எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, November 09, 2013

அயோத்தி செல்கையில் எழுதிய அவசரப் பதிவு! தீபாவளி நினைவுகள்.

தீபாவளி நினைவுகள் - கீதா சாம்பசிவம்

கீதா சாம்பசிவம்

 சின்ன வயசில் தீபாவளி சமயம் அநேகமாய் ஜுரம் வந்து படுத்திருப்பேன். ஆகவே ரொம்பச் சொல்ல ஒண்ணும் இல்லைனே சொல்லணும்.  ஆனால் அப்போதிருந்த உற்சாகம், பட்டாசு வெடிக்கும் ஆர்வம் இப்போதைய குழந்தைகளிடம் இல்லை.  ஆங்காங்கே கொஞ்சம் கொஞ்சம் இருந்தாலும் அப்போதைய தீபாவளி நினைவுகள் நினைத்தாலே இனிக்கும்வகை தான். தீபாவளி குறித்த பேச்சு எல்லாம் நவராத்திரிக்கே ஆரம்பிக்கும். எனக்குத் துணி எடுக்கும்முன்னர் அப்பா ஒரு முறை தெரிஞ்ச ஜவுளிக் கடைகளை எல்லாம் சுத்தி வருவார்.  அந்த வருஷம் லேட்டஸ்ட் என்னனு தெரிஞ்சுப்பார்.எல்லாத்துக்கும் மேலே அதை வாங்கும் அளவுக்குப் பணம் வேணுமே, அதுக்காக மூணு மாதங்கள் முன்பிருந்தே தயார் பண்ணிப்பார். தீபாவளிக்கு பக்ஷணங்கள் நிறையவே செய்வாங்க.  அதுக்காகவும் சாமான்கள் சேகரம் பண்ணப்படும்.

அண்ணாவுக்கும், தம்பிக்கும் அரை டிரவுசர் எனப்படும் உடையும், மேல் சட்டையும் துணி வாங்கித்தைக்கக் கொடுப்பாங்க.  அதிலே தான் அப்பா காமெடி பண்ணி இருப்பார். வளரும் பசங்கனு சொல்லி தையற்காரரிடம் அளவு எடுக்கிறச்சே தாராளமாத் தைங்கனு சொல்லிடுவார்.   அரை மீட்டர் துணி போதும்ங்கற இடத்திலே ஒரு மீட்டர் வாங்கி இருப்பார்.  ஆகவே அது அண்ணா மாதிரி இரண்டு பையர்கள் போட்டுக்கிறாப்போல் இருக்கும். தம்பிக்கும் அப்படித் தான். இந்த தீபாவளிக்குத் தைச்ச டிரவுசரை அவங்க அதுக்கப்புறமா இரண்டு வருஷம் கழிச்சுப் போட்டால் கூடப் பெரிசாத் தான் இருக்கும். அவங்க போட்டுக்கவே முடியாது. ஆனால் அப்பாவுக்கோ பிள்ளைங்க ரெண்டு பேரும் அசுர வளர்ச்சி என நினைச்சுப்பார். அடுத்த தீபாவளிக்கும் இதே கதை தொடரும். அண்ணாவுக்குத் தைச்சதெல்லாம் தம்பி வளர்ந்து போட்டுக்க ஆரம்பிச்சான்னா பாருங்களேன்.

அடுத்துப் பட்டாசு.  அதுவும் குறிப்பிட்ட கடையிலே தான் வாங்குவார். எவ்வளவுக்குனு நினைக்கிறீங்க? இரண்டே ரூபாய்க்கு. அதிலேயே லக்ஷ்மி வெடி, குருவிவெடி, சீனிச்சரம், ஓலைப் பட்டாசு, கொம்பு வாணம், புஸ் வாணம், ஏரோப்ளேன், அணுகுண்டு, பென்சில் மத்தாப்பு, சாட்டை, கம்பி மத்தாப்பு, தீப்பெட்டி மத்தாப்பு எல்லாமும் வரும். அதை நான்கு பாகமாய்ப்போடுவார் அப்பா.  நான் பெண் குழந்தை என்பதால் பட்டாசு எல்லாம் கிடையாதுனு சொல்லிப் பார்ப்பார்.  ஆனால் நான் விட மாட்டேனே! எனக்கும் வேணும்னு கேட்டு வாங்கி வைச்சுப்பேன். கடைசியிலே உடம்பாப் படுத்துப்பேனா, எல்லாத்தையும் அண்ணா, தம்பிக்குக் கொடுத்துடுனு அப்பா சொல்லுவார்.

கடைசியிலே அவங்களோடதையும் சேர்த்து அப்பாவே விட்டுடுவார். தீபாவளிக்கு ஒரு வாரம் முன்னாடியே இருந்து அம்மா பக்ஷணம் பண்ண ஆரம்பிப்பாங்க. மைசூர்ப்பாகு நிச்சயமா இருக்கும். அல்வா நிச்சயமா இருக்கும். மற்ற ஸ்வீட் அம்மாவுக்கு என்ன முடியுமோ அது. மிக்சர் நிச்சயமா இருக்கும். அதுக்குப்  பண்ணும்போதே தேன்குழல், ஓமப்பொடினு பண்ணுவாங்க.  அப்புறமா உக்காரை நிச்சயமா இருக்கும். இது சிலர் அரிசியிலெ செய்யறாங்க. எங்க வீட்டிலே து.பருப்பு, க,பருப்பு வறுத்து ஊற வைச்சு அரைச்சுச் செய்வாங்க.  அது பற்றிப் பின்னர் எழுதறேன்.  தீபாவளிக்கு எனக்கு உடம்பு சரியில்லாமல் போகும் சமயங்களில் எல்லாம் எல்லா பக்ஷணங்களும் கார்த்திகைக்குத் திரும்பப் பண்ண ஆரம்பிச்சது கடைசியில் அது ஒரு வழக்கமாவே மாறிப் போச்சு! :))))

தீபாவளிக்குக் காலம்பர மூணரை மணிக்கே அம்மா எழுப்புவாங்க.  எழுந்துக்கத் தான் சோம்பலா இருக்கும். இந்த அம்மாவெல்லாம் தூங்கவே மாட்டாங்க  போலனு  நினைச்சுப்பேன். முதல்லே நான் எழுந்து குளிச்சாத் தான் அப்புறமா அண்ணா, தம்பி எல்லாம் குளிக்கலாம்.  அந்த நேரத்துக்கே அம்மா குளிச்சிருக்கிறதைப் பார்த்தா ஆச்சரியமா இருக்கும். அப்பா அமாவாசையும் சேர்ந்து வந்தால் குளிச்சிருக்க மாட்டார்.  ஏன்னா, முதல்லெ ஒரு தரம் எண்ணெய் தேய்ச்சுக் குளிச்சுட்டா அப்புறமா  அமாவாசைத் தர்ப்பணத்துக்கு மறுபடி குளிக்கணும். ஆகவே பண்டிகை தனித்து வந்தால் எண்ணெய்க் குளியல். எல்லாம் முடிஞ்சு மூணு பேரும் குளிச்சுட்டு வந்ததும், அப்பா தன் கையாலே துணி எடுத்து தருவார்.  அதுக்குள்ளே அம்மா சாமிக்குக் கோலம் போட்டு விளக்கு ஏத்தி, பக்ஷணம், துணி, பட்டாசு எல்லாம் எடுத்து வைச்சிருப்பாங்க. அப்பா குளிச்சுட்டா நிவேதனம் பண்ணுவார்.  இல்லைனா அம்மாவை விட்டு செய்ய சொல்லுவார். எல்லாரும் புதுத் துணி உடுத்தி சந்தோஷமாப் பட்டாசு வெடிக்கப் போவோம்.

அதுக்கு அப்புறமா உள்ளூரிலேயே இருக்கும் பெரியப்பா, பெரியம்மா வீடுகள், தாத்தா வீடு ஆகிய வீடுகளுக்குப் போயிட்டு அவங்க கிட்டெ எல்லாம் ஆசிர்வாதம் வாங்கிட்டு வருவோம். பணமோ, துணியோ, பக்ஷணம், பட்டாசு என்று அது கலெக்‌ஷன் தனி.

இப்போதோ குழந்தைங்க ஒரு பக்கம், நாங்க ஒரு பக்கம்.  2011 ஆம் வருஷம் மட்டும் எங்க பையர் வீட்டிலே யு.எஸ்ஸிலே கொண்டாடினோம்.  குழந்தைங்களோட இருக்கிற சந்தோஷம் இருந்தாலும் இந்தியாவிலே பண்டிகை கொண்டாடிய சந்தோஷம் என்னமோ வரலை.  இப்போ நவராத்திரி என்றால் கூட கொலு வைச்சுட்டு நான் மட்டுமே தன்னந்தனியா உட்கார்ந்திருக்கிறாப்போல் இருக்கு.  அதுவும் சென்னையில் யாருமே வர மாட்ட்டாங்க. ஸ்ரீரங்கத்தில் பண்டிகை கொஞ்சம் பரவாயில்லைனு தோணுது.  என்றாலும் பக்ஷணத் தொழிற்சாலை மாதிரி பக்ஷணங்கள், புடைவைக் கடை போலப் புடைவைகள் என வாங்கிக் கொண்டாடிய காலம் எல்லாம் போய் இப்போ நாம் இருவர், நமக்கு நாம் இருவர் மட்டுமேனு தீபாவளி கொண்டாடிட்டு இருக்கோம்.

கல்யாணம் ஆனப்புறமா தீபாவளி என்பதும் கிட்டத்தட்ட ஒரு வாரம் முன்னரே பக்ஷணத் தொழிற்சாலை ஆரம்பிப்பதோடு ஆரம்பிக்கும். நம்ம ரங்க்ஸுக்குக் குடும்பம் மொத்தத்துக்கும் துணி எடுக்க வேண்டி இருப்பதால் தீபாவளிக்கு இரண்டு மாசம் முன்னாலிருந்தே சிக்கன நடவடிக்கைகளை ஆரம்பிப்பார். பக்ஷணத் தொழிற்சாலைக்கு வேண்டிய சாமான்களை சேகரம் செய்வது என் பொறுப்பு.  அக்கம்பக்கம் அனைவரின் ரேஷன் கார்டுகளையும் வாங்கி தீபாவளிக்குப் போடும் சர்க்கரை (அப்போல்லாம் எக்ஸ்ட்ரா சர்க்கரை போடுவாங்க) வாங்கிச் சேகரம் செய்வேன். காலை எழுந்து வீட்டில் சமையல், டிபன் வேலை முடித்து ஒன்பது மணிக்கெல்லாம் ரேஷனுக்கும் போய் சாமான் வாங்கி வந்து, பின்னர் வீட்டுக்கு வந்து மாமியார், மாமனாருக்குச் சாப்பாடுபோட்டு நானும் சாப்பிட்டுவிட்டு மறுபடி என்னோட கலெக்‌ஷன் வேலைக்குக் கிளம்புவேன். அதை முடிச்சுட்டு இரண்டு மணிக்கு வருவேன்.  கொஞ்ச நேரம் ஓய்வு. படிப்பு. ஹிஹிஹி, அப்போப் படிச்சுட்டும் இருந்தோமுல்ல! :))))

அது முடிஞ்சதும் மாலை டிஃபன், காஃபி, இரவு உணவுக்கான ஏற்பாடுகள்.  என்னிடம் படிக்கும் குழந்தைங்க, என் குழந்தைங்க எல்லாருக்கும் பாடம் சொல்லிக் கொடுத்தல்னு இருக்கும்.  இதுக்கு நடுவிலே பக்ஷணமும் பண்ணி இருக்கேன்.  இப்போ??? நினைச்சாலே எப்படிச் செய்தோம்னு ஆச்சரியமாத் தான் இருக்கு.  விஜயதசமி அன்னிக்கு நாங்க ரெண்டு பேரும் போய் எல்லாருக்கும் துணி எடுப்போம்.  அநேகமாய் கோ ஆப்டெக்ஸ்;  ஒரு மாறுதலுக்கு உள்ளூர் துணிக்கடையில் கடனுக்கு.  அடுத்த தீபாவளி வரை வரும். :)))) என்றாலும் தீபாவளி உற்சாகமாகவே இருந்தது.  தொலைக்காட்சி வந்தப்புறம் தீபாவளி சிறப்புப் படமும், சிறப்பு நாடகமும் பார்க்க வீட்டில் கூட்டம் தாங்காது. அவரவர் வீட்டு பக்ஷணப் பரிமாற்றங்களோடு பார்த்த நாட்கள் அவை.

காலம் மாறியது என்பதோடு அல்லாமல் உறவுகள் ஒரு இடம் நாம் ஒரு இடம் என்றெல்லாம் ஆகும்னு நினைச்சுப் பார்க்கவில்லை. இதையும் ஏற்று கொண்டு வாழப் பழகியாச்சு.   எல்லாருக்கும் தீபாவளி வாழ்த்துகள்.


பி.கு. மின் தமிழ்க் குழுமத்துக்காக அவசரக் கோலமாய் அள்ளித் தெளிச்ச பதிவு இது. குற்றம், குறை இருப்பின் மன்னிக்கவும்.

ஹிஹிஹி, அங்கே போணியே ஆகலை.  இங்கேயாச்சும் யாரானும் போணி பண்ணுங்கப்பா! :))))))

13 comments:

  1. அந்தக் காலம் போல இந்தக் காலம் இல்லை. இந்தக் காலம் போல் இனி வரும்காலம் இருக்கப் போவதில்லை. நீங்கள் 2 ரூபாய்க்கு பட்டாசு வாங்கினால் எங்கள் அப்பா 12 ரூபாய்க்கும் 15 ரூபாய்க்கும் வாங்குவார். 4 பேருக்குப் பங்கு! ஒருமுறை 25 ரூபாய்க்கு வாங்கியது ரெகார்ட் ப்ரேக்!

    தீபாவளிக்கு முதல்நாள் எங்கள் தாத்தா திவசம். அது முடிந்துதான் பட்சணம். நானும் அம்மாவும்தான் பட்சணம் செய்வோம். அப்படிக் கற்றுக் கொண்டதுதான்!

    ReplyDelete
  2. ஹும்! அப்பல்லாம் கையில் காசு அதிகம் இல்லே! ஆனா உற்சாகமும் மன நிறைவும் இருந்தது. இப்ப காசு ஓரளவு இருக்கு. பழைய உற்சாகமோ மன நிறைவோ இருக்கா மாதிரி தோணலை!

    ReplyDelete
  3. தீபாவளி மலரும் நினைவுகள் அருமை.

    எங்களூக்கும்,நவராத்திரி நட்புகளுடன். தீபாவளி உறவுகளுடன்.

    மற்ற பண்டிகைகள் இருவர் தான்.
    இந்த முறை மகன் குடும்பத்துடன் தீபாவளி பண்டிகை. மாமியார், மாமானார் மற்றும் பெரியவர்களிடம் ஸ்கைப்பில் பேசி ஆசி வாங்கி கொண்டோம்.

    காலத்துக்கு ஏற்ற பண்டிகை கொண்டாட மனது பக்குவப்பட்டுவிட்டது உண்மைதான்.

    ReplyDelete
  4. உக்காரை நிச்சயமா இருக்கும். இது சிலர் அரிசியிலெ செய்யறாங்க. எங்க வீட்டிலே து.பருப்பு, க,பருப்பு வறுத்து ஊற வைச்சு அரைச்சுச் செய்வாங்க//
    திருநெல்வேலிபக்கம்(எங்கள் பக்கம்)
    தீபாவளிக்கு எல்லோர் வீட்டிலும் உக்காகரை உண்டு. எங்கள் வீட்டில் இனிப்பு உக்காரைக்கு கடலை பருப்பு மட்டும். கார உக்காரைக்கு துவரம் பருப்பு, அரிசி சேர்த்து செய்வார்கள்.

    ReplyDelete
  5. கீதா,எளிமையும் மகிழ்ச்சியும் நிறைந்த நாட்கள்.
    மறக்க முடியுமா. அதுவும் மதுரை தீபாவளிக்கு ஸ்பெஷல் மதிப்பு. சித்தப்பா வீடு,தாத்தா பாட்டி வீடு ,அத்தை வீடு என்று எல்லோரும் இருந்த காலம்.
    திரட்டிப்பால்,மைசூர் பாகு,உக்காரை,தேங்காய் பர்ஃபி,ஓமப்பொடி எல்லாம் அம்மா இரண்டு நாட்களில் செய்துவிடுவார்.

    இப்போது வரும் தீபாவளிகளில் நண்பர்களின் அன்பே முக்கியமாகிவிடுகிறது. குழந்தைகளின் கால வேறுபாட்டால்
    ஒரு நாளைக்கு மூன்று தீபாவளி வாழ்த்துகள் மாற்றி மாற்றி சொல்ல வேண்டி வரும்:)
    பரவாயில்லை. இதுவும் ஒரு காலம்.

    ReplyDelete
  6. வாங்க ஶ்ரீராம், என் தம்பியும் உங்களைப் போலத் தான். அம்மாவோட கூடக் கூடச் செய்து பல சமையல்களைக் கற்றுக் கொண்டான். :))))

    ReplyDelete
  7. வாங்க வா.தி. திடீர், திடீர்னு வந்து ஆச்சரியத்தில் ஆழ்த்தறீங்க! :P:P:P:P மயக்கம் போட்டு விழுந்துடப்போறேன். :))))

    ஆமாம் நீங்க சொல்றாப்போல் காசு இருந்தால் சந்தோஷமோ, நிம்மதியோ, மன நிறைவோ இல்லை தான். :(

    ReplyDelete
  8. வாங்க கோமதி அரசு, எங்களுக்கு எல்லாப் பண்டிகைகளுமே நாம் இருவர் தான். :))))) நவராத்திரியிலானும் அக்கம்பக்கம் வருவாங்க.

    ReplyDelete
  9. @கோமதி அரசு, கார உக்காரை தெரியாது. செய்முறை சொல்லுங்க, இந்தியா வந்தப்புறமா.

    ReplyDelete
  10. வாங்க வல்லி, திரட்டுப் பால் எப்போதானும் செய்வாங்க. அதுக்கே என்னோட பெரியம்மா, (அப்பாவின் மன்னி) கோவிச்சுப்பாங்க. எதுக்குடா அநாவசியச் செலவுனு! :)))) இப்போல்லாம் அப்படிச் சொல்லவும் முடியாது. திரட்டுப் பாலும் பாலை வாங்கிக் காய்ச்சிச் செய்வதில்லை. கல்யாணங்களிலேயே ஆவின் திரட்டுப் பால் தான். :))))

    ReplyDelete
  11. இனிய நினைவலைகளை அழகாக கோர்வையாக ஒன்று விடாமல் சூப்பராகச் சொல்லி இருக்கிறீர்கள்.

    படித்து மிகவும் ரஸித்தேன்.

    ஆம் அந்த நம் காலமெல்லாம் மெதுவாக மறைந்து போய்க்கொண்டே இருக்கிறது.

    காலமும் கலாச்சாரமும் மாறிக்கொண்டே வருகின்றன.

    எல்லா வாழ்த்துகளும் விசாரிப்புகளும் ஃபோன் மூலமும் இ.மெயில் மூலமும் என்றாகி விட்டன.

    ReplyDelete
  12. என் இளமைக்காலம் திரும்ப வந்த மாதிரி,இருந்ததும்மா...அப்போல்லாம் ஒரு தீபாவளிக்கு கிராண்டா ஒண்ணு சாதாரணமா ஒண்ணு எடுத்துத் தருவாங்க..மத்த பண்டிகைகளுக்கு துணி எடுப்பது அபூர்வம்..அதனால தீபாவளிக்கு டிரஸ் எடுக்கறதே ஒரு திருவிழா மாதிரி ஆகும். எடுத்த துணியை வீட்டுக்கு வர்ற உறவுகள் கிட்ட கட்டாயம் காட்டணும். இல்லாட்டி, 'தீபாவளிக்கு எடுத்த துணியெல்லாம் காட்டவேயில்லையே'ன்னு கேட்டு, பாப்பாங்க.. சித்திப்பாட்டி, அத்தைப்பாட்டி, அம்மங்காப் பாட்டி அப்படின்னு சகல உறவுகளும் கூடியிருந்த காலம் அது..சண்டைகள் வரும்னாலும் அது தாண்டிய பிரியம் தன்னிகரில்லாதது. இப்போ, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு இருக்கற முக்கியத்துவம் உறவுகளுக்கு இல்லைன்னு தோணுது..

    இப்ப பட்டாசு விலையெல்லாம் பாத்த போது பக்குனு ஆயிடுச்சு.. ஒரு மத்தாப்புப் பெட்டி நூறு ரூபாய்!!!..

    இப்போ வேணுங்கற டிரஸ் எடுக்க முடியுது.. பக்ஷணம் வேணும்னா பண்ணலாம். இல்லாட்டி இருக்கவே இருக்கு ஸ்வீட் ஸ்டால்.. ஆனா அப்போ இருந்த சந்தோஷம், உற்சாகம்?!!!..

    இங்கே பெங்களூரிலே பரவாயில்லை.. எல்லாத்துக்கும் சேர்ந்துக்கறாங்க.. இன்னும் தமிழ்நாடு அளவு பாதிப்பு வரல்லைன்னே நினைக்கிறேன். உறவுகளுக்கு நிறைய முக்கியத்துவம் தர்றாங்க..

    இத்தனை வேலைகளுக்கு நடுவில் அப்போ பக்ஷணமும் செய்தேன்னு நீங்க சொல்றதைப் படிக்கும் போதே பிரமிப்பா இருக்கும்மா.. இந்த வருட தீபாவளிக்கு உங்க ஆசியும் கிடைச்சதே பெரிய பரிசு எனக்கு..
    பகிர்வுக்கு ரொம்ப நன்றி..

    ReplyDelete
  13. இனிய நினைவுகள். அப்பா நாலு மணிக்கே எழுப்பி விடுவார் - இப்போவும் தொடர்கிறது - நான் தான் எழுந்திருப்பதில்லை! :)

    பன்னிரண்டு மணிக்கு எழுந்து ஒரு சர வெடி வைடா என்று சொல்வார். சில வருடங்கள் வைத்திருக்கிறேன்!

    தீபாவளி பக்ஷணங்கள் சாப்பிடுவது மட்டுமே நமக்கு வேலை - செய்யும்போது எங்களை அனுமதித்ததில்லை - “கண்ணு பட்டுடும்டா!” என்று அடக்கி விடுவார் அம்மா!

    ReplyDelete