எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, January 04, 2016

புரியின் தேரோட்டம் குறித்த சில தகவல்கள்!

புரி ஜகந்நாதர் கோயிலின் தேரோட்டம் மிகவும் பிரபலமான ஒன்று. ஒவ்வொரு வருடமும் நடக்கும் இந்த ரத யாத்திரை ஒன்பது நாட்கள் நடைபெறும்.  ஒரு வருடம் பயன்படுத்திய தேரை அடுத்த வருடம் பயன்படுத்த மாட்டார்கள். ஒவ்வொரு வருடமும் தேர் புதிதாக நிர்மாணிக்கப்படுகிறது. தேர்த் திருவிழா ஆஷாட மாதம், நமக்கெல்லாம் ஆனி மாதம் என்றும் தெரியவருகிறது. ஆனால் விக்கிபீடியா ஆடி மாதம் எனக் குறிப்பிடுகிறது. ஆடி மாதம் பௌர்ணமி தினத்தன்று துவங்கும். 16 கலைகளைக் குறிக்கும் வண்ணம்  16 சக்கரங்களைக் கொண்ட  45 அடி உயரமான சிவப்பு. மஞ்சள் நிறத் தேரில் ஜகந்நாதரும், 14 மன்வந்திரங்களைக் குறிக்கும் வண்ணம் 14 சக்கரங்களைக் கொண்ட 44 அடி உயரமான  சிவப்பு, பச்சை நிறத் தேரில் பாலபத்திரரும், 12 மாதங்களையும் குறிக்கும் வண்ணம் 12 சக்கரங்களைக் கொண்ட  43 அடி உயரமான சிவப்பு, கறுப்பு நிறத் தேரில் சுபத்திரா தேவியும் பிரதிஷ்டை செய்யப்பட்டு வீதி வலம் வருவார்கள்.  ஆண்டு தோறும் 45 அடி உயரமும் 35 அடி அகலமும் கொண்ட புதிய தேர் செய்யப்படுகிறது.  தேரோடும் வீதிகள் "ரத்னவீதி" எனப்படுகின்றன. உண்மையிலேயே அகலமான வீதிகளாகவே இருக்கின்றன. இந்த வீதிகளைப் புரி ராஜா கஜபதி என்பவர் தங்கத் துடைப்பத்தால் தேரோட்டம் துவங்கும் முன்னர் பெருக்கிச் சுத்தம் செய்வாராம். முதலில் பாலபத்திரர் தேரும், பின்னர் சுபத்ரா தேவி தேரும், கடைசியாக ஜகந்நாதர் தேரும் கிளம்பும்.



நந்திகோஷ் ரதம், படம் உதவி விக்கிபீடியா

ரதயாத்திரையைப் பார்ப்பது வாழ்வின் முக்கிய அம்சமாகக் கருதப்படுகிறது. புரி கோயிலின் கருவறையில் இருக்கும் மூர்த்தங்கள் கோயிலின் சிங்கத்வார் எனப்படும் வாயில் வழியாக வெளியே கொண்டு வரப்படுகின்றன.  அதிக கனம் வாய்ந்த மர மூர்த்தங்கள் என்பதால் பலர் சேர்ந்து தூக்கி வருகிறார்கள்.  சுமார் எட்டடி உயரத்திற்கு ஜகந்நாதர் காணப்படுகிறார். அவரை நந்திகோஷா அல்லது கருடத்வஜாஎனப்படும் அவருடைய தேரிலும், பாலபத்திரரை தலத்வஜா எனப்படும் அவருடைய தேரிலும், சுபத்ராதேவியை த்வார்பதாலனா அல்லது பத்மத்வஜா எனப்படும் அவருடைய தேரிலும் அமர்த்தப்படுகின்றனர்.  சுபத்ரா தேவியின் தேரில் காணப்படும் கறுப்பு நிறம் சக்தி தேவியின் நிறத்தைக் குறிக்கிறது என்கின்றனர். சுபத்ரா தேவியை சக்தியின் அவதாரமாகக் கருதுகின்றனர்.  கறுப்பு நிறத்துடனும் பெரிய கண்களுடனும் காணப்படும் ஜகந்நாதரை சாம வேதத்தின் இறைவனாக விஷ்ணு சொரூபமாக வழிபடுகின்றனர்.  பலராமன் ரிக்வேதத்தைக் குறிக்கும் சிவ சொரூபமாகவும், சுபத்ரா தேவி மஞ்சள் நிறத்துடன் யஜுர் வேதத்தைக் குறிக்கும் சக்தி சொரூபமாகவும் வழிபடப்படுகிறாள்.  ஜகந்நாதரின் தேரோட்டியை தாருகா எனவும், (இவரும் மர வடிவமே) தேரை இழுக்க உதவும் வடத்திற்குச் சங்கசூடா என்றும் பெயர்.  பலராமரின் தேரோட்டிக்கு மாதவி என்றும் தேர் வடத்திற்கு வாசுகி என்றும் பெயர். சுபத்ராவின் தேரோட்டி அர்ச்சுனன், வடத்தின் பெயர் ஸ்வர்ணசூடா ஆகும்.


தலத்வஜா ரதம், படம் உதவி விக்கிபீடியா

சிங்கத்வார் வழியாகக் கிளம்பும் தேர் மூன்று கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள குண்டிச்சா தேவி ஆலயம் வரை இழுத்துச் செல்லப்படுகிறது. வழியில் பல கோயில்களின் தேர்களும் இந்த ஊர்வலத்தில் சேர்ந்து கொள்கின்றன. மேள, தாளங்கள், வேத மந்திரங்கள், பக்திப்பாடல்களுடன் தேர் மெல்ல மெல்ல நகர்ந்து செல்கிறது. ஒன்பது நாட்கள் குண்டிச்சா தேவி கோயிலில் தங்கி இருக்கும் ஜகந்நாதருக்கும், பாலபத்திரர் சுபத்ரா தேவிக்கும் அங்கே சிறப்பான வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. பத்தாம் நாள் தேர் அங்கிருந்து திரும்புகிறது.  நண்பகல் நேரம் புரியின் கோயில் சிம்மத்வார் வரும் தேர்கள் அங்கேயே நிறுத்தப்படுகின்றன. ஜகந்நாதருக்கும் அவருடன் கூட இருக்கும் மற்ற இருவருக்கும் ராஜாங்கக் கோலத்தில் அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. ஜகந்நாதருக்குத் தங்கத்தாலான கைகள் பொருத்தப்பட்டு தங்கச் சங்குச் சக்கரமும் வைக்கப்படுகின்றன. அன்றைய தினம் ஏகாதசி நாளாக இருக்கும்.  இந்த ஏகாதசி தினத் திருக்காட்சி கனாவேஷா என அழைக்கப்படுகிறது. மறுநாள் துவாதசி அன்று ஆலயத்தினுள் எடுத்துச் சென்று  நான்கடி உயரம், 13 அடி அகலம், 16 அடி நீளம் கொண்ட ரத்தினச் சிம்மாதனத்தில் அமர்த்துவார்கள். பக்தர்கள் தரிசனம் செய்வதற்கும் வாய்ப்பு அளிக்கப்படும். வலம் வந்து வணங்குவார்கள். இத்துடன் புரி ரத யாத்திரை நிறைவு பெறும்.



த்வார்பதாலனா அல்லது பத்மத்வஜா

படம் உதவி விக்கி பீடியா

18 comments:

  1. வருடா வருடம் புதிய தேர் என்பது ஆச்சர்யகரமான தகவல்.

    இந்நாட்களில் ஊர் திருவிழா கோலத்தில் சிறப்பாக இருக்கும் என்று தெரிகிறது.

    ReplyDelete
    Replies
    1. கூட்டம் நெரியும். தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு வருமே பார்த்ததில்லையா?

      Delete
  2. ஜகன்னாதர் பற்றிய தகவல்களுக்கு நன்றி. ஜகன்னாதரை தரிசிக்க பூரி செல்ல முடியாதவர்கள் அருகிலிருக்கும் கோவை இஸ்கான் மந்திர் சென்று தரிசித்து வரலாம்.
    அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. வாங்க கபீர் அன்பன், கை இப்போது சரியாகிக் கொண்டிருக்கும் என எண்ணுகிறேன். கோவை இஸ்கான் மந்திர்? இங்கே புரி ஜகந்நாதரையாப் பிரதிஷ்டை பண்ணி இருக்காங்க? இருந்தாலும் கோவைக்குப்போய்த் தானே பார்க்க முடியும்! :)

      Delete
  3. அட புதுத் தேரா ஒவ்வொரு வருடமும். பல தகவல்கள் தெரிந்து கொள்ள முடிந்தது. நன்றி சகோ

    ReplyDelete
    Replies
    1. நன்றி துளசிதரன் தில்லையகத்து!

      Delete
  4. தெரியாத பல அரிய தகவல்கள்.புரியில் தேர்த்திருவிழா என்பது ஓரிரு நாள் சமாச்சாரமல்ல.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், பல நாட்கள் நடைபெறும்.

      Delete
  5. பூரி தேரோட்டம் பற்றிய தகவல்கள் சிறப்பு! நன்றி!

    ReplyDelete
  6. தெரியாத பல தகவல்கள்.... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
  7. உங்கள் பதிவுகள் சுவாரஷ்யமான பயண அனுபவங்களாயும் இருப்பதால் நேரம் கிடைக்கும் போது அனைத்து பதிவுகளையும் படித்து கருத்து இட வேண்டும்.

    புது வருட வாழ்த்துகள் மா.

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நிஷா! படியுங்கள். ஆன்மிகப் பயணம் வலைப்பதிவில் இன்னும் நிறையப் பயணக்கட்டுரைகள் கிடைக்கும்.

      Delete
  8. புதிய தகவல்கள் அறிந்தேன் சகோ.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கில்லர்ஜி!

      Delete
  9. பூரி ஜெகன்னாத் தேரோட்டம் அறிந்து கொண்டோம்

    ReplyDelete