
நாராயணி: மஹாவிஷ்ணுவின் அம்சமான இவளுக்கு வைஷ்ணவி என்ற பெயரும் உண்டு. அபயவரதம் காட்டி, சங்கு சக்கரம் ஏந்திய நாற்கரத்தினால், பசுமை நிறத்தோடு, பரந்தாமனின் அம்சங்களைக் கொண்டு கருடனை வாஹனமாய்க் கொண்டவள். நலமும், வளமும் பெற இவளைத் துதித்தல் நலம்.
கெளமாரி: கந்தனின் அம்சம் ஆன இவள் குமாரனின் பெயரால் கெளமாரி என அழைக்கப் படுகிறாள். நீல நிறம் பிடித்த நிறம். மயில் வாஹனத்தில் நான்கு கரங்களுடன், சக்தி ஆயுதமும், வஜ்ராயுதமும் தாங்கி அபயவரதம் காட்டுவாள். ஜடாமகுடம் தரித்தவள்.
சாமுண்டி: சண்டன், முண்டன் என்னும் இருவரையும் அழிக்க சக்தியின் வடிவாய்த் தோன்றிய இவள் முக்கண் கொண்டவள். கரிய நிறத்தவள். கத்தி, சூலம், கபாலம் ஏந்தி அபய முத்திரை காட்டும் இவள் புலித்தோல் ஆடை அணிந்து காட்சி தருவாள். இவளை வணங்கினால் வாழ்வில் எத்தகைய துன்பமும் தீரும்.
இன்றைய அலங்காரமாய்ச் சிலர் அம்பிகையை சும்ப நிசும்பர்களை வதம் செய்யத் தோன்றிய காமேஸ்வரியாக அலங்கரிப்பார்கள். ஒன்பதாம் நாளான இன்று ஆயுதங்கள் கோலம் போட்டுப் பத்து வயதுள்ள பெண் குழந்தையை சுபத்ராவாக வழிபடவேண்டும். குழந்தைக்குப் பாதபூஜை செய்து, வெள்ளை நிற மலர்களான மல்லிகை, நந்தியாவட்டை போன்றவற்றால் அர்ச்சிக்கலாம். இந்தக் குழந்தைகளுக்குப் பிடித்தமான ஆடை, அணிகளை வசதி உள்ளவர்கள் வாங்கிக் கொடுக்கலாம். காலை நிவேதனத்தில் பருப்புப் பாயாசம், உளுந்துவடை, அதிரசம், சுய்யம், போன்றவை இடம் பெறும். மாலை சுண்டல் கறுப்புக் கொண்டைக்கடலைச் சுண்டல்.

வலையொத்த வினை கலையொத்த மனம் அருளப் பறையாற்றொளியொத்தவிதால்
நிலையற்றெளியேன் முடியத் தகுமோ நிகளம் துகளாக வரம் தருவாய்
அலையற்றசைவற்றநுபூதி பெறும் அடியார் முடிவாழ் வைடூரியமே
மலையத்துவசன் மகளே வருவாய் மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே
நூற்பயன்:
எவர் எத்தினமும் இசைவாய் லலிதா நவரத்தின மாலை நவின்றிடுவார்
அவர் அற்புத சக்தியெலாம் அடைவார் சிவரத்தினமாய்த் திகழ்வாரவரே
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே
மன்னிப்பு: இன்றைய பதிவு தாமதம் ஆனதுக்கு மன்னிக்கவும். நேற்று மதியம் மூன்று மணியில் இருந்து மாலை ஏழு மணி வரையில் மின்சாரம் இல்லை. அதுக்குப் பின்னரும் சீரான விநியோகம் இல்லை. இணையமும் இப்போத் தான் வந்தது.
நாளை துர்காஷ்டகமும், லலிதா நவரத்னமாலையும் தொகுத்து அளிக்கப் படும். நன்றி.
No comments:
Post a Comment