கு என் அன்பு. வளமுடன் இருக்கட்டும்.

    ReplyDelete
    Replies
    1. உடம்பைப் பார்த்துக்கொள்ளுங்கள் வல்லி. சோம்பு, ஜீரகம், கருஞ்சீரகம், மிளகு, சுக்கு, ஏலக்காய், பட்டை தட்டிப் போட்டு வெந்நீர் கொதிக்க வைத்துக் குடியுங்கள். வயிறு தொந்திரவு சரியாகும். எனக்கும் இந்தப் பிரயாணங்கள் என்றாலே வயிறு தான் முக்கியமாய்க் கவனிப்பேன். அதி கவனமாக உணவு எடுத்துக்க வேண்டி இருக்கு.

      Delete
  13. வணக்கம் சகோதரி

    படத்தைப்பற்றி நல்ல விமர்சனம் அளித்துள்ளீர்கள்.கதை நன்றாக உள்ளது பார்க்கவும் தூண்டுகிறது. ஆனால் பார்க்க முடியுமா எனத் தெரியாது. இங்கும் வெள்ளி, சனி இரு நாட்களிலும், இரவு பத்துக்கு மேல் இப்படி அமேசான் பிரைம், நெட்ஃபிளிக்ஸ் என அதில் வரும் படங்கள் தெலுங்கு, ஹிந்தி என வீட்டில் (மகன், மருமகள்) பார்க்கிறார்கள். பாக்கி நேரம் படங்கள் பார்க்க இயலாது. குழந்தைகளுக்கான ரைம்ஸ், கார்ட்டூன் என அவர்கள் சாப்பாட்டு நேரத்தில் ஓடும். தாங்கள் குறிப்பிட்ட படம் நன்றாக உள்ளது. அவர்கள் பார்த்தாச்சா என கேட்டுப் பார்க்கிறேன். பரிந்துரைக்கிறேன். குழந்தைகளுடன்தான் இங்கும் நேரங்கள் பறக்கிறது. தங்கள் பெண் வீட்டிலும் அனைவரையும் கேட்டதாகக் கூறவும். பகிர்வுக்கு மிக்க நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா, பையர் வீட்டிலேயும் பையரும் மருமகளும் சனி, ஞாயிறு அன்று இப்படித்தான் நடு இரவு வரை படங்கள் பார்ப்பார்கள். அவங்க எல்லா மொழிப் படங்களும் பார்ப்பார்கள். மத்தியானங்களில் உட்கார்ந்து பார்ப்பது அங்கே கொஞ்சம் சிரமமாக இருக்கும் என்பதால் நான் அங்கே உட்காருவது இல்லை. மற்றபடி மத்தியானங்களில் இங்கே யாரும் இருப்பதில்லை என்பதால் பார்க்கிறேன். இந்தியா வந்தால் நோ திரைப்படம். பெண்ணிடம் கட்டாயம் நீங்கள் விசாரித்ததைச் சொல்கிறேன்.

      Delete
  14. மழைப்படத்தில மாமாவைச் சேர்க்காமல் விட்டிட்டீங்களே கீசாக்கா:)

    ReplyDelete
    Replies
    1. மாமாவுக்கு மத்தியானத் தூக்கம் தான் முக்கியம் அதிரடி, குலதெய்வம் கோயிலுக்குப் போனாலே அடிச்சுப் பிடிச்சுக்கொண்டு மத்தியானம் 2 மணிக்குள் ஸ்ரீரங்கம் வந்துடணும்னு பறப்பார். வந்ததும் நாலு மணி வரை தூக்கம்! :))) நான் மத்தியானம் காலை நீட்டிக் கொண்டு சிறிது நேரம் படுப்பேன். அவ்வளவு தான். அதிகம் போனால் அரை மணி நேரம் அல்லது நாற்பது நிமிஷம். தூக்கம் எல்லாம் எப்போவானும் உடல்நிலை சரியில்லைனா.

      Delete
  15. அது என்னமோ தெரியல்ல நம் நாட்டைவிட வெளிநாட்டில் கொஞ்சம் பிஸியாகத்தான் இருக்கிறது.

    பரவாயில்லை தீபாவளிக்கு புதுச்சீலை கட்டி மருந்து சாப்பிட்டு( அந்த முறுக்கைச் சொன்னேன்:)) படமும் பார்த்திட்டீங்க கீசாக்கா.
    குஞ்சுலுவுக்குப் புரியாதுதானே தேடிக்கொண்டிருப்பா.

    ReplyDelete
    Replies
    1. குஞ்சுலு அப்செட்டா இருப்பதாகத் தான் பையர் சொன்னார். ( என்ன செய்ய முடியும்! இன்னும் 2,3 மாதங்களில் ஊருக்கே போயிடுவோமே! அப்போ என்ன பண்ணுமோ? சென்ற முறை பத்து மாதக்குழந்தை. கத்திக் கதறித் தீர்த்துட்டானு சொன்னாங்க! வீடு முழுசும் சுற்றிச் சுற்றிப் பார்த்துத் தேடினாளாம்! :(

      Delete