எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, November 04, 2015

கூ ஊ ஊ ஊ உச்! உச்! உச்! உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்! உணவும் தண்ணீரும் இல்லாமல் பல்லவன்! :(

சில மாதங்களாக எனக்கு இணையத்தில் அதிக நேரம் செலவிட முடியாமல் அடுத்தடுத்து குடும்பத்தில் நிகழ்வுகள். நிச்சயதார்த்தங்கள்; கல்யாணங்கள்; சஷ்டி அப்தபூர்த்திகள் என முக்கியமான உறவுகளின் விசேஷங்கள். அடுத்தடுத்துப் பயணங்களும் கூட. ஒரு சின்னப் பயணமாக முந்தாநாள் திங்களன்று சென்னைப் பயணம். மைத்துனர் மகனின் திருமண நிச்சயதார்த்தம் சென்னை தி.நகரில் நடந்தது. அதற்காகச் சென்றோம். அப்படியே எங்கள் மருத்துவப் பரிசோதனையையும் முடிச்சுக்கலாம்னு ஒரு எண்ணம். ரேவதி நரசிம்மனையும் பார்க்கும் எண்ணம் இருந்தது. எல்லாம் சுலபமாக முடியும்னு தான் நினைச்சேன். :) 

கிளம்புவதற்கு இரு நாட்கள் முன்னரே திருச்சியிலிருந்து விழுப்புரம் வரை ரயில் பாதைகள் மாற்றப்பட்டிருப்பதாகத் தொலைக்காட்சிச் சானல் ஒன்றில் பார்த்தோம். அதில் பல்லவன் விரைவு வண்டியைக் குறித்தோ, மலைக்கோட்டை விரைவு வண்டியைக் குறித்தோ ஏதும் சொல்லப்படவில்லை. ஆனால் திருச்சி-விழுப்புரம் இடையே ரயில்கள் ரத்துனு வேறே அவ்வப்போது மின்னல் செய்திகள் வந்து கொண்டிருந்தன.
சனிக்கிழமை திருச்சி ஜங்க்‌ஷன் பக்கம் வேலை நிமித்தம் சென்றதினால் நேரே அங்கேயே விசாரித்துக் கொண்டோம். தொலைபேசியில் அழைத்தால் திருச்சி ரயில் நிலையத்தில் அதை எடுத்துப் பேசுபவர்கள் இல்லை. ஶ்ரீரங்கம் ரயில் நிலையத்துக்காரர்களுக்கு நாங்க சொன்ன செய்தியே புதியதாக இருந்தது. அவங்களுக்கும் விபரம் தெரியலை! ஆகவே சமயம் வாய்த்ததால் நேரே ஜங்க்‌ஷன் சென்றே விசாரித்துக் கொண்டோம். பல்லவனிலோ, மலைக்கோட்டை விரைவு வண்டியிலோ மாற்றம் ஏதும் இல்லை! நல்லவேளை! பிழைத்தோம் என எண்ணிக் கொண்டோம்.

ஆனால் கிளம்பும்போதே பல்லவனில் ஏறியதும் தண்ணீரே இல்லை. ஏற்கெனவே பல்லவன், வைகை விரைவு வண்டிகளில் உணவு விற்பனை ஒப்பந்தப்படி நடந்து வந்ததை ஒப்பந்ததாரர்களுக்கும், ரயில்வே நிர்வாகத்திற்கும் இடையில் உள்ள கருத்துவேறுபாட்டினால் புதுப்பிக்கவில்லை. ஆகவே குடிக்கத் தண்ணீர் கூட ரயிலில் வராது! :( இது எல்லா ரயில் நிலையத்திலும் நின்று செல்லும் வண்டியும் அல்ல!  இது விரைவில் சரி செய்யப்படும்னு அதிகாரி ஒருத்தர் பேட்டி கொடுத்திருந்தாலும் கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக ரயிலில் உணவோ, குடிநீரோ, காஃபி தேநீரோ எதுவும் இல்லாமலேயே பயணிகள் பிரயாணம் செய்ய வேண்டி வருகிறது!  இது தென்னக ரயில்வேக்கு மிகப்ப்பெரிய பின்னடைவாக எனக்குத் தோன்றியது! :) எங்களுக்கு சி2 பெட்டியில் அமரும் வசதி கொண்ட இருக்கைகள் கிடைத்திருந்தன. சி 1இல் தண்ணீர் இருந்தது. சி2 வில் காரைக்குடியில் வண்டி கிளம்புகையிலே தண்ணீர் இல்லையாம். அங்கேயே பயணிகள் கவனித்துவிட்டுச் சொல்லி இருக்காங்க. புதுக்கோட்டையில் பார்க்கிறோம்னு சொல்லிட்டுப் புதுக்கோட்டையில் என்ன பார்த்தாங்கனு தெரியலை! திருச்சியும் வந்தாச்சு. திருச்சி பெரிய ரயில் நிலையம். அங்கே எல்லா வசதிகளும் இருக்கிறது. வண்டியும் அரை மணி நேரம் போல் நிற்கும். அங்கேயே என்ன பிரச்னை என்று கண்டு பிடித்துச் சரி செய்திருக்கலாம். அங்கே என்ன செய்தாங்கனு தெரியலை. ஶ்ரீரங்கம் வந்தாச்சு. பயணச் சீட்டு சோதிப்பவர் வந்து சோதனை முடித்துச் சென்றதும் சாப்பிடக் கை கழுவலாம் எனச் சென்றால் கை கழுவும் இடத்தில் தண்ணீரே வரலை. சரினு கழிவறைக்குச் சென்று கை கழுவலாம்னு போனால் சுத்தம்! அங்கேயும் தண்ணீரே வரலை! 

அங்கே வந்த ரயில்வே காவல்துறை அதிகாரியிடம் விஷயத்தைச் சொன்னோம். அப்போது தான் எங்களுக்கு முன்னால் இருந்த இருக்கைகளில் அமர்ந்திருந்த காரைக்குடிக்காரர் மேற்சொன்ன இந்த விஷயங்களை எங்களிடம் கூறினார். அதன் பின்னர் அந்தப் பெட்டியின் கண்காணிப்பாளரும், பயணச்சீட்டு சோதனை செய்யும் அதிகாரியும் எங்களிடம் வந்து விருத்தாசலத்தில் சரி செய்துடுவோம்னு சொன்னாங்க. ஆனால் விருத்தாசலத்தில் வழக்கமான ஒரு நிமிடமோ, இரண்டு நிமிடமோ தான் வண்டி நின்றது. பின்னர் விழுப்புரம்னு சொன்னாங்க. ஆனால் விருத்தாசலத்தில் இருந்து மெதுவாகச் செல்ல ஆரம்பித்த வண்டி விழுப்புரம் போகும்போது ஒன்பதே முக்கால் ஆகிவிட்டது. அங்கே குளிர்சாதனக் கருவியைக் கண்காணிக்கும் ரயில்வே ஊழியர் ஒருத்தர் கீழே இருந்து தண்ணீர் வெளியே செல்வதைக் கண்டு பிடித்துச் சொன்னார். ஆனால் விழுப்புரத்தில் வண்டி நின்ற இருபது நிமிடங்களுக்குள் பிரச்னையைச் சரி செய்ய முடியாமல் அவர் என்ன கோளாறு என்று கண்டு பிடிக்கவும், வண்டி கிளம்பவும் சரியாக இருந்தது.  எங்களுடைய குறைகளைக்குறித்துக் கொண்டதாகவும் அதை எழும்பூர் சென்றதும் ரயில்வே மேலாளரிடம் சொல்லுவோம் என்றும் பயணச்சீட்டு பரிசோதிப்பவர் தான் எழுதி வைத்திருக்கும் புகாரைக் காட்டி எங்களை சமாதானப் படுத்தினார். 

அதற்குள்ளாக நாங்க அடுத்த இரு பெட்டிகளில் ஒன்றில் எங்கள் இயற்கை உபாதைகள், கழுவுதல் போன்ற வேலைகளைச் செய்து கொள்ளப் பழகிக் கொண்டு விட்டோம். ஆகவே அவங்களுக்கும் பின்னர் கவலை இல்லாமல் போச்சு! :)  மாம்பலத்தில் நாங்கள் இறங்கும் வரையில் பிரச்னை சரி செய்யப்படாமலேயே வந்து சேர்ந்தாச்சு. பெட்டியும் மிகப் பழைமையான பெட்டி. எந்தத் திரேதா யுகத்திலோ செய்யப்பட்டது. ஓரளவு புதுப்பிக்கப்பட்டு ஏதோ ஓடிக் கொண்டிருக்கிறது என்னும் ரகம். வழியில் இரட்டை ரயில் பாதை அமைப்பதற்காக ஊழியர்கள் வேறே ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக வேலை செய்து கொண்டிருந்தனர்.  ஆகவே வண்டி விரைவாக வர முடியாது. ஒரு வழியாகப் பனிரண்டே முக்காலுக்கு மாம்பலம் வந்து விட்டது. இறங்கி சாமான்கள் அதிகம் இல்லை; பளுவான பைகள் இல்லை எனினும் படி ஏறுதல், இறங்குதல் கொஞ்சம் கஷ்டம் தான். கஷ்டத்தோடு படிகள் ஏறி அந்தப்பக்கம் சாலையில் இறங்கினோம். ஆட்டோ பிடிக்கலாம்னு ஆட்டோக்காரரைக் கூப்பிட்டால் எங்கே போகணும்னு கேட்டுட்டு லேக் வியூ ரோடு என்றதும் எல்லோரும் தலை தெறிக்க ஓடினார்கள். என்னடா இது சோதனைனு எங்களுக்குக் கவலையாப் போச்சு! அங்கே இருந்த பத்து ஆட்டோக்காரர்களும் எங்களுக்கு வர மறுத்துவிட்டு மற்றவர்களை ஏற்றிக் கொண்டு கிளம்ப வேறு வழியில்லாமல் துரைசாமி சுரங்கப்பாதை வரை பையைத் தூக்கிக் கொண்டு நடந்தோம். ஒரு ஆட்டோக்காரர் கேட்டுவிட்டு வரமாட்டேன் என்றவர் இன்னொருத்தர் கூடப் பணம் தருவதாகச் சொன்னதும் அவரை ஏற்றிக் கொண்டு சென்றே விட்டார். அங்கே கண்ணில் ஒரு ஆட்டோவும் படவே இல்லை. சாதாரணமாக நடக்கும் தூரம் தான் என்றாலும் நல்ல பசி, கையில் பைகள்! நடப்பது இருவருக்குமே கொஞ்சம் சிரமம் தான். எப்படிப் போகப் போகிறோம்? கவலையாக இருந்தது.

23 comments:

  1. ஐயோ... சிரமத்திற்கு மேல் சிரமம்...!

    ReplyDelete
    Replies
    1. வாங்க டிடி பல மாதங்கள் கழித்து உங்களை இங்கே பார்த்ததில் சந்தோஷம்! :)

      Delete
  2. கவலை புரிகிறது. எனினும் பூர்வஜன்மபயன் போல் விட்ட குறை, தொடாதகுறையிருந்தால், இதெல்லாம் சகஜம். விட்டகுறை யாதெனில், 'என்னை பார்க்க வருவதாக திட்டமிடாதது. தொடதா குறை எதுவென்றால், சும்மானாச்சுமாவது என்னை பார்க்க வருவதாக சொல்லாதது. இங்கு வந்திருந்தால், நாலு குடம் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் கொடுத்திருப்பேன். ஹூஊஊஊஊஊஊஊஊஊம்

    ReplyDelete
    Replies
    1. ஐயா, என்னோட பயணத் திட்டம் என் கையில் இல்லை! சில சமயங்கள் நம்ம ரங்க்ஸ் திட்டம் போட்டாலும் எல்லாவற்றையும் மீறிக்கொண்டு வேறே மாதிரி நடக்கிறது. :) இம்முறை இந்தியா வந்திருக்கும் ரேவதி நரசிம்மனைக் கட்டாயம் பார்க்கணும்னு நினைச்சோம். முடியலை! :)

      Delete
    2. என்ன சிரிப்பு தம்பி? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      Delete
  3. ரொம்பவே கஷ்டப்பட்டிருப்பீர்கள் போல...அது சரி வண்டி கிளம்புவதற்குள் எல்லா கோச்சுகளையும் சரி பார்க்க மாட்டார்களோ? தண்ணீர் கீழே செல்லுவது கூடவா தெரியாமல் ரயிலை விடுகின்றார்கள்?! ஹும் சரி நீங்கள் கம்ப்ளெயின்ட் கொடுத்தீர்கள் என்றால் அதிக நேரம் நிற்கும் ஸ்டேஷனில் அதைச் சொல்லி அந்த பணி செய்பவர் சரி செய்து முடிக்கும் முன்னரேயே வண்டி கிளம்புகின்றது என்றால் நிர்வாதத்தில் சரியான கம்யூனிக்கேஷன் இல்லை என்பது தெரிகின்றது...ஹஹ எக்மோர் வந்து சரி செய்யச் சொல்லுகின்றோம் ஹஹ நல்ல பதில்...அப்படி என்றால் அன்றைய பயணிகளின் அவஸ்தை?!!!?

    ஹும் இதுதான் நமது ரயில்வேயின் ரொம்ப நல்ல நிர்வாகம்...இதில் தென்னக ரயில்வே தான் மிகச் சிறந்த சேவை என்றும், அதிகம் பணம் பெறும் தடங்கள் என்றும் சொல்லப்படுகின்றது....!!! அப்படிப்பட்ட நிர்வாகம், ஆட்சி ஹும் கஷ்டப்படுவது என்னவோ பொது மக்கள்தான் பணத்தையும் கொடுத்துவிட்டு...

    ReplyDelete
    Replies
    1. ரயில்வே நிர்வாகச் சீர்கேட்டைச் சரி செய்ய முயல்கின்றனர். அந்தச் செய்தியும் காதில் விழுந்தது. ஆனாலும் ஒரு சில ஊறிப் போன அதிகாரிகள் ஒத்துழைப்பதில்லை என்ற நம்பகமான செய்தியும் கிடைத்தது! இப்போத் தான் ரயில் நீர் பிரச்னையைத் தீர்த்து வைப்பதில் ஓரளவுக்கு வெற்றி கிட்டியுள்ளது. இனி இந்த விஷயத்தையும் விரைவில் கவனிப்பாங்கனு எதிர்பார்க்கிறேன்.

      Delete
  4. பொறுப்பற்ற நிர்வாகம்! பொங்கி எழாத மக்கள் இருக்கும் வரையில் இப்படித்தான் இருக்கும்! ரொம்ப சிரமப்பட்டிருக்கீங்கன்னு புரியுது! தொடர்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. இப்போதெல்லாம் எதுக்குனு தெரியாமலேயே மக்கள் பொங்கி எழத்தான் செய்யறாங்க. ஆனால் காரணம் தான் உப்புச்சப்பில்லாமல் இருக்கு! :(

      Delete
  5. எங்கள் மாமா வைகையில் சாப்பிட எதுவும் வருவதில்லை என்று சமீபத்தில் சொன்னபோது நான் நம்பவில்லை. இதுதானா விஷயம்? அப்புறம் எப்படிப் போனீர்கள்? ஆட்டோ கிடைத்ததா இல்லையா?

    ReplyDelete
    Replies
    1. இப்போத் தான் ஒரு இரண்டு மாதமாக உணவு வகைகள் வருவதில்லை ஶ்ரீராம். ஏனெனில் ஆகஸ்டில் என் மைத்துனர் வந்தப்போ பல்லவனில் தான் மாலை ஆகாரம் வாங்கிக் கொண்டதாகச் சொன்னார். அதன் பின்னரே நிறுத்தப்பட்டுள்ளது. பேச்சு வார்த்தை நடப்பதாகவும், விரைவில் மீண்டும் தொடங்கும் என்றும் சொல்கின்றனர். முன்னால் இருந்த ஒப்பந்ததாரர்கள் மீண்டும் புதுப்பிக்கவில்லை போலும்! :(

      Delete
  6. அடடா..... :-( ஸ்ரீரங்கம் டு மாம்பலம் எவ்ளோ நேரப்பயணம்?

    ReplyDelete
    Replies
    1. வீட்டிலே இருந்து கிளம்புவதையும் சேர்த்தால் சுமார் ஆறு மணி நேரப் பயணம்! :)

      Delete
    2. நாங்க இங்கே பக்கத்தில் இருக்கும் மெஸ்ஸில் முதல்நாளே சொல்லி வைத்துக் காலை உணவு மட்டும் வாங்கிக் கொள்வோம். முன்னால் எல்லாம் (அதாவது ஒரு வருடம் முன்னர் வரை) வீட்டிலேயே காலை உணவு எடுத்துச் சென்று விடுவேன். இப்போல்லாம் முடியறதில்லை. அப்புறம் பாத்திரமெல்லாம் கழுவிட்டுக் கிளம்புகையில் பதட்டம் வந்துவிடுகிறது. சமைத்த பாத்திரங்களை எத்தனை நாளைக்குப் போட்டு வைக்க முடியும்! காஃபி மட்டும் எப்போதுமே கையில் கொண்டு போவோம். :)

      Delete
  7. கால் டாக்சி கூப்பிட்டிருக்கலாம். எந்த ஊரிலும் FastTrack 2888999 தான்.
    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. மாம்பலம் ஸ்டேஷனிலிருந்து வீடு ஒரு கிலோ மீட்டருக்குள் தான். அதுக்கெல்லாம் கால் டாக்சி வராது! :) கையில் எதுவும் இல்லைனா நடக்கலாம். ஆனால் இப்போ நடக்கவும் முடியறதில்லை. கையிலும் பைகள் வேறே! :)

      Delete
  8. இந்திய ரயில்வேக்கள் பற்றி சிலாகித்து எழுதியதும் நினைவுக்கு வருகிறது

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் ஐயா! அதற்காகக் குறை கண்ட இடத்தில் அதைச் சொல்லித் திருத்தச் செய்யவேண்டியதும் நம் கடமைதானே! நன்மை இருந்தால் பாராட்டினால் மட்டும் போதாது! அதே சமயம் குறைகளை மட்டும் சொல்லிக் கொண்டே இருக்கவும் கூடாது! இப்போதைய இந்நிலை தாற்காலிகமானது தான். இரட்டை ரயில் பாதை போடுவதால் வண்டிகள் செல்லுவதையும் நிறுத்த இயலாது! ஆகவே சில வண்டிகளை மாற்று வழியில் விட்டும், சில வண்டிகளை இதே வழியில் மெதுவாகச் செல்ல வைத்தும் சமாளிக்கின்றனர். விரைவில் இரட்டை ரயில் பாதை முற்றுப்பெறும் எனத் தெரிகிறது. வேலை சுறுசுறுப்பாக நடந்து வருகிறது.

      Delete
  9. //இறங்கி சாமான்கள் அதிகம் இல்லை; பளுவான பைகள் இல்லை//

    //ஆனால் இப்போ நடக்கவும் முடியறதில்லை. கையிலும் பைகள் வேறே//

    இப்படி மாத்தி மாத்தி பேசினா என்ன அர்த்தம்? :))
    ஒரு கி.மீ தானே? நடைப்பயணம் ரொம்ப நல்லது. :D

    ReplyDelete
    Replies
    1. நடக்கலாம் தான் தும்பி, அம்பி, வம்பி! ஆனால் மழை வேறே பயமுறுத்திட்டு இருந்தது. அதோடு ஐந்துமணி நேரம் உட்கார்ந்தே வந்ததில் கால் மக்கர் செய்தது! எல்லாம் சேர்ந்து தான்! :)))) ரொம்ப நாள்/மாசம்/வருஷம் கழிச்சு வந்ததுக்கு நன்னி!

      Delete
  10. சில சமயங்களில் தவிர்க்க முடியாத பிரச்சனைகள் வந்து விடுவதுண்டு. தண்ணீர் பிரச்சனையை சரி செய்திருக்க வேண்டும். வேறொன்றும் சொல்ல வேண்டும் - இந்திய ரயில்வே மட்டுமல்ல, அரசாங்க அலுவலகங்களில் சில வருடங்களாகவே ஆள் குறைப்பு நடந்து கொண்டிருக்கிறது - ஓய்வு பெற்றவர்களுக்கு பதில் புதிய ஆட்கள் வருவதில்லை. இத்தனை பெட்டிகள் கொண்ட ரயிலுக்கு பராமரிப்புக்கென்று [பயண நேரத்தில் ரயிலுடன் வரும் நபர்] ஒரே ஒருவர் மட்டுமே என்று சில ரயில்களில் உண்டு! அவர் ரயில் நிற்கும் நேரத்தில் எத்தனை வேலை தான் செய்து விட முடியும்..... நல்ல மாற்றங்கள் வர வேண்டும் என்பது தான் எல்லோருடைய ஆசையும்...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், ஆள் குறைப்பும் நடக்கிறது! அதே சமயம் ஒரு பக்கம் ஆள் எடுப்பதாகவும் சொல்கின்றனர். மேலும் ஏற்கெனவே இருக்கும் அதிகாரிகளில் சிலர் வேலை செய்வதற்கு முகம் சுளிப்பதாகவும் கேள்வி! வருடக்கணக்காக அப்படியே சுகவாசியாகப் பழகியதில் அவங்களுக்கு இப்போதைய வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியலையாம்! அதுவும் காரணமாக இருக்கலாம். :(

      Delete