
பாரத்வாஜரும், "ராமா, மரவுரி தரித்துக் காட்டுக்குச் சென்ற போது உன் நிலை கண்டு மனம் நொந்த நான், இப்போது நீ எதிரிகளை வீழ்த்திவிட்டு வெற்றி வீரனாய் அயோத்திக்கு வந்திருப்பது கண்டு மிக்க மகிழ்வடைந்தேன். காட்டில் உனக்கு நேர்ந்தவைகள் அனைத்தையும் நான் அறிவேன். சீதை அபகரிக்கப் பட்டதும், நீ தேடி அலைந்ததும், சுக்ரீவன் உதவி பெற்றதும், சேதுவைக் கட்டியதும், கடல் தாண்டியதும், ராவணனை வீழ்த்தியதும், பின்னர் அனைத்துத் தேவாதி தேவர்களும் நேரில் வந்து உன்னை வாழ்த்தியதும், அனைத்தையும் என் தவ வலிமையால் நான் அறிந்து கொண்டே.ன். உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேட்டுப் பெற்றுக் கொள்வாயாக!” என்று சொல்கின்றார். ராமர் வழியில் உள்ள மரங்களெல்லாம், பூத்துக் குலுங்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ள, பரத்வாஜரும் அவ்வாறே அருளினார்.
பின்னர் ராமர் அனுமனைப் பார்த்து, நீ விரைவில் சிருங்கவேரபுரம் சென்று அங்கே குகன் என்னும் என்னுடைய நண்பனைப் பார்த்து நாம் அனைவரும் நலம் எனவும் அயோத்தி திரும்புவதையும் சொல்லுவாய். அவனிடம் கேட்டு பரதன் இருக்குமிடம் தெரிந்து கொண்டு பரதனைப் பார்த்து அனைத்து விஷயங்களையும் எடுத்துச் சொல்லு.நாம் அயோத்தி திரும்புகின்றோம் வெற்றியோடும், சீதையோடும் என்பதையும் அவனுக்கு எடுத்துச் சொல்வாய். ஈசன் அருளால் எங்கள் தந்தை நேரில் வந்து எங்கள் அனைவரையும் வாழ்த்தியதையும் தெரிவி. விபீஷணன், சுக்ரீவனோடு மற்ற வானரங்கள் புடை சூழ நான் அயோத்தியை நெருங்கிக் கொண்டிருக்கின்றேன் என்றும் சொல்வாய் என அனுப்பி வைக்கிறார். பின்னர் அனுமனிடம் சொல்லுகின்றார்; இந்தச் செய்தியை நீ சொல்லும்போது பரதனின் முகபாவம் எப்படி உள்ளது என்பதையும் ஏதேனும் மாறுதல்கள் ஏற்படுகின்றதா என்பதையும் கண்டுவிட்டு எனக்குத் தெரிவிக்க வேண்டும். நான் திரும்புவது குறித்து உண்மையில் பரதன் என்ன நினைக்கின்றான் என்பது எனக்குத் தெரியவேண்டும். ராஜ்யத்தை இத்தனை வருஷங்கள் பரதன் நிர்வகித்து வந்திருக்கின்றான். என்ன இருந்தாலும் ராஜ்ய ஆசை யாரை விட்டது? அதிலும் இத்தனை சுகபோகங்களும், சகலவிதமான செளகரியங்களும், வசதிகளும் உள்ள ராஜ்யம் யாரைத் தான் கவராது??? ஒருவேளை பரதனுக்கு இத்தனை வருஷங்களில் இந்த ராஜ்யத்தின் மீது ஆசை ஏற்பட்டிருந்தால் அந்த ஆசையை நான் பூர்த்தி செய்ய வேண்டும் அல்லவா?? அது என் கடமை. என்று சொல்லி அனுப்புகின்றார் ராமர். அவ்வாறே அனுமனும் சென்று அயோத்தியை மிக மிக வேகமாய் அடைய வேண்டி விரைந்தார்.
அயோத்தியை மிக வேகமாய் அடைந்த அனுமன் அங்கே சிருங்கவேரபுரத்தில் குஹனைக் கண்டு, ராமரின் செய்தியைத் தெரிவித்துவிட்டுப் பின்னர் அங்கிருந்து விரைவாக நந்திகிராமத்தை அடைந்தார். அங்கே பரதன் தவக் கோலம் பூண்டு ராமரின் பாதுகைகளை வைத்து நேர்மையான, உண்மையான மந்திரி, பிரதானிகளுடன், மக்கள் தொண்டை உண்மையான மகேசன் சேவையாக நினைத்து ஆட்சி புரிந்து வந்திருப்பதைக் கண்டு, மகிழ்ச்சி கொண்டார் அனுமன். அயோத்தி மக்களும் தங்கள் அன்பை பரதன் பால் காட்டும்விதமாய், பரதன் அனைத்தையும் துறந்து வாழும்போது தாங்கள் மட்டும் மகிழ்வான விஷயங்களில் ஈடுபடுதல் நல்லதல்ல என இருந்தனர். இப்படி இருக்கும் நிலையில் அனுமன் போய்ச் சேர்ந்ததும், பரதனைக் கண்டு வணங்கி இரு கையும் கூப்பியவண்ணம் ராமனின் செய்தியைத் தெரிவித்தார். எந்த ராமரை நினைத்து வருந்தி, அவர் வரவைக் குறித்து ஏங்குகின்றீர்களோ அந்த ராமர் வருகின்றார். ராவணனைக் கொன்று சீதையை மீட்டு, நண்பர்கள், லட்சுமணன், மற்றும் வானரப் படைகளுடன் சகலவிதமான பெருமைகளையும் ஈட்டிய ராமர் வந்து கொண்டிருக்கின்றார் என்று அனுமன் தெரிவிக்கின்றான். செய்தி கேட்ட பரதன் ஆனந்தத்தில் மூர்ச்சை அடைந்தான். பின்னர் ஒருவாறு மூர்ச்சை தெளிந்து எழுந்து அனுமனைக் கட்டித் தழுவித் தன் ஆனந்தத்தை வெளிப்படுத்தினான். அனுமனிடம் ராமர் வந்து அரசை ஏற்றுக் கொள்ளப் போவது பற்றிய தன் ஆனந்தத்தையும் சொல்கின்றான் பரதன். அனுமன் அப்போது ராமர் அயோத்தியில் இருந்து கைகேயியின் வரங்களினால் தசரதச் சக்கரவர்த்தி ராமரைக் காட்டுக்கு அனுப்பியது முதல் அன்று வரை நடந்த அனைத்தையும் சொல்ல ஆரம்பித்துச் சொல்லி முடிக்கின்றார். ராமர் வந்து கொண்டு இருக்கின்றார் என்றும் சொல்லவே அயோத்தி நகரம் கொண்டாட்டங்களை ஆரம்பித்தது, பரதனின் மகிழ்வுக்கு எல்லை இல்லை.
No comments:
Post a Comment