எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, July 27, 2008

கோபியர்கள் கொஞ்சும் ரமணா, கோபாலகிருஷ்ணா!

கண்ணனைச் சுற்றிக் கோபியர்கள் இருப்பதும், கண்ணன் அவர்களோடு புல்லாங்குழல் இசைத்தவண்ணம் சுற்றி வந்து விளையாடுவதுமான கோலத்தைக் கண்டு, வியக்காதவர் யாரும் இல்லை. ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு எண்ணம், சிலருக்கு என்ன இந்தக் கண்ணன் எப்போப் பார்த்தாலும் புல்லாங்குழல் ஊதிக் கொண்டிருந்தால் அவன் வீட்டில் அடுப்பு எப்படி ஊதமுடியும்னு! இன்னும் சிலருக்கு இப்படி ஊர் சுற்றியாக இருக்கானேனு! குழந்தைகளுக்கோ கண்ணன் படிக்கவே மாட்டான் போலிருக்கே, அவங்க அப்பா, அம்மா திட்ட மாட்டாங்களானு தோணுது! சில வயதானவர்களோ, எப்போப் பார்த்தாலும் பொண்ணுங்க புடை சூழ இருக்கானே, நல்ல அதிர்ஷ்டம் தான்னு நினைக்கிறாங்க. இளைஞர்களோ எனில், ஆஹா, நாம் எத்தனையோ முயற்சிகள் செய்யறோம், இந்தப் பொண்ணுங்களைக் கடலை போடணும்னு, ஆனால் இந்தக் கண்ணன் புல்லாங்குழல் எடுத்து ஊதினால் அவன் பின்னாடியே போகுதுங்களே என்ன விஷயம்னு யோசிக்கிறாங்க. இப்படி ஒவ்வொருவர் கண்ணன் கோபியர்களோடு இருப்பதைப் பற்றி யோசிச்சிட்டு இருக்காங்க இல்லையா?

பொதுவாக அனைவருக்குமே புரியாத ஒரு விஷயம், கண்ணன் என்ன இப்படி ஒரு பெண்பித்தனாய் இருக்கின்றான் என்பதே! பெண்களைச் சுற்றி அலையறானே இவனையும் ஒரு கடவுள் என்றோ, கீதையை உபதேசித்தவன் என்றோ சொல்லவா முடியும்??? கடவுள் என்று சொல்லப் படும் கண்ணனே இப்படி இருந்தால் சாமானிய மனிதனான நாம் இருக்கக் கூடாதா? என்றும் பலர் எண்ணம். ஆதிசங்கரர் ஒருமுறை சிஷ்யர்களோடு சென்று கொண்டிருக்கையில் அவருக்குத் தாகம் ஏற்பட, அப்போது அங்கே வந்த ஒரு தொழுநோயாளியான பிச்சைக்காரனின் மண்பாண்டத்தில் இருந்த நீரை வாங்கிக் குடித்தாராம், தாகம் தீரவேண்டும் என. சிஷ்யர்கள் முகம் சுளிக்க, சங்கரர் அந்த மாற்றத்தைக் கவனித்தும் ஒன்றும் சொல்லவில்லையாம். சிறிது நேரத்திற்குப் பின் மீண்டும் தாகம் எடுக்கின்றது என்று சொன்ன சங்கரர், அங்கே ஒரு கொல்லன் தன் உலையில் இரும்புக் குழம்பைக் கொதிக்க வைத்துக் கொண்டிருந்ததைக் கண்டு, அதை வாங்கிக் குடித்தாராம். அப்போது தான் சீடர்களுக்குப் புரிந்ததாம், அவர் உண்மையான ஞானி என்றும், எந்தவிதமான ஆசாபாசங்களும், வலி, வேதனைகளும், உணர்வுகளும் அவரை அண்டாது என்று. அத்தகையதொரு நிகழ்வே மேற்கண்ட கோபியர்களோடு கண்ணன் ஆடும் நிகழ்வும். கண்ணன் ஒவ்வொரு கோபியரோடும் ஆடுகின்றான், பாடுகின்றான், விளையாடுகின்றான். சாப்பிடுகின்றான். சண்டை போடுகின்றான்.

"தீராத விளையாட்டுப் பிள்ளை!"யாக இருக்கின்றான் கண்ணன். பெண்களுக்குத் தீராத தொல்லையாகவும் இருக்கின்றான். ஒரே மனிதன் ஒவ்வொரு பெண்ணோடும் எப்படி ஆட முடியும், பாடமுடியும்???? ஏனெனில் கண்ணன் ஒவ்வொரு மனிதருள்ளும் உறைகின்றான். இந்த உலகத்தில் நாயகன் ஒருவனே. அவன் தான் கண்ணன், மற்றவர் அனைவருமே ஆண்,பெண் அடங்கலாய் அனைவருமே நாயகியர் தான். கண்ணன் ஒருவனே நாயகன். ஆகவே அந்தக் கண்ணன் அனைத்து நாயகியரான கோபியர்களுடன், ஆடாமல், பாடாமல், விளையாடாமல்,சாப்பிடாமல், தூங்காமல் இருப்பது எவ்வாறு?? இதை நாயன்மார்களும் சொல்லி இருக்கின்றனர். "

"முன்னம் அவனுடைய திருநாமம் கேட்டாள்
மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள்
பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்
பேர்த்தும் அவனுக்கே பிச்சியானாள்"

என்று நாயகி பாவத்தில் எழுதி இருக்கின்றனர். இப்படி நாயகி, நாயகன் பாவத்திலேயே ஆழ்வார்களும் பாசுரங்கள் பாடி இருக்கின்றனர். ஆண்டாளின் அனைத்துப் பாசுரங்களுமே பெரியாழ்வார் தன்னைப் பெண்ணாகப் பாவித்துக் கொண்டு எழுதியதே என்று திரு ராஜாஜி கூறுவது உண்டு. அப்படி எழுதப் பட்டதே அஷ்டபதி என்னும் மகா காவியம். இதில் கண்ணனின் ராசலீலை வர்ணிக்கப் பட்டிருக்கும். ஆனால் பெரும்பாலானவர்களால் இதன் உட்கருத்து புரிந்து கொள்ளப் படாமல் தவறாகவே புரிந்து கொள்ளப் பட்டிருக்கின்றது. ஏதோ கண்ணன் கோபியரோடு குளிக்கப் போனான், போன இடத்தில் ஆடிப் பாடினான். அவன் ஒரு ஸ்திரீலோலன் என்றே புரிதல் பெருமளவில் இருக்கின்றது. கண்ணனின் இந்த ராசலீலையின் உட்கருத்தை அநேகர் புரிந்து கொள்ளாமலேயே இதை ஒரு அருவருப்பான விஷயமாகவும், பெருமாளே இப்படி என்றால் அவன் பக்தர்கள் எப்படி இருப்பார்களோ என்று சந்தேகமாகவும் பேச இடமளிக்கின்றது. இதைப் பற்றி எந்தப் புதிய 13, 14-ம் ஆழ்வார்களும் கவலைப்பட்டுக்கவே இல்லை. அவங்க கவலை எல்லாம் தில்லை பற்றியே தொல்லை கொடுக்குது. ஆகவே நாம் கவலைப்பட்டுக்க முடிவு செய்து விட்டு அதைப் பற்றிப் போட முனைந்த பதிவு இது:

"கண்ணனைச் சுற்றிய கோபியர்கள்: கோபியர்களின் ஆடை அவிழ்ந்து கிடக்கின்றது. அத்தனை கோபியர்களும், நதியில் நீராடி, மூழ்கித் திளைத்து சுகானுபவம் பெற இறங்குகின்றனர். நதியில் மூழ்க,மூழ்க அந்த நீரின் இனிய அனுபவத்தில் மூழ்கிப் போகின்றனர். கரையில் இருக்கும் ஆடைகளின் நினைவோ, ஏன், கண்ணன் நினைவோ கூட இல்லை அவர்களுக்கு! பார்த்தான் கண்ணன், தன் குழலெடுத்து ஊதுகின்றான். கோபியர் திரும்பிப் பார்க்கின்றனர். உடனே சட்டென அவர்கள் ஆடைகளை எடுத்துக் கொண்ட கண்ணன் மரத்தில் ஏறி மறைகின்றான். கோபியர் பதறுகின்றனர். ஆஹா, ஆடை இல்லாமல் எப்படி வெளியே வருவது??? கண்ணா,மணிவண்ணா, கோவிந்தா, கோபாலா, ஆடைகளைக் கொடுத்துவிடு, ஸ்ரீதரா, ருஷிகேசா, தாமோதரா, கேசவா, ஆடைகளைக் கொடுப்பாய்! நந்தகோபன் மகனே! இது என்ன விளையாட்டு?? கொடுத்துடுப்பா! கொடுத்துடு! ம்ஹும், கண்ணனா கொடுப்பான்? மறுக்கின்றான். பின்னே என்ன செய்வது?? என்னிடம் வாருங்கள்! வந்து கேளுங்கள் கொடுக்கப் படும் என்று உணர்த்துகின்றான் கோவிந்தன். கோபியர்களுக்குப் புரிகின்றது.

பிறக்கும்போது சர்வ ஞானத்துடனும் பிறக்கின்றோம். ஆனால் வளர, வளர, இவ்வுலக இன்பங்களில் மனம் தோயத் தோய இறைவனை மறக்கின்றோம். இறைவனால் படைக்கப் பட்டவர்கள் என்பதே மறக்கின்றது. ஆனால் இல்வாழ்வின் துன்பங்கள் ஆடையில்லாத மனிதர்களைப் போல நம்மை மனம் பதற வைக்கின்றது. இறைவனைத் தேட வைக்கின்றது. எனினும், நாம் அப்போதும், நம் தேவைக்குத் தான் இறைவனைத் தேடுகின்றோம், அவன் துணையை நாடுகின்றோம், அவனிடம் நம்முடைய வேண்டுகோளை விடுவிக்கின்றோம். எனினும் இறைவன் பொறுமையுடனேயே இருக்கின்றான். நமக்குப் புரியும் எனக் காத்திருக்கின்றான். நமக்கும் புரிகின்றது ஒருநாள், ஆஹா, அவனிடம் நாம் பரிபூரண சரணாகதி அடையவேண்டாமா? அப்போது தானே அவன் அருள் பூரணமாய்க் கிட்டும் என்று உணருகின்றோம். உடனேயே நம்,மகிழ்ச்சி, ஏக்கம், காமம், கோபம், தாபம், பாசம், ஆசை, உணர்வுகள் என்று நம்முடைய அனைத்து உணர்வுகளையும், இறைவனிடம் அர்ப்பணித்துப் பரிபூரணச் சரணாகதி அடைகின்றோம். நம்முடைய "நான்" என்னும் அகத்தை மறக்கவேண்டும். இறைவனே அகமும், புறமும் என உணரவேண்டும். அகத்தினுள்ளே இருப்பதும் அவனே என உணரவேண்டும், இதைத் தான் ராசக்ரீடை என்னும் அழகிய காட்சி உணர்த்துகின்றது. சற்று விளக்கமாய்ப் பார்ப்போமா??

இங்கே கோபியர்களாய் இருப்பவர்கள் அனைவரும் இவ்வுலக மக்களாகிய நாமே தான். பிறக்கும்போது ஞானத்துடனேயே பிரம்மமாய்த் தான் பிறக்கின்றோம். ஆனால் நாளாவட்டத்தில், சம்சாகர சாகரம் என்னும் நதியில் மூழ்கி, கடலில் மூழ்கி, நம்மை நாமே மட்டுமில்லாமல், இந்த உலகையும், நம்மையும் படைத்தவன் ஒருவன் இருக்கின்றான் என்பதையே மறக்கின்றோம். நாம் கழட்டிய ஞானம் தான் இங்கே கரையில் இருக்கும் ஆடைகள். இறைவன் நாம் ஞானத்தைத் துறந்து அஞ்ஞானமாகிய சாகரத்தில் மூழ்கிக் கிடப்பதை அறிந்து நம்மைக் கூப்பிடுகின்றான். எனினும் இந்த உலக மயக்கத்தில் மூழ்கி இருக்கும் நமக்கு அது காதில் விழுவதில்லை. அதனால் ஞானமாகிய ஆடையை இறைவனே திரும்ப எடுத்துக் கொண்டு விடுகின்றான். நமக்குத் துன்பம் வரும்போது தாங்கும் சக்தி குறைவது அதனாலேயே. அப்போதுதான் இறைவனைப் பூரணமாய் நினைக்க ஆரம்பிக்கின்றோம். அவனிடம் பிரார்த்திக்கின்றோம். எனக்கு விடிவு இல்லையா? என் கஷ்டங்களுக்கு முடிவு இல்லையா எனக் கேட்கின்றோம்.

கண்ணன் சொல்கின்றான்:"வா, என்னிடம் வந்துவிடு! என்னிடம் சரணாகதி அடைந்துவிடு! உன்னை நான் காக்கின்றேன்." என்று சொல்கின்றான். ஞானமாகிய ஆடையைக் காட்டுகின்றான். என்னிடம் வா, தருகின்றேன் என்று ஆசை காட்டுகின்றான். இறைவனைச் சரணடைந்தால் ஞானமும், அதைத் தொடர்ந்த மோட்சமும் கிட்டும் என உணர்த்துகின்றான்.
கீதையிலே கண்ணன் சொல்கின்றான்:

"அநந்யாஸ்சிந்தயந்தோ மாம் யே ஜநா: பர்யுபாஸதே!
தேஷாம் நித்யாபியுக்தாநாம் யோகக்ஷேமம் வஹாம்யஹம்!"

என்று, எந்த மக்கள் கண்ணனையே சிந்திக்கின்றார்களோ அவர்களின் யோக க்ஷேமத்தையே தான் தாங்குவதாய்க் கூறுகின்றான் கண்ணன். கண்ணனையே நினைத்து, கண்ணனுக்கே மனத்தை அர்ப்பணம் செய்து, கண்ணனுக்கே பக்தி செலுத்தி, கண்ணனுக்கே வழிபாடுகள் செய்து, கண்ணனைத் தவிர வேறொருவரைத் தொழாமல், கண்ணனையே அடையவேண்டும் என்று எண்ணுவதே இந்த ராசக்ரீடையின் உட்பொருள்.

4 comments:

  1. கீதா,

    நல்லதொரு விளக்கம். ராசக்கிரீடையின் முழுப் பொருள் விளக்கிய விதம் அருமை. கோபியர்கள் கொஞ்சும் வஞ்சகக் கண்ணனை முழுமையாகப் புரிந்து கொள்ள வைக்கும் ஒரு பதிவு இது. ஆதி சங்கரரின், தொழு நோயாளியின் கலயத்தில் இருந்த நீரையும், கொல்லனின் இரும்புக் குழம்பையும் ஒன்றாகப் பாவிக்கும் குணம் அவருக்கு மட்டுமே வரும். ஏனெனில் அவர் ஸ்திரப்பிரக்ஞன்.

    நல்வாழ்த்துகள் நல்லதொரு பதிவினைப் படைத்ததற்கு

    ReplyDelete
  2. இந்த மாதிரி பதிவுகள் இந்த காலத்தில் அவசியம்.

    ReplyDelete
  3. படித்து அறிந்தேன் விடயம்.

    ReplyDelete