எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, November 02, 2008

வெற்றி வடிவேலன் அவனுடை வீரத்தினைப் புகழ்வோம்!

வால்மீகி ராமாயணத்தில் விஸ்வாமித்திர முனிவர் ராம, லட்சுமணர்களுக்குச் சொல்லுவதாய் அமைந்த பல புராணங்களில் இந்த ஸ்கந்த புராணமும் ஒன்று. இதைக் குறித்து விஸ்வாமித்திரர் ராமரிடம் மிதிலைக்குச் செல்லும் வழியில் கூறியதாக வருகின்றது. கங்கை நதியின் வரலாற்றை ராமர் ஆவலுடன் கேட்க அதற்குப் பதிலளிக்கும் விதமாய் விஸ்வாமித்திரர் கூறுவதில் ஸ்கந்த புராணம், அல்லது குமார சம்பவம் அடங்குகின்றது. கங்கையும், உமையும் மலையரசன் ஆன இமவானின் மகள்கள் ஆவார்கள். இதில் மூத்தவள் ஆன கங்கையை தேவலோகத்தில் தேவர்களின் நலனுக்காகவும், மூவுலகுக்குத் தொண்டுகள் செய்யவும் கங்கையை இமவான் தேவர்களுக்கு அளிக்க அவள் நதி உருவில் தேவலோகத்தை அடைகின்றாள். உமையவளோ பலவிதமாய்க் கடுந்தவம் புரிந்து ருத்ரனை மணக்கின்றாள். அந்தச் சமயம் அசுரர்களின் தொல்லை கட்டுக்கடங்காமல் போகவே ஈசன் தன் நெற்றிக்கண்ணில் இருந்தும், மற்ற கண்களில் இருந்தும் ஆறு அக்னிப் பொறிகளை மிக்க வீர்யத்துடன் உண்டாக்க, அதன் வெம்மை தாங்காமல் உமையவள் பதறி ஓட, அதைத் தாங்க கங்கை முன்வந்தாள். எனினும் அவளாலும் அந்த வெம்மையைத் தாங்க முடியாமல் போகவே அவள் அதை மிகுந்த கஷ்டத்தோடு தாங்கிக் கொண்டு வந்து இமயமலை அடிவாரத்தில் பொய்கை ஒன்றில் விட, அந்த அக்னிப்பொறிகளில் இருந்து தோன்றினான் சிவகுமாரன்.

அந்தக் குமாரனை வளர்க்கும் பொறுப்பைக் கார்த்திகைப் பெண்களிடம் தேவர்கள் ஒப்படைக்க, குமாரனும் கார்த்திகப் பெண்களால் வளர்க்கப் படுகின்றான். ஆறு பெண்களால் வளர்க்கப் பட்டதால் ஆறு முகங்களை உடையவன் ஆன அவன் கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப் பட்டதால் கார்த்திகேயன் என்ற பெயரையும் பெற்றான். ஆறுமுகங்கள் உள்ள அவன் ஷண்முகன் எனவும் அழைக்கப் பட்டான். குழந்தையாக இருந்த அவனைக் கண்ட உமையவள் ஆவலுடன் ஆறு குழந்தைகளையும் ஒருசேர எடுத்து அணைக்க, ஒன்று திரட்டப் பட்டதாலும், ஈசனின் வீரம் முழுதும் கலந்து பிறந்த காரணத்தாலும் ஸ்கந்தன் எனவும் அழைக்கப் பட்டான். இந்தக் குமாரனின் ஆறுமுகங்களும் ஒவ்வொரு யோகவடிவைக் குறிப்பிடக் கூடியது. மூலாதாரத்தில் இருந்து ஸஹஸ்ராரம் வரை உள்ள ஒவ்வொரு யோகநிலைக்கும் இவனே நம்மை வழிநடத்திச் செல்கின்றான். அன்னைக்கு நவராத்திரி, சிவனுக்கு ஒரு ராத்திரியான சிவராத்திரி, சிவகுமாரனுக்கோ ஆறு நாட்கள் விரதம் அனுஷ்டிக்கப் படுகின்றது. ஐப்பசி மாதம் தீபாவளி அமாவாசைக்கு மறுநாள் பிரதமையில் இருந்து ஆரம்பித்து சஷ்டி வரையில் உள்ள ஆறு நாட்களும் கந்தனுக்கு உரிய நாட்களாய்க் கருதப் பட்டு விரதம் மிகத் தூய்மையுடனும், ஒருமித்த மனத்துடனும் கடைப்பிடிக்கப் படுகின்றது. ஆறு முகங்களை உடைய இவனுக்கு உரிய நாளும் ஆறாவது நாளான சஷ்டியாகும். முருகன் தமிழ்க்கடவுள் என்றும் சொல்லப் படுகின்றான். என்றாலும் முதல் காவியம் என்று சொல்லப் படும் வால்மீகி ராமாயணத்திலேயே இவன் கதை குறிப்பிடப் பட்டிருக்கின்றது. தேவர்களுக்கு உதவியாக இவன் போர் புரிந்த காரணத்தால் தேவ சேனாதிபதி எனவும் அழைக்கப் படுகின்றான். இவனுக்கு உரிய படைவீடுகளும் ஆறு. "வெற்றி வடிவேலன் அவனுடை வீரத்தினைப் புகழ்வோம்!" என்கின்றார் பாரதியார். வீரம் என்றால் எப்படிப் பட்ட வீரம்?? பகைவனைக் கொன்று அழிக்கும் வீரம் அல்ல இது. பகைவனை மாற்றும் வீரம். பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே என்பதற்கொப்ப தன் அவதாரத்தின் நோக்கமே இந்த பத்மாசுரனை அழிப்பதே என்று உணர்ந்து அவனை அழிக்காமல் அவனின் ஆணவத்தை மட்டுமே அழித்தான் கந்தன்.

கருணைக்கடல் அவன். ஆறுமுகங்களும், பதினெட்டுக் கண்களால் அருளைப் பொழிகின்றன. பரிபாடலில் "சேயோன்" என இவனைக் குறிப்பிட்டுப் பாடப் பட்டிருக்கின்றது. இந்தப் பத்மாசுரனே கந்தனின் அவதாரத்துக்குப் பலவகையிலும் காரணம். இவன் தான் முன் பிறவியில் தட்சனாக இருந்து, சிவனை மாப்பிள்ளையாகப் பெற்றும் அவரை அவமதித்தவன். இவனுடைய யாக குண்டத்திலேயே தாட்சாயணி ஆகிய சக்தி தன் உடலை ஆகுதி ஆக்குகின்றாள். இந்த தட்சனை அழிக்க ஈசன் வீரபத்திரரை ஏவ வீரபத்திரரும் தட்சனை அழிக்கின்றார். என்றாலும் இன்னொரு பிறவி எடுத்து ஈசனை அழிக்கவேண்டும் என்று காச்யபருக்கும், அதிதிக்கும் மகனாய்ப் பிறக்கின்றான் தட்சன். பத்மாசுரன் என்ற பெயருடன் வளர்ந்து வருகின்றான். இவனுக்கு மூன்று சகோதரர்கள். கஜமுகாசுரன், பானுகோபன், சிங்கமுகாசுரன் ஆகிய மூவருடன் சேர்ந்து பத்மாசுரன் செய்த அக்கிரமங்களுக்கு அளவே இல்லை.

தொடரும்.

6 comments:

  1. //வீரம் என்றால் எப்படிப் பட்ட வீரம்?? பகைவனைக் கொன்று அழிக்கும் வீரம் அல்ல இது. பகைவனை மாற்றும் வீரம். பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே என்பதற்கொப்ப தன் அவதாரத்தின் நோக்கமே இந்த பத்மாசுரனை அழிப்பதே என்று உணர்ந்து அவனை அழிக்காமல் அவனின் ஆணவத்தை மட்டுமே அழித்தான் கந்தன். //

    நல்லாச் சொன்னீங்க கீதாம்மா.

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!

    ReplyDelete
  2. அவனை அழிக்காமல் அவன் ஆணவத்தை அழித்தான்.
    அதுதான் கந்தன் கருணையோ.

    நல்லதொரு பதிவுக்கு நன்றி கீதா.

    ReplyDelete
  3. //வீரம் என்றால் எப்படிப் பட்ட வீரம்?? பகைவனைக் கொன்று அழிக்கும் வீரம் அல்ல இது. பகைவனை மாற்றும் வீரம். பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே என்பதற்கொப்ப தன் அவதாரத்தின் நோக்கமே இந்த பத்மாசுரனை அழிப்பதே என்று உணர்ந்து அவனை அழிக்காமல் அவனின் ஆணவத்தை மட்டுமே அழித்தான் கந்தன். //

    எத்தனை அற்புதமானதொரு கருத்து!

    நன்றி கீதாம்மா!

    ReplyDelete
  4. முருகனுக்கு அரோஹரா ;)

    ReplyDelete
  5. @வாங்க கவிநயா, வெற்றி வடிவேலன் அவனுடை வீரத்தினைப் புகழ்வோம்!

    @வாங்க வல்லி, கந்தனின் கருணையைச் சொல்லவும் முடியுமா???

    @வாங்க ஆயில்யன், ஃபாலோ பண்ணறதுனு முடிவு கட்டிட்டீங்க?? நல்வரவு.

    @கோபி, அட, வாங்க, வாங்க, இங்கே எல்லாம் வரக்கூட நேரம் இருக்கு?? :P:P:P

    ReplyDelete
  6. \\@கோபி, அட, வாங்க, வாங்க, இங்கே எல்லாம் வரக்கூட நேரம் இருக்கு?? :P:P:P\\

    ஏன் இப்படி ஒரு கொலைவெறி கேள்வி தலைவி...போன ரெண்டு பதிவும் எனக்கு ரொம்ப몮ப்பப்பப்பப்பப்பப்ப தூரம் அதான் அந்த பக்கம் வரல..;))

    ReplyDelete