எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, December 27, 2010

பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தாரே!

 
Posted by Picasa
சிதம்பரம் தேரோட்டத்துக்குத் தயாராகக் காத்திருக்கும் தேர். தேரில் நடராஜர் அமர்ந்தபின்னர் படம் எடுக்கத் தடை. இது முதல்நாளே எடுத்தது. சென்ற திங்கள் 20-ம்தேதி ஆருத்ரா தரிசனவிழாவுக்கான ஏற்பாடுகளில் சிதம்பரம் மூழ்கி இருந்தது. நாங்கள் மதியமே எங்கள் தீக்ஷிதர் வீட்டிற்குச் சென்றோம். ஆருத்ரா தரிசனம் ஈசன் தனது எல்லையில்லாத் தாண்டவத்தை தாருகாவனத்து ரிஷிகள் அறியவும், பின்னர் உமைக்கு அறைக்குள்ளேயும் ஆடிக்காட்டியது. ஆடிக்கொண்டே அவன் சிதம்பரம் வந்திருக்கிறான். அந்த அதி அற்புதக் காட்சி தான் ஆருத்ரா தரிசனம். தாருகாவனத்து ரிஷிகளின் கர்வத்தை அடக்க ஈசன் பிக்ஷாடனராக வந்ததும், அதன் பின்னர் நடந்ததும் அறிந்தவையே.பிட்சாடனர் பற்றிய புராணக்கதைக்கு இங்கே பார்க்கவும்.

அந்த பிக்ஷாடனக் கோலத்தில் ஈசன் அன்று கிளம்பிக்கொண்டிருந்தான். சாதாரணப் பிச்சைக்காரனா என்ன?? உலகத்துக்கே ராஜாவாச்சே?? அதனால் நாதசுரக்காரர்கள் மல்லாரி வாசிக்க, தங்கப் பல்லக்கில், தங்கத் திருவோட்டை ஏந்திக்கொண்டு குறுநகை விளங்க, எதுக்கு அந்தச் சிரிப்பு?? உங்களை எல்லாம் வாழ வைக்கும் பிச்சையே நான் போடறது தானே? இதிலே எனக்குப் பிச்சைபோட வந்துட்டீங்களோனு கேட்கும் சிரிப்பு. சிரிப்பு முகத்தில் விளங்க சிதம்பரம் வீதிகளில்கொட்டும் மழையில் பிச்சை எடுக்கக் கிளம்பினான் ஐயன். அவனுடைய திருவோட்டில் அன்று பிச்சை இடும் பாக்கியமும் கிடைத்தது. பிச்சை வாங்கிக்கொண்டு தான் மறுநாள் நர்த்தன சுந்தர நடராஜாவாக வீதிவலம் அழகாய் அலங்கரிக்கப் பட்ட தேரில் வரப் போகிறான். பிக்ஷாடனர் வீதி வலம் வந்து உள்ளே சென்றதும், ராஜா ஊர்வலம் வரும் முன்னர் ஊர் நிலவரத்தையும், பாதுகாப்பையும் பரிசோதிக்கச் சந்திரசேகரர் நடு இரவில் ஒரு அவசரப் பார்வை பார்த்து எல்லாம் சரியாய் இருக்கா? காலம்பர ராஜா வந்து தேரில் உலா வரப் பிரச்னை இல்லையேனு பார்த்துட்டுப் போகிறார். அதுக்கு அப்புறமாய் மறுநாள் அதிகாலையிலே சித்சபையில் இருக்கும் நடராஜா தீவட்டிகள் முழு வீச்சில் ஒளி வீசிப் பிரகாசிக்க,கொம்பு, எக்காளம், பேரிகை, சங்கு, பறை, மேளம், கொட்டு, உடுக்கை, நாதஸ்வரம் அனைத்தும் முழங்க ஆடிக்கொண்டே சிவகாமி பின் தொடர கீழச் சந்நிதியின் விட்ட வாசல் வழியாக வெளியேறி ஆடிக்கொண்டே சென்று தேரில் அமர்கிறார்.

பித்துப் பிடித்த கூட்டம் தன்னை மறந்து ஆடுகிறது. அந்தக் காட்சிகளை எல்லாம் படம் எடுக்க முடியலை. ஏனெனில் நடராஜாவுக்கு எதிரே அவர்கள் ஆடுகிறார்கள். அவர்களைப் படம் எடுத்தால் நடராஜாவும் சேர்ந்து வருவார். அதோடு மாணிக்கவாசகருக்கு நடந்த, நடக்கும், நடந்து கொண்டிருக்கும் சிறப்பு வழிபாடுகளும் இதில் அடங்கியது. தேவாரம் ஓதும் ஓதுவார்கள் முன்னே தேவாரம், குறிப்பாய் மாணிக்க வாசகரின் திருவாசகப் பாடல்கள், சேந்தனாரின் பல்லாண்டு, திருஞாநசம்பந்தர், திருநாவுக்கரசர், சேக்கிழாரின் பெரியபுராணப்பாடல்களை இடைவிடாமல் ஒலிபெருக்கியில் பாடிக்கொண்டே இருக்கிறார்கள். அன்றைய கட்டளை எவருடையதோ அவர்கள் முன்னிலையில் நிறுத்தப் பட்டு எந்த விஐபிக்கும் முன்னுரிமை இல்லாமல் அனைத்துத் தரப்பு மக்களும் பார்க்க ஏதுவாக நடந்த இந்த மாபெரும் விழாவின் வர்ணனை தொடரும்.

5 comments:

  1. வர்ணனை நன்றாக இருக்கிறது .,தொடருங்கள் கீதாம்மா !

    ReplyDelete
  2. Good Post.
    Please visit my blog at
    http://srinivasgopalan.blogspot.com

    I have started a series on Soundarya Lahiri. Please go over it and give feedback.

    Srinivas Gopalan
    NJ

    ReplyDelete
  3. வாங்க ப்ரியா, வர வர யாருக்குமே படிக்க நேரம் இருக்கிறதில்லை போல! :( போகட்டும், ஒருத்தராவது படிக்கிறது ஆறுதல்,

    அட, கீழே இன்னொருத்தரும் வந்திருக்கார். புது வரவு! :)

    ReplyDelete
  4. ஸ்ரீநிவாச கோபாலன், உங்க வலைப்பக்கம் வந்து பார்த்துட்டேன். செளந்தர்ய லஹரி நன்றாக இருக்கிறது. வாழ்த்துகள்.

    ம்ம்ம்ம்?? முதல்லே நம்ம சிநேகிதர் பிள்ளையாரைக் கவனிச்சிருக்கலாமோ?? இது என் தனிப்பட்ட கருத்து. :D

    ReplyDelete
  5. வர்ணனை நன்றாக இருக்கிறது,தொடருங்கள்

    ReplyDelete