எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, August 15, 2019

அனைவருக்கும் இனிய சுதந்திர தின, ரக்ஷாபந்தன் தின வாழ்த்துகள்!

தேசிய கொடி க்கான பட முடிவு

அனைவருக்கும் இனிய சுதந்திரத் திருநாள் வாழ்த்துகள். சுதந்திர தினத்தன்று பிரதமர்  தில்லி செங்கோட்டையில் கொடி ஏற்றுவார். சுதந்திரம் வந்த பின்னரும் அரசியல் சாசனம் முறைப்படுத்தப் படாத காரணத்தினால் அப்போது பிரதமர் தான் நாட்டின் முதல் குடிமகனாக அறியப்பட்டார். என்ன தான் குடியரசுத் தலைவர் என்ற பெயரில் சில நாட்கள் மவுன்ட்பேட்டன் பிரபு இருந்தாலும் சுதந்திரக் கொடியைப் பிரதமர் தான் ஏற்றுவார். அதன் பின்னர் அரசியல் சாசனம் வடிவமைக்கப்பட்ட பின்னர் குடியரசாக இந்தியா அறிவிக்கப்பட்டதும் ஜனவரி 26 ஆம்  நாள் குடியரசு தினமாகவும் அறிவிக்கப்பட்டதும் குடியரசுத் தலைவர் தில்லி ராஜபாட்டையில் உள்ள மைதானத்தில் கொடி ஏற்ற ஆரம்பித்தார்.

சுதந்திர தினக்கொடியைக் கீழிருந்து மேலே ஏற்றிக் கொடியை அவிழ்த்துப் பறக்க விடுவார்கள். இது தான் அன்றைய தினத்துக்கான கொடி ஏற்றும் முறை. குடியரசு தினத்தன்று கம்பத்தின் உச்சியில் கட்டப்பட்டிருக்கும் கொடியை அவிழ்த்துப் பறக்கவிடுவார் குடியரசுத் தலைவர். அன்றைய தினம் அப்படி தான் கொடியைப் பறக்கவிடவேண்டும். இது தான் சுதந்திர தினத்துக்கும், குடியரசு தினத்துக்கும் உள்ள வேற்றுமை.

நேற்று வங்கிக்குச் சென்றிருந்த போது அங்கேயும் இன்றைய நாளுக்கான அலங்காரம் செய்யப்பட்டுக் கொண்டிருந்தது. இன்னமும் 2,3 கடைகளுக்குச் சென்றபோதும் சுதந்திர தின அலங்காரங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தது மனதில் மகிழ்ச்சியை ஊட்டியது..

இன்றைய தினம் வடமாநிலங்களில் ரக்ஷாபந்தன் என்னும் சகோதரன், சகோதரிகள் கொண்டாடும் பண்டிகை. சகோதரனுக்கு சகோதரி ரக்ஷாபந்தன் கயிறு வலக்கையில் கட்டி விடுவாள். சகோதரி சிறியவளானால் ஆசிகளோடு வெகுமதியும், பெரியவளானால் நமஸ்காரங்களோடு வெகுமதியும் சகோதரர்களால் கொடுக்கப்படும். இன்றைய நாள் மிக முக்கியமான நாள் அவர்களுக்கு.  இந்த ரக்ஷாபந்தன் குறித்த புராண/இதிகாசக் கதை என்னவெனில் ஒருமுறை யாதவர்களின் எதிரிகளுடன்  நடந்த போரில் கிருஷ்ணரின் ஆள்காட்டி விரலில் காயம்பட்டு ரத்தம் வழிந்தது. அந்தக் காயத்தோடு வந்த அவருக்கு திரௌபதி தன் சேலை முந்தானையில் ஒரு பக்கத்தைக் கிழித்து மருந்திட்டுக் கட்டினாள். அதைக் கிருஷ்ணர் மறக்கவே இல்லை. அதன் காரணமாகவே திரௌபதி கௌரவர் சபையில் மானபங்கப்படுத்தப்பட்டபோது அவளுக்குத் துணியை மேன்மேலும் அனுப்பிக் கிருஷ்ணர் காப்பாற்றினார் என்பது ஐதிகம். இந்த நிகழ்வே வடக்கே ரக்ஷாபந்தனாகக் கொண்டாடப்படுகிறது. திரௌபதியைத் தன் சகோதரியாகக் கிருஷ்ணர் ஏற்றுக் கொண்டிருந்தார். அந்த சகோதர பாசத்தை வெளிப்படுத்தவே அதன் பின்னர் ஒவ்வொரு ஆவணி மாதப் பௌர்ணமி தினமும் ரக்ஷாபந்தனாகக் கொண்டாடப்பட்டு வருவதாகச் செவி வழிக்கதைகள் சொல்கின்றன.

அதன் பின்னர் முகலாய சாம்ராஜ்யத்தின்போது ராணி கர்ணாவதி ராஜஸ்தான் மாநிலத்தின் சித்தூரின் ராணியாக இருக்கையில் குஜராத்தின் சுல்தான் ராஜஸ்தானின் சித்தூரின் மேல் படை எடுத்ததாகவும், தன்னைக் காப்பாற்ற வேண்டி அப்போது தில்லி சுல்தானாக இருந்த ஹுமாயூனுக்கு ராணி கர்ணாவதி ரக்ஷாபந்தன் கயிறை அனுப்பி உதவி கேட்டதாகவும் ரக்ஷாபந்தன் கயிறைப் பார்த்த ஹுமாயுன் ராணியைக் காக்க வேண்டி வந்ததாகவும் அதற்குள்ளாக குஜராத்தை ஆண்ட பகதூர்ஷா ரத்னாவதியை வெற்றி கொண்டுவிட்டதாகவும் கர்ணபரம்பரைக் கதைகள் சொல்கின்றன.  இந்தப் பண்டிகை வடநாட்டுக்கு மட்டுமே உரியது அல்ல! எல்லோரும் கொண்டாடும் பண்டிகையே.

தமிழ்நாட்டுப் பெண்கள் எப்போவோ வட மாநிலத்து உடையான சல்வார், கமீஸ் மற்றும் சுரிதார், மேலே அணியும் உடையை ஏற்றுக் கொண்டு விட்டனர். எண்பதுகளில் ஆங்காங்கே இங்கே ஒன்றும் அங்கே ஒன்றுமாகப் பார்க்க முடிந்த இந்த உடை இப்போது சர்வ தேச உடையாக மாறிப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அதோடு நம் கல்யாணங்களில் நடக்கும் வரவேற்பு நிகழ்வில் மணப்பெண் குஜராத்தி முறையில் சேலை கட்டிக் கொண்டோ, ராஜஸ்தான், உத்திரப்பிரதேசம் முறையில் காக்ரா, சோளியுடனோ தான் வருகின்றனர். அதைத் தவிரவும் "சங்கீத்" என்னும் வட இந்திய நாட்டிய நடன நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. மாப்பிள்ளை அழைப்பில் வட இந்தியக் கல்யாணங்களில் நடைபெறும் "பராத்" நிகழ்வு போலவே இங்கேயும் நடத்துகின்றனர். உணவு வகைகளில் கேட்கவே வேண்டாம். முன்னெல்லாம் மாப்பிள்ளை அழைப்பில் கொடுக்கும் உணவுகளான வெங்காய சாம்பார், எலுமிச்சை ரசம், சேமியா பாயசம், ஆமவடை, போளி எல்லாம் போய் இப்போது ஆங்காங்கே ஸ்டால்கள் நிறுவி வட இந்திய உணவு வகைகளான சாட் மசாலாக்கள், பஞ்சு மிட்டாய் வகைகள், பெண்களுக்கு அங்காங்கே "மெஹந்தி இடுதல்" என்னும் வட இந்திய முறையில் மருதாணி வைத்தல், வளையல் ஸ்டால், ஜூஸ் வகைகள், காஃபி, டீ வகைகள் என ஒவ்வொன்றுக்கும் ஸ்டால்.

அதைத் தவிர்த்தும் உணவுகளில் கேட்கவே வேண்டாம். அநேகமாகக் கலந்த சாத வகைகள் இருந்தாலும் அவற்றில் சாம்பார் சாதம் மட்டுமே நம் தென்னிந்திய உணவு. மற்றவை புலவு, ஜீரா ரைஸ், வெஜிடபுள் பிரியாணி, சனா மசாலா, பூரி அல்லது பட்டுரா, பராத்தா அல்லது சப்பாத்தி, வெங்காயப் பச்சடி, சின்னப் பேப்பரில் சுற்றப்பட்ட பாதாம் அல்வா அல்லது பாசுந்தி அல்லது ரஸ்மலாய் போன்ற வட இந்திய உணவு வகைகளும் இனிப்பு வகைகளுமே! இப்போது இளைஞர்கள் ஹிந்தியைத் திணிக்கிறதாச் சொல்லிக் கொண்டிருந்தாலும் ஒருத்தருக்கொருத்தர் அழைத்துக் கொள்வது "ஜி" போட்டே! ஆகவே நாம் ரக்ஷாபந்தன் பண்டிகையைக் கொண்டாடாவிட்டாலும் கொண்டாடுபவர்களுக்கு நம் வாழ்த்துகளைச் சொல்லலாமே! தப்பில்லை அல்லவா?




27 comments:

  1. நாங்க முட்டாசி தின்னு ஏப்பம் விட்ட பிறகு சுதந்திர தின வாழ்த்துகள் சொல்றீங்களே...

    //இந்த உடை இப்போது சர்வ தேச உடையாக மாறிப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன//

    நிதர்சனமான உண்மை

    ReplyDelete
    Replies
    1. வாங்க கில்லர்ஜி, நேத்திக்கே பதிவைப் போட்டு வைக்க முடியலை. நேற்று வேலைகள் அதிகம். காலையிலும் அவசர வேலையாக வங்கிக்குப் போயிட்டுப் பின்னர் மாலையிலும் வெளியே போக நேர்ந்தது. அதோடு என்ன எழுதுவது எனத் தீர்மானமும் ஆகலை!

      Delete
    2. எங்களுக்குப் பக்கத்தில் இருக்கும் திருநெல்வேலி மாமியிடம் இருந்து திருநெல்வேலி அல்வா வந்தது. இன்று அதைச் சாப்பிட்டோம். இந்த வருஷ ஆரம்பத்தில் ஜனவரி மாதம் குடியரசு தினத்தின் போது திருநெல்வேலியிலேயே இருந்தோம். அங்கே ஓர் பால் பண்ணையில் அருமையான பால்கோவா கொடுத்தார்கள். ஶ்ரீவில்லிபுத்தூர்க் கோவாவெல்லாம் ஒன்றுமே இல்லை! அவ்வளவு ருசி! நல்ல பசும்பாலில் செய்த பால்கோவா!

      Delete
    3. //அங்கே ஓர் பால் பண்ணையில் அருமையான பால்கோவா கொடுத்தார்கள்.// - இதை விளக்கமா எழுதுங்க. அப்போவும் எழுதின மாதிரித் தெரியலை..நாங்க போனபோதும் சொல்லலை. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      Delete
    4. ஹாஹாஹா, நெல்லை, ஜானகிராமன் ஓட்டலுக்குக் கொஞ்சம் தள்ளி எதிர்ப்பக்கம் ஓர் சந்தில்! பெயரெல்லாம் தெரியாதே! :)))) அங்கே விசாரிச்சுப் பாருங்க!

      Delete
  2. இனிய சுதந்திர தின நல்வழ்த்துகள் கீதக்கா மற்றும் இங்கு வரும் அனைவருக்கும்.

    80களில்? அதற்கு முன்னரேயே கூட கறுப்பு வெள்ளை படங்களில் எல்லாம் வந்துவிட்டதாக நினைவு. அப்போதைய உடைகள் தான் இப்போது மீண்டும் வந்து கொண்டிருக்கின்றன அதாவது சுடி, அரேபியன் சல்வார், லெக்கிங்க்ஸ், குட்டைகுர்த்தா/குர்த்தி என்று.

    அக்கா, பாரதியே பாடியதுதானே கங்கை நதிப்புரத்துக் கோதுமை பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்...என்று...

    நிறைய தகவல்கள் அறிய முடிந்தது. ரக்ஷா பந்தன் பற்றி மன்னர்கள் கதைகள் புதிது..

    க்ராஸ் கல்சர்! எதுவாக இருந்தாலும் இங்கிருந்து அங்கு சென்றாலும் சரி அங்கிருந்து இங்கு வந்தாலும் சரி, மக்கள் வேற்றுமை பாராட்டாமல், காழ்ப்புணர்ச்சி இல்லாமல், சண்டை போடாமல், அன்புடன் அன்பைப் பரிமாறி வாழ வேண்டும்! இந்த நாளில் அதை வாழ்த்துவோம் வாழ்த்திக் கொள்வோம்.

    ஆகவே நாம் ரக்ஷாபந்தன் பண்டிகையைக் கொண்டாடாவிட்டாலும் கொண்டாடுபவர்களுக்கு நம் வாழ்த்துகளைச் சொல்லலாமே! தப்பில்லை அல்லவா?//

    இல்லவே இல்லை. தப்பே இல்லை. வாழ்த்துவது நல்ல நேர்மறை தானே!!! ரக்ஷா பந்தனுக்கு நம் சகோதரர்கள் அனைவரையும் வாழ்த்துவோம்!! (பரிசுப் பொருள் எதுவும் கேக்க மாட்டோமாக்கும்!!!)

    கீதா


    ReplyDelete
    Replies
    1. வாங்க தி/கீதா, ஆமாம், எண்பதுகளின் முன்னரே வந்திருக்கு. நம்ம இயக்குநர் ஶ்ரீதரின் கதாநாயகிகள் எல்லாம் இப்படித்தான் உடை அணிவார்கள். ஆனால் மேலாடை எனப்படும் துப்பட்டா இருக்காது! காதலிக்க நேரமில்லை திரைப்படத்திலும் பார்க்கலாம். சரோஜா தேவியும் இந்த உடையில் நிறைய நடிச்சிருக்கார்.

      Delete
  3. //பெரியவளானால் நமஸ்காரங்களோடு வெகுமதியும் சகோதரர்களால் கொடுக்கப்படும். // - அடடா..உங்களுக்கு ரக்‌ஷாபந்தன் கட்டிவிட்டு, ஏதேனும் வெகுமதி வாங்கிக்கொள்ளலாம் என்று நினைத்தால், நல்ல யோசனையோடத்தான் எழுதியிருக்கீங்க. நான் வரலை இந்த விளையாட்டுக்கு

    ReplyDelete
    Replies
    1. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நெ.த. நான் தான் உங்களுக்குக் கட்டி விட்டுட்டு அதுக்கு வெகுமதியா வஸ்த்ரகலா அல்லது பிரைடல் செவனில் ஏதேனும் ஓர் நிறம், அல்லது பாரம்பரானு வாங்கிக்கணும். பரவாயில்லை. நீங்க வாங்கி அனுப்பிடுங்க!

      Delete
  4. //வட மாநிலத்து உடையான சல்வார், கமீஸ் மற்றும் சுரிதார், மேலே அணியும் உடையை ஏற்றுக் கொண்டு விட்டனர்// - இதுக்கு ஒரு விளக்கம் என் உறவினர் பலப்பல வருடங்களுக்கு முன் சொன்னார். அவரோட பசங்க (அவர் ரொம்ப ஆசாரம்) முதல்ல இந்த உடையைப் போட்டபோது அவர் யோசித்தாராம். நம் தாவணியைவிட, சேலையைவிட, உடலை முழுவதும் வெளிக்காட்டாத உடை இந்த சல்வார் கமீஸ் என்பதை உணர்ந்து, அதனை வீட்டில் அணிவதற்கு அனுமதித்துவிட்டாராம்.

    ReplyDelete
    Replies
    1. நெ.த. எங்க பொண்ணு நினைவு தெரிஞ்சதிலிருந்து இந்த உடைதான். அதுவும் வடக்கேயே வளர்ந்ததால் கேட்கவே வேண்டாம். பட்டுப்பாவாடைகளெல்லாம் தூங்கும்! :(

      Delete
  5. //ஸ்டால்கள் நிறுவி வட இந்திய உணவு வகைகளான சாட் மசாலாக்கள், பஞ்சு மிட்டாய் வகைகள், // - இந்த பான் விட்டுட்டீங்க. நான் சமீபத்தில் சென்ற திருமண ரிசெப்ஷனில், வித வித பான்கள் கொடுத்தார்கள். எனக்கு மிகவும் பிடித்திருந்தது (கல்கத்தா வெற்றிலை என்று ஞாபகம்)

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்,மீடா பான் உண்டு. மறந்துட்டேன். பங்க்ளா வெற்றிலை நன்றாக இருக்கும். ராஜஸ்தானில் கர்பூரி பான் என ஒன்று உண்டு. அது மெத்தென்று நல்ல ருசியாக இருக்கும். கும்பகோணம் வெற்றிலை மாதிரிக் காரமாக இருக்காது.

      Delete
  6. பழைய கழிதலும் புதியன புகுதலும் காலத்தின் கட்டாயம் பணிக்கு செல்லும் பெண்களுக்கு சல்வார் கமிசே ஏற்றது

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஐயா! இப்போதெல்லாம் எல்லாப் பதிவுகளிலும் பார்க்க முடிவதில்லை. சல்வார் கமீஸே பெண்களுக்கு நல்லது என்பது தான் என் கருத்தும்.

      Delete
  7. வாழ்த்துகள் சொல்வதில் தப்பேயில்லை...

    விடுதலை திருநாள் வாழ்த்துகள்...(!)

    ReplyDelete
    Replies
    1. வாங்க டிடி. உங்களுக்கும் வாழ்த்துகள்.

      Delete
  8. வணக்கம் சகோதரி

    இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள். காலையிலிருந்து இதைத்தானே சொல்லிக் கொண்டேயிருக்கிறோம். ஆனால் சொல்ல அலுக்கவில்லை. இன்று ரக்ஷாபந்தன் கொண்டாடுபவர்களுக்கும் இதயம் நிறைந்த நல்வாழ்த்துகள்.

    நல்ல விபரமான பதிவாக இருக்கிறது. ரசித்துப் படித்தேன். நம் கல்யாண வைபவங்களிலும் வட இந்திய முறைப்படி நிறைய மாற்றங்களை கொண்டு வந்து விட்டோம் என்பது உண்மைதான். ஒவ்வொன்றையும் மிக அழகாக எழுதியுள்ளீர்கள். கண்ணனின் கதையும், சித்தூர் ராணியின் கதையும் அறிந்தவை என்றாலும், படிக்க அருமையாக இருக்கின்றன. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா. கவிதையெல்லாம் பிச்சு உதறுகிறீங்க! ஆனால் அடக்கமாக ஒண்ணுமே தெரியலைனு சொல்றீங்க! எ.பி.யில்படித்தேன் நன்றாக இருக்கிறது உங்க கவிதை! பாராட்டுகளுக்கு நன்றி.

      Delete
  9. இனிய சுதந்திர தின வாழ்த்துகள். கொடியேற்றும் முறையில் இருக்கும் வித்தியாசம் தெரிந்து கொண்டேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஶ்ரீராம், வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  10. இப்போது கடந்த நம்முடைய கருட பஞ்சமி சகோதரிகள் சகோதரர்களுக்கு பணமோ பரிசோ கொடுக்கும் நாள். சகோதரர்கள் பதிலுக்கு வரலக்ஷ்மி விரதம் அன்றும், கணு அன்றும் சகோதரிகளுக்கு சீர் செய்வார்கள். எனவே இந்த முறை தென் இந்தியர்களிடமும் இருக்கிறதுதானே?

    ReplyDelete
    Replies
    1. அநேகமாக உலகெங்கும் இருக்கும் ஶ்ரீராம். இந்தியாவில் மட்டும் இல்லைனு நினைக்கிறேன். எங்க பக்கம் (மதுரைக்காரங்க) கார்த்திகை விளக்கேற்றுவது கூட சகோதரர்களின் நல்வாழ்வுக்கு எனச் சொல்லுவது உண்டு.கார்த்திகைச் சீர் ரொம்ப முக்கியம் அங்கெல்லாம்.

      Delete
  11. இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்..

    அத்துடன் -
    ரக்க்ஷா பந்தன் நல்வாழ்த்துகள்...
    அன்பும் அறனும் தழைத்தோங்கட்டும்!..

    ReplyDelete
    Replies
    1. வாங்க துரை, உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் வாழ்த்துகள், ஆசிகள்.

      Delete
  12. கார்த்திகை விளக்கேற்றுவது கூட சகோதரர்களின் நல்வாழ்வுக்கு எனச் சொல்லுவது உண்டு.கார்த்திகைச் சீர் ரொம்ப முக்கியம் அங்கெல்லாம்.//

    நீங்கள் சொல்வது சரிதான்.

    எங்கள் வீடுகளில் அண்ணன் , தம்பி வீடுகளில் இருந்து கார்த்திகை சீர் உண்டு.
    தாய் வீடு, அண்ணன் , தம்பி குடும்பம் நலம் வாழ விளக்கு ஏற்றுவார்கள்.



    ReplyDelete
  13. சுதந்திர தின நல்வாழ்த்துகள்.

    ரக்ஷா பந்தன் - இங்கே மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகைகள். எனக்கும் தில்லியில் சில ராக்கி சகோதரிகள் உண்டு.

    உடை, பழக்க வழக்கங்கள் என பலதிலும் வட இந்திய விஷயங்கள் நம் ஊரிலும் பரவி விட்டன. மாற்றம் ஒன்று மட்டுமே மாறாதது இல்லையா!

    ReplyDelete