எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, July 23, 2008

ராமர் அயோத்தி திரும்புதல்-கம்பர் காட்டும் காட்சிகள்!

ராமர் அயோத்திக்குத் திரும்பும் வேளையில், பாரத்வாஜர் ஆசிரமத்தில் தங்க நேரிடுகின்றது. அதனால் ராமர் முன்னால் அனுமனை அனுப்பி, பரதனுக்குச் செய்தி சொல்லுமாறு கேட்டுக் கொள்கின்றார். ராமர் அயோத்தி வந்து சேரச் சற்றே தாமதம் நேரிட்டதாயும், அதைக் கண்ட பரதன், ராமர் எப்போது வருவார் என ஜோதிடர்களை அழைத்துக் கேட்டதாயும், அவர்கள் பதினான்கு வருடம் முடிந்து விட்ட காரணத்தால் ராமர் வர வேண்டும் என்று சொல்லியதாகவும் கம்பர் கூறுகின்றார். பின்னரும் ராமர் வந்து சேரவில்லை எனக் கலங்கிய பரதன் அதனால் உடல் நலம் கெட்டு மயங்கி விழுகின்றான். ராமருக்குத் தீங்கு நேரிட்டிருக்குமோ என அஞ்சுகின்றான். இல்லை, ராமன் எனக்கு ராஜ்யம் ஆள ஆசை வந்துவிட்டிருக்கும் இத்தனை வருடங்களில், அதனால் நானே ராஜ்யம் ஆள வேண்டும் என விட்டு விட்டானோ எனவும் எண்ணுகின்றான் பரதன்.

பின்னர் பரதன் ராமன் எப்போது வேண்டுமானாலும் வரட்டும். ஆனால் நான் உயிர் துறக்கப் போவது திண்ணம் எனக் கருதி உயிர் துறக்கத் தீர்மானிக்கின்றான். ஆகவே நகரிலிருந்து சத்ருக்கனனை வரவழைத்து அவனிடம் ராமர் குறிப்பிட்ட நாளில் வராததால், தான் முன்னரே கூறியபடி உயிர் துறக்கப் போவதாய்த் தெரிவிக்கின்றான்.
பாடல் எண் 4110
"என்னது ஆகும்கொல் அவ்வரம் என்றியேல்
சொன்ன நாளில் இராகவன் தோன்றிலன்
மின்னு தீயிடை யான் இனி வீடுவென்
மன்னனாதி என் சொல்லை மறாது என்றான்."
சத்ருக்கனனை நாட்டை ராமர் வரும்வரைக்கும் ஆண்டு வரும்படிக் கூறுகின்றான். சத்ருக்கனன் மறுக்கின்றான். நீ மட்டும் உயிர் துறப்பாய், கடைசித் தம்பியான நான் மட்டும் எந்தவித நாணமும், அச்சமும் இல்லாமல் கவலை ஏதுமின்றி ராஜ்யத்தை ஆள முடியுமா எனக் கேட்கின்றான்.
பாடல் எண் 4113

"கான் ஆள நிலமகளைக் கைவிட்டுப்
போனானைக் காத்துப் பின்பு
போனானும் ஒரு தம்பி போனவன்
தான் வரும் அவதி போயிற்று என்னா
ஆனாத உயிர் விட என்று அமைவானும்
ஒரு தம்பி அயலே நாணாது
யானாம் இவ் அரசு ஆள்வென் என்னே
இவ்வரசாட்சி இனிதே அம்மா"


ஆனால் பரதன், ராமர் வரும்வரைக்கும் ராஜ்யத்தைப் பொறுப்பான நபர்களிடம் ஒப்படைக்கவேண்டும் ஆகவே சத்ருக்கனன் உயிர் துறக்க முடியாது என ஆணை இடுகின்றான்.

இந்த நிகழ்ச்சி கெளசலையின் காதுகள் வரை எட்டி அவள் துடிதுடிக்கின்றாள். பரதனைத் தீயில் விழாமல் காக்க வேண்டி, தன் வயதையும், உடல் நலத்தையும், முதுமையையும் யோசிக்காமல் ஓடி வருகின்றாள். பரதனைத் தீயில் விழக்கூடாது என வற்புறுத்தும் கெளசலை, ஆயிரம் ராமர்கள் உனக்கு ஈடாக மாட்டார்கள் என்று பரதனைப் புகழ்ந்தும் பேசுகின்றாள். அந்தப் பாடல் இதோ! :
பாடல் எண் 4122

"எண்ணில் கோடி ராமர்கள் என்னினும்
அண்ணல் நின் அருளுக்கு அருகு ஆவரோ
புண்ணியம் எனும் நின் உயிர் போயினால்
மண்ணும் வானும் உயிர்களும் வாழுமோ!"

ஆனாலும் பரதன் அவள் வார்த்தையையும் மீறித் தீக்குளிக்கத் தயார் ஆகின்றான். தசரதச் சக்கரவர்த்தியின் மகன் ஆன நான், வாக்குத் தவற மாட்டேன் அவரைப் போலவே.
பாடல் எண் 4127

"யானும் மெய்யினுக்கு இன்னுயிர் ஈந்து போய்
வானுள் எய்திய மன்னவன் மைந்தனால்
கானுள் எய்திய காகுத்தற்கே கடன்
ஏனையோர்க்கும் இது இழுக்கு இல்வழக்கு அன்றோ


ஆகவே நான் உயிர் துறப்பேன் என்று கூறி பரதன் தீக்குளிக்கத் தயார் ஆகும் வேளையிலேயே அனுமன் அங்கே வந்து சேருவதாய்க் கூறுகின்றார் கம்பர். இங்கேயும் அனுமன் “கண்டேன் சீதையை” என்னும் தொனியிலேயே சொல்லுவதாய்ப் பாடல் வருகின்றது. அந்தப் பாடல் இதோ:
பாடல் எண்: 4130 யுத்த காண்டம்

“அய்யன் வந்தனன்: ஆரியன் வந்தனன்
மெய்யின் மெய் அன்ன நின் உயிர் வீடினால்
உய்யுமே அவன்? “ என்று உரைத்து, உள் புகா
கய்யினால் எரியைக் கரி ஆக்கினான். “

என்று சொல்கின்றார் கம்பர். இதை அடுத்துக் கம்பர் பட்டாபிஷேக நிகழ்ச்சிகளை வர்ணித்துவிட்டு அதோடு ராமாயணத்தை முடிக்கின்றார். ஆனால் நாம் உத்தர காண்டத்தை நாளை முதல் பார்க்கப் போகின்றோம்.

No comments:

Post a Comment