எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, August 22, 2010

பட்டாம்பூச்சிக்கும் உணர்வு உண்டு! 5

கண்ணில் ரத்தம் வந்தது ரமேஷுக்கு. வித்யா அவங்க வீட்டிலும் சரி, கல்யாணமாகி வந்தப்புறமும் சரி, ஒரு ராணி மாதிரியே நடத்தப் பட்டிருக்கிறாள். இப்படியான ஒரு நடவடிக்கை, அதுவும் முரட்டுத்தனமான நடவடிக்கையை அவள் கண்டதே இல்லை. ரமேஷ் குரலை உயர்த்திக் கூடப் பேசியதில்லை அவளிடம். தன் மனைவி மாற்றான் ஒருவன் கையால் அடிபடுவதை ரமேஷாலும் சகிக்க முடியவில்லை. வித்யா உடலே நடுங்கிக் கொண்டிருந்ததைக் கண்டான். ஆறுதல் சொல்லும் வண்ணம் அவள் கையைப் பிடித்து அழுத்திக் கொடுத்தான். அந்த ஒரு தொடுகை எத்தனையோ திருப்தியை இரண்டு பேருக்குமே கொடுத்தது. ரமேஷ் திரும்பிப் பார்த்துப் பல்லைக் கடித்துக் கொண்டே, "நானே ஓட்டறேன். வித்யாவாலே முடியாது. அதுவும் இப்போது இருக்கும் நிலையில்!" என்று நிறுத்தினான். "ஹாஹாஹா" என்று சிரித்தான் வில்லன். வித்யாவோ அவனைப் பார்த்து, "எங்கள் இருவரின் மொத்த சம்பாத்தியமும், சேமிப்பும் ஆற்றோடு போய்விட்டது. ஏன் இப்படிச் செய்தாய்?" என்று கத்தினாள். அவன் அதை அலட்சியம் செய்துவிட்டு, "வித்யா மேடம், உங்களால் ஒரு முக்கியமான வேலை ஆகவேண்டி இருக்கு. நீங்க தான் அதற்குச் சரியான நபர்." என்றான்.

"என்ன, சொல்லித் தொலை!" என்றாள் வித்யா. ரமேஷ் ஆக்ஷேபித்தான். "அவளால் எதுவும் செய்ய முடியாது. நீ எங்கள் குழந்தையை எங்களோடு பேசவும் விடமாட்டேன் என்கிறாய். அதிலேயே அவள் மனம் நொந்து போயிருக்கிறாள். அவளை வேலை வாங்காதே!" என்று கடுமையாகச் சொன்னான். வில்லனோ,"தம்பி, அதெல்லாம் நீ இப்போச் சொல்ல முடியாது. வித்யா நான் சொல்லும் வேலையைச் செய்தே ஆகவேண்டும். வேறே வழியே இல்லை." என்றான். வித்யா, "நான் தயார்!" என்று வறண்ட குரலில் சொல்ல, "இதோபார் வித்யா, நான் சொல்வதைச் சரியாகச் செய்யவேண்டும், இதோ இந்தக் கவரை எதிரே தெரியும் காபி கஃபேயில் நரசிம்மன் என்பவர் காத்திருப்பார். இந்த அட்டையை எடுத்துச் செல். அவரிடம் இதைக் கொடுத்துவிட்டு வா. அவர் வரவில்லை என்றால் காத்திருந்து கொடு." என்றான். "என்ன இருக்கு இந்தக் கவரில்??? ஏதேனும் சட்டத்துக்குப் புறம்பான விஷயம்? அல்லது அஃபின், கஞ்சா மாதிரிக் கடத்தல் விஷயமா? அதெல்லாம் இங்கே நடக்காது." என்றான் ரமேஷ்.

வில்லன் அதுக்கும் சிரித்துக் கொண்டான். "திருமதி வித்யா, இந்த வேலையை மிக அழகாய்ச் செய்து முடிப்பார்கள்." என்று சொன்னான். வித்யா வண்டியில் இருந்து கீழே இறங்கினாள். வில்லன் கொடுத்த கவரை வாங்கிக் கொண்டு சாலையைக் கடந்து எதிரே இருக்கும் காபி கஃபேக்குப் போனாள். கவுண்டரில் இருந்த பெண்ணிடம் நரசிம்மன் பெயரைச் சொல்லிக் கேட்க அவன் இரண்டு டேபிள்களைச் சுட்டிக் காட்டினான். அவற்றில் ரிசர்வ்டு என எழுதப் பட்டிருந்தது. அங்கே போய் உட்கார்ந்து கொண்டாள். நரசிம்மன் இன்னும் வந்திருக்கவில்லை. மெளனமாகத் தனக்குள் யோசித்துக் கொண்டே அந்தக் கவரை அப்படியும், இப்படியும் திருப்பித் திருப்பிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

வெளியே காரைப் பார்க் செய்யச் சொல்லிவிட்டு ரமேஷையும் அழைத்துக் கொண்டு காபி கஃபேயின் வாசலில் இருந்து வித்யாவைப் பார்க்கும்படியான கோணத்தில் வந்து நின்று கொண்டனர் இருவரும். ரமேஷ் வித்யாவையே பார்த்துக் கொண்டிருந்தான். வில்லன் அவனைக் கவனித்துக்கொண்டே,"என்ன பார்க்கிறாய் ரமேஷ்?? அந்தக் கவரில் இருப்பது என்ன தெரியுமா? நீ இப்போப் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறாயே? அந்த ப்ராஜெக்டின் முக்கியமான தகவல்கள் அடங்கிய கோப்பு. கணினியில் இருந்து எடுக்கப் பட்டுப் பிரிண்ட் அவுட் போடப் பட்டது. அதைத் தான் நரசிம்மனுக்குக் கொடுக்கறதுக்காக வித்யாவை அனுப்பி இருக்கேன். நரசிம்மன் யாருனு தெரியுமா??" பலமாகச் சிரித்தான் வில்லன். ரமேஷ் கோபம் அடங்காமல் அவனையே பார்த்தான். "நீ இருப்பது A&T தானே? அங்கிருந்து பிரிந்து போய்ப் போட்டிக் கம்பெனி ஆரம்பித்தானே தியாகு?? நினைவிருக்கிறதா? அவனுடைய கம்பெனியில் இந்த ப்ராஜெக்டுக்கான வடிவமைப்பைத் திரு நரசிம்மன் தான் எடுத்துச் செய்தார். அவங்களுக்குக் கிடைக்கலை. உங்க கம்பெனிக்குக் கிடைச்சது. அதுக்கு மூல காரணமே நீ தான்னு தெரியும். அதான் உன்னை ஒரு வழி பண்ணுவதற்காக இந்தத் தகவல்களைத் திரட்டி அந்தக் கம்பெனிக்குக் கொடுக்கப் போறேன். இப்போ நீங்க செய்யும் அதே வேலையை அவங்களும் செய்து காட்டுவாங்க." ரசித்துச் சிரித்தான்.

"யூ, யூ, இடியட், முட்டாள், அறிவற்றவனே! என்ன காரியம் செய்து விட்டாய்? இந்த விஷயம் வெளியே பரவினால், என், பாஸுக்கு மட்டும் தெரிஞ்சால் என்ன நடக்கும் தெரியுமா? அதுவும் வித்யாவை விட்டே செய்யச் சொல்லி இருக்கிறாயே?" கோபத்தைக் கட்டுப் படுத்த முடியாத ரமேஷ் அவனை ஓங்கி ஒரு குத்து விட்டு விட்டான். அவன் பேசாமல் இருப்பதைப் பார்த்துக் கொஞ்சம் தைரியம் வந்து அடிக்கவும் பாய்ந்தான். வில்லன் அலட்டிக்கொள்ளவே இல்லை. கைபேசியை எடுத்து, "327?" என்று கூப்பிட்டான். அவன் கையிலிருந்து அதைப் பிடுங்க முயற்சித்த ரமேஷை ஒரு தள்ளுத் தள்ள ரமேஷ் கீழே விழுந்தான். அவன் எழுந்திருப்பதற்குள், கைபேசியில் பேசி ஏதோ செய்தியை அனுப்பினான். என்னவென்று தெரிந்து கொள்ள ரமேஷ் செய்த முயற்சிகள் எதுவும் பலிக்கவில்லை. ரமேஷ் மணலைத் தட்டிவிட்டுக் கொண்டே எழுந்தான். காபி கஃபேயில் காத்திருந்த வித்யாவை நோக்கி ஓடினான். அவன் வருவதை உள்ளிருந்தே கண்ட வித்யா, கை அசைத்தாள். அதற்குள் வில்லன் ரமேஷைப் பிடித்து இழுத்துக் கொண்டு வந்தான்.

அப்போது அங்கே கோட், சூட் அணிந்த ஒருவர் வர, அவரும் கவுண்டரில் கேட்டுக் கொண்டே வித்யா அமர்ந்திருக்கும் டேபிளுக்கு வந்தார். வித்யாவைப் பார்த்து ஏதோ சொல்ல அவள் மறுப்பாகத் தலை அசைத்தாள். பின் தன் கையில் இருந்த கவரை அவரிடம் கொடுக்க அவரும் வாங்கிக் கொண்டு பிரித்துப் பார்த்துவிட்டுச் சிரித்தவண்ணம் தலை அசைத்தார். மீண்டும் வித்யாவை ஏதோ கேட்க மறுத்த வித்யா கை எடுத்துக் கும்பிட்டுவிட்டுப் பின் எழுந்து காரை நோக்கி வந்தாள். ரமேஷை வந்தவன் காருக்கு இழுத்துப் போனான். ரமேஷ் தன் எதிர்காலமே சூன்யமாகிப் போனதை நினைத்து இடிந்து போய் உட்கார்ந்திருந்தான். வித்யா காருக்குள் வர அவளிடம் வில்லன், "உன் கணவனைத் தேற்று. நீ அவன் அலுவலக ரகசியங்களைக் கொண்டு போய்க் கொடுத்துவிட்டாய் என்று வருந்துகிறான் பார்!" என்றான் ஏளனம் தொனிக்க.

"என்ன?" என்று அதிர்ச்சியாகக் கேட்டாள் வித்யா. "ம்ம்ம்ம்?? நல்லதொரு வேலை இல்லையா? செம்மையாகச் செய்து விட்டாய்! இனியும் அப்படியே செய்யணும்!" என்றான் வில்லன் சிரிப்போடு. வித்யா தலையில் கை வைத்துக்கொண்டு உட்கார்ந்துவிட்டாள்.

4 comments:

  1. இந்த கீதாம்மா வேறு சஸ்பென்ஸ் அதிகமா கொடுத்து படிக்கும் ஆர்வத்தை தூண்டி கொண்டே இருக்காங்க .
    எதற்கும் "எதற்கும் கவலை படதே வித்யா; எல்லாம் விரைவில் சரியாகும் "என்று வித்யாவுக்கு ஆறுதல் சொல்லி வைப்போம் !

    ReplyDelete
  2. இந்தத் தொடரோட தலைப்பு சொல்ற செய்தி என்னன்னு யோசிக்கிறேன்...

    ReplyDelete
  3. தலைவி சூப்பர் சஸ்பென்ஸாக போகுது...ஆனா ரொம்ப தூரம் போயிக்கிட்டே இருக்கிற மாதிரியும் இருக்கு ;)

    ReplyDelete
  4. ஐயோ... சஸ்பென்ஸ் தாங்க முடியல மாமி... ப்ளீஸ் சீக்கரமா சொல்லுங்க

    ReplyDelete