எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, August 29, 2007

சண்டை எல்லாம் ஒண்ணும் இல்லை!

என்னன்னு சொல்றது? இந்த அம்பிக்குப் புரியவே இல்லைனு சொல்ல முடியாது. ஆனால் வேணும்னு சாட்சி கேட்கிறார். கடவுள் இருக்கிறதுக்குச் சாட்சி கேட்கிறார். ஆமாம், அப்படித் தான் சொல்லணும். சூரியன் உதிக்கிறது எப்படி? அம்பி, விஞ்ஞான பூர்வமாய்ப் பதில் சொல்லாதீங்க. சந்திரன் உதிப்பது எப்படி? பருவங்கள் அந்த அந்தச் சமயத்தில் மாறிக் கொண்டே இருப்பது எப்படி? பூக்கள் மலருவது எப்படி? பூக்களில், அதுவும் சில பூக்களில் தேனும், சில பூக்களில் ஒன்றுமே இல்லாமலும், சில பூக்கள் ரம்மியமான மணமும், சில பூக்களில் மணம் மனதைக் கவரும் விதம், தலை கிறுகிறுத்துப் போகும்படியும் இருப்பது எப்படி? வண்ணக்கலவை பூக்களுக்கு வந்தது எப்படி?மரங்கள் ஏன் காலத்தில் காய்க்கின்றன? பழுக்கின்றன? அதுக்கு யார் சொல்லிக் கொடுத்தார்கள்? சாட்சி என்ன? சொல்ல முடியுமா? வசந்தம் ஏன் வருகிறது? பட்டாம்பூச்சிகள் ஏன் பறக்கின்றன? தும்பிகள் ஏன் தேனைக் குடிக்கின்றன? தேன் சிட்டுக்கு மட்டும் ஏன் இவ்வளவு வலுவான குரல்? குயில் ஏன் கோடையில் மட்டும் கூவுகிறது? காக்கையின் கூட்டில் குயில் ஏன் முட்டை இடுகிறது? கிளிகள் மட்டும் ஏன் 100 வருஷங்களுக்கு மேல் வாழ்கின்றன? சில மிருகங்கள் சாதுவாயும், சில முரடாயும் ஏன் இருக்கின்றன? சாதுவான மிருகங்கள் வலிமை வாய்ந்த மிருகங்களால் ஏன் கொல்லப் படுகின்றன?

மழை ஏன் பெய்கிறது? மழைத் துளியைப் பார்த்தால் மனம் ஏன் ஆனந்தம் அடைகிறது? காற்று இல்லாமல் நம்மால் ஏன் இருக்க முடியாது? ஏன் மூச்சு விடுகிறோம்? அம்பி, எந்தப் பயனை எதிர்பார்த்து இவை எல்லாம் நடக்கிறது, சொல்லி வைத்தால் போல் அந்த அந்தக் கால கட்டத்தில், யார் சொல்லிக் கொடுக்கிறார்கள்? அல்லது உங்கள் டாமேஜர் போல் ஆர்டர் போடுகிறார்கள்? காற்றுத் தான், பிராணவாயு இருப்பதால் தான் மூச்சு விடுகிறோம். அதைக் கண்ணால் கண்டிருக்கிறீர்களா? என்ன நிறம், என்ன உயரம், குணம், மணம் எல்லாம். எப்படி இருக்கும்னு சாட்சியோடு நிரூபிக்க முடியுமா? பார்க்காமலேயே உங்கள் மனதில் காதல் எப்படி வந்ததோ? அதுக்கு என்ன சாட்சி வைத்துக் கொண்டீர்கள், உங்கள் மனதைத் தவிர? மனதுக்கு மனமே சாட்சி இல்லையா? நீங்கள் உங்கள் காதலை உணர்ந்தாப் போல் உங்கள் மனைவியும் உணர்ந்ததால் தானே அது வெற்றியடைந்தது? அது போல் இறைவனை உணர்ந்தால் உங்களாலும் இதை உணர முடியும். இதுக்கு சாட்சி, சம்மன், கோர்ட், தீர்ப்பு எதுவும் வேணாம். பக்குவம் வேணும், இறைவனிடம் வேண்டிப் பெறும் மனது வேண்டும். அவனிடம் பரிபூர்ண நம்பிக்கை வைத்துச் சரணாகதி அடைய வேண்டும். முடியும் இடைவிடாத முயற்சியால். சாட்சி வைத்துக் கொண்டு தானே மூச்சு விடுகிறீர்கள்? இறைவனை மனதில் உணர்ந்தவர்கள் தங்கள் அனுபவத்தை வார்த்தைகளால் வடிப்பதே, நாமும் அதைக் கண்டு உணர வேண்டும் என்பதற்குத் தான். நம்மால் நிச்சயமாய் உணர முடியாது என்றால் சாட்சியா கேட்பது? தாகூர் நோபல் பரிசுக்காக எழுதவில்லை, அவர் மனச் சாந்திக்காக எழுதினார். அதை உணர்ந்து படிப்பதே அவருக்கு நாம் செய்யும் அஞ்சலி.

அப்புறம் என்னமோ பீட்டர் விட்டிருக்கீங்களே, இங்கிலிபீஸில், எத்தனை முறை சொல்லி இருப்பீங்க ஐ.ஏ.எஸ்.பரிட்சை கொடுத்ததை? சும்மாச்சும்மாச் சொல்லிட்டே இருந்தால் என்ன அர்த்தம்? அதான் ஊத்திக்கிச்சு இல்லை? அப்புறம் என்ன? உங்க சரித்திர அறிவு நல்லாத் தெரியுதே, யார், எப்போ ஆண்டாங்கனு கரெக்டாச் சொல்றதிலே இருந்து! :P .பிரிட்டிஷ் மன்னர் குலம் எப்போ இந்தியாவுக்கு வந்ததிலேன்னு இருக்கிறதாலே உங்களோட தடுமாற்றம் அதிலேதான் இருந்ததுன்னாலே அதை மட்டும் குறிப்பாச் சொன்னேன். சேர, சோழ, பாண்டியர்களையோ, மொகலாயர்களையோ, குப்தர்களையோ, மகத நாட்டைப் பத்தியோ, சாணக்கியரைப் பத்தியோ சிந்து சமவெளி பத்தியோ இப்போ எழுதலை. :P. அப்புறம் வேதாவுக்கும், எனக்குமோ அல்லது அபி அப்பாவுக்கும், எனக்குமோ சிண்டு முடியப் பார்த்து உங்க நாரத வேலையை ஆரம்பிக்க வேண்டாம். உங்களால் முடியாது. அவங்க உங்களை உளவு பார்த்து என் கிட்டே வந்து சொல்லிடுவாங்க. :P என்னோட எழுத்தின் போக்கை மாத்திட்டதா நினைக்க வேண்டாம். முடிஞ்சா முயற்சி செய்து பாருங்க.

கடைசியா மதுரையில் நடந்த திருவிளையாடல்களைச் சொல்லி இருக்கீங்க. வன்னி, கிணறு, லிங்கம் சாட்சிக்கு வந்ததுன்னா அது வேறே விஷயம். உணர்வுகள் சம்மந்தமே இல்லை. நிகழ்வுகள் சம்மந்தம். இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு. அதை முதலில் புரிஞ்சுக்க முயலவும். சம்மந்தம் இல்லாமல் கேட்க வேண்டாம்.

Saturday, August 25, 2007

என் கேள்விக்கு என்ன பதில்?

முதலில் சரித்திரம்: பிடிக்கலைனாலும் அம்பி கேட்டிருப்பது எலிசபத் ராணியைப் பத்தி. முதலாம் எலிசபத் ராணி என்றால் 1533-ல் பிறந்து 1558 வரை (இறக்கும் வரை) இங்கிலாந்தின் ராணியாக இருந்தார். இவரைப் பற்றிய தொலக்காட்சித் தொடர்களும், திரைப்படங்களும் வெளி வந்துள்ளது. "கன்னி ராணி" என்று அழைக்கப் பட்டார். அப்போதிருந்த அமெரிக்கக் காமன்வெல்த்தில் இருந்த மாநிலம் ஒன்று இவரின் இந்தப் பெயரில் தான் இன்றுவரை வர்ஜீனியா என அழைக்கப் படுவதாய்க் கேள்விப் பட்டிருக்கிறேன். தற்போது இருக்கும் 2-ம் எலிசபத் பிறந்ததே 1926-ல் தான். இவர் திருமணம் செய்து கொள்ளும்போது இந்தியா சுதந்திரம் அடைந்து விட்டதுனு நினைக்கிறேன். இவர் திருமணத்துக்குக் காந்தி பரிசாக கதரினால் கையால் நெய்யப் பட்ட ஒரு மேசை விரிப்போ அல்லது உடுத்தும் உடுப்போ பரிசாகக் கொடுத்தார் எனச் சொல்லப் பட்டது. அதுக்கு முன்னாலேயே தாகூர் 1913 அல்லது 14-ல் நோபல் பரிசு வாங்கி விட்டதாய்க் கேள்விப் பட்டேன். ஆகவே முதலில் அம்பிக்குச் சரித்திரமே தெரியலை. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அதனாலேயே எடுத்த எடுப்பிலே எனக்குக் கோபம் வந்து விட்டது. 41-ல் தாகூர் இறக்கும்போது இந்த 2-ம் எலிசபத் பட்டத்துக்கே வரலை! அவர் 50களில் தான் எப்போவோ பட்டத்துக்கு வந்தார்னு நினைக்கிறேன். இப்போ அடுத்து "கீதாஞ்சலி"யைப் பத்தி.

உண்மையில் "கீதாஞ்சலி"க் கவிதைத் தொகுப்பை ஆன்மாவின் ராகங்கள் எனக் கூறலாம். நம் பக்தி உணர்வில் பலவிதமான வழிமுறைகள் உண்டு. அவற்றில் நாயகன், நாயகி பாவமும் ஒன்று. தன்னை நாயகியாகப் பாவித்துக் கொண்டு, இறைவனை நாயகனாய்ப் பாவித்துக் கொண்டு எழுதிய அநேகம் கவிதைகள், முக்கியமாய் பக்தி இலக்கியக் கவிதைகள் பல நம் தமிழிலும் உண்டு. கீதாஞ்சலியும் அப்படி ஒரு ஒப்பற்ற தத்துவத்தை உலகுக்கு உணர்த்திய கவிதைத் தொகுப்பு. பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டிருக்கிறது என்றாலும் அது எல்லாம் பின்னால் தான். முதலில் ஆங்கிலத்தில் கவிஞரின் கவிதைகளை மொழிபெயர்ப்புச் செய்தவர் "யீட்ஸ்" என்பவர், என்றாலும் ஆங்கிலக் கவிதைகளின் தொகுப்பு முழுக்க முழுக்க வங்காள மொழியில் தாகூர் எழுதிய எல்லாக் கவிதைகளுமே என்று சொல்ல முடியாது எனவும் ஒரு விமரிசனம் உண்டு.

தன்னுள்ளே உறையும் இறை ஒளியைக் கண்ட பாரதி எப்படிக் குதித்துக் கொண்டு,"அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்! அதை ஆங்கோர் காட்டிடைப் பொந்தினில் வைத்தேன், வெந்து தணிந்தது காடு, தழல் வீரத்தில் , குஞ்சென்றும், மூப்பென்றும் உண்டோ?" என்க் கேட்டதோடு அல்லாமல், "தீம்தரிகிட தீம்தரிகிட தித்தோம்!" என ஆடிப் பாடி குதிக்கவும் செய்தார். அதே போல் தாகூரும் தன்னுள்ளே உறையும் இறைவனைக் கண்டார். தன் ஆன்மா இறைவனுடன் சேரும் நாளுக்ககக் காத்திருந்தார். தேடினார். அலைந்தார். புலம்பினார். அழுதார், சிரித்தார். ஆனந்தம் அடைந்தார். அவரின் பல்வேறு விதமான் உணர்வுக் கலவை இது. பக்தி இலக்கியத்தைச் சேர்ந்தது. தேவாதி தேவனே, என்றும், அரசர்க்கு அரசே என்றும், தலைவருக்கு எல்லாம் தலைவா என்றும், புலவருக்கு எல்லாம் புலவனே என்றும் அவர் அழைத்ததும், உருகித் தவித்ததும் இறைவனை நோக்கி. தன் ஆன்மா இறைவனுடன் ஒன்றாய்க் கலக்கும் நாளுக்காகத் தினம் தினம் அவனுக்காகப் புதிய பாடல்கள் பாடி, அவனை வரவேற்றுத் தொழுது, அழுது, அரற்றித் தன்னையே அவனுக்கு நிவேதனமாகப் படைக்கத் தான் தயாராய் இருப்பதைச் சொல்கிறார். இன்னும் வரலியேனு ஏங்குகிறார். இதைப் புரிந்து கொண்டு அந்த உணர்வோடு ஒன்றிப் போய்ப் படித்தால் கவிதை புரியும், நம்மால் எழுத முடியாவிட்டாலும், மனதில் உணர்வுகள் பொங்கும்!

அடுத்துக் கண்ணபிரான் எழுதியது பத்தி. அம்பி வழக்கம்போல் இதையும் சரியாப் படிக்கலை. (எப்பவும் பூரிக்கட்டையும் தங்கமணியும்னு நினைப்பு இருந்தால் இப்படித் தான் :P) கண்ணபிரான் எழுதி இருந்தது தேசீய கீதத்தைப் பற்றியும் அது வெளியிடும்போது நாட்டில் இருந்த சூழ்நிலை பற்றியும், அதை ஆங்கில அரசு எப்படித் தனக்குச் சாதகமாய்ப் பயன்படுத்திக் கொண்டது என்பது பற்றியும். அம்பி இன்னொரு முறை கண்ணன் பதிவிலே போய்ப் படிங்க! "விதாதா" எனத் தாகூர் கூப்பிட்டது இறைவனையே, ஒரு போதும் அன்னிய அரசனை அல்ல! இதையும் "யீட்ஸ்" குறிப்பிட்டதாய்க் கண்ணன் எழுதி இருக்கிறார். அம்பி நிஜமாவே நல்லாப் படிச்சுட்டுப் பின்னூட்டம் கொடுங்க ப்ளீஸ்! கண்ணன் எழுதி இருப்பது தற்போது உள்ள எலிசபத் அரசியின் தந்தை ஆன 6-வது ஜார்ஜுக்கும் முன்னர் இருந்த 5-ம் ஜார்ஜ் மன்னர். அவர் இந்தியா வந்திருந்திருக்கிறார்.. அப்போது காங்கிரஸ் மகாசபையில் வரவேற்புப் பத்திரம் வாசிக்கப் பட்டபோது தாகூரின் "ஜனகணமன" கடவுள் வாழ்த்தாகத் தான் பாடப் பட்டிருக்கிறது. ஐந்தாம் ஜார்ஜ் மன்னருக்கு வாழ்த்தி இல்லை! :(((((((

அம்மாஞ்சி கேட்ட கேள்வி!

தாகூரின் "கீதாஞ்சலி"யை நாம் மொழிபெயர்க்கும்போதே சந்தேகம் தான். எத்தனை பேர் சரியாப் புரிஞ்சுப்பாங்கன்னு! இருந்தாலும் கொஞ்சம் முயற்சி செய்யலாம்னு செய்தேன். ஆனால் நேற்று மொழிபெயர்ப்பின் போது எனக்குக் கொஞ்சம் தர்ம சங்கடமான சூழ்நிலை ஏற்பட்டது. இந்த வரிகளில்:

"மேரே கீத் நே உதார் டாலே ஹைம்! உஸே சுந்தர் வேஷ் அவுர் சஜ்ஜித் ஹோனே கா கர்வ நகி ஹை! கஹனே ஹமாரா சந்யோக் நஹி ஹோனே தேதே, வே தும்ஹாரே அவுர் மேரே பீச் மே ஆ ஜாதேஹை! உன்கி ஜங்கார் ஸே தும்ஹாரி தீமி ஆவாஜ் தப் ஜாதி ஹை!"

இதை மொழி பெயர்க்கும்போது கொஞ்சம் தடுமாறியே போனேன். வார்த்தைகள் உண்மையாகவே தகுந்த விதத்தில் வெளிப்படவில்லை.என்றாலோ அல்லது கொஞ்சம் மாறினாலும் அற்புதமான இந்தக் கவிதைத் தொகுப்பின் அர்த்தமே மாறிப் போய் ஒரு காதல் கவிதையாக அடையாளம் காட்டப் படும். தாகூரின் நோக்கமோ, அவரின் இறை உணர்வும், அதைக் கண்டு உணர்ந்த அவர் தன் சொல் வலிமையால் அதை வெளிப்படுத்திய விதமும் கேவலப் பட்டுப் போயிருக்கும். ஆகவே கூடியவரை தக்க வார்த்தைகளைப் போட்டு எழுத நினைத்த என்னால் எழுத முடியாமல் போய் ஏதோ ஒப்பேற்றினேன். இருந்தாலும் திருப்தி இல்லாமல் பதிவை வெளியிடுவதும், திரும்ப வாபஸ் வாங்குவதும், பின்னூட்டத்தில் விளக்கம் எழுதுவதுமாய் இருந்தேன். அப்போதுதான் முத்தமிழ்க் குழுமத்தில் போட்டதுக்கு, வேந்தர் "சம்மந்தம் இல்லமல் இருக்கிறதே?" எனக் கேட்டு எழுதிய விமரிசனத்தையும், அதற்கு திரு வீஎஸ்கே அவர்கள் என் சார்பில் கொடுத்த விளக்கமும் பார்த்தேன். இனி ஒண்ணும் செய்ய முடியாது எனத் தோன்ற இந்தப் பதிவை ப்ளாகிலும் பப்ளிஷ் பண்ணி விட்டேன். திரு வீஎஸ்கே அவர்களைக் கலாய்த்தும் ஒரு பதில் எழுதி விட்டுத் தான்! :P இது எனக்காகப் போட்டிருக்கேன்! இப்போ அம்பி கேட்ட கேள்வி என்னை அறைகிறாப் போல் இருக்கிறது.

திரு வீஎஸ்கே அவர்கள் என்னைச் சரியான நேரத்தில் காப்பாற்றி இருக்கிறார் என்றாலும் அப்போது அதை நான் உணராமலே இருந்தேன். இருந்தாலும் சரியாக வெளிப்படுத்தாமல் போனது என் மனதை வாள் போல் அறுத்துக் கொண்டே இருந்தது. இன்று அவர் எனக்கு மன்னிப்புக் கேட்டு எழுதியதைப் பார்ததும் ரொம்பவே வெட்கமாயும், வருத்தமாயும் இருக்கிறது. உண்மையில் நான் அவரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டி இருக்க அவர் கேட்டதில் இருந்து "பெரியவங்க பெரியவங்க தான்!" என்ற எண்ணமும் என் அல்ப புத்தியும் வெளிப்படையாக ஆனது. இது ஒரு பக்கம் இருக்கட்டும். இப்போ அம்பியின் கேள்விக்கு வருவோமா? அம்பி கேட்டது: " நிஜமாவே தெரியாம தான் கேக்கறேன்: இந்த கீதாஞ்சலியே பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் எலிசபத் ராணி மற்றும் அவர் கணவர் (பிரபு) இவர்களைப் புகழ்ந்து பாடப் பட்ட ஒரு பாடல் தொகுப்புனு சொல்றாங்களே உண்மையா? உங்க மொழி பெயர்ப்பும் அதே மாதிரி தான் இருக்கு. தனிப் பதிவாகவே விளக்கவும். கண்ணபிரான் கூட ஒரு பதிவு போட்டிருக்கார் பாருங்க!"

இதைப் பார்த்ததும் முதலில் எனக்குக் கோபம் தான் வந்தது. அம்பியைத் திட்டித் தான் பின்னூட்டம் போட நினைத்தேன். ஆனால் அப்போது தான் திரு வீஎஸ்கே நினைவு வந்தார். தப்பு என் பேரில் இருக்க அவர் என்ன்னிடம் மன்னிப்புக் கேட்டிருக்கையில் அம்பி நிஜமாவே சரித்திர அறிவு கூட இல்லாமல் எழுதி இருக்கும் போது திருத்தணும், அது தான் சரின்னு முடிவு செய்தேன். அது என்னனு இன்னொரு பதிவா எழுதறேனே!

Friday, August 24, 2007

வருவாள் மஹாலட்சுமி!









மஹாலட்சுமி அருள் பிரிவாள் அனைவருக்கும். இன்று வரலட்சுமி விரதம் கொண்டாடி முடித்திருக்கும் இந்திய உறவு, நட்புக்கும், இனி கொண்டாடப் போகும் மற்ற உறவு, நட்புக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். அந்த லட்சுமியின் அருளும், சரஸ்வதியின் வாக்கும், சக்தியின் மனோதைரியமும் அனைவருக்கும் வந்து சேர வாழ்த்துக்களுடன்

சரியா, தப்பா? தெரியாது?

என் இதயம் ஆகிய இந்தச் சிறிய மலரைப் பறித்து விடு! உடனே ஏற்றுக் கொள்! உனக்குக் காணிக்கை ஆக்குகிறேன். இல்லை எனில் இது வாடிப் புழுதியில் மண் மூடிவிடுமோ என அச்சமாய் உள்ளது.

உன்னுடைய அழகிய மாலையில் வெறும் நாரினால் இந்த மலரைப் பிணைக்காதே! என் தலைவா! உன்னுடைய மிருதுவான தொடுகையால் இந்த அற்ப மலரின் ஊடலைப் போக்கிப் பின்னரே இம்மலரைப் பறிப்பாய்! நான் உன் தொடுகையால் மனநிறைவு பெறும் முன்னரே இந்த தினம் முடிந்து விடுமோ? என்னுடைய வழிபாட்டின் நேரம் தவறி விடுமோ? என எனக்கு அச்சமாக உள்ளது!

இந்த அற்ப மலருக்குச் சிறிது வண்ணமும், வாசனையும் சேர்த்துவிடு! பிறகே உன்னுடைய சேவையில் இந்த மலரை ஏற்றுக் கொண்டு நேரம் வந்ததும் இதற்கு மோட்சம் கொடுத்து விடு!

இறைவா! என்னுடைய பாடல் அழகான ராகங்களால் ஏற்ற இறக்கத்துடன் கூடி உள்ளது. அதற்கு இந்த வேஷத்தால் அழகு அடைந்தமைக்குப் பெருமை ஏதும் இல்லை. ஏனெனில், இந்த அழகான ஆபரணங்களே உன்னை நான் ஆலிங்கனம் செய்து கொள்வதைத் தடுக்கிறது. உனக்கும் எனக்கும் நடுவில் பிரிவை உண்டாக்குகிறது. அதனுடைய ஆரவாரமான ஒலியினால் உன்னுடைய மிருதுவான அழைப்பு அழுந்தப் படுகிறது.

உனக்கு முன் நான் ஒரு கவிஞன் என்றும், புலவன் என்றும் கொண்ட பொய்யான பெருமை தூள் தூளாக நொறுங்கிப் போகிறது. ஏ மாபெரும் கவிஞனே! உன் காலடியில் நான் அமர்ந்திருக்கிறேன். என் வாழ்க்கையை இப்போது மிக எளிதானதாக்கி விடு! அப்போதுதான் நான் இனிமையான கீதம் இசைக்கும் ஒரு புல்லாங்குழல் போல் ஆகி உன்னுடைய புகழைப் பாட முடியும்!

Wednesday, August 22, 2007

ஹிந்தியில் இருந்து - மொழி பெயர்ப்பு முயற்சி

எனது ஆருயிரே, என் ஜீவனே!, உன்னுடைய உணர்ச்சி மிகுந்த தொடுகையால், என்னுடைய அங்கங்கள் எல்லாம் பூரித்துப் போகிறது. நான் என்னுடைய இந்த உடலை மிகவும் புனிதமான ஒன்றாய் வைத்திருக்க எப்போதும் முயற்சி செய்கிறேன்.

என்னுள்ளே ஒரு அணையா விளக்குப் போல் பிரகாசிக்கும் அந்த விவேகம் என்னும் சுடரானது, நீ ஏற்றி வைத்தது தானே! என் கெடுமதியால் விளையும் எண்ணங்களை அந்த ஒளியின் உதவியால் நான் தூரவே வைத்திருக்க எப்போதும் முயல்கிறேன்.

என்னுடைய இருதயத்தின் அந்தரங்கமான இடத்தில் உள்ள மேடையில் நீ அரியணை போட்டு அமர்ந்துள்ளாய். நான் என்னுடைய இருதயத்தின் அழுக்குகளைப் பூராவும் களைய முயல்கிறேன். உன்னில் இருந்து வரும் பிரகாசமான ஒளிச்சுடரின் நளினமான கிரணங்களால் என் ஆன்மாவும், இதயமும் புனிதம் அடையச் செய்ய எப்போதும் முயல்கிறேன்.

உன்னில் இருந்து கிளர்ந்து எழும் அற்புத எண்ணங்களால் நான் சக்தி உள்ளவன் ஆகிறேன். மேலும் என்னுடைய எண்ணங்களிலும், செயல்களிலும் உன்னை முன்னிலைப் படுத்தி, உன்னில் என்னைக் காண நான் எப்போதும் முயல்கிறேன்.

ஒரு கணம், ஒரே ஒரு கணம், உன்னருகில் என்னை அமர விடு! என் தேவனே! அனைத்தையும் நான் பெற்றவன் ஆகிறேன்.

உன் அருகாமையில் இருந்து நான் விலகிப் போனதும் என் இதயமும், ஆன்மாவும் துக்கத்திலும், வியாகூலத்திலும் ஆழ்ந்து விடுகிறது. அதற்குப் பின் நான் மேற்கொள்ளும் எந்த வேலையும், என்ன சொல்வேன், என் நாதனே! கடினமாகி விடுவதை உணருகிறேன்.

இன்று, இந்தக் கணம், வசந்தமானது தனது தென்றலை அனுப்பி என் சாளரக் கதவைத் தட்டுவதோடு அல்லாமல் மெல்ல ராகத்துடன் முணுமுணுக்கவும் செய்கிறது. என் முற்றத்தில் உள்ள செடி,கொடிகளில் உள்ள மலர்ந்த புஷ்பங்களையும், பூங்கொத்துக்களையும் வண்டுகள் ரீங்காரமிடும் தொனி கேட்கிறது.

இப்போது, இந்தச் சமயம் தான் உன் அருகாமையில் தங்கி இருந்து என் ஆத்மாவைச் சமர்ப்பணம் செய்யவும், என் ஆன்மா இசைக்கும் கீதத்தை உன்னைக் கேட்கச் செய்யவும் தகுந்த சாந்திமயமான நேரம் வந்துள்ளது.

Tuesday, August 21, 2007

ஜி3, உங்களுக்கு என்மேல் என்ன கோபம்?

யு.எஸ். வந்ததில் இருந்தே தமிழ் எழுதறதுக்கு ஜி3 பண்ண வேண்டியதாப் போச்சு. இ-கலப்பையை, டவுன்லோட் செய்யணும்னு "க்ளிக்"கினால் அது என்னவோ இது சோதனைக்கான டவுன்லோடுதான், உனக்கு வேணும்னா யு.எஸ்.டாலரில் உன்னோட சொத்தை எழுதிக் கொடுன்னு கேட்குது. சரி, நம்ம ஹெட்லெட்டர் தான் தெரியுமேன்னு, நெருப்பு நரியைப் போட்டு எழுத ஆரம்பிச்சா தமிழா அது? தமிழா, தமிழான்னு பாடக் கூட முடியலை. அவ்வளவு மோசம். எல்லாம் இரண்டிரண்டாத் தெரிய ஆரம்பிச்சது. கண்ணாடி தான் சரியில்லையோனு பார்த்தா வீட்டில் எல்லாரும், என்னை அதிசயமாப் பார்த்து, எப்போதில் இருந்து உருது கத்துக்கிட்டுப் படிக்க ஆரம்பிச்சேன்னு கேட்டாங்க. அப்புறம் தான் தெரிஞ்சது, தப்பு நம்ம பேரில் இல்லைனு, அப்போதான் கை கொடுத்த தெய்வமாய் திரு விஎஸ்கே அவர்கள் உதவினார். அதில் இருந்து ஜி3 தான் பண்ணிட்டு இருக்கேன். இங்கே ஹூஸ்டன் வந்தும் அதே தான். ஆனால் அதில் என்ன கஷ்டம்னால் இந்த மடிக்கணினிக்கு ஞாபக சக்தி ரொம்பவே அதிகமாப் போயிடுச்சு.

நேத்திக்கு ஒரு கமென்ட் கொடுத்திருப்பேன்: "இது என்ன அநியாயம்?" அப்படின்னு. அது யாருக்குக் கொடுக்கணுமோ அவங்களுக்குப் போட்டும் இருப்பேன். அதுக்குப் பின் வேறே ஏதாவது எழுதி, மத்தவங்களுக்குப் பின்னூட்டம் கொடுக்கணும்னாலோ, அல்லது புதிசாய்ப் பதிவாய் எழுதி ஜி3 பண்ணனும்னாலோ, அது ஜி3 ஆகறதே இல்லை. அதுக்குப் பதிலா நான் போட்ட, "இது என்ன அநியாயம்?"ங்கிற பின்னூட்டமே ஒட்டிக்கிட்டு வந்து எல்லா இடத்திலும் விழுதே! இது ஒரு உதாரணத்துக்குத் தான். சில சமயம் சிலர் பதிவுகளில் பின்னூட்டம் கொடுக்கப் போய் என்னோட பதிவுகளே அங்கே ஜி3 ஆயி அதுக்கப்புறம் அதை டெலீட் செய்ய நான் படற கஷ்டம் எல்லாம் எழுதலை. அது தனியா வச்சுக்குவோம். இப்போ இதுக்கு என்ன செய்யறது? திரும்ப "RESET" கொடுன்னு சொல்ல வேண்டாம். பலமுறை "RESET" கொடுத்தும் இப்படித்தான் வருது. இன்னிக்குக் கணினியில் உட்கார்ந்ததில் இருந்து நேத்திக்கு எழுதிய கீதாஞ்சலி பதிவே எல்லாப் பக்கத்திலும் ஜி3 ஆயிட்டே இருந்தது. அதை மாத்த ரொம்பக் கஷ்டப் பட்டேன். முன் அனுபவம் உள்ளவர்கள் தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

ஹிஹிஹி ஜி3, உங்களுக்கு ஓசியிலே ஒரு நல்ல விளம்பரம்.

தவறுகளுக்கு மன்னிக்கவும்!



என் பிரபுவே, உன்னுடைய கீதம் மிகவும் அற்புதமாய் உள்ளது. நான் வியப்பினால் வாய்திறவாமல், எப்போதும் அதையே கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

உன் கீதத்தால், இந்த மூவுலகும் பிரகாசிக்கிறது. உன்னுடைய சங்கீதத்தின் ஜீவநாதம் ஒரு மாபெரும் அலையைப் போல் இந்தப் பிரபஞ்சம் முழுதும் பிரவாஹமாய்ப் பெருகுகிறது. இந்தப் புனிதமான பிரவாகம் சற்றும் தடை இல்லாமல் தீவிர கதியில் ஓடுகிறது.

என்னுடைய இதயமோ உன்னுடைய சங்கீதத்தில் மூழ்கி ஆனந்தமய நிலையை அடைய ஆசைப் படுகிறது, ஆனால்,
வார்த்தைகள் எனக்குள் தெளிவாக வரவில்லையே! நான் எப்படிச் சொல்வேன்?
என் உணர்வுகளை வார்த்தைகளால் வடிக்க முடியாமல், என்னுள்ளே தழுதழுக்கிறேன்.
என் இதய நாதனே, உன்னுடைய இந்த இதய சங்கீதத்தின் நாதத்தால், அதன் அற்புதத்தால், அதன் எண்ணற்ற துவாரங்களால் என்னுடைய இதயத்தை மூடி விட்டாய்! என் இதயம் என்னிடம் இல்லை!

Monday, August 20, 2007

நான் எழுதலை, ஆனாலும் கவிதை தான்!

உன் இதயத்தில் இருந்து வரும் கீதத்தின் அற்புதத் தன்மையால்,
அதன் ராகத்தால், என் அந்தராத்மா விம்மிப் போய்த் திகைத்து விடுகிறதே!
அப்போது நான் உன் பக்கம் என் பார்வையைத் திருப்பினால்,
இது என்ன? ஏன் என் கண்கள் குளமாகின்றன!

அகங்காரமும், சுருதி இல்லாமலும் பாடிக் கொண்டிருந்த என் ஆன்மா,
இது என்ன? இப்போது லயத்துடன் பாடுகிறதே?
உன்னை நான் உபாசனை செய்ததாலோ இது?
என் ஆன்மா அகண்ட சமுத்திரத்தைக்
கடக்கும் பட்சியைப் போல் சிறகடித்துப் பறக்கத்
தொடங்கி விட்டதே!

நான் நன்கு அறிவேன்: நீ என் பாடல்களால் ஆனந்தம் அடைந்தாய்!
அந்தச் சமயம் நான் உன் காலடியில் வெறும் பாடகனாய் மட்டுமே!

உன்னுடைய காலடித் தடங்களில் நான் உணர்ந்தேன்
என் கீதத்தின் இனிய நாதம் ஒரு பறவைச் சிறகு போலே
உன் பாதங்களை வந்து மெல்லத் தொட்டது.

என் இதய நாதனே! நான் இந்தப் பாடலில் உன்மத்தம் பிடித்தேன்
எனக்குள் நானே ஆச்சரியம் அடைந்தேன்,
உன்னை உணர்ந்தேன், நீ தான் என் இனிய தோழன் என அறிந்தேன்.

Sunday, August 19, 2007

புதிய முயற்சி- ஆனால் சொந்தம் இல்லை.

"இறைவா, நீ என்னை சற்றும் இளைப்பாறாத ஒரு பயணியாகப் படைத்துள்ளாய்!
என்னுடைய இந்த அழியக் கூடிய உடலை நீ கோடிக் கோடி முறைகள் அழித்தாலும்,
திரும்பவும் கோடி கோடி முறைகள் படைத்தும் விடுகிறாயே?

நீ இந்த நர உடலை ஒரு புல்லாங்குழலாக மாற்றி மலைகளின் சிகரங்களிலேயும்,
கணவாய்களின், ஆழத்திலேயும் எடுத்துச் சென்று தினம் தினம் ஒரு புதிய உதய கீதம் இசைக்கிறாய்.

உன்னுடைய கரங்களின் தொடுகையால் நான் ஆனந்தம் அடைகிறேன்.
என்னுடைய இளம் இதயமும் அதனால் விம்மிப் பெருமிதம் அடைகிறது.
என் இருதயத்தில் இருந்து கவிதையாகிய ஊற்றுப் பெருக்கெடுக்கிறது.

என்னுடைய இந்த அல்பமான இதயமாகிய பையில் நீ அற்புதமான தன்னம்பிக்கை தரும் பரிசுகளால் நிரப்பி விடுகிறாய். நீ எத்தனை முறை இவ்வாறு செய்தாயோ?
ஆனால் யுகங்கள் கழிந்து போயும், இது முடிவடையவில்லை.
என்னுடைய இதயம் ஆகிற பையோ இன்னும் காலியாக உனக்காகக் காத்திருக்கிறது.

Saturday, August 18, 2007

சுபாஷ் சந்திர போஸ்ஸுக்கு அஞ்சலி!




படம் இப்போத் தான் அப்லோட் செய்ய முடிஞ்சது. அதனால் தாமதம். அவர் மறைந்ததாய்ச் சொல்லப் பட்ட தினம் இன்று. இன்னமும் தீராத சர்ச்சையில் இருக்கும் தலைவர். தன் வீரர்களை "டெல்லி சலோ" என்ற ஒரே நோக்கத்திலும், "ஜெய்ஹிந்த்" என்ற தாரக மந்திரத்திலும் நம்பிக்கை வைக்கச் செய்தவர். காந்தியை விடவும் மக்கள் சக்தி இவருக்கு அதிகம் இருந்ததாய்ச் சொல்லப் படுகிறது. இந்த நாடு இவரை மறந்தாலும் நாம் நினைவு வைப்போம்.

அன்னாருக்கு அஞ்சலி!

Friday, August 17, 2007

சுட்ட படம் வேணுமா/ சுடாத படம் வேணுமா?

இந்தியாவிலே தான் குப்பைன்னு எல்லாம் இல்லை. இங்கே ஹூஸ்டனும் ஒரே குப்பை மயமாத் தான் இருக்கு. அதுவும் நாங்க நடைப் பயிற்சி போகிற "வால்மார்ட்" என்னும் வணிக வளாகத்தை அடுத்த முக்கிய வீதியானது "ஃப்ரீவே" எனப்படும் தேசீய நெடுஞ்சாலையை இணைக்கும் வீதியாக இருந்தும் அங்கே உள்ள நடைபாதையில் வால்மார்ட்டின் கழிவுகள் தேங்கிக் கிடக்கிறது. அது தவிர, வாடிக்கையாளர் சேவைக்கு என வைத்திருக்கும் தள்ளுவண்டிகள் கன்னாபின்னாவெனக் கிடக்கிறது மட்டுமில்லாமல், பக்கத்திலேயே உணவுப் பொருட்களும் இறைந்து கிடக்கிறது. இங்கே குடியிருப்பு வளாகத்தைச் சேர்ந்த நடைபாதையும் மோசம் என்றால் அதைச் சுற்றி வெளியே தெருவில் உள்ள நடைபாதையும் புல் முளைத்துக் கால் வைத்தால் மேடு, பள்ளம் தெரியாமல் இருக்கிறது. ஹிஹி, கீழே விழுந்தாச்சு அதிலே! :D இருந்தும் விடாமல் நாங்கள் நடக்கப் போகொறோம். இங்கே நான் இருப்பது யு.எஸ். என்பதை நினைவு செய்வது இங்கே உள்ள மக்கள் தான், மற்றபடி சென்னை போல்தான் இங்கேயும் சீதோஷ்ணமோ, மக்கள் நெருக்கமோ அல்லது குப்பைகளோ, பிச்சைக் காரர்களோ இருக்கிறார்கள்.

கடந்த ஒருவாரமாக அதிகம் எழுத முடியலை. முக்கிய காரணம் இந்த மடிக்கணினியில் தான் படங்கள் போட்டுப் பார்க்க வேண்டி உள்ளது. எந்த டிவிடி ஆனாலும் அது சரியாக இல்லை. இந்த விஷயத்திலும் இந்தியாவைத் தோற்கடிக்கிறது. அப்படியும் இப்படியுமாக் கஷ்டப் பட்டுப் பார்த்த படங்கள் விவரம் வருமாறு:

தெனாலி- முதல் முறையாப் பார்த்து, இதைப் பார்க்காத பாவத்தைப் போக்கிக் கொண்டேன்.

2.காதலிக்க நேரமில்லை- எத்தனாவது முறை, தெரியாது.

3.பொம்மலாட்டம்-இதுவும் சிலமுறை பார்த்தாச்சு

4.தம்பிக்கு எந்த ஊரு: மாதவியின் மேக்-அப் இவ்வளவு மோசம்னு இப்போத் தான் புரிஞ்சது. உடைத் தேர்வு ரசனையே இல்லை.

5.ரங்க் தே பசந்தி: இந்த வலை உலகிற்கு வந்தப்போ எல்லாம் இதைப் பத்தித் தான் எழுதினாங்க. இப்போத் தான் முதலில் பார்த்தேன். படம் நல்லா இருந்தாலும் குறிப்பிட சில காட்சிகள் வேணும்னு தேர்வு செய்த மாதிரி இருக்கிறது. ஆமீர்கானின் ஒருதலைப் பட்சமான போக்கைக் காட்டியது.

(6.மொழி: ரொம்ப நல்ல படம் என்பதோடு யதார்த்தமான வசனம், நடிப்பு, இசை,கதை அம்சம், டைரக்ஷன், எல்லாமே.

7.பருத்தி வீரன்: இன்னும் முடிவு பார்க்கலை. .

8.இக்பால்: அருமையான படம், நல்ல இயல்பான நடிப்பு. இக்பாலின் தங்கையாக நடிக்கும் பெண் ஒரு பிறவி நடிகை.) இது மூன்றும் மெம்பிஸில் பார்த்தேன்.

9.லகான்: எத்தனாவது முறை? தெரியலை. :D

10.ஹாட்-ட்ரிக்: நானா படேகரின் நடிப்பும், டானியின் நடிப்பும் நல்லா இருக்கு. முழுசும் சரியாப் பார்க்கலை.

11.ஏகலவ்யா: தலை சுத்தல், பாதி கூடப் பார்க்கலை.

12.லகே ரஹோ முன்னா பாய்: யதார்த்தமான படம். நடக்க முடியாத கனவுகளைக் கொண்ட "சிவாஜி"யை விட இது கொஞ்சம் ஏற்புடையதாய் இருக்கிறது. கொஞ்சம் முயன்றால் இதில் கண்டது நடக்கும் நாள் சாத்தியமே. ஆனால் தலைமை சரியாக இருக்க வேண்டும்.

ஆனால் முன்னாபாய் எம்.பி.பிஎஸ். பார்க்கலை. அதுக்குப் பதிலாய் வசூல்ராஜா பார்த்தேன், அப்படி ஒண்ணும் நல்லா இல்லை. இன்னிக்கு "ப்ளாக்" பார்க்கலாம்னு நினைச்சேன். மறுபாதி ஒத்துக்கலை. க்ர்ர்ர்ர்ர்ர்ர். அதான் கடமை ஆற்ற வந்துட்டேன். இது தவிர, இங்கே ஹூஸ்டன் வந்ததிலே இருந்து தினம் ஒரு சூடு வேறே போட்டுக்கறேனா? 4 நாள் முன்னாலே இடது உள்ளங்கையில் விரல்களில் எப்படினு தெரியலை சூடு பட்டு தட்டச்சு செய்ய முடியாமல் ஒரு கையால் தட்டச்சிக் கடமை ஆற்றினேன். இன்னிக்குக் கொஞ்சம் பரவாயில்லை.ஹிஹிஹி, ஸ்வாதி, அ.வ.சி. கோவிக்காதீங்க! :P அ.வ.சி. சினிமா பார்த்ததுக்கு. சூடு போட்டுக்கிட்டதுக்கு இல்லை. அது வழக்கம்தானேன்னு இங்கே முறைக்கிறார். :P

அதோட இல்லை, மெம்பிஸில் பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொண்டு மிரட்டும் செக்யூரிட்டி வார்னிங்க் இல்லையா, படங்களும் நல்லாச் சுட முடியுது. கணினியைத் திறந்ததுமே வரும் Trend MC PC Cillin Security Warning, you are not allowed to see this website. The website filter configuration does not allow. அப்படின்னு ஒட்டிட்டே கூட வரும். சில சமயம் என்னோட பதிவையே பார்க்க விடாது. மிரட்டல் அதிகமா இருக்கும்.இங்கே அந்தத் தொந்திரவு இல்லையா இந்தச்சாக்கில் எத்தனை வலைப்பூக்கள், எத்தனை விதமான பதிவுகள்னு பார்த்தேன் கணக்கே இல்லை.. வைகானசம், பாஞ்சராத்திரம் விவரம் தேடும்போது தேசிகன்,நா. கண்ணன், சடகோபன் இவங்களோட வலைப்பூக்களைத் திரும்பத் திரும்பப் படிச்சேன். தேசிகனுடையதும், கண்ணனுடையதும் சிலது முன்பே படிச்சிருக்கேன் என்றாலும் மற்றவைகளும் படிக்க முடிஞ்சது. கண்ணனுடைய சைவம் பற்றிய கருத்துக்களோடு ஒத்துப் போகமுடியவில்லை என்றாலும், படிக்கச் சுவையாகவே இருந்தது. சடகோபனின் பதிவுகளில் இருந்து எங்கே எல்லாமோ போய்ப் பார்க்க முடிந்தது. அப்படிக் கிடைத்தது தான் ஸ்ரீபீடியா. பின்னர் வல்லிசிம்ஹனும், "வி" என்பவரும் லிங்க் கொடுத்ததோடு அல்லாமல் திவாகரும் அனுப்பி உள்ளார்.

சிதம்பர ரகசியம் பதிவில் போடப் படங்கள் தேடும்போதும் இப்படி எதிர்பாராமல் கிடைத்த புதிய பதிவுகள் பல இருந்தாலும் முக்கியமாய்ச் சொல்லவேண்டியது இந்தப் பதிவு தான். natarajar.blogspot.com & navarathri.blogspot.com இரண்டுமே இவரோட வலைப்பூக்கள் தான். இதைத் தவிரவும் வலைப்பூக்கள் திருப்பாவை, திருவெம்பாவை, மயிலையில், காரைக்காலம்மையார், கைலாஷ் யாத்திரா என்ற பெயர்களில் இருக்கின்றன.எல்லாமே நல்லா அனுபவித்து மிக ஆழமான அர்த்தங்களோடும், உள்ளார்ந்த பக்தியோடும் எழுதி உள்ளார். அதிலேயும் நவராத்திரி வலைப்பூவில் உள்ள அம்மன் அலங்காரங்களோடு உள்ள படங்கள் மனதை நிறைக்கிறது. "கைலாஷி" என்ற பெயரில் எழுதி இருக்கும் இவரோட ஒரு வலைப்பூவில் இருந்து படங்கள் எடுத்துக் கொண்டதோடு அல்லாமல் இவரின் மானசரோவர் யாத்திரைக் கட்டுரையையும் வாசிக்க நேர்ந்தது. இந்திய வழியில் போயிருக்கிறார். மிகக் கடினமான பயணம், கொடுத்து வைத்திருக்கிறார். அற்புதமான இடங்களைப் பார்த்ததோடு அல்லாமல் பகிர்ந்தும் கொண்டிருக்கிரார். நவராத்திரி பற்றி எழுதி இருக்கும் பதிவுகள் அருமைனு ஒரே வார்த்தையில் சொன்னால் அது தப்பு. ஆகவே அதைப் புகழ வார்த்தைகளே கிடையாது. நீங்களே போய்ப் பார்த்துக்குங்க.

Wednesday, August 15, 2007

பெரியாழ்வாரின் குலக்கொடிக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!




இன்று ஆடிப்பூரம். அம்மன் கோவில்களிலே திருவிழாப் போல் கூட்டம் நெரியும். சகலவிதமான அம்மன்களுக்கும் வளைகாப்புப் போல் வளையாலேயே அலங்காரம் செய்து, மகிழுவார்கள். அம்மன் அழகா, வளை, அழகா, அதைக் காண வரும் பெண்கள் அழகா எனப் போட்டி போட்டு அனைவரும் அம்மன் அருளை நாடிப் போகும் நாள். இந்த நாள் இனிய நாளாக சுதந்திரத் திருநாளாகவும் அமைந்து விட்டது. மேலும் ஆடிப் பூரம் ஆண்டாளின் திருநட்சத்திரம். ஆண்டாளுக்கு, அண்ணனாக இருந்து அவள் எப்போவோ வேண்டிக் கொண்ட வேண்டுதலை நிறைவேற்றித் தந்ததைப் பற்றி, நம் கண்ணபிரான் ஒரு அருமையான கவிதை எழுதி இருக்கிறார். அவர் அளவுக்கு எனக்கு எழுத வராது.

திருவாழிபுரத்து ஜெகத்து உதித்தாளை, திருப்பாவை முப்பதும் செப்பினாளை, பெரியாழ்வார் பெற்றெடுத்த குலக்கொடியைப் போற்றிப் பாடுவோம். ஆண்டாளின் தமிழ் அழகுத் தமிழ், கொஞ்சு தமிழ், எளிமைத் தமிழ். அந்தக் காலத்திலேயே மழையின் விஞ்ஞான தத்துவத்தைப் பாடல் மூலம் காட்டியவள். அவள் தமிழை மட்டும் ஆளவில்லை. நம் மனங்களையும் ஆள்கிறாள். அவள் பாடல்களிலே இறைவனின் பத்து அவதாரங்களையும், அதன் சிறப்புக்களையும் குறிக்கிறாள். கூடவே அவள் பயன்படுத்திய தமிழ் வார்த்தைகள். உக்கம்= விசிறி, தட்டொளி=கண்ணாடி. கண்ணாடியைத் தமிழில் "தகளி" எனவும் சொல்வார்கள். இந்த அருமையான வார்த்தைகள் எல்லாம் இன்று எப்படி மறைந்து ஒழிந்து போயிற்று என நினைத்தால் ஆச்சரியமாய் உள்ளது.

அது போலே எதிர்மறைப் பொருளைக் குறிக்கும் சொல்லையும் ஆண்டாள் கையாண்ட பாணி வியக்கத் தக்கது. செய்வோம்=செய்யோம், முடிப்போம்=முடியோம், உண்போம்=உண்ணோம், ஓதுவோம்=ஓதோம், இந்த வார்த்தைகளும் வழக்கொழிந்து போய் விட்டது. தட்டொளி எப்போதில் இருந்து கண்ணாடி ஆயிற்று? புரியலை! செய்ய மாட்டோம்னு எப்போதில் இருந்து கூற ஆரம்பித்தோம்? புரியலை! ஆண்டாள் தமிழை மட்டும் ஆளவில்லை, அனைவரின் மனங்களையும் தான்.

வந்தே மாதரம்! வந்தே மாதரம்! ஜெய ஜெய வந்தே மாதரம்!





"பாரத பூமி பழம்பெரும் பூமி:
நீரதன் புதல்வர், இந்நினைவகற்றாதீர்!
பாரத நாடு பார்க்கெல்லாம் திலகம்
நீரதன் புதல்வர்:இந்நினைவகற்றாதீர்
பாரத நாடு பார்க்கெல்லாம் தெய்வமாம்
நீரதன் புதல்வர்; இந்நினைவகற்றாதீர்!

"மாணுயிர் பாரத தேவியின் மந்திரம்
வந்தே மாதரமே!
மாணுயிர் பாரத தேவி விரும்பிடும்
வந்தேமாதரமே!

வந்தே மாதரம்! வந்தே மாதரம்! ஜெய ஜெய ஜெய வந்தே மாதரம்!

Sunday, August 12, 2007

தனிக்குடித்தனம் எங்கே நடத்தறது?





ஹூஸ்டனில் இருந்த பழைய அபார்ட்மென்டின் ஒரு பகுதியை இங்கே போட்டிருக்கேன். மிச்சத்தில் எல்லாம் அடியேனுடைய திருமுகம் இருப்பதால் யாரும் பயந்துக்க வேணாம்னு ஒரு நல்ல எண்ணத்தில் போடவில்லை.

-புது அபார்மென்ட் படம் இன்னும் எடுக்கலை. எடுத்தால் போடறேன். படம் தான் போட வந்துடுச்சே! :D இது லிவிங் ரூம் என்று சொல்லப் படும் வரவேற்பு அறையின் பகுதி. இந்தப் பெரிய அறையைத் தான் தடுத்து ஒரு பக்கம் நுழைந்த உடனேயே சமையல் அறை, சாப்பிடும் இடம் எனப் பிரித்து இருப்பார்கள். அந்த 8க்கு 8 சமையல் அறையில் ஒரு பக்கம் அடுப்பும், அதைச் சார்ந்த சமைக்கும் இடமும் 2 அடிக்கு மேல் ஆக்கிரமித்து விடும். இன்னொரு பக்கம் பாத்திரம் கழுவும் தொட்டி முற்றம் எனப்படும் இடம் இரு பகுதிகளாய்ப் பிரிக்கப் பட்டு இருக்கும். இது எல்லாத்துக்கும் மேலே தான் நான் குறிப்பிட்ட அலமாரிகள் இருக்கும். அதில் முதல் தட்டில் எனக்கு அடிக்கடி வேண்டிய மளிகைப் பொருட்களை நான் எடுக்கிறாப்பல வைத்துக் கொள்வேன்.

ஆனால் என்னோட மறுபாதி இருக்காரே, க்ர்ர்ர்ர்ர்., அவர் ஒழித்துச் சுத்தம் செய்கிறேன், பேர்வழின்னு எல்லாத்தையும் எடுத்து அவர் கைக்கு எட்டறாப்பல வச்சுடுவார். இது தெரியாத அப்பாவியான நான் நேத்து வச்ச பொருள் இன்னிக்குக் காணோமேன்னு, பேந்தப் பேந்த முழிச்சுட்டு, அப்புறம் அவரைக் கூப்பிட்டு எங்கேன்னு தெரியுமான்னு கேட்டால், மனுஷன் பதிலே பேசாமல் வந்து எடுத்துக் கொடுப்பார். அத்தோட விட்டதா? அவர் மளிகைப் பொருட்கள் எடுக்கும் இடத்தின் கீழே உள்ள கவுன்டரில் ரைஸ் குக்கர் வச்சிருப்பேன். சாதம் ஆகி இருக்கும். அது ப்ளகைப் பிடுங்கலைனால் சாதம் அடியிலே போய்ப் பிடிக்கும். மிக்சியில் ஏதாவது அரைச்சுட்டு இருந்திருப்பேன். அது பாதியில் நிற்கும்.

இந்தப் பக்கம் மின் அடுப்பில் ஏதாவது இருக்கும். அந்தக் குறுகிய இடத்தில் அதைக் கிளறி விடறேன் பேர்வழின்னு சுட்டுக் கொண்டு அலறுவேன். ஆனால் அவருக்கு இது
மாதிரி நான் சுட்டுக்கிறது, கத்தறது எல்லாம் பழக்கம் ஆயிடுச்சுங்கிறதாலே மும்முரமா மறுபடி ஒரு முறை சாமான்களை வரிசைப் படுத்தி வைக்கிறதாய் நினைச்சுக் கலைத்துக் கொண்டிருப்பார்.


குறைந்த பட்சம் அரை மணி நேரம் அங்கேயே மும்முரமாய் வேலை செய்து கொண்டிருப்பார். நான் காலை 9 மணிக்கு சமைக்க வரதுக்கு முன்னாலே இது எல்லாம் முடிச்சுக்குங்கனு எத்தனை முறை சொல்லிட்டேன். கேட்கிறதே இல்லை! :P உடனேயே ஒரு பாரத யுத்தம் ஆரம்பிக்கும். நல்லவேளையா ஆடியன்ஸ் யாரும் கிடையாது இங்கே! :D சரி, இதான் போச்சு, காயாவது நறுக்கிக் கொடுக்கிறேன், தனியாக் கஷ்டப் படவேண்டாம்னு சொல்றாரேன்னு நினைச்சு சரினு சொல்லுவேன். அப்போ மறுபடியும் ஒரு யுத்தம் ஆரம்பிக்கும்.

நான் அவியலுக்கு மட்டும் மெல்லிதாய் நீளமாய்க் காய்கள் நறுக்குவேன். இவர் எல்லாத்தையும் அப்படியே நறுக்குவார். வதக்கல், பொரியல் என்றால் மெல்லிதாய் வட்டமாய் நறுக்கச் சொன்னால் கனம் கனமாய் நறுக்கி வைப்பார். அது வதங்கவும் செய்யாது, பொரிக்கவும் முடியாது. இந்த லட்சணத்தில் சொல்லிக்கிறார்: நான் யு.எஸ். வந்து ஒரு கல்யாணத்துக்குக் காய் நறுக்கிற அளவு தேர்ந்து விட்டேனாக்கும்னு ஒரே பெருமை! அதை விடப் பெருமை, சாமான்கள் எல்லாம் அடுக்கி அலமாரியைச் சுத்தம் செய்வது என்று எல்லாவிதத்திலும் எனக்குக் கை கொடுக்கிறாராம். என்னத்தைச் சொல்றது. இப்படியாக நான் தனி ராஜ்யம் நடத்தி வந்த சமையல் அறையில் என்னோட அதிகாரத்தை மெல்ல மெல்லப் பிடுங்கி விட்டார். எல்லாம் ஹெட் லெட்டர். :P

பிள்ளையார் சுழி ஏன் போடணும்?




எதை எழுத ஆரம்பிச்சாலும் பிள்ளையார் சுழி போட்டுட்டுத் தான் எழுதறோம். இல்லையா? அதுக்கு இரண்டு காரணங்கள் உண்டு. உலகில் முதன் முதல் எழுத ஆரம்பித்தவரே நம்ம பிள்ளையார் தான். என்ன ஆச்சரியமா இருக்கா? ஆமாம், வியாசரின் மகாபாரதத்தை அவர் சொல்லச் சொல்லத் தன் தந்தத்தை உடைத்து எழுத்தாணியாக்கி எழுதி வந்தவர் பிள்ளையார் தான். அதுவும் எப்படி? வியாசர் சற்றும் நிறுத்தாமல் சொல்லிக் கொண்டே போவார். இவர் எதிர்க்கேள்வி கேட்காமல் எழுதிக் கொண்டே போக வேண்டும். ஒரு கட்டத்தில் வியாசருக்குப் பயமே வந்துடுச்சாம், என்னடா இது! இந்தப் பிள்ளையார் எழுதற வேகத்துக்கு நம்மால் சொல்ல முடியாது போலிருக்கேன்னு. உடனே என்ன செஞ்சாராம் தெரியுமா? நான் சொல்ற ஸ்லோகங்களோட அர்த்தத்தைப் புரிந்து கொண்டு எழுத வேண்டும் என்று பிள்ளையாரிடம் சொல்லி விட்டார். வேதமுழு முதல்வனான பிள்ளையாரைச் சோதனை போட்டால் சரியா வருமா? அவரும் அப்படியே சரின்னு அர்த்தம் புரிந்து கொண்டு எழுத ஆரம்பித்தாராம். இதுக்காகவே ரொம்ப யோசித்து, யோசித்துச் சிக்கலான பதங்களையும், அரத்தங்களையும் கொண்ட ஸ்லோகங்களை வியாசர் சொல்ல விநாயகர் மெளனமாய் அதன் பொருளை உணர்ந்து எழுதி வந்தார். பத்ரிநாத்தில் வியாசர் மகாபாரதம் எழுதிய குகையும், பிள்ளையார் எழுதியவாறு அமர்ந்த கோலத்தில் இருப்பதையும் தரிசிக்கும் வண்ணம் ஒரு கோயில், பத்ரிநாத்தில் இருந்து சீன எல்லைக்குப் போகும் வழியில் உள்ள "மானா" என்னும் கிராமத்தில் உள்ளது. இப்போதும் அந்தக் கோவிலையும், வியாசர் இருந்த குகையையும் தரிசிக்கலாம்.

பிள்ளையார் சுழிக்கு இன்னொரு காரணமும் உண்டு. சுழி என்பதே வளைசல், வக்ரம் என்றுதான் அர்த்தம். விநாயகரின் தும்பிக்கை வளைந்து சுருட்டிக் கொண்டு இருக்கிறது அல்லவா? பிள்ளையார் சுழி எப்படிப் போடுகிறோம்? முதலில் ஒரு வட்டம், அதுவும் அரை வட்டம், பின் ஒரு நேர்கோடு. பொதுவாய்ச் சக்கரங்கள் சுற்றுவதற்கு மத்தியில் ஒரு அச்சு வேண்டும். அந்த அச்சு வளையாமல் நேராக இருந்தால் தான் சக்கரம் சுற்றும். நாம் தீபாவளிக்கு விஷ்ணு சக்கரம் சுற்ற ஒரு நேரான கம்பியைத் தான் உபயோகிக்கிறோம் இல்லையா? அது போல்தான். இந்த உலகும், கிரகங்கள் அனைத்தும் வட்டமாய்த்தான் சுற்றி வருகின்றன, சூரிய சந்திரர் உள்பட. ஆனாலும் அவை எல்லாவற்றுக்கும் ஒரு ஆதாரமான சக்தி இருக்கும் இல்லையா? அது ஒரு நேர்கோடாய்த் தான் இருக்க முடியும். இதை நினைவு கூரவும் நாம் வட்டத்தை அரை வட்டமாய்ப்போட்டு விட்டுப் பின் ஒரு நேர்கோடு போடுகிறோம். மின்சாரம் எடுக்க எப்படி நீர்த்தாரையில் இருந்து சக்கரங்களை இணைத்து, அதாவது வட்டத்தில் இருந்து நேர்க்கோடாக மின்சாரத்தை எடுக்கிறோமோ அது போல்தான் இதுவும்.
"அ" "உ" "ம" மூன்றும் இணைந்தது தான் "ஓம்" என்னும் பிரணவம். அதை ஆங்கிலத்தில் எழுதும்போது "AUM"என்றே எழுத வேண்டும். இந்த அரை வட்டத்தில் ஆரம்பித்து நேர்கோடாக முடிகிற பிள்ளையார் சுழிக்கு இது தான் அர்த்தம். சிவசக்தியின் ஐக்கியத்தையும் குறிக்கிறது. "அ" என்ற சிருஷ்டியில் ஆரம்பித்து "உ" என்ற எழுத்தால் காப்பாற்றப் பட்டுக் கடைசியில் "ம" என்னும் எழுத்தால் சம்ஹாரம் செய்யப் படுகிறோம் அல்லவா? இந்த மூன்றில் நடுவில் உள்ள காக்கும் எழுத்தையே பிள்ளையார் சுழியாகப் போட்டு, அனைத்துக்கும் ஆதாரமும் இவரே, முடிவும் இவரே, சரணும் இவரே என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

Saturday, August 11, 2007

விட்டுட்டேன், சத்தியமாத் தொந்திரவு செய்ய மாட்டேன்! :D

இதை முதல்லே இந்தப் பதிவுகள் பக்கம் போடலாமா, வேணாமானு ரொம்ப யோசிச்சேன். அப்புறம் இந்தக் கவிதைகள், ஸ்லோகங்கள், பாடல்கள் இவற்றில் உள்ள பொருளை நாம் உணர வேண்டுமானால் சொற்களை மாற்றிப் போட்டுப் படிக்க வேண்டி உள்ளது. இது எல்லா மொழிக்கும் பொருந்தும். ஆகவே இந்தப் பதிவுப் பக்கத்துக்கு வரும் நபர்களின் எண்ணிக்கையை மனதில் வைத்து இங்கேயே எழுதுகிறேன்.
*************************************************************************************

பாண்டவர்கள் வனவாசம் போனதும் நம் அனைவருக்கும் தெரியும். அதில் கடைசி ஒரு வருஷம் அவர்கள் அறிந்தவர், தெரிந்தவர் கண்களில் படாமல் அக்ஞாதவாசம் இருக்க வேண்டும் என்ற கட்டளையை ஒட்டி, விராட நாட்டுக்கு வந்து அக்ஞாத வாசம் செய்கின்றனர். அவர்களை எப்படியாவது வெளிக் கொணர நினைத்த துரியோதனனும், அவனுடைய சகோதரர்களும், பாண்டவர்களின் ராஜ பக்தியை நன்கு உணர்ந்து, விராட அரசனுக்குக் கெடுதல் செய்தால் பாண்டவர்கள் சும்மா இருக்க மாட்டார்கள் என்று விராட நாட்டின் எல்லையில் உள்ள பசுக்கள் மந்தைக்கு வந்துப் பசுக்களை எல்லாம் பிடித்துக் கொண்டு போக ஆரம்பித்தனர். இது அதிகம் ஆகி பசுக்களின் சொந்தக்காரர்கள் விராட அரசனிடம் முறையிடவே, பசுக்களை ஓட்டிச் செல்பவருடன் போர் நடத்துவதற்காக விராட அரசகுமாரன் உத்தரகுமாரனைத் தயார் செய்கின்றனர். பயந்த சுபாவம் கொண்ட விராட இளவரசனின் தேரோட்டியாக வருவது வீரம் நிறைந்த அர்ஜுனனன். அவன் இருப்பதோ பெண் வேஷத்தில். அரசனையும், இளவரசனையும் சமாதானப் பேச்சுக்களால் தைரியம் சொல்லிவிட்டு விராட இளவரசனின் பயத்தைப் போக்கும் விதமாய்த் தானே வில், அம்பு எடுத்துப் பாணங்கள் மழை பொழிகிறான் அர்ஜுனன். அப்போது கெளரவரின் படைகளுடன் வந்திருந்த பீஷ்மர் ஒரு பெண்ணா இப்படி வில்லில் விளையாடுவது என அதிசயிக்க உடன் வந்த துரோணருக்குத் தன் மாணாக்கனை அடையாளம் தெரிந்து விடுகிறது. ஆனால் அது அர்ஜுனன் தான் என்று அனைவருக்கும் தெரியும் படி சொல்லி விட்டால் பின் அவர்களின் அக்ஞாதவாசம் வெளிச்சத்துக்கு வந்து விடும் அல்லவா? ஆகவே மறை பொருளில் பதில் சொல்கிறார். மேலோட்டமாய்ப் பார்த்தால் முன் பதிவில் கண்ட அர்த்தம் தான் வருகிறது அல்லவா?

"நதீஜலம் கேசவநாரி: கேது: நகாஹவ்யோ நாம நகாரிஸூனு:
ஏஷாங்கநா வேஷதர: கிரீடி ஜித்வா வயம் நேஷ்யதி சாத்ய காவ:"
என்பது ஸ்லோகம்.
நதீஜலம் கேசவநாரிகேது என்று வருவதை, "நதீஜ+லங்கேச+வநாரிகேது" என்று பிரித்துக் கொள்ள வேண்டும். நதீஜ என்பது இங்கே உண்மையில் பீஷ்மரைக் குறிக்கிறது. கங்கையின் மைந்தர் அல்லவா? அடுத்து லங்கேச வநாரி கேது= லங்கேசன் என்றால் ராவணன், வநாரி=வனங்களை அழித்த சத்துருவை, கேது=கொடி
"ராவணனின் வனங்களை அழித்த அனுமனைத் தன் கொடியாகக் கொண்ட" என்று அர்த்தம் வரும்.

நகாஹவ்யோ நாம= நகம் என்றால் மரம் அல்லது மலை என்று முன்பே பார்த்தோம். மரத்துக்கு அர்ஜுனன் என்றும் வடமொழிப் பெயர் உண்டு. ஆகவே இங்கே அருஜுனனின் பெயரை மறைமுகமாய்க் குறிக்கிறது. அடுத்தது நகாரிஸூநு= இந்த இடத்தில் மலைகளின் விரோதிக்குப் பிள்ளை என்று அர்த்தம் செய்து கொள்ள வேண்டும். மலைகளின் கர்வத்தைத் தன் வஜ்ராயுதத்தால் அடக்கியவன் இந்திரன். இந்திரனுடைய வரத்தால் பிறந்தவன் அர்ஜுனன். ஆகவே நகாஹவ்யோ நாம நகாரி ஸூநு= என்பது அருஜுனனைக் குறிக்கிறது.

ஏஷ அங்கனா வேஷதர:கிரீடி= கிரீடி என்பது அருஜுனனின் சிறப்புப் பெயர். அவனின் வீரத்தைப் பாராட்டி இந்திரனால் கொடுக்கப் பட்டது. ஏஷ அங்கனா வேஷதர=பெண் வேஷம் போட்டுக் கொண்டிருக்கும் இந்த அர்ஜுனன் என்ற பொருள் வரும்.

கடைசியில் (இத்தோடு விட்டு விடறேன், ஜூட்!) ஜித்வா வயம் நேஷ்யதி சாத்ய காவ:
இதில் ஜித்வா வயம்= ஜித்வா வ+யம், நேஷ்யதி, ச+அத்ய, க+ அவ: எனப் பிரித்துக் கொள்வதோடு மட்டுமில்லாமல் முதலில் பொருள் கொள்ள வேண்டியது ச அத்ய= மேலும் இப்போது, யம்=எந்த துரியோதனனை (இங்கே மறை பொருளாய்க் குறிக்கும்) ஜித்வா=ஜெயித்து, வ=உங்களுடைய, கா=பசுக்களை, நேஷ்யதி=ஓட்டிப் போகப் போகிறான், அ=அவனை, அந்தத் துரியோதனனை, அவ:=அவனைக் காப்பாற்றுங்கள்."

"கங்கையின் மைந்தரே! மலைகளின் விரோதியான இந்திரனின் பிள்ளையான அருஜுனன் தான் பெண்வேஷம் தரித்து வந்திருக்கிறான். துரியோதனால் கவர்ந்து செல்லப் பட்ட பசுக்களைத் திரும்ப அவன் ஓட்டிச் செல்லப் போகிறான். இவனிடம் இருந்து துரியோதனனைக் காப்பாற்றுங்கள்.' இது தான் துரோணர் மறை முகமாய்ச் சொன்னது. ஆகவே எதிலும் நேர் பொருள் ஒன்று இருக்கும். மறை பொருள் வேறேயாக இருக்கும். தமிழிலும் பழங்காலத்தில் எழுதிய சித்தர்களின் ஓலைச் சுவடிகளில் மிகுந்த மறை பொருள் உண்டு. அவற்றைப் பற்றி இந்தத் தலை சுற்றலில் இருந்து நீங்க எல்லாம் மீண்டு வந்து தெளிந்த பின்னர் எழுதறேன்.

Friday, August 10, 2007

"குட்டு" உடைந்து விட்டது! எனக்கு இல்லை!

"மகா பாரதக் குட்டு" என்ற வார்த்தையை முதன் முதல் "தெய்வத்தின் குரல்" புத்தகத்தின் மூன்றாம் பகுதியில் தான் பார்த்தேன். இது நாம் பிள்ளையாருக்குக் குட்டிக் கொள்ளும் குட்டு என்று சொல்ல முடியாது. இது வேறே இதை "GHUDDU" என்று உச்சரிக்க வேண்டும். இந்த உச்சரிப்பினால் அர்த்தமே மாறி விடுகிறது. யாரையாவது பார்த்து உன்னோட விஷயம் வெளியிலே தெரிஞ்சு போச்சுன்னு சொல்றதுக்கு நாம் பொதுவாய், "உன் குட்டு உடைஞ்சு போச்சு" என்போம் அல்லவா? இந்த அர்த்தம் தான் அதுக்கு. இதுக்கும் மகாபாரதத்துக்கும் என்ன சம்மந்தம்? இதோ சொல்றேன்.

பொதுவாய்க் கவிதைகளையோ, அல்லது செய்யுளையோ பதம் பிரித்துப் பார்த்து அர்த்தம் எழுதச் சொல்லுவார்கள். நம் வலை உலகத் திருப்புகழ் மணியான திரு விஎஸ்கே மிகவும் அனாயாசமாய் இவ்வாறு திருப்புகழின் பதம் பிரித்து அர்த்தம் சொல்லுவதைப் பார்த்துப் பொறாமைப் பட்டிருக்கேன். அதே மாதிரி முத்தமிழில் ஒருத்தர் இருக்கார். நாயன்மார்களுக்குச் சேவை செய்து கொண்டு, அந்தாதியும், திருப்புகழின் சந்தத்திலேயே கவியும், சிலேடைக்கவிகள் எழுதிக் கொண்டும், எந்த வார்த்தைக்காவது நமக்கு அர்த்தம் தெரியலைன்னால் இவரைக் கேட்டால் போதும், அர்த்தம் சொல்லுவதோடு அதற்கான சுட்டியும் கொடுத்து விடுவார். இவரைப் பார்த்துப் பொறாமைப் பட்டால் நடக்கிற வேலை இல்லைனு விட்டுட்டேன். தமிழிலேயே இம்மாதிரி பதம் பிரிக்கும்போது அர்த்தங்கள் மாறி வரும்போது வடமொழியில் கேட்கணுமா? அங்கேயும் உச்சரிப்பிலும் அர்த்தம் மாறும், பதம் பிரிக்கும்போதும் அர்த்தம் மாறுகிறது. அது தான் எப்படின்னு பார்க்கப் போகிறோம். இது நான் ஆராய்ந்து பதம் பிரித்து, வேலை மெனக்கெட்டு செய்யவில்லை. மகாஸ்வாமிகள் எடுத்துக் காட்டி உள்ளார். அதை நான் இங்கே எடுத்துக் கையாள்கிறேன். அந்த அளவுக்கு எனக்கு அதிர்ஷ்டம் இருக்குன்னு பெருமையாத் தான் இருக்கு.

மகாபாரதத்தை வியாசர் சொல்லச் சொல்லப் பிள்ளையார் எழுதி வந்தார்னு நாம் எல்லாரும் அறிந்து வச்சிருப்போம். நடுவிலே பேசக் கூடாதுன்னு விதி வேறே. அதையும் ஒத்துக் கொண்டார் பிள்ளையார். வியாசர் சொல்லும் வேகத்துக்குக் குறையாமல் எழுத வேண்டும். சரி, தலை ஆடியது பிள்ளையாருக்கு. இந்தப் பிள்ளையார் பொல்லாதவாராச்சே. தன் தந்தத்தை உடைத்துக் கொண்டு எழுத ஆரம்பிச்சவரோட வேகத்துக்கு வியாசரால் ஈடு கொடுக்க முடியவில்லை. பார்த்தார் வியாசர்! என்னடா இது, இவர் வேகத்துக்கு நாம் சொல்ல முடியலைனால் சரியா வராதேன்னு நினைச்சுப் பிள்ளையாரிடம் அர்த்தமும் புரிஞ்சுக்கணும்னு இன்னொரு நிபந்தனை போட்டார். பிரணவஸ்வரூபமே பிள்ளையாராக வந்திருக்கும்போது, அதனிடம் ஆணையாவது, ஆனையாவது! இந்த ஆனை அதுக்கும் தலையை ஆட்டியது. வாய் திறக்கவில்லையே! மூச்! வியாசர் நடு நடுவில் சிக்கலான பதங்கள் உள்ள ஸ்லோகங்களாய்ச் சொல்லிக் கொண்டே வந்தார். அதில் ஒரு ஸ்லோகமும், அதன் மேலோட்டமான அர்த்தமும் பார்ப்போமா?

"நதீஜலம் கேசவநாரி:கேது:நகாஹ்வயோ நாம நகாரிஸூனு:
ஏஷாங்கநாவேஷதர: கிரீடி ஜித்வா வயம் நேஷ்யதி சாத்ய காவ:"

மேலோட்டமாய் இந்த ஸ்லோகத்தின் அர்த்தத்தைப் பார்த்தோமென்றால்,
"நதீஜலம்=ஆற்றுத் தண்ணீர்,
கேசவநாரி கேது:= கேசவனுடைய ஸ்த்ரீயின் அடையாளம்
நக= மலை அல்லது மரம் நகாஹவ்யோ நாம=நகம் என்று (அதாவது மரம் அல்லது மலை) பேர் உள்ளவன்
நகாரிஸூனு:=மேற்சொன்ன இந்த நகத்தின் விரோதியின் பிள்ளை
ஏஷாங்கனா வேஷதர கிரீடி= கிரீடம் வைத்துக் கொண்டிருக்கிற இந்தப் பெண் வேஷக் காரன்
ஜித்வா= ஜெயித்து
வயம்= நாங்கள்
நேஷ்யதி= கொண்டு போகிறான்
சாத்ய (ச, அத்ய)= ச= மேலும், அத்ய= இப்போது
காவ:=பசுக்கள்.

கிரீடம் வைத்துக் கொண்டிருக்கிற இந்தப் பெண்வேஷக் காரன் ஆற்றுத் தண்ணீர். கேசவனுடைய ஸ்திரீயின் அடையாளம், மலை அல்லது மரம் என்ற பேர் உள்ளவன். மலை அல்லது மரத்துக்கு விரோதியின் பிள்ளை. நாங்கள் ஜெயித்து மேலும் பசுக்கள் கொண்டு போகிறான்." அர்த்தம் புரியுதா? தலை சுத்துதா? இந்த ஸ்லோகம் பிறந்த நிகழ்ச்சியும், இந்த ஸ்லோகத்தைச் சொன்னவராக வியாசர் யாரைக் குறிப்பிடுகிறார் என்பதையும், இந்த ஸ்லோகத்தைக் கேட்டவரும், அதன் காரணமும் உண்மையான அர்த்தமும் நாளைக்குப் பார்ப்போமா?

டிஸ்கி: எல்லாருக்கும் புரியணும்னு கொஞ்சம் எளிமையாத் தான் தர முயற்சி செய்திருக்கேன். புரியாதவங்க மன்னிக்கவும். புரியாத இடத்தில் தெரிந்த விளக்கம் கொடுக்கக் கடமைப் பட்டுள்ளேன்.

பல்/(மும்)முனைத் தாக்குதலில் தலைவி! எச்சரிக்கை!

ஒரு வாரமாவே எனக்கு நேரம் சரியில்லை, எல்லாம் ஹெட் லெட்டர். முந்தாநாள் பாருங்க, இந்த அபி அப்பா கிட்டே சரபர் படம் எடுங்கன்னு சொல்லிட்டுக் காபி ஆத்தப் போனேன். என்ன, தலையும், புரியலை, வாலும் புரியலையா? அது ஒண்ணுமில்லை, அமெரிக்கா வந்ததிலே இருந்து நான் காலையிலே களப்பணி ஆற்ற உட்கார்ந்து விடுவதைத் தெரிந்து கொண்டு, தொண்டர்கள், தங்கள் வேண்டுகோளுடனும், மனுக்களுடனும் எனக்கு மெயிலிக் கொண்டிருப்பார்கள், அல்லது கூகிளில் "சாட்"டிக் கொண்டிருப்பார்கள். நானும் காபி ஆற்றும் நேரம் முடிஞ்சு போச்சுன்னா கொஞ்சம் நிம்மதியா உட்கார்ந்து கடமை ஆற்றுவேன், கூடவே அப்போ அப்போ களப்பணியும். அப்போ முந்தாநாள் மாட்டிக் கொண்ட அபி அப்பாவிடம் வேலை மெனக்கெட்டு லிங்க் கொடுத்து, சரபர் படம் எடுத்து என்னோட ப்ளாகில் போடச் சொல்ல நினைத்து, லிங்க் மட்டும் கொடுத்து, படத்தை எடுங்க, வரேன்னு சொல்லிட்டு, என்னோட மறுபாதிக்குக் காபி ஆத்தப் போனேனா? அவசரக் குடுக்கை! நானில்லை, அபி அப்பாதான், படத்தை எடுத்து அதை மெயில் பண்ணிட்டு உட்கார்ந்திருக்கார். என்ன அவசரம்னு கேட்டதுக்கு, இதோ ஆணி பிடுங்கிட்டு வரேன்னு போனவர்தான், இன்னிக்குத்தான் வந்தார், கூடவே கைப்புள்ளைக்கும், வேலை இல்லா வெட்டிக்கும் தகவல் கொடுத்துட்டு!

மனுஷனுக்கு நான் என்ன கெடுதல் பண்ணினேன்னு தெரியலை, இன்னிக்கு ஒரு பக்கம் கைப்புள்ள, அம்பி நம்பர் கொடுங்க, மெயில் அட்ரஸ் கொடுங்கனு அம்பியின் இணைபிரியா நண்பனாக மாறப் போறேன், அவரோட அனுபவம் ஒரு மாதம் அதிகம் ஆனதால் பூரிக்கட்டை அடி வாங்கறதிலே எக்ஸ்பர்ட் ஆயிட்டார்னு கேள்விப்பட்டேன்னு தொணதொணப்பு, நானும் கேட்டுத் தெரிஞ்சுக்கணும்னு ஒரே ஆர்வம்! அடுத்த மாசம் தனிக்குடித்தனம் வைக்கப் போறார் போலே! :P இன்னொரு பக்கம் அபி அப்பா, ஏதோ கேட்கிறார். நடுவிலே இந்த வேலை இல்லா வெட்டி, வந்து இவர் எங்கே இருந்து வந்தார்? யாரு அனுப்பிச்சாங்கனு புரியலை, ராம், ராம், ஒரே ஊரா இருந்துட்டு இப்படி என்னைப் பழி வாங்கலாமா? தமிழா அது? என்ன மொழியிலே எழுதறார்னே புரியலை, அறுத்துத் தள்ளிட்டார். இந்த லட்சணத்திலே மதுரை ப்ளாகிலே வேறே எழுத ஆரம்பிச்சிருக்கார். யாரு படிக்கிறது? எனக்கு ஏன் இந்தத் தண்டனைனு புரியலை! :P இது யார் செய்த சதி? எதிர்க்கட்சிகளா? அம்பியா? நேத்திக்கு வேலை மெனக்கெட்டு அம்பியோட பேசினதுக்கு இதுவா பரிசு? சேச்சே நட்புக்குத் துரோகம் செய்யலாமா? இப்படி மும்முனைத் தாக்குதல் நடக்கும்போதே அபி அப்பாவுக்கும், கைப்புள்ளக்கும் மெசெஞ்சர் வேலை வேறே பார்க்க வேண்டி வந்துடுச்சு. இவர் மெயில் ஐடியை அவருக்கும், அவர் ஐடியை இவருக்கும் கொடுத்ததும் அடுத்த நிமிஷம் இரண்டு பேருமே ஆளே காணோம். என்ன அநியாயம், ஒண்ணுமே புரியலையே? யார் செய்த சதி இது? அபி அப்பா, கைப்புள்ள உங்களுக்கே இது நல்லா இருக்கா? ஒரு அப்பாவியை இப்படியாப் பழி வாங்கறது?

இதெல்லாம் பத்தாதுன்னு இந்த வேலை இல்லா வெட்டியோட தொந்திரவு வேறே. தமிழ்னு சொல்லிட்டு வேறே ஏதோ மொழியில் பயமுறுத்தல், அறுவை, பின்னூட்டம் போடுவேன்னு மிரட்டல் எல்லாம். நான் எங்கே இருக்கேன்னு கண்டுபிடிக்கிறேன் பேர்வழின்னு பூகோளம் தெரியும்னு காட்டிட்டு ஒரு அலட்டல்! :P நான் எழுதற பதிவு ஒண்ணும் நல்லா இல்லைனு விமரிசனம். ஆன்மீகம், சமையல் தவிர வேறே எழுதவே மாட்டீங்களா பெண்கள் அப்படின்னு ஒட்டுமொத்தமாப் பெண்குலத்தை ஒரு தாக்கு! பெண்குலமே திரண்டு எழுக! வேலை இல்லா வெட்டியைப் பழி வாங்குங்க! தோள் கொடுப்பீர் தொண்டர்களே! இந்தச் சமயம் பார்த்துக் கண்ணபிரான் வேறே சைகிள் காப்பிலே சான்ட்ரோ ஓட்டாதீங்கனு கவுண்டர் மூலமா மெசேஜ் கொடுத்து மிரட்டல்! அம்பிக்குக் கவுண்டரோட ஆதரவு இருக்குனு மறைமுகமாச் சொல்லிக் காட்டறார். இந்தக் கவுண்டமணி, செந்தில் காமெடி சினிமாவிலே கூட நான் ரசிக்க மாட்டேனே! :P கடவுளே, நான் யார் முகத்திலே விழிச்சேன்! ஒண்ணுமே புரியலியே! மொத்தத்தில் இந்த வாரமே நம்மது இல்லைங்க!

Tuesday, August 07, 2007

அதெல்லாம் மாற மாட்டோம், அப்படியே இருப்போம்!

இன்னிக்கு வேறே யாருமே கிடைக்கலை, இன்னிக்கு என்ன? கொஞ்ச நாளாவே இப்படித்தான் இருக்கா? அதனாலே என்னோட மறுபாதியைத் தான் ஒரு வழி பண்ணலாம்னு இந்தப் பதிவு! நிச்சயமாய் அவர் படிக்க மாட்டார்ங்கிற தைரியம் தான்! அமெரிக்கா வந்ததிலே இருந்து கிழக்கும், மேற்குமா இருக்கிற , எப்போதும், என்னை ஒரு "அசடு" என்று நம்பிக்கொண்டிருக்கும் என்னோட மறுபாதிக்குப் பொழுதே போகவில்லை. மெம்பிஸில் இருந்த வரைக்கும், காலை எழுந்ததும் தோட்டம், மாலையில் பிறகு தோட்டம்னு போய்த் தோட்டக்கலையில் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களை மிரட்டிக் கொண்டிருந்தார். மிச்ச நேரம் என்ன செய்யறது? அங்கே தமிழ்ப்புத்தகத்துக்கும் வழி இல்லை. விஜய் டி.வியின் மறு ஒளிபரப்பையே எத்தனை நேரம் பார்க்கிறது? அங்கே தான் நான் கை கொடுத்தேன்! கணவனுக்கு உதவிய காரிகை என்ற பெயரும் பெற்றேன். எப்படிங்கிறீங்களா, கீழே படிக்கவும்.

இந்த அமெரிக்காவில் அது அபார்ட்மென்ட் வீடானாலும் சரி, தனி வீடானாலும் சரி, சமையல் அறையில் எல்லாம் "கிட்சன் காபினெட்" என்று சொல்லப் படும் முறையில் உள்ள தனித்தனியான சிறு சிறு அலமாரிகள்தான். அதில் நம்ம ஊர் அரிசிப்பானை எல்லாம் வைக்கவே முடியாது. ஒரு அடி, ஒரு அடி உயரத்தில் 3 தட்டுக்கள் போட்டு மின் அடுப்புக்கு இரு பக்கமும், இரு அலமாரியும், மின் அடுப்புக்கு மேலே உள்ள இடத்தில், மைக்ரோவேவ் அடுப்பும், அதுக்கு மேலே சிம்னியும், அதுக்கும் மேலே இன்னொரு தட்டே இல்லாத அலமாரியும் இருக்கும். கவுன்டர் என்று பொதுவாக அழைக்கப் படும் மேடை மின் அடுப்பைச் சுற்றி இருக்கும். அங்கங்கே மின் இணைப்புக்கள் இருக்கும். இந்த மின் இணைப்புக்களில் மிக்ஸி, ப்ரெட் டோஸ்டர், ரைஸ் குக்கர், காஃபி மேக்கர் போன்றவை வைத்து இடம் மீதி இருந்தால் உங்கள் அதிர்ஷ்டம். கிரைண்டரை வைக்கணும்னா எதையாவது எடுத்து வச்சுட்டுத் தான் வைக்கணும். அப்புறம், அது பட்டர் ஃப்ளைனால் வாரி அடிச்சுக் கார்பெட் எல்லாம் வீணாகிறது தனிக் கதை! அது அப்புறமா! இந்தக் கவுன்டரின் பக்கம் சுவர் என்று ஒன்று இருந்தால் ஒரு அலமாரி அதிகமாய் உங்களுக்குக் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. சில இடங்களில் கவுன்டர் பாதி திறந்து டைனிங் டேபிள் போடும் இடத்தை நோக்கியோ அல்லது, லிவிங் ரூமைப் பாதி தடுத்துக் கொண்டோ இருக்கும். அந்த இடத்தில் என்னத்தை சாமான்கள் வைத்து என்னத்தை சமைக்கிறது? நமக்கா உப்பில் இருந்து, புளிவரை கிலோ, கிலோவாக வாங்கிப் பழக்கம். இங்கே கிடப்பது என்னவோ 225கிராம் பாக்கெட்டுகளில் புளி, சரி தொலையுதுன்னு ஒரு 5,6 பாக்கெட்டுகள் வாங்கலாம். ஆனால் கடுகு பாருங்க ஒரு கிலோவுக்குக் குறைஞ்சு கிடைக்காது! அது மாதிரியே ஏலக்காய், முந்திரிப்பருப்பு எல்லாம் குறைந்த பட்சமா ஒரு கிலோ வாங்கியே தீரணும்.. விசித்திரமான பாக்கிங் இங்கே! சுக்குப் போட்டு வெந்நீர் குடிக்கணும்னு சுக்குக் கேட்டால் என்னோட ஜென்மம் தீர்ந்து பரம்பரைக்கும் கூட வரும்படி சுக்குக் கொடுத்திருக்காங்க! என்னத்தைச் சொல்றது? அப்புறம், அரிசி, பருப்பு, இத்யாதி, இத்யாதி!

எங்கே வைக்கிறது? அதிர்ஷ்டம் இருந்தால் "பான்ட்ரி" எனப்படும் அலமாரி ஒன்று கூடுதலாய் அபார்ட்மென்டில் இருக்கும், தனி வீடுகளில் இவை கண்டிப்பாய் உண்டு, சமையல் அறையிலேயே. கொஞ்சம் அரிசி, பருப்பு வகைகளைக் கண்மறைவாக வைத்துக் கொள்ளலாம். என்ன கஷ்டம் என்றால் இந்த அலமாரிகள் எல்லாம் மூன்று தட்டு என்று சொன்னேன் அல்லவா? மூன்றாவது தட்டு 6 அடி உயரத்தில் இருக்கும். அங்கே என்ன சாமானை வைப்பது? எப்படி எடுப்பது? அதுவும் அடுப்புக்கு மேலே இருக்கும் அலமாரியில் சிலசமயம் முக்கியமான பாத்திரமோ, மளிகைப் பொருளோ இருந்தால் எம்பி, எம்பிக் குதிக்க வேண்டியது தான். அப்புறம் நானாக மனம் நொந்து போய், "சீச்சீ, இந்தப் பழம் புளிக்கும்"னு விட்டுட வேண்டி வரும். இதை எல்லாம் முன்கூட்டியே யோசித்து என்னோட அப்பா! (எவ்வளவு பெரிய தீர்க்க தரிசி அவர்?) எனக்கு 6 அடி உயரத்தில் மாப்பிள்ளை பார்த்துக் கல்யாணம் செய்து வைத்து விட்டார். இப்போ எவ்வளவு உபயோகமா இருக்கு என்பதோடு எவ்வளவு உபத்திரவம் (நறநறநற) என்பதும் நாளைக்குச் சொல்கிறேன்.

சும்மா "ஜாலி"யா ஒரு பதிவு!

இந்தத் தியாகராஜன் சொன்னதை வச்சு நேத்து மீனாட்சி கோவிலுக்குப் போனபோது புத்தகம் ஜெயமோகனுதும், சீனி.விஸ்வநாதனோடதும் படிக்கக் கேட்டால், ஹிஹிஹினு சொல்லிட்டாங்க. வேறே வழியே இல்லாமல் மற்றப்புத்தகங்களோட அரை மனசா வந்தேன். என்ன ஒரு செளகரியம்னால் மெம்பிஸில் நான் ப்ளாக் திறக்கறதுன்னால் எனக்கு நானே ஒரு "ஷொட்டு"க் கொடுத்துக்கணும். அப்படியும் சில சமயம் இந்த செக்யூரிட்டி பக்கத்திலேயே ஒட்டிட்டு வந்து கண்காணிக்கும். சமாச்சார் போட்டு இந்தியச் செய்திகள் படிக்காட்டி என்னோட மறுபாதிக்கு ஜென்மம் சாபல்யம் ஆகாது. அதில் அங்கே ஹிந்து பார்த்தாலே செக்யூரிட்டி வந்து மிரட்டும். இங்கே அதெல்லாம் இல்லை. குமுதம்.காமில் போய்ப் பதிவு செய்து எல்லாப் புத்தகங்களையும் படிச்சாச்சு! ஆனால் இந்த தமிழா.காமிற்குப் போய் இ-கலப்பை கேட்டால் மட்டும் டாலரில் பணம் வேணும்னு பிடிவாதமா இருக்கு. சரி இப்போதைக்கு இந்த "ஜஃப்னா"வோடயே திருப்திப் பட்டுக்கலாம்னு இருந்துட்டேன். இதிலே நான் பதிவு போடறதைப் பார்த்துப் பொறாமைப் பட்டு யாருமே வரதில்லை. எல்லாம் வயித்தெரிச்சல்தான், வேறே என்ன? அன்னிக்குக் கூடப் பாருங்க, கைப்புள்ளை, வேலை மெனக்கெட்டுக் கூப்பிட்டுப் பேசி விட்டுப் பின்னர் "டுபுக்கு"வின் பதிவிலே போய்ப் பின்னூட்டம் கொடுத்துட்டு வந்துட்டார். நான், என்னனு கேட்டேனா? அதுக்கப்புறம் ஆளே காணோம்!

இந்த அபி அப்பா ஒண்ணு, வேலை மெனக்கெட்டு நான் பாட்டுக்குக் காபியோட சேர்ந்து கடமை ஆற்றும்போது கூப்பிட்டு "கீதாம்மா, புதுப் பதிவு போடறேன்"னு சொன்னதும், அப்பாடா, இப்போவாவது முதல் பின்னூட்டத்துக்கு முந்திக்கலாம்னு பார்த்தால், மனுஷனுக்குக் கழுகுக் கண். பின்னாலேயே வந்து இன்னும் 20 நிமிஷம் ஆகும்னு மிரட்டல். என்னத்தைச் செய்யறது? நம்ம பதிவு போட்டால் பின்னூட்டம் போடக் கூட ஆளே வரதில்லை. அப்படியும், பெருந்தன்மையோடும், தாயுள்ளத்தோடும், அவங்களுக்குப் பின்னூட்டம் போடலாம்னு பார்த்தால், இப்படியா ஒருத்தர் வந்து மிரட்டுவார்? நறநறநற, கைப்புள்ள, நீங்க கேட்டாப்பல நறநற போட்டாச்சு! இது இல்லாத பதிவும் ஒரு பதிவான்னு கேட்டீங்களே? :P

இந்த தி.ரா.ச. சார் பாருங்க, எப்போப் பார்த்தாலும் பிசி, பிசினு சொல்லிட்டு, அம்பியோட பதிவு, கண்ணபிரானோட பதிவு, வல்லி சிம்ஹனோட பதிவுனு பின்னூட்டம் போட்டுட்டு இருப்பார். அதான் எல்லார் மேலேயும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம், இந்தியா வந்ததும்னு முடிவு செஞ்சிருக்கேன். அம்பி தான் தி.ரா.ச. சார் சொன்னாப்பல கொஞ்சம் பயம். வந்து பின்னூட்டம் போட்டுடறார். ஆனாலும் சரித்திரம் எழுதினால் வரதில்லை! பிடிக்காத பாடம், புரியாத பாடம், அதனால். கார்த்திக்குக்கு சினிமா பார்க்கவே நேரம் இல்லை. வேதா(ள்), எப்போக் கேட்டாலும் பிசிங்கறாங்க. புலி எங்கே பதுங்கி இருக்குனு தெரியலை, டெல்லி போயிட்டு திரும்ப சூடான் போகப் போறேனு சொல்லிட்டு எங்கே வேட்டைக்கு போயிருக்கோ அல்லது பதுங்கி இருக்கோ தெரியலை! மணிப்ரகாஷ் கல்யாணம் செய்துக்க இந்தியா போயிருக்காராம். க்ர்ர்ர்ர்ர்ர் சொல்லவே இல்லை! இப்படி உண்மைத் தொண்டர்கள் எல்லாம் அக்ஞாதவாசம் செய்யறாங்களா? யார் மண்டையை உருட்டறதுன்னு ஒண்ணும் புரியலை. போர்க்கொடியும் மத்தவங்களும் யூனியன் எல்லாம் மெயிலில் ரொம்ப பிசி. ச்யாம் எல்லாம் இங்கே வர வழியை மறந்து போயாச்சு! டிடி அக்காவும் சரி, எஸ்கேஎம் அக்காவும் சரி மறந்தே போயிட்டாங்க! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்......... இந்த எஸ்கேஎம், பாருங்க, இங்கே இருக்கும்போது மணிக்கணக்காக் கூப்பிட்டுப் பேசுவாங்க, இப்போ மெயில் கொடுத்தால் பதிலே இல்லை! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்........ கண்ண பிரான் வ.வா.சங்கத்துக்கு எழுதிட்டாரான்னு பார்க்கப் போனால் அங்கேயும் ஒண்ணும் காணோம். ம்ம்ம்ம்ம்ம்ம்ம்., யாருமே கிடைக்கலையே?

Thursday, August 02, 2007

ஹூஸ்டனா? சென்னையா?

ம்ம்ம்ம்ம்,., மதுரை மீனாட்சி படமும், ஹூஸ்டன் மீனாட்சி படமும் பதிவிலே போட எடுத்தேன். மதுரை மீனாட்சி படம் அப்லோடே ஆகலை. வல்லிசிம்ஹன் எப்படித்தான் இவ்வளவு நல்லாப் படம் காட்டறாங்களோ? பெருமூச்சுத் தான் விட வேண்டி இருக்கு. ஹூஸ்டன் மீனாட்சி கோவில் படம் அப்லோட் செஞ்சு பதிவிலேயும் போட்டேன். அப்புறம் பார்த்தால் அதிலே என்னோட திருமுகம் நல்லாத் தெரியுது. சரி வேணாம்னு டெலீட் செஞ்சுட்டேன். ம்ம்ம்ம்., மனசு இருந்தால் போடப் பார்க்கிறேன். கட்டாயமாய்த் திருமுகத்தை எடுத்துட்டுத் தான். இங்கே வந்து 4 நாள் ஆகியும் இன்னும் சிதம்பர ரகசியம் ஆரம்பிக்க முடியலை. கவனமா எழுத வேண்டிய விஷயம் இல்லையா? சும்மா நான் பாட்டுக்கு எழுதமுடியாதே! ஏற்கெனவே எழுதறதுக்கே பின்னூட்டமே வராமல் ஆள் விரட்டி, விரட்டிக் கண்டுபிடிக்க வேண்டி இருக்கு. இந்த நாகை சிவா, மதுரையம்பதி, தி.ரா.ச. இவங்க எல்லாம் மத்த பதிவுகளிலே எல்லாம் எனக்கு முன்னாலேயே போய்ப் பார்த்து விசாரிச்சுட்டு வராங்க. இங்கே எட்டியே பார்க்கிறதில்லை. நறநறநறநற. எல்லாம் தலை எழுத்து!
*************************************************************************************

அமெரிக்காவில், அதாவது யு.எஸ்ஸில் "ஃப்ரீவே" எனப்படும் "ஹைவே"யில் போவது பற்றிப் பார்த்தோம். இந்த மின் அடுப்பு பத்தி ஒரு தகவல் சொல்லியே ஆகணும். ஆரம்பத்தில் சூடு இல்லாத மாதிரி இருந்தாலும் சமையல் செய்யும் நேரம் போகப் போக சூடு அதிகமா இருக்குமாதலால் அடுப்புக் கிட்டே நின்னு யாரும் சமைக்காதீங்க. எனக்கு இந்த 4 மாசத்திலே கையில் தோல் நிறமே மாறிப் போச்சு! :(((((((. மேலும் முன்னால் உள்ள பர்னரில் சமையல் செய்து கொண்டே பின்னாலும் வைக்காதீர்கள். சுட்டுக் கொள்ள நேரும். இங்கேயே இருந்து பழக்கம் ஆனால் கூட சில சமயம் கவனக் குறைவு ஏற்படலாம். கூடியவரை பின்னாலேயே வைத்துச் சமைக்கவும். நம்ம ஊர் அலுமினியம் வாணாய், இரும்பு தோசைக் கல் எல்லாம் சரிப் படாது. வாணாய் எல்லாம் நாட்டியம் ஆடுது, அப்பளம், வடாம், வடை, பஜ்ஜி செய்வதானால் கூடத் தட்டையான அடிப்பாகம் உள்ள கூடியவரை நான் ஸ்டிக் பாத்திரங்களே உபயோகிக்கவும். இங்கே உள்ள டிஷ்-வாஷர் என்னதான் நீங்க சோப்புப் போட்டாலும் நம்ம ஊர் வாணாய்க்கு எல்லாம் மசிந்து கொடுக்காது. தவிர தீ படுவது நடுவில் மட்டும்தான் இருக்கும். சுற்றிப் படாது. எரியும் கம்பிகள் வெளியே தெரியும். கூடிய வரை தட்டையான அடிப்பாகம் உள்ளதிலேயே சமைப்பது நல்லது.மறந்து போய்க் கையை வச்சுட்டோம்னா அவ்வளவு தான், பயமுறுத்தறதுக்காகச் சொல்லவில்லை. கவனம் இருக்கவேண்டும். இந்தியாவின் காஸுக்குப் பழகிவிட்டுத் திடீரென மாறும்போது கட்டாயம் ஒரு 2 நாளுக்காவது தடுமாறும்.


ஹூஸ்டன் மீனாட்சி கோவிலுக்கு வந்த மறுநாளே போனோம். முக்கியமா அங்கே உள்ள நூலகத்துக்குத் தான். 2 வருஷங்களில் நூலகம் முகமே மாறி விட்டதோடு அல்லாமல் பல புத்தகங்களை விலைக்கு எனச் சொல்லி விட்டார்கள். போன முறை படித்த மாதிரி புத்தகங்கள் அவ்வளவாய்க் கிடைக்கவில்லை. இங்கே உள்ள மீனாட்சி கோவில்தான் யு.எஸ்ஸிலேயே மிகப் பழமையானது எனச் சொல்கின்றனர். சிலர் பிட்ஸ்பர்க் வெங்கடசலபதி என்று சொல்கின்றனர். போன முறை மதுரைக் காரர்களே இருந்த கோவிலில் இப்போது நிர்வாகமும் மாறி இருப்பதாய்த் தெரிகின்றது. இங்கே உள்ள "பாரதி கலை மன்றம்" 25 வருஷங்களுக்கு மேல் ஆகி விட்டது. பொங்கல் சமயம் பெரிய விழா நடக்கும். தனி ஆடிட்டோரியம் உள்ளது. கோவில் சொசைடி மூலம் பல நற் சேவைகள் நடைபெறுகிறது. தமிழர்கள் அதிக அளவில் இங்கே இருப்பதாயும் சொல்கின்றனர்.

பொங்கல் மட்டுமில்லாமல் தீபாவளி, நவராத்திரி போன்ற சமயங்களில் கூடக் கோவிலை ஒட்டிய மைதானத்தில் சாப்பாடுத் திருவிழா மட்டுமின்றித் துணிவகைகள், சேலைகள், மற்றும் பல்வேறுவிதமான இந்தியப் பொருட்கள் விற்பனைக்கு வரும். கூட்டம் சொல்லி முடியாது. ஆகவே கோயில் கமிட்டி உறுப்பினர்களின் வாகனங்கள் மட்டும் கோவில் வளாகத்தில் அனுமதிப்பார்கள். மற்றவர்கள் வண்டியை ஒரு மைல் தூரத்தில் இருக்கும் தனிப்பட்ட அனுமதி வாங்கப் பட்ட இடத்தில் நிறுத்திவிட்டு அங்கிருந்து கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்திருக்கும் மினி பஸ்களில் போய்வர வேண்டும். நாடகங்கள், கலை நிகழ்ச்சிகள், தமிழ்த் திரைப்படங்களின் சிறப்புக் காட்சிகள், சொற்பொழிவுகள், பட்டிமன்றங்கள் போன்றவை மட்டுமில்லாது தமிழும் கற்பிக்கப் படுகிறது. 2 அல்லது 3 உடுப்பி ஹோட்டல்களும் இருக்கின்றன. பொதுவாக எல்லாமே இங்கே முழு சைவ உணவு விடுதிகள் தான். இரண்டும் கலந்த இந்திய உணவு விடுதிகள் ஒன்றிரண்டுதான் உள்ளன. உணவு விடுதிகளிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. வரிசையில் நின்று நம் தேவைக்கான ஆர்டரைக் கொடுத்தால் நமக்கு என்று குறிப்பிட்ட வரிசை எண் கொடுத்து விடுவார்கள். பின்ன்னர் அந்த எண் ஒட்டப்பட்ட தட்டுக்களில் நம்முடைய உணவு நம்மைத் தேடி வரும். என்ன, கொஞ்சம் நேரம் ஆகும்.