எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, May 06, 2014

ஆஸ்த்மா நோயாளிகள் மற்றும் அனைத்து நோயாளிகளும் குணமடையப் பிரார்த்தனைகள்!

இன்று உலக ஆஸ்த்மா தினமாம்.  தினசரிகளில் பார்த்தேன்.  ஆஸ்த்மாவைப் பத்தி எழுத என்னைவிடத் தகுதி வாய்ந்தவர் இருக்க முடியாது.  ஏனெனில் சின்ன வயசிலே இருந்தே ஆஸ்த்மா என்னோடயே இருந்திருக்கு.  ஆனால் அப்போ அதைப் பெரிசா நினைக்கலை;   இரண்டு, மூன்று வருஷத்துக்கு ஒரு முறை வரும், போகும். ஆறுமாசம் இருமல், மூச்சிரைப்பில் கஷ்டப்பட்டுட்டே எல்லாமும் செய்வேன்.  ஆஸ்த்மானும் தெரியலை.  கிட்டத்தட்ட 40 வயசுக்குத் தான் அடிக்கடி தொந்திரவு கொடுக்கவே ஜாம்நகரிலே இருந்து சென்னைக்கு வந்த அந்த 95 ஆம் வருடம் இதன் தாக்கம் மிக அதிகமாகிப் படுத்த படுக்கையாகவே போட்டது. குடும்ப மருத்துவரிடம் போனப்போ முதலில் பிராங்கிடிஸ் என்று தான் வைத்தியம் செய்தார்.  ஆனால் ஜூரமும் நிற்காமல், இருமலும் நிற்காமல்,



இருமற இருமலில் அடுத்த தெருவில் இருக்கும் எங்க பிறந்த வீட்டு ஆட்களெல்லாம் வந்து என்னனு கேட்க ஆரம்பிச்சாங்க.  அக்கம்பக்கம் வேறே இருமல் சப்தத்தினால் திருடன் வரது குறைஞ்சிருக்குனு நன்றி அறிவிப்பு.  ஆகவே குடும்ப மருத்துவரை விடுத்து வேறொரு மருத்துவரிடம் இரண்டாவது ஆலோசனைக்குப் போனால் அவர் என்னைப் பார்த்ததுமே நேரே எமர்ஜென்சிக்குப் போகச் சொல்லிட்டார்.  ஆக்சிஜன், நெபுலைசர் மாறி மாறிக் கொடுத்ததோடு பஃப் (pulmanory function test)சோதனை பண்ணிப் பார்த்துட்டுக் காற்றை வெளியேற்றப் பத்து வினாடிகளுக்கும் மேல் ஆகிறதைக் கண்டு பிடித்து இரண்டு வகை இன்ஹேலர் கொடுத்தார்.



ஆனாலும் அதுக்கு எப்போ இஷ்டமோ அப்போத் தான் சரியாச்சு.  இரண்டு  வருடத்துக்கு ஒரு முறை வந்த அவஸ்தை எப்போ வேணா, என்னிக்கு வேணா, எந்த நிமிடமும் என மாற ஆரம்பிக்க, நடுவே பெண் கல்யாணம், குழந்தை பிறப்பு, மைத்துனன் கல்யாணம், அது, இதுனு குடும்பத்தினருக்கான அன்புத் தொல்லைகள் வேறே.

இத்தனைக்கும் நடுவிலே எங்க பையருக்கும் கல்யாணம் நிச்சயம் ஆக, அந்த வருடத்து ஆஸ்த்மா, உன்னை விட்டேனா பார் என ஆகஸ்ட் மாதமே ஆரம்பிச்சது.  டிசம்பரில் கல்யாணம்,  அதுக்குள்ளே சரியாயிடும்னு நினைச்சா, அந்த வருஷத்து மழை மாதிரி எந்த வருஷமும் பெய்தது இல்லைனு கடுமையான மழை. தமிழ்நாடே வெள்ளக்காடாக மிதந்த 2005 ஆம் வருடம்.  சும்மாவே நாம படுத்துப்போம்.  இந்த மழைக்குக் கேட்கணுமா!  அது என்னமோ, என்னோட ஆஸ்த்மாவுக்குக் கடும் வெயிலும், மழையும் மட்டும் ஒத்துக்காது.  குளிர்காலத்தில் ரொம்பச் சமத்தாக அடங்கிடும்.


இந்த அதீத மழைக்கு  ஆஸ்த்மா மட்டுமில்லாமல் தொண்டையில் டான்சில்ஸும் வீங்க, சைனஸ் தொந்திரவினால் மூக்கடைப்பு வர. உட்கார முடியாமல், படுக்க முடியாமல் வீட்டில் விருந்தினர்களோடும், ஆறு வருஷம் கழிச்சுத் தம்பி கல்யாணத்துக்காக வந்த பெண்ணைக் கவனிக்கக் கூட முடியாமலும் நான் பட்ட அவஸ்தை இருக்கே.  மருத்துவரானா எப்போவும் படுக்கையில் இருங்கறார்.  முடிகிற காரியமா!  அந்த உடம்போடயே எல்லா வேலைகளும் நடந்தன.  அதோடயே  கல்யாணத்துக்கு அழைக்கவும் போக வேண்டி இருந்தது.  கல்யாணத்திலே தாலி கட்டறவரைக்கும் ஒரு மாதிரி சமாளித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தேன்.  தாலி கட்டியானதும் போய்ப் படுத்துவிட்டேன். வீட்டுக்கு வந்ததும் கூட பொண்ணு, மாப்பிள்ளை, பிள்ளை, மாட்டுப் பெண் எல்லாரும் அமெரிக்கா கிளம்பும் வரையும் பல்லைக் கடித்துக் கொண்டு பொறுத்துவிட்டு(தினம் தினம் குடும்ப மருத்துவரிடம் போய் இரண்டு வேளையும்  நரம்பில் டெரிஃபிலின் ஊசி ஏற்றிக் கொண்டு வருவேன். மூணு மணி நேரம் ஓடும்.)

இவங்கல்லாம் ஊருக்குப் போன அன்னிக்கு மறுநாள் காலை மருத்துவரை வழக்கம் போல் பார்க்கப் போனப்போ எக்ஸ்ரே புதிதாக எடுக்கச் சொன்னார்.  அவருக்கு என்னவோ சந்தேகம் வந்திருக்கு.  சரினு எக்ஸ்ரே எடுத்தது.  அதைப்பார்த்துட்டு, இனிமேல் நீங்க பார்க்க வேண்டியது கார்டியாலஜிஸ்ட் தான் எனச் சொல்லிட்டு அங்கே அம்பத்தூருக்கே வந்து கொண்டிருந்த ஒருவருக்கு ரெஃபர் பண்ணி அனுப்பிட்டார்.  அவரும் முதலில் மருந்துகளைக் குறைத்து உணவுக் கட்டுப்பாடுகளைச் சொல்லிட்டு, எகோ கார்டியாகிராமில் இருந்து எல்லா சோதனைகளும் பண்ணிட்டு வைத்தியம் செய்ய ஆரம்பித்தார்.  அந்த வைத்தியரின் தயவிலேயே அடுத்த நான்கு மாதங்களில் கைலை யாத்திரை செல்ல முடிந்தது. அதுக்கப்புறம் இப்படி ஒருமுறை, இரு முறை வருஷத்தில் நான் இருக்கேன்னு சொல்லிட்டு எட்டிப் பார்க்கும்.  அவரும் அதை மண்டையில் தட்டி அடக்குவார்.  அதுக்கப்புறமாத் தான் எங்க வீட்டில் தண்ணீர் நுழைந்து, நாங்க வீடு மாறிப் பின்னர் ஊர் மாறி இங்கே வந்து சேர்ந்தோம்.  இந்த இரு வருடங்களில் உ.பி.கோயில் போயிட்டு முடியாமல் படுத்தது ஒண்ணு தான் பெரிய அளவில் படுக்கை.  மற்றபடி அவ்வப்போது வந்து போகும் காஸ்ட்ரோ என்ட்ரிடீஸ் தொல்லையோடு நிற்குது.  அதற்குக் காரணம் இங்கே காற்று சுத்தமாக இருப்பது தான்.

ஆஸ்த்மா அலர்ஜி ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு பொருளில் வரும்.  இதுதான் என நிச்சயமாய்ச் சொல்ல முடியாது.  இப்போவும் எனக்கு வத்தக்குழம்பு தாளித்தாலோ, மி.பொடிக்கு வறுத்தாலோ இருமல், தும்மல் வரும்.  கொஞ்ச நேரம் கஷ்டமாய் இருக்கும். அதே போல் உணவுப் பதார்த்தமும்.  பொதுவாகவே வயிறு நிறையச் சாப்பிடக் கூடாது என்றால் ஆஸ்த்மா நோயாளிகள் கட்டாயம் அரை வயிறு தான் சாப்பிடணும்.  இரவு ஏழரைக்குள்ளாக அல்லது எட்டுக்குள்ளாக உணவை முடிச்சுக்கணும்.  அப்படி நேரம் ஆனால் இரவு உணவைத் தவிர்த்துவிட்டுப்பால், கஞ்சி போன்ற நீராகாரம் எடுத்துக்கலாம். அல்லது வெறும் பழங்கள் மட்டும் ஒத்துக்கொள்ளக் கூடியனவாக எடுத்துக்கலாம்.  முக்கியமாய்ப் புளி சேர்ந்த உணவுப் பொருட்களை முற்றிலும் தவிர்க்கலாம்.


 அல்லது கொஞ்சம் போல் சாப்பிட்டுக்கலாம்.  நான் சாம்பார், வத்தக்குழம்பு என்றால் அரைக்கரண்டி, ரசம் புளி சேர்த்தால் ஒரு கரண்டி, எலுமிச்சை ரசம் எனில் கொஞ்சம் விட்டுப்பேன்.  (சாப்பிடும்போது பார்த்தால் தெரிஞ்சுப்பீங்க). மோர் சாப்பிடக்கூடாது சிலர் சொல்றாங்க.  என்னோட மருத்துவர் ஒரு வாரம் சாப்பிட்டுப் பார்.  உனக்குத் தொந்திரவுனா விட்டுடு என்றார்.  நானும் ஒரு வாரம்போல் தொடர்ந்து மோர் சாதம் சாப்பிட்டதில் எதுவும் செய்யவில்லை. நமக்கு எது ஒத்துக்கும், எது ஒத்துக்காது நாமே தான் தெரிஞ்சுக்கணும்.  இப்படி அளவாக இருக்க வேண்டும்.  ஊறுகாய்களைத் தவிர்க்கணும். எப்போவானும் மாங்காய் நறுக்கி உப்புக் காரம் சேர்த்தது போட்டுப்பேன்.  மற்றபடி தினசரி நோ ஊறுகாய்.  நெஞ்சைக் கரித்துக் கொண்டு வரும். இதனால் அசிடிடி அதிகம் ஆகி வயிற்றுப் பிரச்னை வந்து பின்னர் ஆஸ்த்மாவில் போய் முடிகிறது.  இதையும் கவனித்து வைத்திருக்கிறேன்.  ஆகவே வெளியே போனால் கூட சாப்பாட்டில் கட்டுப்பாடு நிறைய உண்டு.  இதன் மூலம் சொந்தக்காரங்களோட கோபங்கள், கேலிகள், கிண்டல்கள் எல்லாமும் இன்றளவும் உண்டு.  ஆனால் அதை எல்லாம் கண்டுக்கறதே இல்லை.  இவை பொதுவாக எல்லா ஆஸ்த்மா நோயாளிகளுக்கும் பொருந்தும் ஒன்று. அதோட இப்போ இன்ஹேலர் இல்லை.





ரோடாஹேலர் எனப்படும் சின்ன இன்ஹேலர் தான்.  ஆனால் விலை உயர்ந்த அதிக சக்தி வாய்ந்த காப்சூல்கள் அதில் போடத் தரப்படுகிறது. ஒரே இழுப்பிலேயே நிச்சயமாய் மாற்றம் தெரியும். இம்மாதிரிப் பல முன்னேற்றங்கள் இருந்தாலும் இன்னமும் ஆஸ்த்மா நோயாளிகளின் கஷ்டம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

அகில உலக ஆஸ்த்மா நோயாளிகளுக்காகப்பிரார்த்திப்போம்

16 comments:

  1. எனக்கும் இந்த அலர்ஜி உண்டு. தீடீரென்று அடுக்கடுக்காய் தும்மல் சரமாரியாக வரும். அதுவே போய் விடும். இது பல வருடங்களாக இருக்கிறது. எதற்கு, எதனால்.....இன்னும் புரியவில்லை.
    தும்மி விட்டுப் போகிறோம் என்று விட்டு விட்டேன். தும்மல் வந்தால் அன்றைய தினம் அவ்வளவு தான்.
    இரவில் நீங்கள் சொல்வது போல் சீக்கிரம் சாப்பிட்டு விட வேண்டுமென நினைக்கிறேன்.
    ஆஸ்துமாவினால் அவதிப்படுபவர்கள் சீக்கிரமே குணமடைய நானும் பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  2. இன்று உலக ஆஸ்துமா தினமா? அட! இந்தத் தொந்தரவுகளை வைத்துக் கொண்டே கைலாஷ் சென்று வந்தது ஆச்சர்யம்தான். இட மாறுதல் கூட சௌக்கியத்தைத் தந்திருக்கிறது. என் அப்பா கடும் ஆஸ்துமா பேஷன்ட். எனக்குக் கூட தொடங்குகிறதோ என்ற சந்தேகம் உண்டு!

    ReplyDelete
  3. தனக்கு வந்தால்தான் தெரியும் என்பார்கள்! தான் பட்ட கஷ்டம் பிறர் அடையக் கூடாது என்று இன்றைய தினத்தில் ஆஸ்த்துமா நோயாளிகளுக்காக பிரார்த்திக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  4. உங்களுடன் சேர்ந்து நானும் பிரார்த்தனை செய்கிறேன்

    ReplyDelete
  5. வாங்க ராஜலக்ஷ்மி, ஆஸ்த்மாவுக்கான பஃப் டெஸ்ட் பண்ணிப்பார்த்துடுங்க. தெரிஞ்சுடும். சைனஸாக இருக்கலாம் அநேகமாய்! சீக்கிரம் குணமடையப் பிரார்த்தனைகள்.

    ReplyDelete
  6. வாங்க ஶ்ரீராம், 2006 இல் கைலை போனப்புறமா அஜந்தா, எல்லோரா போன்ற மலைக்குகைக்கோயில்களுக்கெல்லாம் போயிட்டு வந்தாச்சு. அஹோபிலம் நவநரசிம்மர் பார்த்தாச்சு. அஹோபிலம் போவது கைலை போவதை விடக் கடினம். அங்கே எல்லாம் போயிட்டுப் போன 2012-ஆம் வருடம் உ.பி. கோயில் ஏறிட்டுப் பட்ட கஷ்டம் தான் பெரிசாப் போச்சு. மருத்துவர் அதுக்கப்புறமா மலை ஏற்றத்துக்குத் தடா சொல்லிட்டார். :(

    ReplyDelete
  7. வாங்க சுரேஷ், ஆஸ்த்மாவால் அவதிப்படுவதை விடக் கொடுமை வேறே ஏதும் இல்லை. ஒவ்வொரு மூச்சுக்கும் கெஞ்சிக் கொஞ்சி சிரமப்பட்டு விட்டு....... அனைவருக்கும் குணம் ஆகக்கூடிய சாத்தியங்கள் குறைவு என்றாலும் கட்டுப்பாட்டுடன் இருந்தாலே போதுமே! :))

    ReplyDelete
  8. வரவுக்கும், பிரார்த்தனைக்கும் நன்றி ஸாதிகா.

    ReplyDelete
  9. ஆஸ்த்மா நோயாளிகளின் சிரமம் பற்றி படிக்கவே கஷ்டமா இருக்கு. அவர்களுக்காக என் பிரார்த்தனையும் உங்களுடன்.

    ReplyDelete
  10. எனது பிரார்த்தனைகளும் அம்மா....

    ReplyDelete
  11. கேட்கவே கஷ்டமா இருக்கே கீதா. எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு வித விதமா சமையல் வேறு செய்கிறீர்கள். மூச்சுவிடக் கஷ்டம் என்றால் நினைத்துக் கூடப் பார்க்கமுடியவில்லை. இவர் நினைவுதான் வந்தது. இருமலில் அவ்வளவு கஷ்டப்பட்டார். எல்லோரும் நன்றாக இருக்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  12. வாங்க ராதா பாலு, வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  13. வாங்க டிடி, நன்றிப்பா.

    ReplyDelete
  14. வாங்க வல்லி, உடம்புனு படுத்துக்கொண்டே இருந்தால் உடம்பே சோம்பல் கொடுத்துப் போயிடும் இல்லையா? எந்த வேலையையும் தட்டாமல் செய்தால் நோயின் கடுமை தெரியாதே! முடியலைனா படுக்க வேண்டியது தான். :))))அப்படிப் படுத்தும் இருக்கேன்.

    ReplyDelete
  15. என்னுடைய அலுவலக நண்பர் ஒருவருக்கும் இதே பிரச்சனை. ஒவ்வொரு வருடமும் அட்டாக்! :(

    எனது பிரார்த்தனைகளும்....

    ReplyDelete

  16. எனக்கு அலெர்ஜி பிரச்சனை உண்டு. மூக்கும் கண்ணும் நீர் கொட்டுவதைப் பார்த்தால் பாவம் ,இவர் ஏன் அழுகிறார் என்று மற்றவர்கள் நினைக்கலாம் பெங்களூரில் சுமார் 30% பேர் ஆஸ்துமாவால் அவதிப் படுகின்றனராம். எனக்கு ஆஸ்துமா என்று சொல்லவில்லை. இப்போது ஒரு வித இருமல் வேறு தொந்தரவு கொடுக்கிறது. டாக்டர்கள் இந்த ரோடாஹேலர் பரிந்துரைத்திருக்கிறார்கள். யாரும் எவ்வித நோயும் இன்றி நலமாக இருக்க வேண்டுவோம்

    ReplyDelete