எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, May 11, 2014

அன்னையராய் ஆவதற்கு மாதவம் செய்திருக்க வேண்டும்!

இன்று அகில உலக அன்னையர் தினம் என கூகிள் சொல்கிறது.  எங்கு பார்த்தாலும் அன்னையர் தின வாழ்த்துகள். சிறப்புச் செய்திகள்.  எல்லா தினங்களையும் போலவே இன்றைய தினமும் இப்படியான செய்திகளில் ஆரம்பித்து முடிந்து நாளை மற்றொரு நாளாய்ப் பிறந்துவிடும்.  பின்னர் அடுத்த அன்னையர் தினத்தில் தான் இந்த தினத்தை நினைப்போம். இல்லையா? எனக்கு இந்த தினங்கள் கொண்டாடுவதில் ஆர்வமும் இல்லை; இதில் உள்ள சிறப்புப் புரியவும் இல்லை.  ஆனால் தாய் என்பதை மறக்க இயலுமா?

ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு பிரசவமும் மறுபிறப்புத் தான். அதனால் தான் இப்போதைய பெண்கள் வலியில்லாப் பிரசவமாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்களோ?  தெரியலை!  போகட்டும்.  பிரசவம் அவங்க சொந்த விஷயம் என்பதால் நாம் அவங்க விருப்பத்திலே தலையிட முடியாது. ஆனால் குழந்தை வளர்ப்பு?  அது சமூகத்தைப் பாதிக்காமல் இருக்கணுமே!  இன்றைய நாட்களில் குழந்தை வளர்ப்பில் கவனம் மிகத் தேவையாய் இருக்கிறது. ஏனெனில் சுற்றுச் சூழல் மாசு என்பது இயற்கையில் மட்டுமில்லாமல் மனித மனங்களில் கூட மாசு அடைந்திருக்கிறது.  பெண்கள் எங்கே பார்த்தாலும் தவறான உறவுகளில் ஈடுபடுதல், திருமணம் ஆனாலும் வேறு ஆண்களின் வசப்படுதல், பெண்களைத் துன்புறுத்தி இவற்றில் இன்பம் காணும் ஆண்கள், கட்டாயப்படுத்தப்படும் இளம் சிறுமிகள், உயிர் இழப்புகள், பலரால் பாலியல் உறவில் கட்டாயமாய் ஈடுபடுத்தப்படும் இளம்பெண்கள், சிறுமிகள், குழந்தைகள் என தினசரிகளில் தினம் ஒன்றாகச் செய்திகள் வருகின்றன.  இதற்கெல்லாம் என்ன காரணம்?

அடிப்படைக் கலாசாரமே விரிசல் கண்டு அஸ்திவாரமே ஆட்டம் காண ஆரம்பித்திருப்பது தான்.  நேற்றைய தினசரியில் ஒரு செய்தி படித்தேன்.  ஒரு எஃப்.எம். ரேடியோவின் ரேடியோ ஜாக்கி ஒருவர்.  35 இல் இருந்து 40 வயதுக்குள்ளாக.  திருமணம் ஆகிக் குழந்தையும் பெற்றவர்.  இவர் ரேடியோவில் பேசும்போது இவர் குரலில் தெரிந்த கவர்ச்சியான இனிமையில் மயங்கிய ஒரு சிறுமி (16 வயதுக்கு உட்பட்டவள்) பள்ளி மாணவி, தொடர்ந்து இவரிடம் பேசி வந்திருக்கிறாள்.  தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பெண் பின்னர் திடீரென ஒரு நாள் அந்த அலுவலகத்துக்கே வந்துவிட்டாள்.  வந்தவள் அந்த ரேடியோ ஜாக்கியிடம் தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி இருக்கிறாள்.  அந்தப் பெண்ணோ 16 வயதுக்கு உட்பட்டவள்.  அதோடு ரேடியோ ஜாக்கியோ திருமணம் ஆனவர்.  அவர் தொழிலை அவர் செய்திருக்கிறார்.  நிலைமை விபரீதம் ஆகத் தன் மனைவியையும், குழந்தையையும் வீட்டிலிருந்து வரவழைத்து அந்தப் பெண்ணிடம் காட்டி தான் திருமணம் ஆனவன் என்றும் சொல்லி இருக்கிறார்.

அந்தப் பெண் அதற்கும் அசையாமல் போகவே அந்த அலுவலகத்தினர் மனநல மருத்துவர் ஒருவரை வரவழைத்து அந்தப் பெண்ணிடம் பேசியதில் வீட்டில் தாய் இல்லாமல் வளர்ந்த அந்தப் பெண்ணுக்குத் தந்தையின் போக்குப் பிடிக்காமல் இப்படி ஆறுதல் தேடிக் கொண்டதாகத் தெரிய வந்திருக்கிறது.  பின்னர் அந்தப் பெண்ணிடம் பேசி அவளுக்குப் புரிய வைத்து வீட்டில் கொண்டு சேர்த்திருக்கின்றனர்.  இதனால் ரேடியோ ஜாக்கியின் குடும்பத்தில் குழப்பம் வரவில்லை என்றாலும் அடிப்படை சரியில்லை என்பது தெரிகிறதல்லவா?  உணவுப் பழக்கத்திலிருந்து எல்லாவற்றிலும் இப்போது மாறி வருகிறது.  மெல்ல, மெல்லப் பாரம்பரிய உணவுகள் மாறி வருகின்றன.  கிராமங்களில் கூட கலாசாரம் மாறித் தான் வருகிறது.  மேல்நாட்டுக் கலாசாரத்தைக் கடைப்பிடிப்பது தான்  நாகரிகம் என்னும் போக்கும், எண்ணமும் பரவி வருகிறது.

எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவசப் படுவது, திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்களில் தவறான உறவை நியாயப்படுத்துதல், பாடி ஸ்ப்ரே அடித்துக் கொண்டால் திருமணம் ஆன பெண்கள் கூட ஆண்களிடம் மயங்குவார்கள் எனக் காட்டுவது, பல்வேறு வகையான முரண்பாடுகள் உள்ள சமூகம் என இருப்பதால் பெண்கள் தங்களுக்குத் தோன்றியதைத் தாங்கள் செய்யலாம் என நீனைக்கின்றனரோ!  அதோடு பொருளாதார சுதந்திரம் என்பதும் பெரும்பாலான பெண்களுக்குக் கிடைத்திருக்கிறது என்றே சொல்லலாம்.  விதிவிலக்கான பெண்கள் இருக்கலாம்.  ஆனாலும் பெண்கள் தங்களுக்குத் தோன்றியபடி எல்லாம் நடந்து கொண்டால் அது நிச்சயம் சமூகத்தைப் பாதிக்கும்.

ஆகவே குழந்தை வளர்ப்பில் கண்டிப்புக் காட்டுங்கள் அன்னையரே!  உங்கள் விருப்பத்தைக் குழந்தையிடம் திணிக்காத அதே சமயம் குழந்தையின் நியாயமான ஆசைகளை நிறைவேற்றுங்கள்.  உங்கள் குழந்தை தான் நாளைய சமூகம் என்பதை மறவாதீர்கள்.  நம் நாட்டுக் கலாசாரம், உணவு முறை, பின்னணி, உறவு முறை ஆகியவற்றை இயன்ற அளவு குழந்தைக்கு அறிமுகப்படுத்துங்கள்.  மேல்நாட்டு உணவு முறை தேவை இல்லை என்றே சொல்வேன்.  ஆனால் வேறு வழி இல்லை எனில் குழந்தைக்கு அது செய்யும் நற்செயல்களுக்கு ஒரு பரிசாக என்றோ ஓர் நாள் வாங்கிக் கொடுப்பதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.  நம் நாட்டி சீதோஷ்ண நிலைக்கு ஏற்ற உணவைத் தான் நாம் சாப்பிட வேண்டும்.  அதிகமான சீஸ் நிறைந்த பிட்சாவை இந்த சீதோஷ்ணத்தில் நம் குழந்தைகளாலோ, நம்மாலோ செரிக்க இயலாது.  உடல் நலத்திற்கும் கேடு.  சிறு வயதிலேயே குண்டாகிவிடுவார்கள்.  உங்கள் குழந்தைக்கு நீங்கள் கொடுக்கும் செல்லமே அவர்களுக்கு முக்கிய எதிரி என்பதை மறவாதீர்கள்.  நம் நாட்டு உணவு முறை, உடைமுறை, நடைமுறை ஆகியவற்றைப் பழக்கப்படுத்துங்கள். நல்லதொரு குடிமகனாக, குடிமகளாக உங்கள் குழந்தை வளர வாழ்த்துகள்.


எல்லாவற்றிலும் இந்தியனாகவே இருப்போம்.  மறைந்து வரும் கலாசாரத்தை மீட்டெடுப்போம்.

அனைத்து அன்னையருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்.


படத்துக்கு நன்றி: கூகிளார்

21 comments:

  1. சுதந்திரத்தை விடுதலையாக பயன்படுத்துவதால் வரும் வினை...!

    அன்னையர் தின நல்வாழ்த்துக்கள் அம்மா...

    ReplyDelete
  2. அன்னையர் தின வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. எந்த தினத்திலும் அன்னை அன்னைதான் அவர்களை ஆண்டில் ஒருநாள் கொண்டாடுவது என்பதே நெருடுகிறது.

    ReplyDelete
  4. அன்னையர் தின வாழ்த்துக்கள் என் அன்புத் தோழியே .

    ReplyDelete
  5. உண்மைதான் கீதா. கேள்விப்படுகிற செய்திகள் எல்லாம் திகிலை ஏற்படுத்துகின்றன. அம்மாக்கள் எப்போதும் தன் தாய்மை மனதை ஒதுக்கித் தள்ளாமல் நல்ல பிள்ளைகளை வளர்த்தாலே போதும்.அவர்களுக்குப் பொறுமையும் சகிப்புத் தன்மையும் கூடி இருந்தாலே குழந்தைகள் நேரே வளர்ந்து தன் குழந்தைகளைக் கவனித்துக் கொள்வார்கள். மிக அருமையான பகிர்வு.

    ReplyDelete
  6. அன்னையர் தினம் கொண்டாடுவது நம் கலாச்சாரம் இல்லைதான் என்றாலும் அம்மாவை நினைவு கூருவதால் விஷயம்தான். முகநூல் நட்பு ஒன்றை நம்பி வீணாய்ப் போன பெண்கள் பற்றிக் கூட செய்தித்தாளில் படித்தேன். வளர்ப்பில் கண்டிப்பாய் இருப்பது என்பது இனி முடியுமா என்பது சந்தேகம்தான்!

    ReplyDelete
  7. குழந்தைகளுக்குத் தாயாக மட்டுமில்லாமல், ஒரு தோழியாகவும் அம்மா இருக்கவேண்டும். இந்தக் கால இளம் பெண்களுக்கு இது புரிவதில்லை. தங்களின் வேலை முக்கியம், அதில் வரும் பணம் முக்கியம் என்று நினைக்கிறார்கள் அதனால் குழந்தைகளை வளர்ப்பதில் போதிய கவனம் செலுத்துவதில்லை. வேலைக்குப் போவதால் குழந்தைக்குத் தேவையான அளவு நேரம் ஒதுக்க முடியவில்லை என்ற குற்ற உணர்ச்சியில் அளவுக்கு மீறிய சுதந்திரம் கொடுத்துவிடுகிறார்கள்.
    குழந்தைகள் கைமீறிப் போனபின் வருத்தப்படுவதில் என்ன பலன்?

    நல்லதொரு சிந்தனையை தூண்டியிருக்கிறீர்கள், உங்கள் இநதப் பதிவு மூலம். பாராட்டுக்கள்!

    ReplyDelete
  8. சுப்பு தாத்தா வலைப் பக்கம் வழியே வந்தேன். முரண்பட்ட சமுதாயத்தின் நிகழ்வுகளையும், குழந்தை வளர்ப்பு பற்றியும் வெளிப்ப்டையான எண்ணங்கள். தங்களுக்கு எனது அன்னையர் தின வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. சரியாச் சொன்னீங்க டிடி. சுதந்திரம் என்பதற்கும், விடுதலை என்பதற்கும் சரியான அர்த்தம் புரியாமல் தான் இப்படி எல்லாம் நடந்துக்கிறாங்க. இஷ்டத்துக்கு இருப்பது சுதந்திரமோ, விடுதலையோ அல்ல. :(

    ReplyDelete
  10. வாங்க ஜீவா, நவராத்திரியில் "நீலி" பாடலில் பார்த்தது. அப்புறமா ஒண்ணும் காணோம். :(

    ReplyDelete
  11. வாங்க ஜிஎம்பி சார், என் எண்ணமும் அதான். பக்கத்திலேயே இருக்கும் அம்மாவுக்கு வாழ்த்துச் சொல்லிப் பரிசு வாங்கிக் கொடுப்பதர்கு பதில் அவங்களுக்கு உதவிகள் செய்து அவங்களுக்குப் பிடிச்சதைச் செய்து பிடிச்ச மாதிரி நடந்து கொண்டு அவங்க மனம் மகிழச் செய்யலாம்.

    ReplyDelete
  12. நன்றி அம்பாளடியாள்.

    ReplyDelete
  13. இன்னும் மோசமான செய்திகள் எல்லாமும் கிடைத்தன வல்லி. ஜாஸ்தி எழுதவில்லை. :(

    ReplyDelete
  14. வளர்ப்பில் கட்டாயமாய்க் கண்டிப்பைக் கொண்டு வரவேண்டும் ஶ்ரீராம். இல்லை எனில் வரும் தலைமுறையை நினைக்கவே பயம்ம்மா இருக்கு.

    ReplyDelete
  15. வாங்க ரஞ்சனி. நீங்க சொல்றது உண்மை தான். முக்கியமாய் சகிப்புத் தன்மை இல்லை. :(

    ReplyDelete
  16. தமிழ் இளங்கோ சார், முதல் வருகைக்கு நன்றி. வைகோ சாரின் பதிவில் என் பெயருக்கு மேலே சுட்டினாலே இங்கே கொண்டு வந்து சேர்க்குமே! கருத்துக்கு நன்றிங்க.

    ReplyDelete
  17. சிந்தனையைத் தூண்டும் பதிவு. குழந்தைகளுக்கு மேல் நாட்டு நாகரிகமும், பழக்க வசக்கங்களும் , உணவுகளையும் நிறைய தாய்மார்கள் பழக்கி விட்டால் , பின்பு துண்பப்படும் நேரிடும் என்று உணர்வதில்லை.

    அண்ணையர் தினத்திற்கு ஏற்றப் பதிவு.

    ReplyDelete
  18. தங்களுக்கு எனது அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  19. நன்றி ராஜலக்ஷ்மி.

    ReplyDelete
  20. வைகோ சார், நீண்ட நாட்கள் கழிச்சு வருகை புரிந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  21. இன்றைக்கு பல நாட்கள் இப்படி கொண்டாடப்படுவதில் ஊடகங்களின் பங்கு மிக அதிகம். நல்லவற்றை மட்டும் எடுத்துக் கொள்ளும் மனப்பாங்கு இன்றைய இளைஞர்களுக்கு குறைவாக இருக்கிறதோ என்று தோன்றுவதுண்டு.....

    ஆனாலும் இன்றைக்கு ஒரு நாளாவது அன்னையை நினைக்கிறார்களே என்று தோன்றச் செய்து விட்டார்கள்.

    அனைவருக்கும் அன்னையர் தின நல்வாழ்த்துகள்

    ReplyDelete