
என் இதயம் உங்களை அன்றி மற்றொருவரை நினைக்கவில்லை. தாங்கள் இப்படி ஒரு முடிவுக்குத் தான் வருவதாய் இருந்தால், அனுமனை ஏன் தூது அனுப்பினீர்கள்? ஏன் என்னை ராவணன் தூக்கிச் சென்றதுமே துறக்கவில்லை? அல்லது அனுமனிடம் தூது அனுப்பும்போது சொல்லி இருந்தால், இந்த யுத்தமே செய்திருக்க வேண்டாம் அல்லவா? ஒரு சாதாரண மனிதன் போல் பேசிவிட்டீர்களே? என்னை நன்றாக அறிந்திருக்கும் உங்கள் வாயிலிருந்தா இப்படிப் பட்ட வார்த்தைகள் வருகின்றன? லட்சுமணா, நெருப்பை மூட்டு. பொய்யான இந்த அவதூறுகளைக் கேட்டுக் கொண்டும் நான் உயிர் வாழவேண்டுமா? என் நடத்தையில் சந்தேகம் கொண்டு அவதூறாய்ப் பேசும் கணவரால், நான் அக்னிப்ரவேசம் செய்வது ஒன்றே ஒரே வழி." என்று லட்சுமணனைத் தீ மூட்டும்படி சீதை வேண்டுகின்றாள்.

"என் இதயம் ராமரை விட்டு அகலாதது என்றால் ஏ அக்னியே, நான்கு திசைகளிலும் என்னைக் காப்பாய்!
என் நடத்தை அப்பழுக்கற்றது என்றால் ஏ அக்னியே, நான்கு திசைகளிலும் என்னைக் காப்பாய்!
மனம், வாக்கு, காயம் என்ற உணர்வுகளினால் நான் தூய்மையானவள் தான் என்றால், ஏ அக்னியே என்னைக் காப்பாய்!
ஏ சூரியதேவா, ஏ சந்திர தேவா, ஏ வாயுதேவா,
திக்குகளுக்கு அதிபதிகளே,
வருணா, பூமாதேவியே! உஷத் கால தேவதையே!
பகலுக்கு உரியவளே, சந்தியாகால தேவதையே
இரவுக்கு உரியவளே,
நீங்கள் அனைவருமே நான் தூய்மையானவள், பவித்திரமானவள் என்பதை நன்கு அறிவீர்கள் என்பது உண்மையானால், ஏ அக்னியே நான்கு திசைகளிலும் என்னைக் காப்பாய்!"
இவ்வாறு உரக்கப் பிரார்த்தித்துக் கொண்டு, சற்றும் அச்சமில்லாமல், குளிர் நீரிலோ, நிலவொளியிலோ பிரயாணம் செய்வதைப் போன்ற எண்ணத்துடன் சீதை அக்னிக்குள் பிரவேசித்தாள். அங்கே குழுமி இருந்தவர்கள் அனைவருமே அலறித் துடித்தனர். ராமர் கண்களிலிருந்து ஆறாகக் கண்ணீர் பெருகியது. லட்சுமணன் இந்தக் காட்சியைக் காணச் சகியாமல் முகத்தை மூடிக்கொண்டு அழுதான். வானரங்களும், அரக்கர்களும் பதறித் துடித்தனர். விண்ணிலிருந்து தேவர்களும், ரிஷி, முனிவர்களும் இந்த அக்னிப்ரவேசத்தைப் பார்த்துக் கொண்டு செய்வதறியாமல் திகைத்தனர். அக்னிக்குள் ப்ரவேசித்த சீதையோ தங்கம் போல் ஒளியுடனே பிரகாசித்தாள்.
*************************************************************************************
இப்போது ராமர் செய்தது சரியா, தவறா என்ற விவாதம் ஒரு பக்கம் இருக்கட்டும். சீதை அக்னிக்குள் ப்ரவேசம் செய்தபோது சொன்ன வார்த்தைகள் கம்பராமாயணத்தில் வேறு மாதிரியாக வருகின்றது. அது பற்றிய விவாதங்கள் இன்னும் முடியவில்லை. சீதை என்ன சொல்கின்றாள், கம்பர் வாயிலாக என்று பார்ப்போமா? அப்புறம் அது பற்றிய தமிழறிஞர் ஒருவரின் கருத்தும், அது பற்றிய அந்தத் தமிழறிஞர் குறிப்பிட்டுச் சொல்லும் ஆங்கில நாடகம் ஒன்றின் குறிப்பும், பார்க்கலாம். கருத்துச் சொல்ல விரும்புபவர்கள் சொல்லலாம்.
குறிப்பிட்ட கட்டுரை, பிரதி எடுக்க முடியவில்லை. ஆகவே அதைக் கீழே தட்டச்சு செய்கின்றேன்.
"நீதிபதி மகாராஜன் அவர்கள் கம்பனைக் கண்டு ஆனந்தித்தவர். அவர் ஒரு நிகழ்ச்சியில் சொல்லி இருக்கின்றார். என்பதாய்க் கட்டுரை ஆரம்பிக்கின்றது. இந்தக் குறிப்பிட்ட சொற்பொழிவு, நீதிபதி மகாராஜன் அவர்களால், பேராசிரியரும், இலக்கிய அறிஞரும் ஆன திரு அ.சீனிவாச ராகவன் அவர்களின் இலக்கிய ஆய்வைக் குறித்தது. திரு அ.சீனிவாசராகவன் அவர்கள் சீதை சொன்ன வார்த்தைகளுக்கு எவ்வாறு நாம் பொருள் கொள்ளவேண்டும் என்பதை ஷேக்ஸ்பியரின் ஒதெல்லோ நாடகத்தில் டெஸ்டிமோனோ சொல்லும் வார்த்தைகளைக் கொண்டு நிரூபிக்கின்றார் என்பதாய்க் கட்டுரை வருகின்றது. இனி கட்டுரையும், சீதை சொன்ன வார்த்தைகளாய்க் கம்பன் சொல்வதும்.
No comments:
Post a Comment