
ராமரின் பட்டாபிஷேகம் முடிந்தது. அனைவருக்கும் பரிசுகள் அளிக்கப் பட்டு அனைத்துக் கொண்டாட்டங்களும் முடிந்து சில ஆண்டுகள். சீதை முதல் முதலாய்க் கருவுற்றாள். பட்டமகிஷி அல்லவா?? அனைவரின் மனமகிழ்ச்சிக்குக் கேட்கவா வேண்டும்? ராமரும் குதூகலத்தில் ஆழ்ந்தார். சீதையிடம் உனக்கு என்ன இஷ்டமோ அதை நிறைவேற்றித் தருவது என்னுடைய பொறுப்பாகும், என்ன வேண்டுமோ கேள், என்கின்றார். சீதையின் நாவில் இது என்ன??? சனி பகவான் வந்து உட்கார்ந்தானோ??? சீதை கேட்கின்றாள்: "கிழங்குகளையும், கனிகளையுமே உண்டு நாம் வாழ்ந்து வந்த அந்தக் காட்டு வாழ்வை மீண்டும் ஒருமுறை வாழ ஆசைப் படுகின்றேன். ரிஷி, முனிவர்களின் ஆசிரமத்தில் ஒரு நாளாவது அவர்களுடன் பொழுதைக் கழிக்க ஆசைப்படுகின்றேன்." என்று சொல்ல, ராமரும் அதை நிறைவேற்றித் தருவதாய்ச் சொல்கின்றார். அப்போது அவரைக் காண தூதர்கள் வந்திருப்பதாய்த் தகவல் வர, சீதையை அங்கேயே விட்டு விட்டு, ராமர் மட்டும், வந்திருப்பவர்களைக் கண்டு தன் அரசவைக் கடமையை நிறைவேற்றும் வண்ணம் சென்றார். அங்கே அறிவிலும், விவேகத்திலும், புத்தி சாதுரியத்திலும் சிறந்த பலர் அமர்ந்திருக்க பொதுவான பல விஷயங்கள் பேசப் பட்டன. பல முடிவுகள் எடுக்கப் பட்டன. அப்போது ராமர் அங்கே இருந்தவர்களில் குறிப்பாக பத்ரன் என்பவனைப் பார்த்து, "ஒரு அரசன் தன் கடமையைச் சரிவரச் செய்து வருகின்றானா என்பது பற்றிக் குடிமக்கள் பேசுவதன் மூலமே தெரிந்து கொள்ளலாம். நம் ராஜ்யத்தில் நீங்கள் சென்ற பகுதியில் உள்ள மக்கள் என்ன பேசிக் கொள்கின்றனர்?? குறிப்பாக என் அரசாட்சியைப் பற்றியும், என் தம்பிமார்கள் உதவியைப் பற்றியும், என் மனைவியும், பட்டமகிஷியுமான சீதையைப் பற்றியும் என்ன பேசிக் கொள்கின்றனர் என்பதை அறிய விரும்புகின்றேன்." என்று கேட்கின்றார்.
பத்ரன் முதலில் நாட்டு மக்கள் ராமரை மிகவும் புகழ்ந்து பேசுவதையும், அவரது வீரத்தைப் பாராட்டுவதையும் மட்டுமே சொன்னான். ஆனால் அவன் முழுதும் உண்மை பேசுகின்றானா என்பதில் சந்தேகம் வரவே ராமர் அவனைப் பார்த்து, "முழுதும் உண்மையைச் சொல்லுங்கள். குறைகள் ஏதேனும் என்னிடம் இருப்பதாய் மக்கள் பேசிக் கொண்டாலும் அவற்றையும் சொல்லுங்கள். அந்தக் குறையைக் களைந்துவிடுகின்றேன். மக்கள் மன மகிழ்ச்சியே ஒரு மன்னனுக்குத் தலையாய கடமை ஆகும்." என்று கேட்கின்றார். பத்ரன் உடனே இரு கைகளையும் கூப்பியவண்ணம், ராமரைப் பார்த்து வணங்கிக் கொண்டே, "அரசே, மக்கள் நீங்கள் கடல் மேல் பாலம் கட்டி கடல் கடந்தது பற்றியும், ராவணனை வெற்றி கொண்டது பற்றியும், சீதையை மீட்டது பற்றியும் புகழ்ந்தே பேசுகின்றனர். உங்கள் அரசாட்சியிலும் யாதொரு குறையையும் அவர்கள் காணவில்லை. ஆனால் ராமருக்குப் பெண்ணாசை அதிகம் ஆகிவிட்டது. அதன் காரணமாகவே, ராவணனால் பலவந்தமாய் அபகரிக்கப் பட்டு, அவனால் மடியில் அமர்த்தப் பட்டு இலங்கைக்குக் கொண்டு சென்று அங்கே ராட்சதர்களின் காவலின் கீழ் அசோகவனத்தில் வைக்கப் பட்ட சீதையை ராமர் மீண்டும் சேர்த்துக் கொண்டு குடும்பம் நடத்துவாரா? எவ்வாறு சீதையை மீண்டும் சேர்த்துக் கொள்ளலாம்?? நம் நாட்டு அரசனே இவ்வாறு இருந்தால் பின்னர் நாம் என்ன செய்வது?? நம் மனைவிமார்களும் இவ்வாறு நடந்து கொண்டால், இனி நாமும் அதைச் சகித்துக் கொண்டு வாழவேண்டுமே?? "யதா, ராஜா!, ததா ப்ரஜா!" {"அரசன் எவ்வழி, அவ்வழி குடிமக்கள்"} என்று தானே சொல்கின்றனர்?" என்று பல இடங்களிலும், கிராம மக்கள் கூடப் பேசுகின்றனர். " என்று இவ்விதம் பத்ரன் ராமரிடம் சொன்னான்.
ராமர் மனம் நொந்து மற்றவர்களைப் பார்த்து இதன் முழு விபரமும் உங்களில் யாருக்குத் தெரியும் எனக் கேட்க, அனைவரும் பத்ரன் சொல்வது உண்மையே எனவும், பல இடங்களிலும் மக்கள் இவ்வாறே பேசிக் கொள்வதாயும், வேதனையுடனேயே உறுதி செய்தனர். ராமர் உடனேயே முகவாட்டத்துடனும், நிலைகுலைந்த தோற்றத்துடனும், தன் தம்பிகளை அழைத்து ஆலோசனை செய்தார். வந்த தம்பிகள் மூவருக்கும் ராமரின் தோற்றம் அதிர்ச்சியைக் கொடுத்தது. சீதையைப் பிரிந்து இருந்தபோது இருந்த தோற்றத்தை விட மோசமான தோற்றத்தில் காட்சி அளித்த ராமரைப் பார்த்த மூவரும், திடுக்கிட்டு நிற்க, தம்பிகளைப் பார்த்த ராமரின் கண்கள் அருவியாய் நீரைப் பொழிந்தது. கண்களில் கண்ணீருடனும், மனதில் வேதனையுடனும், தாங்க மாட்டாத துக்கத்துடனும், ராமர் சொல்கின்றார்:" என் அருமைச் செல்வங்களான தம்பிகளே! நீங்கள் மூவருமே எனக்குச் சொத்தைவிடப் பிரியமானவர்கள் ஆவீர்கள். எனக்கு இப்போது ஏற்பட்டிருக்கும் பிரச்னையைக் கேளுங்கள்." என்று சொல்லிவிட்டு, ராமர் பத்ரன் கொண்டு வந்த செய்தியையும், மற்றவர்கள் அதை உறுதி செய்ததையும் கூறுகின்றார்.
"தம்பிகளே! நான் என்ன செய்வேன்??? நான் பிறந்ததோ புகழ் பெற்ற இக்ஷ்வாகு குலத்தில்! சீதை உதித்ததோ புகழ் பெற்ற ஜனகன் குலத்தில்! ராவணனால் அபகரிக்கப் பட்ட சீதையை மீட்டதும், உடனே அயோத்திக்கு அழைத்து வருதல் முறையில்லை என்றே அவள் மீது குற்றம் சொன்னேன். ஆனால் என் உள் மனதுக்குத் தெரியும், ஜானகி எந்தக் குற்றமும் அற்ற புனிதமானவள் என. எனினும், என் வேண்டுகோளை ஏற்று அவள் அக்னிப்ரவேசமும் செய்துவிட்டாளே??? வானவர்களாலும், தேவர்களாலும், அக்னியாலும் சீதை புனிதமானவள் என உறுதி செய்யப் பட்டிருக்க இப்போது இந்த ராஜ்யத்து மக்கள் இவ்விதம் பேசுகின்றார்கள் என்றால் என்ன செய்வேன் நான்???? இந்த அவதூறுப் பேச்சு ஒரு தீ போல் பரவுகின்றது என நினைக்கின்றேன். ஒரு அரசன் என்ற முறையில் நான் அதைத் தடுக்க வேண்டும்.நாட்டு மக்களை இந்த அவதூற்றைப் பரப்பா வண்ணம் தடுக்க வேண்டும். என்னுடைய குடிமக்களின் நலனுக்காக நான் என் உயிரையும் கொடுத்தாகவேண்டும். இன்னும் சொல்லப் போனால் என் உயிரினும் மேலாக நான் நினைக்கும் உங்களையும் நான் தியாகம் செய்ய வேண்டி இருக்கும். அவ்வாறிருக்கும்போது சீதையை மட்டும் நான் எவ்வாறு அந்தப்புரத்தில் வைத்திருக்க முடியும்??? சீதையை நான் தியாகம் செய்தே ஆகவேண்டும். ஒரு அரசன் என்ற முறையில் நாட்டு மக்களுக்கு வந்திருக்கும் இந்த சந்தேகத்தை நான் போக்கியே ஆகவேண்டும். ஆகவே லட்சுமணா! சீதையை நீ உடனேயே ரதத்தில் வைத்து அழைத்துச் சென்று கங்கைக்கு மறுகரையில் வால்மீகி முனிவரின் ஆசிரமத்தின் அருகே விட்டுவிட்டு வந்துவிடு. துன்பம் என்னும் கடலில் நான் மூழ்கியே ஆகவேண்டும் என்ற விதியோ இது??? வேண்டாம், வேண்டாம், லட்சுமணா, உன்னிடம் நான் மறுமொழி எதுவும் கேட்கவில்லை! நீ எதுவும் பேசவேண்டாம்! நான் சொன்னதைச் செய்து முடி! அது போதும்! என் அருமைச் சகோதரர்களே, இவ்விஷயத்தில் எந்த சமாதானமும் நீங்கள் எனக்குச் செய்ய வேண்டாம்.
மேலும் சீதையே காட்டுக்குச் செல்ல ஆசைப் பட்டாள். ஆகவே லட்சுமணா, சீதையை உடனேயே அழைத்துச் சென்று கங்கையின் மறுகரையில் விட்டுவிட்டு வா! சுமந்திரரை ரதத்தைத் தயார் செய்யச் சொல்வாய்! இது என் ஆணை!" என்று கூறிவிட்டு ராமர் தனி அறைக்குச் சென்று விட்டார்.
லட்சுமணன் கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பரதனும், சத்ருக்கனனும் திகைத்து நின்றனர்.
அக்னிப்ரவேசத்தோடு சீதையின் துயரம் முடியவில்லை. இப்போது மற்றொரு துயரம் அவளை ஆக்கிரமிக்கின்றது. மேலும் மேலும் சீதை படும் துயரங்களுக்குக் காரணம் என்ன?? அதை நாம் கதையின் ஆரம்பத்திலேயே பார்த்தோம் இல்லையா???
No comments:
Post a Comment