எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, March 07, 2011

பெண்ணுக்குச் சம உரிமை! இருக்கிறதா? இல்லையா?

அமாவசை ஆதிரை, என்பவர் நான் எழுதுவதை மிக மோசமான பெண்ணடிமைத்தனம் என்று சொன்னார். திரு.ராமா என்பவர் பெண்களின் நாகரிக(?!) உடை பற்றி மிகவும் புகழ்கிறார். கடந்த சில வருடங்களாகத் தொடர்ந்து இணையத்தில் எழுதிவரும் இளம் நண்பர் ஒருவரும் பெண் அடிமைத்தனத்தை நான் ஆதரிப்பதாய்ப் புகார் சொல்வார். அதுவும் அவருக்குப் பெண்கள் திருமணம் ஆகிப் புகுந்த வீடு போனால் அவர்கள் மாமியாருக்கோ, மாமனாருக்கோ, அந்த வீட்டினருக்கோ எந்தவிதமான சேவையும்/உதவியும் செய்யக் கூடாது; அப்படிச் செய்தால் அது பெண்ணடிமைத்தனம் என்ற உறுதியான கருத்து உண்டு. பெண்கள் அணிந்துகொள்ளும் உடையும் கவர்ச்சியாக இருந்தால்தான் என்ன தப்பு என்று வாதாடுவார். பப் கலாசாரம் சரி என்று சொன்னதாய் நினைவில் இல்லை. அதுவும் சொல்லி இருப்பாரோ என்னமோ. இதோ இந்தக் கலாசாரத்தால் ஓர் இளம்பெண் எப்படிச் சீரழிய இருந்திருக்கிறாள் என்பதை இந்தத் தளத்தின் செய்தி சொல்கிறது பாருங்கள். இதற்கும் அந்த நண்பர், ‘அந்தப் பெண்ணிற்கு வீட்டுக்குள்ளேயே பாதுகாப்பாகக் குடிக்க அனுமதிக்கவேண்டும்’ என்று சொல்கிறார். முன்னேற்றம் என்பது இதுதான் என்றாகிவிட்டது.



செய்தி-தட்ஸ்தமிழ்.காம்: மது போதையில் சாலையில் கவிழ்ந்த பெண்-சில்மிஷம் செய்த வாலிபர்கள்-விபரீதமாகும் கலாசாரம்

இது சென்ற வருடம் செப்டம்பர் மாதம் தினசரிகளிலும், தாட்ஸ்தமிழ்.காம் மின்னிதழிலும் வெளியிட்டிருக்கும் செய்தி. கல்லூரி மாணவி, போக்குவரத்து நிறைந்த தி.நகரில் இப்படி விழுந்து கிடந்திருக்கிறார். இது எதனால்? இப்படிப் பட்ட உரிமையையா கேட்கிறீர்கள்?
ஓர் இளம்பெண் இன்றைய நவநாகரிகத்தால் எப்படிச் சீரழிந்து வருகிறாள் என்பதற்கான அறிகுறியே இது. நமக்கு வெளியே தெரிந்து இந்த ஒரு பெண் என்றால் தெரியாமல் எத்தனை பேர்களோ? காதலனோடு நக்ஷத்திர ஹோட்டலில் மது அருந்தி உல்லாசமாக இருந்த அந்தப் பெண்ணை அந்த இளைஞர்கள் அந்த ஹோட்டலில் இருக்கும்போதே கவனித்திருக்கிறார்கள். பின்தொடர்ந்தும் வந்திருக்கிறார்கள். இந்தப் பெண் ஆபத்தைத் தானே வரவழைத்துக் கொண்டிருக்கிறார். இவர் குடிக்கும்போது பார்த்த பலரும் இனி இவருடன் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதைச் சொல்லவே வேண்டாம். அந்த அளவுக்கு, தன்னைத் தானே கேவலப்படுத்திக் கொண்டுள்ளார்.

புது வருடக் கொண்டாட்டம், நண்பர்கள் தினக் கொண்டாட்டம், காதலர் தினக் கொண்டாட்டம் என்ற புதுப் புதுக் கலாசாரங்களால் இந்தப் பெண்கள் கவரப்பட்டு மெல்ல மெல்லச் சீரழிந்து வருகின்றனர். நேற்று ஒரு நண்பர் சில பெண்கள் ஒரு குழுவாகக் கூடி அமர்ந்து கொண்டு மது அருந்தும் படங்களை அனுப்பி இருந்தார். அதைப் பார்க்கவே மனம் நொந்து போகிறது. எல்லாருமே நன்கு படித்து வேலையில் இருக்கும் கணினி யுகப் பெண்களே. இவர்களுடைய படங்களைப் பார்த்த இன்னொரு திருமணம் ஆகாத இளைஞர், “யப்பாடி, இவங்களைக் கல்யாணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தறவன் பாடு அதோகதிதான்! கடவுளே, எனக்குப் படிச்சு வேலைபார்க்கும் பெண்ணே வேண்டாம்! கல்யாணம்னாலே பயம்மா இருக்கும் போலிருக்கே,…” என்று சொல்கிறார். நிச்சயமாக அவர் சொல்வதில் தப்பே இல்லை. இவர்கள் திருமணம் ஆகிப் போனால் நிச்சயம் புகுந்த வீட்டில் கணவனோடு ஒத்துப் போவதே கஷ்டம்தான். இதிலே மற்றவர்களோடு ஒத்துப்போவதோ அவர்களுக்கு உதவியாய் இருப்பதோ, அவங்களிடம் உதவியைப் பெறுவதோ இயலாத ஒன்று. அப்படி எதிர்பார்த்தாலே, பெண்ணுரிமை அது, இது என்றுதான் பேசுவார்கள். இப்போதைய பெண்கள் பெரும்பான்மைக்கும் அதிகமானோர், திருமணம் ஆனதுமே தனிக்குடித்தனம்தான் இருக்கின்றனர். சேர்ந்து இருந்தால் மாமியாருக்கு எந்த உதவியும் செய்ய மனம் வருவதில்லை. புகுந்த வீட்டினருக்கு எந்த உதவியும் செய்யக் கூடாது என்றால் அது பெண்ணுக்கு உரிமை கிடைத்ததாக அர்த்தமில்லை; அந்தப் பெண் தன் கடமையில் இருந்து தவறுகிறாள் என்றுதான் அர்த்தம்.

மருத்துவமனைகளிலே அதிகமாய்ப் பெண்களே செவிலித்தாயாக இருந்து வருகின்றனர். ஒரு பெண்ணால்தான் சிறந்த செவிலித் தாயாக இருக்க முடியும். இருக்கிறாள். அப்படி வேறு யாருக்கோ முன்பின் அறியாத ஒருவருக்கு எந்தவிதமான அருவருப்பையும் பொருட்படுத்தாமல் சேவை செய்யும் பெண்- செவிலித் தாயாய் இருக்குமளவுக்குப் பரந்த மனம் இருக்கும் பெண்- சொந்த மாமியாருக்கோ, மாமனாருக்கோ அவர்களுக்கு உடல்நலம் இல்லை என்றாலும் கவனிக்கக் கூடாதாம். இதை என்ன “இஸம்” என்று சொல்வது?
ஆணும் பெண்ணும் இணைந்தும் இயைந்தும் வாழ வேண்டிய உலக வாழ்க்கையில் ஒருவர் மற்றவரின் துணையோ, உதவியோ இல்லாமல் வாழமுடியாது என்ற நிலையில் இன்றைய இந்தச் சீரழிந்த நிலைக்குக் காரணமே பெண்கள் தங்கள் கடமைகளிலிருந்தும் கட்டுப்பாடுகளிலிருந்தும் விலகி வெளியே வந்ததுதான். சென்ற தலைமுறைப் பெண்கள் ஒழுங்கான பாதையிலிருந்து விலகி வளர்க்கப் பட்டுவிட்டார்களோ? இப்போது அந்தப் பெண்கள் தங்கள் வாரிசுகளையும் அதைவிட மோசமாக, சுயநலம் உள்ளவர்களாகவே வளர்த்து வருகிறார்கள். எங்காவது ஆண்கள் தங்கள் கடமை, கட்டுப்பாடுகளிலிருந்து பிறழ்ந்து வாழ்ந்திருக்கலாம். அவர்கள் திருந்தி வாழவேண்டும் என்று சொல்வதைவிட்டு அந்த உரிமை பெண்களுக்கும் வேண்டும் என்ற திசையில் சென்றுகொண்டிருக்கிறது இன்றைய பெண்களின் சம உரிமைக் கோரிக்கை. இதையா கேட்டனர், சமுதாய முன்னேற்றத்திற்காக பெண்ணுரிமை பேசிய பாரதியும் நம் முன்னோர்களும்?

மக்களுக்கு வாங்கும் சக்தி பெருகி இருக்கிறது என்று சொன்னாலும், அந்த வாங்கும் சக்தியானது கடன் வாங்கும் சக்தியாகவே பல வீடுகளில் உள்ளது என்பதும் மறைக்கவோ, மறுக்கவோ முடியாத உண்மை. நான்கு மாதக் குழந்தையைத் தன் பெற்றோரிடம் விட்டால் கூடப் பரவாயில்லை, காப்பகங்களில் விட்டுச் செல்லும் பெண்களே அதிக எண்ணிக்கையில் உள்ளது. பலருக்கும் தேவை என்பதன் உண்மையான அளவுகோல் என்ன என்று புரியவில்லை. ஆகவே அதிகப் பணமே வசதியான வாழ்க்கை என்றே எண்ணுகிறார்கள்.

பெண்கள் என்றாலே அழகு செய்து கொள்பவர்கள்தான். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் அதைத் தந்திரமாகப் பயன்படுத்தும் வியாபாரிகளுக்குத் துணையாக பல பெண்களும் இந்தத் தள்ளுபடி விற்பனையில் வாங்கித் தள்ளுவது ரொம்பவே சகிக்க முடியாத ஒன்று. நல்லவேளையாக தள்ளுபடி இடங்களுக்கு விஜயம் செய்வதையே தள்ளுபடி செய்யும் என் வழக்கத்திற்கு கடவுளுக்கு நன்றி செலுத்துகிறேன். இத்தனை விஷயங்களும் திரு.சாரங் சொல்லி இருப்பதுபோல் ஆண்களுக்கும் பொருந்துவதே என்றாலும் இந்தப் பேரலையில் பெண்ணே பெண்ணின் உந்துசக்தியே அதிகம்.

இரசாயனப் பொருள்களின் தாக்கத்தால் முக அழகு கெடும் என்பது மட்டும் என் கருத்து இல்லை. இது வீண் செலவு என்பதும் என் கவலை. திரு.ராமா மஞ்சளையும், கசகசாவையும் சுலபமாக அடுக்களையிலேயே கிடைக்கிறது என்பதால் மிகவும் மட்டமாக நினைக்கிறாரோ என்னமோ! ஆனால் அது தரும் பயன்களை அனுபவித்தால்தான் தெரியும். இப்படி நம்மிடமே பல நல்ல விஷயங்கள் மலிந்து கிடக்க இன்று படித்தும் வேலை இல்லை, வெளியே வேலைக்குப் போய்ச் சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கும் பல இளம்பெண்களும் இவற்றிலிருந்து பல அழகு சாதனப் பொருள்களை தாங்களாகவே கண்டுபிடிக்கலாமே. அவற்றால் பக்க விளைவுகளும் ஏற்படாது. நம் பணமும் நம் நாட்டிலேயே சுற்றி வந்து பொருளாதார ரீதியான மேம்பாட்டையும் ஏற்படுத்தும். ஏற்கெனவே ஒருசில பெண்கள் இப்படிச் செய்கிறார்கள் என்பதும் நான் அறிந்த ஒன்று. அவர்களில் ஒருவர் திருமதி ராஜம் முரளி என்பவர். பொதிகைத் தொலைக்காட்சியில் அஞ்சறைப் பெட்டிச் சாதனங்கள் மூலம் அழகு செய்து கொள்ளும் வித்தையைச் சொல்லிக் கொடுக்கிறார். ஆனால் நம் பெண்கள் பார்ப்பதோ நெடுந்தொடர்கள் வரும் சானல்கள் தானே? இவையெல்லாம் அவர்கள் கண்களில் படாது. நிச்சயமாய் ஒரு வாரத்திலோ, பத்து நாளிலோ கூட வேண்டாம், வருடக்கணக்கில் பூசினால்கூட யாரும் இயல்பு நிறத்தைவிட சிவப்பாக முடியாது. ஆகவே இந்தச் சிவப்பழகு க்ரீம் என்பதே ஒரு மோசடியான சமாசாரம் என்பதில் யாருக்காவது மாற்றுக் கருத்து உண்டா? ஆனால் நாளுக்குநாள் விளம்பரங்கள் முதல் வீட்டின் முக்கிய மாதாந்திர மளிகை லிஸ்ட் வரை இவைதான் இன்று முதலிடத்தில் இருக்கின்றன.

ஒரு விளம்பரத்தில் நடிகைகளுக்கு மேக்கப் போடும் ஒருவர் தன் பெண்ணின் அழகை மேம்படுத்தப் பயன்படுத்தச் சொல்வது ஒரு சிவப்பழகு க்ரீம் ஆகும். அதைப் போட்டதுமே அவள் கலந்துகொள்ளும் போட்டிகளில் வெற்றி பெறுவாள். இங்கே திறமை, தகுதி போன்றவை அடிபட்டுப் போகிறது. கஷ்டப்பட்டுப் படித்த அவள் படிப்போ, தகுதியோ அடிபட்டுப் போகிறது. அவளுடைய நிறத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப் படுகிறது. இது பெண்களைக் கேவலப் படுத்துவதாய் யாருக்கும் தெரியவில்லையா? இந்தியாவில் பெரும்பான்மையான பெண்கள் கருப்பு நிறமே. அவ்வளவு ஏன்? நாம் வணங்கும் அந்த அம்பிகையும் சரி, கிருஷ்ணரும் சரி, ராமரும் சரி கருத்த நிறத்தவரே. ஆனால் அதைப் பற்றி எண்ணாமல் தானே நாம் அவர்களைக் கடவுளாக ஏற்று வணங்கிக் கொண்டிருக்கிறோம்? திரும்பத் திரும்ப விளம்பரங்களைப் பற்றியே சொல்லவேண்டி இருக்கிறது. அந்த அளவுக்கு மோசமாய் உள்ளன விளம்பரங்கள். இப்படியான விளம்பரங்களை எந்த மகளிர் முன்னேற்றக் கழகங்களும், பெண் உரிமைக்காகப் போராடும் சங்கங்களும் கண்டு கொள்வதே இல்லை.

மேலும் ஒரு பற்பசை விளம்பரம்.. அதில் அந்தப் பற்பசையைப் பயன்படுத்தினால் ஆணுக்கும், பெண்ணுக்கும் முத்தமிட ஆசை வரும் என்று சொல்கிறது. ஆண்களுக்கான ஷேவிங் க்ரீமா? அதைப்போட்டுக் கொண்டால் உடனே எல்லாப் பெண்களுமே அந்தக் குறிப்பிட்ட ஆண் பின்னால் ஓடிவிடுவார்கள். இன்னொரு பற்பசை விளம்பரத்தில் வரும் பெண் உங்கள் டூத்பேஸ்டில் உப்பு இருக்கா என்று கேட்டதுமே தன் மேல்சட்டையைக் கழட்டுவாள். அந்த ஆணின் பற்களைக் கண்டதுமே அவளுக்கு அவன் மேல் காதல் பெருகுகிறது. ஆனால் அதற்கென அவள் தன் மேல்சட்டையைக் கழட்டும் அளவுக்குப் போவதாய்க் காட்டுவது பெண்ணினத்தையே இழிவுபடுத்துவதாய் உள்ளதே! இன்னொரு பற்பசை விளம்பரத்தில், ரயிலில் வரும் பெண் டிக்கெட் பரிசோதகர் ஓர் ஆணிடம் டிக்கெட் கேட்பாள். அவன் பேச வாயைத் திறந்ததுமே அவன் பற்களில் இருந்து வரும் மணமும், ஒளியும் அவளை மெய்மறக்கச் செய்து, உடனே தலையை உதறிக்கொண்டு, டிக்கெட் கூடக் கேட்காமல், தான் வந்த வேலையை மறந்து அவனோடு ஓடிவிடுவாள். இப்படி நிஜமாவே ஒரு பெண் நடந்து கொண்டால் அவளுக்கு வேலையே போய்விடும் என்பதே உண்மை. வேலை நேரத்தில் கடமையை மறந்துவிட்டு ஒரு பெண் இப்படி நடந்துகொள்வாள் என்று சொல்வதை எல்லாரும் ஆதரிக்கிறீர்களோ? இன்னொரு பெண்கள் வாகன விளம்பரத்தில் காருக்குள் மனைவியோடு அல்லது காதலியோடு அமர்ந்திருக்கும் ஒரு நபரின் காரின் கதவு கண்ணாடி போல் பளிச்சிடுகிறதாம். அதைப் பார்த்து, போகிற வருகிற பெண்கள் எல்லாம் தன் முகத்தை அலங்காரம் செய்துகொள்கிறார்களாம். இவன் காரில் இருந்தபடியே அதுவும் சிக்னலில் வண்டி நிற்கும்போது இதைப் பார்த்து அசட்டுத்தனமாய் ரசிக்கிறானாம். என்னங்க இது, இதைவிடவா பெண்ணை இழிவுப்படுத்த முடியும்? மனம் கொதிக்கவில்லை இவற்றை எல்லாம் பார்த்து? இவற்றை எல்லாம் எந்தப் பெண்ணியவாதிகளோ அல்லது தங்களை அப்படிச் சொல்லிகொள்கிறவர்களோ சுட்டிக் காட்டியதும் இல்லை. அவர்கள் கண்களில் இவை படுவதும் இல்லை. அவர்களுக்குத்தான் கணவனுக்கும் மாமியாருக்கும் காபி போட்டுக் கொடுக்கும் பெண்ணடிமைகளை மீட்கவேண்டிய நெருக்கடி இருக்கிறதே!

இன்று படித்தவர்கள் மத்தியில்தான் அதிகம் கலாசாரச் சீரழிவு ஏற்பட்டுள்ளது. அதற்குக் காரணம் ஒரு வகையில் பெற்றோரே. சின்ன வயதில் இருந்தே ஒழுக்கத்தையும், கட்டுப்பாட்டையும் போதித்து வளர்க்காமல் இறை நம்பிக்கையைப் பற்றிச் சொல்லிக் கொடுக்காமல், பக்தியை வளர்க்காமல் இருப்பதே முழுக்காரணம். குழந்தைகளுக்குச் சிறு வயதிலேயே பகிர்ந்து உண்ணவும், இறைவனைத் தொழுதபின்னரே உணவு உண்ணவும் பழக்கவேண்டும். இன்று பெரும்பாலான வீடுகளில் ஒரு குழந்தைதான் இருக்கிறது. அதுவும் அப்பாவும், அம்மாவும் வேலைக்குப் போய்விடுவதால் அநேகமாய் ஆயாக்கள் மூலமோ அல்லது வீட்டிலேயே யாரானும் இருந்தோ பார்த்துக்கொள்வதுதான் நடக்கிறது. முன்னாள்களில் கூட்டுக்குடும்பம் என ஒரு முறை இருந்ததால் பல குழந்தைகள் ஒன்றாக இருக்கும். அனைத்துக்கும் ஒரே மாதிரியான சாப்பாடு கிடைக்கும். ஆனால் இன்று அப்படி இல்லையே. துரித உணவுக்குப் பெற்றோரே அடிமை என்னும்போது குழந்தைகளைக் குற்றம் சொல்லி முடியுமா?

முன்பெல்லாம் பள்ளிகள் கடவுள் வாழ்த்தோடே ஆரம்பிக்கும். இப்போதும் மற்ற மதங்கள் நடத்தும் பள்ளிகளில் அவர்களின் கடவுளருக்கு வாழ்த்துச் சொல்லி வழிபட்டுவிட்டே தொடங்குகின்றனர். ஆனால் நாம்தான் நம் பண்பாட்டையும், கலாசாரத்தையும், இறை நம்பிக்கையையும் இழந்துவிட்டோம். ஒரு வகையில் மதச் சார்பற்ற அரசுகள் எனக் கூறிக்கொள்ளும் நம் அரசுகளே இதற்குக் காரணம் எனலாம். கடவுள் வாழ்த்தைப் பள்ளியில் இருந்து நீக்கியதோடு அல்லாமல் பல தேசத் தலைவர்கள், பல அறிஞர்கள், ஞாநிகள் போன்றோரின் வாழ்க்கை வரலாற்றையும் கற்பிப்பதில்லை. இராமகிருஷ்ண பரமஹம்சரைப் பற்றியோ, விவேகானந்தர் பற்றியோ, ரமணர் பற்றியோ, மற்ற மஹான்கள் பற்றியோ பாடங்கள் ஏதும் இல்லை. என்னிடம் ட்யூஷனுக்கு வரும் குழந்தைகளின் தமிழ்ப் பாடப் புத்தகங்களையும், சரித்திரப் பாடப் புத்தகங்களையும் பார்த்து மனம் வெறுத்துப் போய்விட்டேன். எந்தக் குழந்தைக்கும் தமிழில் ஒரு வார்த்தை கூடத் தப்பில்லாமல் எழுதத் தெரியவில்லை. அந்தத் தமிழைக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியருக்கே தமிழ் தடவல் என்ற நிலையே இப்போது காண முடிகிறது.

நாட்டுப்புறம் என்னும் சொல்லின் அர்த்தமே மாறும்படியாக நாட்டுப்புரம் என அச்சிட்டுவிட்டு அதுதான் சரியானது என வாதாடும் தமிழறிஞர்கள் நிறைந்த தமிழ்நாட்டிலே, தமிழைப் பிழையின்றி எழுதவும், பேசவும், படிக்கவும் மாணாக்கர்களுக்குத் தெரியவில்லை என்பதைக் குறையாகச் சொல்ல முடியுமா? இதுவே ஒரு சினிமாவிலே விஜய், தன் உறவுக்காரக் குழந்தைக்குக் கவிதைப் போட்டிக்கு எழுதிக் கொடுத்த கவிதை என்றால் பார்க்காமல் ஒப்பிப்பதோடு, எந்தப் படம், எந்தத் தியேட்டரில் வந்து எத்தனை நாள் ஓடியது என்பதையும் சொல்லுவார்கள். பெற்றோரும் இதைக் கண்டு மனமகிழ்ந்து பூரித்துப் போகிறார்கள். குழந்தைகள் சினிமா நடிகர் மாதிரி வேடமிட்டுக் கொண்டு நடிப்பதையும், ஆடுவதையும், பாடுவதையும், சினிமாப் பாடல்களின் வக்கிரமான வரிகளுக்கு பாவங்கள் காட்டி ஆடுவதையும், அது சம்பந்தமான போட்டிகளில் கலந்து கொள்ளவுமே ஊக்குவிக்கப் படுகின்றனர். (நிகழ்ச்சியின்போது, “உனக்கு இது யார் சொல்லிக்கொடுத்தாங்க?” “என் மம்மி” என்பதே பெரும்பான்மை பதில்) இப்படி வளரும் குழந்தைகளுக்கு ஒழுக்கமும், கட்டுப்பாடும் எங்கிருந்து வரும்? அதற்காகவும் இன்றைய பெற்றோர் ஆயிரக்கணக்கில் செலவு செய்கின்றனர். இதோ ஒரு சானலின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியிட்ட சிறுவனுக்காகப் பெற்றோர் செய்த செலவுகள் நினைத்தாலே தலைசுற்றுகிறது. ஒரு பக்கம் இந்தியாவை வறுமை நாடு என்கிறார்கள். வறுமைக் கோட்டுக்குக் கீழ் இவ்வளவு பேர் என்ற புள்ளிவிவரங்கள். மறுபக்கம் தங்கள் குழந்தை தொலைக்காட்சியின் ஒரு நிகழ்ச்சியில் ஜெயிக்க, பெற்றோர்- அதுவும் நடுத்தர வர்க்கத்து, வருமான வரி கட்டும் பெற்றோர்- செய்யும் செலவு. அந்தப் பையனின் தாய் கொஞ்சமாவது யோசித்திருக்கலாமே.

இந்தத் தொலைக்காட்சியின் போட்டிகளில் கலந்து கொள்ளும் குழந்தைகளுக்கு விளையாட்டு என்றால் என்னவென்று தெரியுமா என்பதே சந்தேகம்; அப்பாவும் அம்மாவும் அவ்வளவு படுத்தி எடுக்கின்றனர். மேலே சொன்ன சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பையனை, ‘சரியாப் பாடலைனா அப்பா அடிப்பேன்’ என்று சொன்னாராம். நடனப் போட்டியில் கலந்துகொள்ளும் பெண்களுக்கோ உணவுக் கட்டுப்பாட்டில் இருந்து எல்லாமும். மிகச் சிறிய வயதிலேயே இந்த ரசாயனக் கலவைகள் மிகுந்த அழகு சாதனப் பொருள்களைப் பயன்படுத்தி, சின்னக் குழந்தைகள் கூட குழந்தைத் தன்மையை இழந்து காட்சி அளிக்கின்றனர். இது எந்தத் தாயின் கண்ணிலாவது படுகிறதா என்றால் இல்லை என்றே சொல்லவேண்டும். பக்கத்து வீட்டுக் குழந்தைக்குத் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இடம்பெற வாய்ப்புக் கிடைத்தது என்றால் தன் வீட்டுக் குழந்தையை அவர்கள் படுத்தும்பாடும் அந்தக் குழந்தைகள் பெறும் மன உளைச்சலும் நேரில் பார்த்தால்தான் நம்பமுடியும்.

பெண்கள் தங்கள் நளினத்தையும், எழிலையும், கம்பீரத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகின்றனர். ஆணோடு சம உரிமை என்று போராடியதால் பெண்களுக்கு அதிகமாக என்ன கிடைத்தது? அல்லது கிடைக்கப் போகிறது என்று எனக்குப் புரியவில்லை. எதையுமே பிடிவாதமாய் ஸ்தாபிதம் செய்யாமலேயே நாம் நம் உரிமைகளை எடுத்துக்கொள்ளலாம். அல்லது உரிமைகள் இல்லை எனில் மீட்டெடுக்கலாம். ஆனால் அதற்குத் தேவை சகிப்புத் தன்மையும், பொறுமையும்.

தொடரும்.

21 comments:

  1. அருமையான இடுகை!

    சரியான புரிதல் இல்லாமையும், முழுமையற்ற அபிப்ராயங்களின் அடிப்படையில் சுதந்திரம் என்ற வார்த்தையை பயன்படுத்துவதுமே இன்றைய பல ஆபத்துக்களுக்கு வித்திட்டிருக்கின்றன.

    விளம்பரங்களைப் பற்றி என்ன சொல்ல? அவை, மறைமுகமாக சொல்ல முனைகிற கருத்துக்களை, கூர்ந்து பார்த்தால் அது பெண்களுக்கு எவ்வளவு இழுக்கினை விளைவிக்கின்றது என புரியும்.

    //கல்லூரி மாணவி, போக்குவரத்து நிறைந்த தி.நகரில் இப்படி விழுந்து கிடந்திருக்கிறார்//

    இது செய்தியானதால் கவனத்துக்கு வந்தது. செய்தியில் வராத பல அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் நிகழ்வதாக, சமூக ஆர்வலர்கள் வெகுஜனப்பத்திரிகைகளிலும், வலைப்பூக்களிலும் எழுதிக்கொண்டிருப்பது மேலும் அச்சுறுத்துகிற அபாயம்.

    ReplyDelete
  2. எல்கே,என்ன ஒண்ணுமே சொல்லலை?? :P

    ReplyDelete
  3. வாங்க சேட்டைக்காரன், உங்களுடைய கருத்துக்களுக்கு என் நன்றி. சரியான புரிதல் எவ்விதத்திலும் இல்லை என்பதை எனக்கு வரும் பின்னூட்டங்களும் சொல்கின்றன. சுதந்திரத்தின் அர்த்தம் புரியவில்லை! நான் சொல்வது பெண்களுக்கு எதிரான கருத்துக்கள் இல்லை என்பதையும் சில பெண்கள் புரிந்து கொண்டும் இருக்கிறார்கள் அல்லவா? அது போதும்! சிறு துளி பெரு வெள்ளம்!

    ReplyDelete
  4. திரு வஞ்சூர், போகவே முடியாத ஒரு வலைப்பக்கத்துக்குச் சுட்டி கொடுத்திருக்கீங்க! :((((( உங்க வலைப்பக்கத்தையும் பூட்டி வச்சிருக்கீங்க! :((((


    Profile Not Available

    The Blogger Profile you requested cannot be displayed. Many Blogger users have not yet elected to publicly share their Profile.

    If you're a Blogger user, we encourage you to enable access to your Profile.

    Page not found
    Sorry, the page you were looking for in the blog எதிர்க்குரல் does not exist.

    ReplyDelete
  5. சகோதரி கீதா சாம்பசிவம் அவர்களுக்கு

    பிழையை சுட்டி காண்பித்ததற்கு நன்றி
    சென்சிடிவ்வான தகவல்கள் அடங்கிய பதிவு. சகோதரிகள் மன்னிக்கவும். எழுதுவதற்கு சங்கடமாக இருந்தாலும், பெண்ணடிமைத்தனத்திற்கு விஞ்ஞானிகளும் காரணம் என்று புரியவைப்பதற்காகவே இந்த பதிவு.

    இப்பொழுது சரியாக இருக்கும்.

    CLICK THE LINK AND READ.

    விஞ்ஞானிகளால் உயிர்பெற்ற பெண்ணடிமைத்தனம்...

    .



    ...

    ReplyDelete
  6. நாகரீகமற்ற விளம்பரங்கள் முகத்தையும்,மனதையும் சுளிக்க வைக்கும் காட்சி விளம்பரங்கள் எல்லாவற்றையும் நானும் வெறுப்பவள்.

    என் கணவரிடம் புலம்புவேன் பெண்களை கேவலப் படுத்துகிறார்களே என்று. அந்த விளம்பரங்களில் அவர்கள் தந்திரமாய் வெளி நாட்டு பெண்ணை வைத்து, வெளி மாநில பெண்களை வைத்து சில விரும்பதகாத விளம்பரங்கள் எடுத்து இருப்பார்கள். எந்த நாடாய் இருந்தால் என்ன? பெண்ணை இழிவு படுத்தும் விளம்பரங்கள் வரவேற்க தக்கவை அல்ல.

    உலக மகளிர்தினத்தில் பெண்கள் போற்றபட வேண்டும்.

    உங்கள் பதிவு நல்ல விழிபுணர்வை ஏற்படுத்தட்டும்.

    ReplyDelete
  7. மற்றவர்கள் கருத்து சொல்லட்டும். இப்பலாம் படிக்க ரொம்பப் பிடிக்கிறது, எழுதுவதை விட :))))

    ReplyDelete
  8. உள்ளேன் அம்மா! ஆமா அதுக்குன்னு இவ்வளோஓஓஓஓஓஓஓஓ நீள பதிவா போடறது? படிக்கவே மூச்சு முட்டுது... :-))

    ReplyDelete
  9. Hats off to you maami. The way you write your thoughts...wow! your views are absolutely very correct.
    This generation is not valuing any relationships including their own friends!! For them parents are last in their list. They have no value for anything even for their well being , for their life, for their own happiness!!! They are living in a very false world. God only have to save them. They may realize, i hope so,when they become old,when no one bothers to look at them, to take care of them.!!! That will be too late.

    I agree with you in all points.Thanks a lot for your right thoughts.

    ReplyDelete
  10. அந்தப் பெண்ணிற்கு வீட்டுக்குள்ளேயே பாதுகாப்பாகக் குடிக்க அனுமதிக்கவேண்டும்’

    Achachaa!!!! Would he !! I bet he is single now:)))Ha ha !!


    என் க்லையன்ட்ஸ் தம்பதியர்களில் பெண்ணடிமையை வன்மையாக கண்டிக்கிறேன் என்கிற ஆ(ண்)சாமிகள் வீட்டில் தவில், கடம் மிருதங்க வித்வான்கள் !! வெளுத்து வாங்குபவர்கள் !!என்னத்த சொல்ல .!!

    இந்த ஜெண்டெர் பயஸ் பாத்தா நானும் தாடி , மீசை வச்சுப்பேன் நீ என்ன கேக்கறது தான்!!

    ReplyDelete
  11. வஞ்சூர் நன்றி. உங்கள் சுட்டிக்குச் சென்று பார்த்தேன்.

    ReplyDelete
  12. கோமதி அரசு, வாங்க, உங்கள் ஆதரவான கருத்துகளுக்கு நன்றி.

    ReplyDelete
  13. எல்கே, அப்படியா??:))))))

    ReplyDelete
  14. @திவா, பதிவின் நீளத்தைச் சரிவரக் கவனிக்கலை! :((

    இன்னிக்கு வெட்டிட்டேன்! :D

    ReplyDelete
  15. எஸ்கேஎம், உங்கள் பின்னூட்டம் இன்னும் அதிகமாய் மகிழ்ச்சியைத் தருகிறது. நன்றிங்க.

    ReplyDelete
  16. ஜெயஸ்ரீ, கிட்டத்தட்ட அப்படித் தான் ஆகும் போல!:)))

    செல்வன் என்னும் அந்த இளைய நண்பர் இணையத்தில் எழுதுகிறார். உலகின் புதிய கடவுள் என்ற பெயரிலே. நல்லவர், வல்லவர். இரண்டு குழந்தைகளோடும், மனைவியோடும் இருக்கிறார். ஆனால் குழுமங்களில் பெண்கள் பற்றிய விவாதங்களில் இவருடைய ஆதரவு எல்லாம் நவநாகரீகமணிகள் செய்யும் செயல்களுக்கே! இந்த விஷயத்தில் கடந்த நான்கு வருடங்களாக நாங்கள் மோதிக்கொண்டிருக்கிறோம். :)))))))) மற்றபடி அவர் ஒரு நல்ல அருமையான நண்பர். மாற்றுக் கருத்துகள் எவ்வளவு சூடாக இருந்தாலும் நிதானமாக விவாதம் செய்யும் திறமை கொண்டவர்.

    ReplyDelete
  17. I wish to read the side of your rival party. When will they appear here?

    All comments so far appearing here endorse your side only.

    Only if the rival side appears here, I, for one, can come to know which side is preferable.

    ReplyDelete
  18. The examples cited involve women, not small girls. for e.g. working women drinking and dancing in discotheques.

    The blog post mostly blame women, and only slightly men.

    It talks about fall in educational standards, lack of moral education, commodification of female bodies in advts etc. which cant come under the issue of equal rights for women.

    Women or Men, if they become adults, are responsible for their acts. If they go in a particular way, out of the commonly accepted way, who is to blame ? How does it come under the subject of women and equal rights ?

    I am afraid you treat women almost like Nietzsche did. Nietzsche was a notorious misogynist. He said:

    Woman is a development between man and child.

    I say this as I see adults in the episodes, who should be treated as adults. You bemoan as if they don't know what they are doing.

    They know what they are doing !

    ReplyDelete
  19. வாங்க ஜோ, எல்லாரும் எதுக்கு வம்புனு பேசாமல் இருக்காங்க போல! பொதுவாய் இந்தக் காலத்துப் பெண்களுக்கு நான் எழுதுவதில் உடன்பாடு இருக்காது என்பது தெரிந்தே எழுதுகிறேன். மற்றபடி என் கருத்தை ஏற்பவர் ஏற்கலாம், ஏற்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை, எதுக்கு preference கொடுக்கணும்னு அவசியமும் இல்லை. சர்வதேசப்பெண்கள் தினத்தைப் பயன்படுத்திக்கொண்டு இப்படியும் சில கருத்துக்கள் இருக்கின்றன என்பதைச் சொல்லவேண்டியதே எனக்கு இங்கே கடமையாக நினைக்கிறேன். எங்காவது ஓரிருவருக்குப்போய்ச் சேர்ந்தாலே போதுமானது.


    I say this as I see adults in the episodes, who should be treated as adults. You bemoan as if they don't know what they are doing.

    They know what they are doing !//

    ஆம்,அது தெரிஞ்சுதான் கண்ணைத் திறந்து கொண்டு கிணற்றில் விழவேண்டாம் என்று சொல்கிறேன். இது தான் மிகப்பெரிய ஆணாதிக்கம் என்றும் சொல்வேன். அவங்க செய்யும் காரியங்களுக்கு அவங்க அவங்க பொறுப்பு என்பதாலேயே அந்தப் பொறுப்பை நினைத்து இன்னும் கவனமும், எச்சரிக்கையும், நிதானமும், விவேகமும் இருக்கணும் என்பதே என் வேண்டுகோள். ஆண்கள் அவங்க செளகரியத்திற்காகப் பெண்கள் உடை அணிவது அவங்க இஷ்டம்னு சொல்றாங்க. உடனே பெண்களும் உடை அணிவதில் சிக்கனம் காட்டிச் சுதந்திரத்தைக் கடைப்பிடிக்கிறார்கள்.

    ஒரு திரைப்பட நடிகையே பொது நிகழ்ச்சியில் அரைகுறை உடையுடன் வந்தால் விமரிசிக்கும் நாம் மற்றப் பெண்களையும் விமரிசிக்காமலோ, சொல்லாமலோ இருந்தால் அது பெண்ணினத்துக்கே நல்லதில்லை.

    நீங்க என்னை ஆதரிச்சிருந்தால் தான் நான் ஆச்சரியப்பட்டிருப்பேன். :)))))))))

    ReplyDelete