எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, February 14, 2014

உள்ளம் என்னும் கோயிலிலே தெய்வம் வேண்டும் அன்பே வா! ( காதலர் தினத்துக்கான மீள் பதிவு)


அன்பு என்னும் பண்பு மட்டும் என்றும் ஒரே தன்மையாகவே இருந்து வருவதாகும். எப்போதும் மனதுக்கு இன்பம் அளிக்கும். மற்றக் கஷ்டங்களை எல்லாம் துச்சமாய் நினைக்கவைக்கும். சகித்துக்கொள்ளும் வல்லமையைத் தரும். அன்பு மனிதவாழ்க்கையின் ஒரு பொக்கிஷமாகும். அந்த பொக்கிஷத்தை அடைந்தவர்களுக்கு மற்றக் கஷ்டங்கள் துச்சமாயும், தூசியாகவும் தெரியும். ஆகவே இந்த அன்பு என்னும் வற்றாத ஜீவநதியைப் பொங்கிப் பெருகி ஓட வைக்கும் ஓர் நாளே நாளைய தினம் பெப்ரவரி பதினான்காம் தேதி. இது காதலர்க்கு மட்டும் உரியதினமன்று. காதல் என்றாலே அன்பு என்றே அர்த்தம் கொள்ளவேண்டும். காதல் யாரிடம் வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். என்ன?? ஆச்சரியமாய் இருக்கிறதா? உண்மை அதுதான். காதல் என்ற வார்த்தையின் அர்த்தம் இன்றைய தினங்களில் ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே ஏற்படும் தனிப்பட்ட அன்பை, சிநேகிதத்தைக் குறித்தாலும், இதற்குப் பல நூற்றாண்டுகள் முன்னர் திருஞானசம்பந்தர், ஈசனிடம் காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி இருப்பதை அறிவோமல்லவா?

""காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி
ஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவது
நாதன் நாமம் நமச்சி வாயவே. ""

ஆண்டாளும் ரங்கநாதர் மேல் காதல்தான் கொண்டாள். அவள் பெண் என்பதால் அவளுடைய காதலில் சற்று வேறுபாடுகள் கூறப்பட்டாலும் இவ்வுலக வாழ்க்கையை அவள் விரும்பவில்லை என்பது தெளிவு. இறைவனிடம் கொண்ட மாறா பக்தியைத் தான் காதல் என்றும் கூறி வந்திருக்கின்றனர். அதே சமயம் கணவன், மனைவி மேல் கொண்ட அன்பு, உடன்பிறந்தோர் சக உடன்பிறந்தோரிடம் கொள்ளும் அன்பு, மாணவன் ஆசிரியருக்குக் காட்டும் மரியாதை கலந்த அன்பு, நண்பர்களின் அன்பு, சிநேகிதிகளின் அன்பு, வீட்டுப் பெரிய்வர்களிடம் காட்டும் அன்பு, சக மனிதர்களிடம் காட்டும் மனித நேயம் கலந்த அன்பு, என அன்பை வெளிப்படுத்தும் ஓர் தினமே நாளைய தினம்.

வெளிநாட்டில் இருந்து எல்லாக் கலாசாரங்களையும் அப்படியே பின்பற்றும் நாம் அவர்களின் இந்த உயரிய பண்பைப் பின்பற்றாமல் வெறும் காதலர்களுக்கு மட்டுமே என ஊடகங்களால் கற்பிக்கப் பட்டு, வணிகர்களால் நடைமுறைப் படுத்தப்பட்டு நாளைய தினம் ரோஜாப்பூக்களின் விலை எக்கச்சக்கமாய் இருக்கும், பரிசுப் பொருட்கள், மழையெனப் பொழியும், எங்கே சென்றாலும் இளம் காதலர்கள் ஜோடியாகச் செல்வார்கள். பெரிய பெரிய ஹோட்டல்களில் நிரம்பிவழியும் வண்ணம் போதையுடன் கூடிய டிஸ்கோ பாடல்களும், ஆடல்களுமாக அமர்க்களப்படும். ஒரு வாரமாக எஸ்.எம்.எஸ்ஸில் நாளைய தினம் சலுகைகள் எதுவும் கிடையாது என்ற அறிவிப்பு வந்த வண்ணமாக இருக்கிறது. அப்படி என்றால் எத்தனை எஸ்.எம்.எஸ்.கள் போகும் என நினைக்கவே அச்சமாய் இருக்கிறது.

இது நம்முடைய கலாசாரமே அல்ல. என்றாலும் பின்பற்றத் தொடங்கியவர்களை நிறுத்தச் சொல்வதும் என்னுடைய வேலை அன்று. நாளை உங்கள் காதலியிடமோ, காதலரிடமோ காட்டப் போகும் அன்பை அதை வெளிப்படுத்தும் முன்னர் முதலில் உங்கள் குடும்ப அங்கத்தினரிடம் காட்டுங்கள். உங்கள் தந்தையை எவ்வளவு நேசிக்கிறீர்கள் என அவருக்கு வெளிப்படுத்துங்கள். தாய்க்கு நாளைய தினம் உங்களால் இயன்ற உதவியைச் செய்யுங்கள். சகோதரனோ, சகோதரியோ இருந்தால் அல்லது அக்கம்பக்கத்தினருக்கு நாளைய தினம் சிறு உதவி ஏதாவது செய்வது என முடிவு செய்து கொள்ளுங்கள். அவர்களிடம் உங்கள் அன்பை வெளிப்படுத்துவது இப்படித்தான். பேருந்திலோ, ஆட்டோவிலோ பயணிக்க நேர்ந்தால் அதன் நடத்துநரிடமோ, ஓட்டுநரிடமோ நன்றி கூறி உங்கள் அன்பை வெளிப்படுத்துங்கள்.

வெகு தூரப் பயணத்தின் முடிவில் நாங்கள் ஓட்டுநரிடமோ, நடத்துநரிடமோ நன்றி கூறி விடைபெறுவதை வழக்கமாய் வைத்திருக்கிறோம். ஏனெனில் நம்முடைய சாலைகளின் தரத்தைப் பொறுத்துக்கொண்டு அவர்கள் ஓட்டிக்கொண்டும் பேருந்தை நடத்திக்கொண்டும் நாம் செல்லவேண்டிய இடத்துக்குக் கூட்டிச் செல்லுவதில் அவர்கள் உயிரையும் சேர்த்துப் பணயம் வைக்கின்றனர். இங்கே மாநரகப் பேருந்தில் மட்டும் என்ன வாழ்ந்தது? அது இன்னும் கொடுமை! அவர்களும் மனிதர்கள் தாமே? ஆகவே நம் கண்ணில் பட்ட தெரிந்த நபர்களுக்கு எல்லாம் நன்றியைத் தெரிவிக்கலாம். நம் அன்பை இப்படி வெளிப்படுத்தலாம். அவர்கள் மனம் மகிழ்வது உங்கள் மனம் மட்டுமல்ல வயிறும் நிறைந்திருக்கும், முயன்று பாருங்கள். பெரிய விருந்தே சாப்பிட்டாற் போன்ற உணர்வு வரும். வங்கிக்குப் போனால் வங்கி ஊழியர், காய்கறி வாங்கும் கீரைக்காரி, பால் ஊற்றும் பால்காரர் என நாம் நேசிக்கவும் அன்பு காட்டவும் இந்த உலகமே நமக்காகக் காத்திருக்கிறது. மறவாதீர்கள்.

சொல்ல மறந்துட்டேனே, வெளிநாடுகளில் இது அன்பைக் காட்டும் ஒரு தினமே. எங்கே சென்றாலும் தெரிந்தவரோ, தெரியாதவரோ நாளைய தினம் ஒருவருக்கொருவர் தங்கள் அன்பை வெளிப்படுத்திக்கொள்ளுவார்கள். குழந்தைகள் அவர்கள் ஆசிரியர், சக மாணவர்கள், பள்ளியின் தலைமை ஆசிரியர் என அனைவருக்கும் வாழ்த்து அட்டைகளைத் தயாரித்துக் கொடுப்பார்கள். வாழ்த்து அட்டையைக்கைகளால் தயாரித்துக் கொடுப்பது அங்கே மிகவும் பெருமையான ஒன்றாகும். எங்கள் அப்பு கூட இதற்கென ஒரு பேப்பர் தயார் செய்து அதிலே அதற்குத் தெரிந்தவரையிலும் வண்ணம் அடித்து அவங்க வகுப்பு ஆசிரியருக்குக் கொடுக்கப்போகிறது. அப்புவின் வயது ஆறு. ஆக இது காதலருக்கு மட்டுமான தினம் அல்ல என்பது புரிந்ததா? என்னையும் கூப்பிட்டு நாளைக்கு அப்பு வாழ்த்துச் சொல்லும்! என்னிடம் உள்ள அன்பை அது வாழ்த்துச் சொல்லுவதன் மூலம் வெளிப்படுத்தும். ஆகவே நாளைய தினம் அனைவரும் ஒருவருக்கொருவர் தம் தம் சகோதர அன்பை வெளிப்படுத்திக்கொள்வோம்.

8 comments:

  1. அன்புக்கு உண்டோ அடைக்கும் தாழ்.

    அன்புக்கு வயது ஒரு பொருட்டோ?

    அன்பு தான் பிரேமை. அது காதல் +

    மழையன கழிதலும், புதியன புகுதலும்…..!

    ReplyDelete
  2. அருமை அம்மா...

    அன்பு தினம் என்றும் வேண்டும்...
    தினம் என்றும் அன்பாக வேண்டும்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. அழகாய் சொன்னீர்கள். நீங்கள் சொல்வது போல் ஒவ்வொன்றுக்கும் நன்றி சொல்லி பாராட்டி, இன் சொற்கள் பேசி அனைவரிடமும் அன்பாய் இருப்போம் எப்போதும்.

    அன்புக்கோர் திருவிழா அனபை காட்டும் பெருநாள் வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்.
    என்றும் அன்புடன் இருப்போம்.

    ReplyDelete
  4. வாங்க "இ" சார், வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  5. வாங்க டிடி, உங்க பதிவிலே அசத்திட்டீங்க! :)))

    ReplyDelete
  6. வாங்க கோமதி அரசு, வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  7. ஒரு சின்ன உபன்யாசமே செய்து விட்டீர்கள்! இது போல ஒரு காதலர் தினத்துக்கு நானும் ஒரு பதிவு போட்டேன்... அம்மா அன்பு, அண்ணன் அன்பு என்று!

    ReplyDelete
  8. சிறப்பான கருத்துகள்....

    எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துவோம்..... எல்லா நாளிலும்...

    ReplyDelete