எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, December 18, 2010

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள்-3

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்

அருமையான பாடல். வைணவர்களின் கல்யாணம் போன்ற சுப நிகழ்ச்சிகளிலும், கோயில்களிலும் வாழ்த்திப்பாடும்போது இந்தப்பாடல் தவறாமல் பாடப்படும். அத்தகையதொரு உலகளாவிய நன்மைக்கான வேண்டுதல் இந்தப் பாடலிலே அடங்கி இருக்கிறது. எடுத்த எடுப்பிலேயே ஆண்டாள் பரமனை

ஓங்கி உலகளந்த உத்தமன் என்று அழைக்கிறாள். மஹாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களையும் அறிவோம். ஒவ்வொரு அவதாரத்திலேயும் ஒவ்வொருத்தரை மஹாவிஷ்ணு அழித்திருக்கிறார். இன்னும் சொல்லப் போனால் அந்த அரக்கர்களைக் கொல்லவென்றே அவதாரம் செய்திருக்கிறார். ஆனால் வாமன அவதாரம் அப்படி அல்ல. என்ன ஆச்சரியமா இருக்கா? ஆமாம், அப்படித்தான். மச்ச, கூர்ம, வராஹ, நரசிம்ம அவதாரங்களில் அதுவும் அந்த நரசிம்ம அவதாரத்தில் எதிர் எதிர் சிந்தனைகளான + - ஒன்று சேரவும் ஈசன் தோன்றி நரசிம்மனை அழித்தான். கடுமையான கோபம் கொண்ட அவதாரம், மஹாலக்ஷ்மியே பக்கத்தில் போக அஞ்சினாளாம்.

அதுக்கடுத்து இந்த வாமன அவதாரம். சின்னஞ்சிறு பிரமசரியப் பிள்ளை. பிரமசரிய விரதம் இருக்கிறது. பிரமசாரி ய விரதத்தில் பிக்ஷை எடுத்துத் தான் சாப்பிடணும். இந்தப் பிள்ளையும் வந்து பிக்ஷை கேட்கிறது. மஹாபலிச் சக்கரவர்த்தி யாகங்கள் செய்து இந்திர பதவியை அடையப் போகிறான். இதுவோ கடைசி யாகம், இதை முடித்தால் இந்திரனை விடவும் உயர்ந்த பதவியை அடையலாம். ஆனால் அவனுக்கோ மோக்ஷம் காத்திருக்கிறது. சிரஞ்சீவி பதவி காத்திருக்கிறது. ஆகவே யாகத்துக்கான முன்னேற்பாடுகளாய் தானங்கள் அனைத்தையும் செய்து முடித்துவிட்டான் மஹாபலி. எல்லாம் முடிஞ்சாச்சுனு நிச்சயமாத் தெரிஞ்சுண்டு சாவகாசமா நம்ம ஆள் போறார் நமட்டுச் சிரிப்போடு. சின்னத் தாழங்குடையைப்பிடிச்சுண்டு, காலிலே கட்டைச் செருப்போடு வரும் சின்னப் பிள்ளையைப் பார்த்த பலிக்கு சந்தோஷம், ஆகா, இந்தப் பிள்ளையின் தேஜஸ் என்ன?? யாரோட பிள்ளை இவன்??

அதுக்குள்ளே சுக்ராசாரியாருக்கு மூக்கிலே வேர்க்க அவரோ பலியிடம் எச்சரிக்கிறார். அப்பா, உன் யாகத்தைக் கெடுக்க வந்த பிள்ளை இவன். காசியபரின் புத்திரன் என்ற பெயரில் வந்திருக்கும் இவன் வேறு யாரும் இல்லை. சாட்சாத் அந்த மஹாவிஷ்ணுவே. நீ பாட்டுக்கு அவசரப் பட்டு வாக்குக் கொடுத்துவிடாதேனு சொல்றார். ஆனால் மஹாபலியோ , "குருவே, மஹாவிஷ்ணுவே வந்து கேட்கும்போது கேட்பதைக் கொடுப்பது என் அரச தர்மம். அரச தர்மத்தை நான் மீற மாட்டேன்." என்று சொல்லிவிடுகிறான். வந்துட்டார் வாமனனும். யாசகமும் கேட்டாச்சு.
"குழந்தாய், என்னப்பா வேண்டும்?"

அரசே, என் காலடியால் மூன்றடி மண் கொடுத்தால் போதும்!" குழந்தை தானே? தன் சின்னஞ்சிறு காலைக் காட்டுகிறது. அது பென்னம்பெரிய காலாகப் போறதுனு பலி கண்டானா? ஆனால் சுக்ராசாரியார் கண்டுவிட்டார்.
குறுக்கே போக, பலியோ வாக்குக் கொடுக்கிறான். பூமி தானம் சும்மா சரினு சம்மதிக்கிறதோடு போயிடாது. சாஸ்திரோக்தமா தாரையும் வார்க்கிறான் பலி. அப்போவும் சுக்ராசாரியார் வண்டாய் மாறி நீர் விடும் கெண்டியின் கண்ணை அடைத்துக்கொள்ள, ஒரு தர்ப்பைக்குச்சியால் அவர்கண்ணையே குத்துகிறான் வாமனச் சிறுவன். பின்னர் தாரையும் வார்த்து, சின்னஞ்சிறு கால் பென்னம்பெரிய காலாக ஆகிறது. ஒரு கால் மேலே, மேலே, மேலே போக, அங்கே தேவாதிதேவர்கள் அந்தக் கால் விஷ்ணுவின் கால்னு தெரிஞ்சு பாதபூஜை செய்ய அந்த நீர்தான் , அழகர் மலையில்,"நூபுரகங்கை"னு வந்துட்டு இருக்கு. எங்கே இருந்து எங்கேயோ போயிட்டேன்?? அட?? திருப்பாவை எங்கே போச்ச்ச்ச்???
ம்ம் பிடிச்சாச்ச். இங்கே பலியை வாமனன் சம்ஹாரம் செய்யவில்லை. அவனைப் பாதாளத்துக்கு அதிபதியாக்கிச் சிரஞ்சீவியாக வாழ வழி செய்கிறான். அதனால் இங்கே வாமனனை ஓங்கி உலகளந்த உத்தமன்னு ஆண்டாள் சொல்கிறாள். அதோட பகவான் மூன்றடி எடுத்து வைத்ததில் சகலவிதமான ஜீவராசிகளுக்கும் அவரது ஸ்பரிசம் கிடைத்திருக்கிறது. எப்படி பிட்டுக்கு அடிவாங்கிய பரமனின் அடி ஒவ்வொரு ஜீவராசிக்கும் பட்டதோ அப்படியே. அப்பாடி ஒருவழியா விட்ட இடத்தைப் பிடிச்சாச்ச்..
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்= நதிக்கரையில் பாவை நோன்புக்கு என அம்மனைப் பிடித்து வைத்து வழிபடுவார்கள். அந்த அப் பாவைக்கு மலர்கள் சாற்றி வழிபடுவதற்காக நீராடிவிட்டு வரவேண்டும். அதற்காக நாம் நீராடச் செல்வோம் தோழியரே. இந்த அருமையான பாவை நோன்பை நாம் நூற்பதால்,
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து= நாட்டிலே தீமை என்பதே இராமல் அனைத்தும் ஒழிந்து போய் ஒவ்வொரு மாதமும் மூன்று முறை முறையே மழை பெய்து நீர் வளம், சிறந்து, அதன் மூலம் நில வளமும் செழிக்கும்.
ஒவ்வு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள்= செந்நெல் செழுத்து ஓங்கி வளரும், வயலில் பாய்ச்சி இருக்கும் நீரில் குளத்து நீரோ என மயக்கம் கொண்ட மீன்கள் பாய்ந்தோடி மகிழ்ந்து விளையாடும்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப= குவளைப் பூக்களின் மகரந்தத்தில் {போது=மகரந்தம்) வண்ண விசித்திரமான வண்டுகள் தேன் குடிக்க வந்து கண்கள் செருகி
மயக்கத்தில் ஆழ்ந்து கிடக்கும்

தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி =தயங்காமல் வந்து செழிப்பான கறவைப்பசுக்களின் பெருத்த மடியில் இருந்து இரு கைகளாலும் பாலைக் கறக்கக் கறக்க அவையும் வஞ்சனை என்பதே இல்லாமல் வள்ளலைப் போல் குடங்களை நிறைத்துக்கொண்டே இருக்குமாம். ஆகவே என்றும் வற்றாத நிறைந்த செல்வத்தைத் தரும் இந்த விரதத்தை நாம் அனைவரும் கடைப்பிடிக்கலாம் வாருங்கள் பெண்களே.

இதை பட்டத்திரி, கூறுவதை வேறொரு கோணத்தில் பார்க்கலாம். இங்கே ஆண்டாள் கூறி இருப்பது நாடு செழித்து இருப்பது குறித்து. பட்டத்திரியோ, நிலையற்ற செல்வத்தை நாடுவதை விட, பகவான் திருநாமத்தைப் போற்றுவதே நிலையான செல்வம் என்று கூறுகிறார்.

"நம்ராணாம் ஸந்நிதத்தே ஸததமபி புரஸ்தை ரநப்யர்த்திதாந்
அப்யர்த்தாந் காமாநஜஸ்ரம் விதரதி பர்மாநந்த ஸாந்த்ராம் கதிஞ்ச
இத்தம் நிஸ் ஸேஷலப்ப்யோ நிரவதிக பல; பாரிஜாதோ ஹரே த்வம்
க்ஷுத்ரம் தம் சக்ரவாடீ த்ருமம் அபிலஷதி வ்யர்த்த மர்த்தி வ்ரஜோயம்

மக்கள் தங்கள் மனோ ரதங்கள் ஈடேற அதுவேணும் இது வேணும்னு கேட்கிறார்கள்; அதோடு சொர்க்கத்தில் இருக்கும் கற்பக விருக்ஷம் மாதிரி இருந்தால் நல்லதுனு நினைக்கிறார்கள். ஆனால் ஸ்ரீஹரி, நீரோ அந்த கற்பக விருக்ஷத்தை விடவும் உயர்ந்தவர் அன்றோ. உம்மை வணங்கியவர்களுக்கு அள்ளி அள்ளிக் கருணை என்னும் செல்வத்தை வாரி வழங்கும் வள்ளல் அன்றோ நீர். வேண்டியதற்கு மேல் பரம ஆநந்தத்தையும், முக்தியையும் கொடுக்கும் வள்லல் நீர். மேலும் உம்மை அனைவரும் எளிதில் அடைய முடியும். எல்லையற்ற பலன்களை அள்ளித்தருபவர் நீர். இங்கே செல்வமாக அவர் குறிப்பிடுவது பகவானையே. மேலும் பகவான் என்ற சொல்லுக்கு உள்ள விசேஷ குணங்களாக, ஐச்வர்யம், தேஜஸ், கீர்த்தி, லக்ஷ்மீகரம், ஞாநம், வைராக்யம் ஆகிய ஆறுகுணங்களும் நிரம்பியவர்கள் எனப்பொருள்.

2 comments:

  1. interesting indeed.
    subbu rathinam
    http://movieraghas.blogspot.com

    ReplyDelete
  2. வாமனனின் கதையை நீங்கள் சொன்ன விதத்தை ரசித்தேன் :)

    பகவானே கிடைக்கையில் மற்றதெல்லாம் என்னத்துக்கு என்பது மிகச்சரி.

    ReplyDelete