எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, May 24, 2015

ஈயம், பித்தளைக்குப் பேரீச்சம்பழம் வாங்கறீங்களா? கொஞ்சம் யோசிங்க.

ஈயத்தைப் பார்த்து இளிச்சதாம் பித்தளை னு சொல்வாங்க. ஆனால் இது வெறும் வழக்குமொழியாக மட்டுமே இருக்குமோனு சந்தேகமா இருக்கு.  சில நாட்கள் முன்னர் சீனாச் சட்டி வாங்க ஶ்ரீரங்கம், கும்பகோணம் என அலைந்தேன். ஶ்ரீரங்கத்திலாவது கோயில் கடைகளில் கிடைக்கும். புரிஞ்சுக்கவும் புரிஞ்சுக்கறாங்க. அந்தச் சட்டி ரொம்பச் சின்னது என்பதால் நான் வாங்கலை. ஆனால் கும்பகோணத்தில் சீனாச்சட்டினா என்னனு கேட்டாங்க! தலையிலே அடிச்சுக்காத குறையாய் திரும்ப வந்துட்டோம். வீட்டிலே இருக்கிறது ரொம்பப் பெரிசா இருக்கு! தூக்கவே முடியலை. சரி, இப்போச் சீனாச் சட்டிப் புராணம் எதுக்குனு கேட்கிறீங்களா?

வீட்டிலே தினம் ரசம் வைச்சுட்டு இருந்த ஈயச் செம்பு/கிண்ணம் பல வருஷங்கள் ஆனதாலே தேய்ந்து போச்சு. அதைப் போட்டுட்டுப் புதுசு வாங்கலாம்னா ரங்க்ஸுக்குக் கும்பகோணத்தில் தான் வாங்கணும்னு. தினம் தினம் ரசம் சரியா இல்லாமல் வாழ்க்கையே ரசமின்றிக் காணப்படவே பொறுக்க முடியாமல் நேத்திக்குத் திருச்சிக்குப் போய் ஈயச் செம்பு வாங்கலாம்னு போனோம். அங்கே பல பாத்திரக் கடைகளிலும் ஈயப் பாத்திரம் இருக்கானு கேட்டதும், உடனே ஆஹா! இருக்கேனு பதில் வந்தது. சரினு போனால் அவங்க காட்டினது அலுமினியப் பாத்திரங்களை. இது தான் ஈயம்னு சத்தியம் வேறே செய்யறாங்க. அவங்களுக்குப் புரியறதுக்காக ரசம் வைக்கிற செம்புனு கூடச் சொல்லிப் பார்த்தோம். இதிலேயும் ரசம் வைக்கலாமேனு பதில் வருது. இன்னும் கொஞ்ச நாட்களிலே இதை எல்லாம் பொருட்காட்சியில் கூடப் பார்க்க முடியாதுனு நினைக்கிறேன். :( மக்கள் நாகரிகத்தில் மிதமிஞ்சி விட்டார்கள் போல! :)

கோட்டையில் உள்ள பிரபலமான எல்லாக் கடைகளுக்கும் போனோம். எல்லோருக்கும் ஈயம்னா அலுமினியம் என்று தான் புரிதல் இருக்கு. ஒரு கடையிலே ஈயப்பாத்திரங்களே இல்லைனு ஒரு வழியாச் சொல்ல இன்னொரு கடையிலே  நான் கொண்டு போயிருந்த பழைய ஈயக் கிண்ணத்தைக் காட்டிக் கேட்டதும், அங்கே நுழையும் இடத்திலேயே இருக்குனு சொன்னாங்க. அப்பாடினு ஒருவழியா வந்து பார்த்தால் ஈயச் செம்பு//கிண்ணங்கள் இருந்தன! ஆனால் ரொம்பப் பெரிதாக இருந்தது. அவ்வளவு பெரிசை வைச்சுட்டு என்ன செய்யறதுனு புரியாமல் வாங்காமல் வந்துட்டோம். அப்புறமா வேறே ஒரு கடைக்குப் போய்ப் பார்த்தோம். அங்கே நாங்க கேட்ட அளவுக்குக் கிடைத்தது. எங்களோடதைப் போட்டுட்டுப் புதுசு வாங்கினோம் முதலில் பார்த்த கடையில் எங்களோடதைக் குறைந்த விலைக்குத் தான் எடுத்துக்கறதாச் சொன்னாங்க.  அதோட அவங்க கொடுக்கும் செம்பு விலையும் அதிகம். நாங்க இங்கே வாங்கினதை விட 300 ரூ அதிகம். எடை என்னமோ அங்கேயும் இங்கேயும் ஒரே எடை தான். அளவு தான் பிரபலமான கடையில் பெரிசாக இருந்தது. இங்கே அளவு சின்னது ஆனால் அதே எடையில் கனமான கிண்ணம்.


எதுக்கு இத்தனை விலாவரியாகச் சொல்றேன் என்றால் பெரிய கடைகள் எனக் கூட்டம் கூட்டமாக மக்கள் சென்று வாங்குகின்றனர். அவங்க இம்மாதிரி ஒரு பாத்திரத்திலேயே 200 ரூபாய்க்கு மேல் அதிகம் வைத்து விற்கிறாங்க. அதோடு பழைய சாமான்களை எடுத்துக்கறதில் வேறே எங்களோட கிண்ணம் பிர்பலமான கடையில் 180 கிராமே காட்ட அரை மணி நேரத்துக்கெல்லாம் இன்னொரு சின்னக்  கடையில் 210 கிராம் காட்டுது. நிஜம்மாவே ஆச்சரியமா இருந்தது. இதை எல்லாம் ஒப்பிட்டுப் பார்க்காமல்  நாமளும் கேள்வி கேட்காமல் வாங்கிட்டு வரோம். நம்ம முகத்திலே தான் ஏமாளினு எழுதி ஒட்டி இருக்கே! பிரபலமான கடைகளுக்குக்கூடிய வரை போகாமல் இருப்பதே நல்லது! ஆனால் யார் கேட்கப்போகிறாங்க! யாரும் இல்லை. :)

இதே போல் தான் தங்கத்திலும் இருக்கும்! :) அதிலும் இந்த சேதாரம்னு ஒண்ணு போடறாங்களே! அதை வாடிக்கையாளர்கள் தலையில் கட்டிடறாங்க. விபரம் தெரிந்து  நாம் தட்டிக் கேட்டாலும் ஒத்துக்கிறது இல்லை.

*************************************************************************************

இன்றைய தினசரியில் முன்னாள் டெல்லி முதலமைச்சராக இருந்த ஷீலா தீக்ஷித்தின் பேட்டி வெளி வந்திருக்கிறது. அவங்க முதலமைச்சரா இருந்த காலத்தில் நான்கு துணை நிலை ஆளுநர்களைப் பார்த்திருக்காங்க. யாருடனும் இப்படி மோதல் இல்லையாம். துணை நிலை ஆளுநர் தனக்கு உட்பட்ட அதிகார எல்லையில் தான் செயல்பட்டிருக்கிறார் என்றும் அதிகாரிகளோடு முதலமைச்சர்கள் தான் ஒத்துச் செயல்பட வேண்டும் என்றும் அனுபவம் வாய்ந்த ஷீலா தீக்ஷித் சொல்கிறார். சுப்ரீம் கோர்ட்டுக்குச் செல்லும் எண்ணம் கெஜ்ரிவாலுக்கு இருப்பதாகத் தெரிகிறது. பார்க்கலாம்!

கெஜ்ரிவாலுக்கு நிர்வாகத் திறமை போதாமல் இருக்கணும்; அல்லது அவர் அடிப்படையான சட்டங்களே தெரியாதவராக இருக்கணும். இவ்வளவு மோசமாக இருப்பார் என எதிர்பார்க்கவில்லை. அல்லது அவர் தன்னைப் பற்றிக் குற்றம் சுமத்தாமல் இருக்க வேண்டி மத்திய அரசின் மேல் பழியைப் போட்டுத் தப்பிக்க நினைக்க வேண்டும். கடைசியாகத் தான் இருக்கும் என்று தோன்றுகிறது.

**************************************************************************************

ஹிஹிஹி, கடைசியா கொஞ்சம் வம்போடு முடிக்கலாமா? இந்த வருஷம் நம்ம பிறந்த நாளை முகநூல் நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து அட்டகாசமாக் கொண்டாடிட்டாங்க! எல்லோரும் திக்கித் திணறிப் போகும்படி வாழ்த்துகளை அனுப்பி இருக்காங்க. உண்மையில் நான் பிறந்த நாள்னு கொண்டாடுவதே இந்தப் பத்து வருஷங்களாக இணையத்தில் எழுத ஆரம்பிச்சப்புறமாத் தான். அதுக்கு முன்னால் எல்லாம் கிடையாது. இந்த வருஷம் முப்பெரும் விழா, காவடி, கரகம், அலகு குத்துதல், மண் சோறு சாப்பிடுதல், தீச்சட்டி ஏந்துதல் எல்லாம் வெயில் அதிகம் என்பதால் வேண்டாம்னு தாயுள்ளத்தோடு மன்னிச்சு விட்டுட்டேன். ஆனால் திடீர்னு முப்பெரும் விழா கொண்டாடப்படும். எச்சரிக்கை!  அதனால் நேத்திலேருந்து தொடர்ந்து ஒருவாரத்துக்கு என்னோட பிறந்த நாள் கொண்டாட்டங்கள் இருக்கும். நக்ஷத்திரப் பிறந்த நாள் வேறே இருக்கே! அன்னிக்கு முடியும். அதனாலே பரிசுகளைத் தொடர்ந்து அனுப்பலாம். அப்புறமாப் பட்டு அனுப்பறவங்க பட்டே அனுப்புங்க. எல்லா ஊர்ப் பட்டும் அனுப்பி வைக்கவும். தங்கம் அனுப்பறவங்க காசாகவோ, ஆபரணங்களாவோ அனுப்பி வைக்கலாம். எல்லா ரகமான கற்கள், ஆபரணங்கள், முத்துக்கள், பவளங்கள்னு உங்க ஆசைப்படி அனுப்பி வைங்க. ஏத்துக்கறேன்.

29 comments:

  1. ஈயச் சொம்பையும் பார்த்து நாளாச்சு. பார்த்தே நாளாச்சுன்னா ரசம் அதில் வைச்சுச் சாப்பிட்டு வருடங்கள் ஆச்சு.

    :)))))))

    நான் ஒரு கிலோ தங்கம் அனுப்பி இருந்தேனே, கிடைச்சுது இல்லையா?

    ReplyDelete
    Replies
    1. ரொம்பக் குறைச்சு அனுப்பி இருக்கீங்க. அதனால் ஏத்துட்டு இருக்காது. குறைந்த பக்ஷமாக 60 கிலோ அனுப்பணுமாக்கும். சாதாரணமா இதெல்லாம் எடைக்கு எடை தான் வாங்கிப்பேன். உங்களுக்கு சலுகை! :))))))

      Delete
    2. ஈயச் சொம்பு!!? ஈயம் வேறு அலுமினியம் வேறு என்பது போலவே, ஈயம் வேறு செம்பு வேறு.

      Delete
    3. சாம்சன், முதல் வருகைக்கு நன்றி. தேடிப் பிடிச்சு இந்தப் பதிவைப் படிச்சதுக்கு அடுத்த நன்றி. ஈயக் கிண்ணம் அல்லது ரசம் வைக்கும் சொம்பு போன்ற பாத்திரத்தைப் பேச்சு வழக்கில் ஈயச் செம்பு அல்லது ஈயச் சொம்பு என்றே குறிப்பிடுவோம். செப்புச் செம்பை இங்கே குறிப்பிடவில்லை. அதுவும் இருக்கு. பித்தளைச் செம்பும் இருக்கு! பயன்பாட்டில் வைச்சிருக்கோம். கருத்துக்கு நன்றி.

      Delete
  2. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள். முகநூல் பக்கம் நான் வருகை தருவது இல்லை. அதனால் இங்கு இந்தப்பதிவின் மூலமே தங்களின் பிறந்த நாள் செய்தி தெரிய வந்தது. சந்தோஷம். இதோ நானும் கிளம்பிட்டேன் ......... பரிசுப் பொருட்கள் வாங்கவோ என நினைச்சுடாதீங்கோ ..........

    இன்று ஞாயிற்றுகிழமை அல்லவா !

    இரவு பலகாரம் செய்யத்தான். :)

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகளுக்கு நன்றி வைகோ சார்!

      //இதோ நானும் கிளம்பிட்டேன் ......... பரிசுப் பொருட்கள் வாங்கவோ என நினைச்சுடாதீங்கோ .......... //

      அதானே! :)

      Delete
  3. சீனாச் சட்டினா என்னனு சொன்னா என்னவாம்?
    ஹாப்பி பர்த்டே.

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்ம், ஏற்கெனவே ரெண்டு மூணு தரம் படம் போட்டிருக்கேன். இப்போவும் போட்டுடுவோம். வாழ்த்துகளுக்கு நன்றி.

      Delete
    2. இங்கேயும் பார்க்கலாம் அப்பாதுரை, இது கல்யாணத்தும்போது கொடுத்த சீனாச்சட்டி. இது விரியவே புதுசு வாங்கினேன். அதான் இன்னொரு படம். :)

      http://sivamgss.blogspot.in/2011/01/blog-post_31.html

      Delete
  4. ஈயத்தைப் பர்த்து இளித்ததாம் பித்தளை என்பதற்கு என்ன அர்த்தம்?

    ReplyDelete
    Replies
    1. பித்தளை மஞ்சள் நிறத்தில் இருப்பதால் தன்னைத் தங்கம் போன்ற விலை உயர்ந்த உலோகம்னு நினைச்சு ஏமாந்தது என்று பொருள் என்றாலும் உட்பொருள் மனிதர்களின் ஆடம்பரமான அலங்காரங்களையும், படாடோபத்தையும் பகட்டான பேச்சையும் கேட்டு ஏமாறக் கூடாது என்பதே என்று நினைக்கிறேன். பார்க்க வெகு சாதாரணமாக இருக்கும் நபர்கள் எல்லாவிதத்திலும் உயர்வாக இருப்பார்கள். இது என் அனுபவத்திலும் கண்டிருக்கிறேன்.

      Delete
    2. ஈயம் வெள்ளினு தன்னை நினைச்சுப்பதாக எண்ணிப் பித்தளை சிரிக்குமாம். அதான் மேலோட்டமான பொருள்.

      Delete
    3. //Durai A 25 May, 2015
      ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை என்பதற்கு என்ன அர்த்தம்?//

      //Geetha Sambasivam 25 May, 2015
      ஈயம் வெள்ளினு தன்னை நினைச்சுப்பதாக எண்ணிப் பித்தளை சிரிக்குமாம். அதான் மேலோட்டமான பொருள்.//
      -=-=-=-=-=-=-

      பித்தளைப்பாத்திரங்கள் புதிதாக இருக்கும்போது மேலோட்டமாகப் பார்த்தால் தங்கம் போலவே பளபளப்பாகவே இருக்கும். ஆனாலும் அவை அடிக்கடி கருத்துப்போய் பொலிவிழந்து விடும். உப்பு, புளி போன்றவற்றை சேர்த்து வைத்துத் தேய்த்தால் மீண்டும் கொஞ்சம் பளபளப்பாகக் காட்சியளிக்கும்.

      இருப்பினும் பித்தளைப் பாத்திரத்தில் நேரிடையாக நாம் சமையல் செய்யவே முடியாது. சமைத்த பொருட்கள் சீக்கரமாக கச்சிப்போய் விடும். அதனால் அந்தப்பித்தளை பாத்திரத்தின் உட்புறம் ஈயம் பூசி விடுவார்கள்.

      [நான் சொல்லும் இதெல்லாம் ஓர் 50 ஆண்டுகளுக்கு முன்பு ... அதாவது எவர்சில்வர் பாத்திரங்கள் நம் அன்றாட புழக்கத்திற்கு சந்தைக்கு வந்த 1965க்கு முன்பு]

      இவ்வாறு பித்தளையும் உள்ளே பூசப்படும் ஈயமும் ’கணவன் மனைவி போல’, ஒட்டு உறவாடி இருந்ததுடன் மட்டுமல்லாமல், அடிக்கடி தங்களுக்குள் கணவன் மனைவி போலவே வாய்த்தகராறுகள் செய்து கொண்டிருக்கவும் வாய்ப்புகள் மிகவும் அதிகம்.

      நீ பெரிசா? நான் பெரிசா? என தங்களுக்குள் அவை அடிக்கடி வாக்குவாதங்கள் செய்துகொண்டிருக்கலாம்.

      அவர்களின் சண்டையை நிறுத்த ஈயம் பூசப்பட்ட பித்தளைப்பாத்திரங்களை, சமையல் என்ற பெயரில் அடுப்பில் ஏற்றி அவர்கள் இருவருக்குமே நன்றாக புத்திவருமாறு சூடு கொடுக்கப் பட்டிருக்கலாம்.

      அடியில் தனக்கே சூடு ஏற ஏற, மேலே சூடாகிக்கொதித்துக்கொண்டிருக்கும் ஈயத்தைப்பார்த்து பித்தளை இனி சிரிக்குமா என்ன? :)

      இதெல்லாம் பழமொழிகள் பற்றி நான் செய்த ஆராய்ச்சிகளின் முடிவுகள். தங்களின் தகவலுக்காக மட்டுமே.

      அன்புடன் VGK

      Delete
    4. haahaaaahaa நல்ல ஆராய்ச்சி தான். அருமையான கற்பனை.

      Delete
    5. சுவாரசியமான விவரங்கள் சார்.

      ஆராய்ச்சியும் நன்றே. ஆளுக்கொரு பாத்திரத்தை எடுத்து அடிச்சுக்கத் தான் அப்படிக் கொடுத்தாங்கனு சொல்வீங்கனு நினைச்சேன்.

      Delete
  5. எப்படியெல்லாம் ஏமாந்து போகிறோம்...!

    அன்பான வாழ்த்துக்கள் அம்மா...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், கடைக்காரர்கள் எல்லாவற்றிலும் ஏமாற்று வேலை தான் செய்கின்றனர். வாழ்த்துகளுக்கு நன்றி டிடி.

      Delete
  6. பிறந்த நாள் வாழ்த்துக்கள் ! நான் அனுப்பின ரூபி வளையல் ஒரு ஜோடி கிடைத்ததா ? கீதாம்மா ஸ்ரீரங்கம் என்று தான் விலாசம் எழுதினேன் , தபால் காரருக்கு தெரியும் தானே ? நானும் உங்கள் இனம் தான், கல்சட்டி, வெண்கலப்பானை , செங்கோட்டை கல் என்று சமையலுக்கு உபயோகிக்கறேன் . சீனா சட்டி அடுத்த முறை அரங்கனைப் பார்க்க வரும்போது வாங்கணும் .
    பெரீய கடைகளில் ஏமாற்றுவதும் பெரீசா தானே இருக்கும் !!!

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா, கிடைக்கலையே ஷோபா! திரும்ப அனுப்புங்க, ஒரு ஜோடி பத்தாது! :))))

      Delete
  7. அப்பாதுரை, இந்தச் சுட்டியில் பாருங்க சீனாச்சட்டி படம். இது ரொம்பவே கனமாக இருப்பதால் என்னால் தூக்கி வேலை செய்ய முடியலை! :(
    http://sivamgss.blogspot.in/2014/01/blog-post_31.html

    ReplyDelete
  8. உங்கள்புகைப்படம் பார்த்தால் 60 கிலோ தங்கம் போதாது என்று தோன்றுகிறது. நீங்களானால் எடைக்கு எடை என்கிறீர்கள். . எதனையாவது பிறந்த நாள் என்று சொல்லவில்லையே.

    ReplyDelete
    Replies
    1. எடைக்கு எடை கேட்டுப் பயமுறுத்தக் கூடாதுனு தான் சொல்லலை ஐயா. குறைந்த பட்ச அளவு 60 கிலோ! வயது அறுபதைத் தாண்டி விட்டதே! :))

      Delete
  9. நீங்கள் குடந்தை கும்பேஸ்வரர் கோயில் கடைகளில் கேட்டேளா? அங்கு இந்த சட்டி கிடைக்கும். சற்று சொசொரப்பாக இருக்கும். தேய்த்தால் பளிச்னு ஆயிடும். கீழ விழுந்தால் விரிசல் விட்டுவிடும். சரியா?

    ஈயப் பாத்திரம் மங்கள் & மங்களில் கிடைக்கிறதே. கும்பகோணத்தில் கூட கொஞ்சம் கலப்பு ஈயம்தான் கிடைக்கிறது. இங்கு நல்ல வெள்ளீயம் கிடைக்கிறது. சின்ன size லிருந்து பெரிசு வரை இருக்கு.

    ஈயப் பாத்திரம் பெரும்பாலான இடங்களில் காரீயம் சேர்ந்ததுதான் இருக்கும். அதில் ரசம் வைப்பது உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும். நானும் பல ஊர்களில் தேடி அலுத்து, இங்கு வந்து வாங்கினேன். ரசம் இப்போ 'ரசமாக' இருக்கு!

    ReplyDelete
    Replies
    1. ராதா பாலு, மேலே உள்ள சுட்டிகளில் பாருங்க. சீனாச்சட்டியைப் படம் எடுத்துப் போட்டிருக்கேன். பழைய சட்டி கீழே விழுந்து தான் விரிசல் கண்டு விட்டது! இப்போ அந்த அளவில் சட்டிகளே இல்லை. ஒண்ணு நான் வாங்கி இருக்காப்போல் பெரிய அளவு. இல்லை எனில் சின்னது! இங்கே ஶ்ரீரங்கம் கோயில்கடைகளில் நிறையவே இருக்கு.

      கும்பகோணத்தில் நல்ல வெள்ளீயம் கிடைக்கிறது. எங்க புக்ககத்தில் வாடிக்கையாக வாங்கும் கடையிலேதான் வாங்குவேன். வருஷக் கணக்காக உழைத்திருக்கிறது. இப்போ விலைக்குப் போட்டது 20 வருஷம் போல் உழைத்துத் தேய்ந்து போய் விட்டது! :)))

      Delete
    2. அப்புறமாக் கடையோட பெயர் குறிப்பிட வேண்டாம்னு தான் குறிப்பிடலை. முதலில் பெயர் குறிப்பிட்டே எழுதி இருந்தேன். அப்புறமா வேணாம்னு எடுத்துட்டேன். அவங்க வியாபாரத்தை நாம கெடுப்பானேன். ஆனால் அந்தக் கடைக்கு இனி போவதில்லைனு வைச்சுட்டேன். பொதுவாகவே போக மாட்டோம். வேறே எங்கேயும் கிடைக்காததால் அங்கே போனோம்.

      Delete
  10. Geetha madam,

    Mr.Syam (naatamaiya) rombanala kanalaiya ungaluku yedhavadhu thagaval theriyuma

    ReplyDelete
    Replies
    1. ராஜேஸ்வரி ச்யாம்,

      ச்யாம் பல வருடங்களாகக் கண்களில் படவில்லை. கிட்டத்தட்ட ஐந்தாண்டுகளுக்கு மேல் இருக்கும். அவர் மட்டுமா? மதுரைக்காரர் ஆன ராம், கார்த்திகேயன் முத்துராஜன், பொற்கொடி, நாகை சிவா, கைப்புள்ள, அம்பி, சுதா பிரசன்னா, மணி பிரகாஷ் இப்படி நான் எழுத ஆரம்பித்த புதுசில் என்னை ஆதரித்தும், என்னை அவ்வப்போது கலாய்த்தும் பழகிய பல நண்பர்களும் இப்போது இல்லை. நாகை சிவா, அம்பி போன்றோர் எப்போதானும் ஜி+ மூலம் தொடர்பு கொள்வார்கள். மற்றவர்கள் பற்றி அறியேன்! :(

      Delete
  11. Belated Birthday wishes Geetha Mami.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சுபாஷிணி!

      Delete