எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, October 21, 2010

சித்தப்பாவுக்கு எண்பது வயசாமே!!!!


முதல் முதல்லே சித்தப்பாவைப் பார்க்கும்போது எனக்குப் பத்து வயது இருக்கும். மீனாக்ஷி கோயில் கும்பாபிஷேஹத்திற்காக மதுரையில் இருக்கும் தன்னோட அத்தை வீட்டுக்கு அம்மாவோடு வந்தவர், அப்படியே அன்று சாயந்திரமே என் அப்பாவின் முயற்சியால் சித்தியைப் பெண்பார்த்துவிட்டுப் போனார். அன்னிக்கு அவர் ஒரு கதை சொல்ல ஆரம்பிச்சதும், அந்தக் கதை எனக்குத் தெரிந்தது என நான் சொன்னதும் இன்னமும் நினைவில் இருக்கு. அதுக்கு அப்புறமாய் வங்கி வேலைக்காகப் பரிக்ஷை கொடுக்கச் சென்னை வந்தால் சித்தி வீட்டில் தான் தங்குவேன். மாதக் கணக்கில் தங்கி இருக்கேன். என்னிடம் உள்ள அன்பின் காரணமாயும், என் அப்பாவின் மேல் உள்ள மதிப்பின் காரணமாயும் என் திருமணத்திற்குப் பிள்ளை பார்த்து, அதை முடித்தும் வைத்தார். என்னோட கல்யாணத்திற்குத் தனிப்பட்ட பரிசாக முதல் முதல் வந்த அவரோட சிறுகதைத் தொகுப்பு வாழ்விலே ஒரு முறையைப் பரிசளித்தார். பல வருடங்கள் இருந்த அந்தப் புத்தகம் ஏதோ ஒரு ஊருக்கு மாற்றலாகும்போது காணாமல் போயிருக்கு! :(

ஓரளவாவது இன்று நான் எழுதுகிறேன் என்றால் அதுக்குக் காரணம் அங்கே இருந்தப்போப் படிச்ச புத்தகங்கள், சித்தப்பா எழுதும்போது பார்த்துக் கொண்டிருந்தது, இன்னும் அவரைக் காண வரும் பிரபலங்கள் என்று பல காரணங்கள் சொல்லலாம். ஒரு மாபெரும் நூலகமே இருந்தது. கல்யாணம் ஆனதுக்குப் பின்னரும் தியாகராயநகர் வந்தால் அங்கே இருந்து புத்தகங்களை எடுத்துக்கொண்டு வந்து படிப்போம். அப்புறம் வட மாநிலங்கள் சென்றதில் எல்லாம் போச்சு, அதோடு அவங்களும் பழைய வீட்டைக் கொடுத்து அடுக்குமாடிக்குடியிருப்புக் கட்டியபோது புத்தகங்களை எடைக்குப் போட்டுவிட்டதாய்ச் சொன்னார். ரொம்ப வருத்தமாய் இருந்தது. அந்தக் காலத்து துப்பறியும் சாம்புவில் ஓவியர் ராஜு வரைந்த படங்களோடு இருக்கும். ஓவியர் மாலியின் கேலிச் சித்திரங்கள், எஸ்விவியின் தொடர்கள், துமிலனின் கட்டுரைகள், கல்கி கர்நாடகம் என்ற பெயரில் எழுதியவை, ஆரணி குப்புசாமி முதலியார், வடுவூர் துரைசாமி ஐயங்கார் என மாபெரும் பொக்கிஷமே இருந்தது.

செப்டெம்பர் 22-ம் தேதியே ஆங்கில வருடத்தின் படி பிறந்த நாள் என்று தெரியும், என்றாலும் எண்பது என்பது இன்னிக்குச் சித்தி சொல்லித் தான் தெரியும். சமீப காலங்களில் கண் சரியாய்த் தெரியாததால் புத்தகங்கள் படிக்கக் கஷ்டமாய் இருப்பதைப் பற்றிச் சொல்லி வருந்தி இருக்கிறார். தனியாய் வெளியே போக முடியவில்லை. மேலும் சென்ற மாதம் கீழே விழுந்து மண்டையில் அடிபட்டு மருத்துவமனையில் இருந்திருக்கிறார். ஆகையால் சரஸ்வதி பூஜை அன்று தமிழ் மாதப் படி வந்த அவரின் நக்ஷத்திரப் பிறந்த நாளை வீட்டு மனிதர்கள் வரையில் கொண்டாடியதாய்ச் சித்தி சொன்னார். தலையைத் தொட்டுப் பார்த்தேன். இன்னும் ரத்தம் கட்டி வீக்கம் வடியவில்லை.

சீக்கிரம் குணமடையப் பிரார்த்திப்பதோடு, தாமதமான வாழ்த்துகளையும் நமஸ்காரங்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

ஓ, தெரியாதவங்களுக்கு! சித்தப்பா பெயர் அசோகமித்திரன்!

24 comments:

  1. உங்கள் சித்தப்பாவிற்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள். அவர் விரைவில் நலம் அடைய பிரார்த்தனைகள்

    ReplyDelete
  2. ஆஹா...!!!

    உங்களின் எழுத்துக்களை படிக்கும் போது எங்கே இப்படி எழுதும் வித்தையைக் கற்றுக்கொண்டார் என்று மலைத்திருக்கிறேன். இன்று அதன் மூல காரணம் தெரிந்தது.

    உங்கள் சித்தப்பா விரைவில் பூரண குணமடைய பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  3. thanks for sharing, my wishes and prayers for him.

    ReplyDelete
  4. My prayers for him. Great writer. Aurmaiyana malarum ninaivugal mami

    Subha

    ReplyDelete
  5. வாழ்த்தின எல்லாருக்கும் நன்றி.

    முருகபூபதி, உங்கள் பாராட்டுக்கு நன்றி.

    ReplyDelete
  6. மலரும் நினைவுகளின் முடிவில் இப்படியொரு திருப்பமா? உங்கள் சித்தப்பாவுக்கு வணக்கங்களும், விரைவில் நலம் பெற என் பிரார்த்தனைகளும்.

    ReplyDelete
  7. ஏங்க டீச்சர் ! இதை முதலிலேயே சொல்ல வேண்டியது தானே ! நானும் எப்படி இந்த கீதாம்மாவால் மட்டும் இவ்வளோ சிறப்பாக எழுத முடிகிறது என்று வியந்து வியந்து உங்கள் பதிவு படிக்க வரும் போதெல்லாம் நினைத்து கொண்டு இருக்கிறேன் .,நிற்க !

    முதலில் சாகித்ய அகாதமி விருது பெற்ற முது பெரும் தமிழ் அறினர் திருஅசோகமித்திரன் அவர்களுக்கு எங்களுடைய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ! அவருக்கு நல்ல உடல் நலத்தையும் நீள் ஆயுளையும் இறை நிலை வழங்கி அருள் புரிய நானும் வேண்டி கொள்கிறேன்
    திரு அசோகா மித்திரன் பற்றி ஒரு சிறு குறிப்பு:
    அசோகமித்திரன், தமிழின் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர். தியாகராஜன் என்ற இயற்பெயர் கொண்ட அசோகமித்திரன் 1931 ஆம் ஆண்டு ஆந்திர பிரதேசத்தில் உள்ள செகந்திராபாத் நகரத்தில் பிறந்தவர். எளிமையும், மெல்லிய நகைச்சுவையும் கொண்டது இவருடைய எழுத்து. தமிழ் இலக்கியத்துக்கு உலக அளவில் அங்கீகாரம் பெற்றுத் தந்தவை இவரது கதைகள். அமெரிக்க இலக்கியங்களைத் தமிழில் அறிமுகம் செய்த தனிப்பெருமை இவருக்குரியது. இவரது நாவல்கள் ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஆங்கில நாளிதழ்களில் தொடர்ந்து எழுதி வரும் அசோகமித்திரன், அயோவா பல்கலைக்கழகத்தில் எழுத்தாளர்களுக்கான சிறப்புப் பயிலரங்கில் கலந்து கொண்டவர்

    நாவல்கள்
    பதினெட்டாவது அட்சக்கோடு
    தண்ணீர்
    ஆகாசத்தாமரை
    ஒற்றன்
    மானசரோவர்
    கரைந்த நிழல்கள்
    குறுநாவல்கள்
    இருவர்
    விடுதலை
    இது போக அவரின் எல்லா சிறுகதைகளையும் சிறு கதைகள் தொகுப்பு 1 ,2 ,3 ,4 லில் வெளியிடப்பட்டு இருக்கிறது
    அனைவரும் படித்து பாருங்களேன் !நல்ல பகிர்வு ;வாழ்த்துக்கள் டீச்சர்

    ReplyDelete
  8. //வங்கி வேலைக்காகப் பரிக்ஷை கொடுக்கச் சென்னை வந்தால் சித்தி வீட்டில் தான் தங்குவேன். மாதக் கணக்கில் தங்கி இருக்கேன்//
    மாசகணக்குல பரிக்ஷையா... அவ்ளோ நாள் என்ன எழுதுவீங்க... ? ஒகே ஒகே...சும்மா... நோ டென்ஷன்

    //எண்பது என்பது இன்னிக்குச் சித்தி சொல்லித் தான் தெரியும்//
    நெருக்கமாய் இருப்பவர்களுக்கு வயசாவது நமக்கு புதிராத்தான் தோணும்... எங்க பாட்டிக்கு எண்பது ஆக போகுதுன்னு அப்பா போன வாரம் பேசினப்ப சொன்னப்பா... "அப்படியா?"னு நம்பாம கேட்டேன்

    //ஓ, தெரியாதவங்களுக்கு! சித்தப்பா பெயர் அசோகமித்திரன்! //
    ஆஹா... எனக்கு இது தெரியாதே... இப்ப தான் புரியுது உங்க எழுத்து ஆர்வம் எங்க இருந்து வந்ததுன்னு... கொடுத்து வெச்சவங்க தான் மாமி நீங்க

    அவர் சீக்கரம் குணமாகி இன்னும் பல வருஷம் நல்ல ஆரோக்யத்தோட வாழ நானும் ப்ராதிக்கறேன்... Also, Belated ஹாப்பி பர்த்டே அவருக்கு

    ReplyDelete
  9. இது அக்கிரமமா இல்லை??? நான் கஷ்டப் பட்டு அதையும், இதையும் படிச்சுட்டுக் குறிப்புக்கள் எடுத்து எழுதிட்டுக் கடைசியிலே சித்தப்பாவாலேயா??? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
    எல்லாரும் பகிர்ந்துக்குங்க! :)))))

    நான் இத்தனை நாள் கழிச்சுச் சொன்னதுக்கே எல்லாரும் ஆஹா, அதானாங்கறீங்க! முதல்லேயே சொல்லி இருந்தால் அவ்வளவு தான்! ஆரம்பத்திலிருந்தே எனக்கு என்னோட சொந்தத் திறமையிலே தான் பிரபலம் ஆகணும், அங்கீகாரம் கிடைக்கணுமே ஒழிய சித்தப்பாவின் நிழலில் இல்லை! அதான் முதல்லேயே சொல்லிக்கலை. என்றாலும் ஐம்பது பதிவுகளுக்கு அப்புறமோ என்னமோ சொல்லி இருக்கேன். சிலருக்குத் தெரியும், பலருக்கும் தெரியாது!

    வாழ்த்தின அனைவருக்கும் நன்றி.

    ReplyDelete
  10. நான் ‘அதானா’ சொல்லலைங்க:))! தெரிந்ததில் மகிழ்ச்சி, அவ்வளவே:)!

    ReplyDelete
  11. உங்கள் சித்தப்பாவிற்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.வணக்கங்கள்.

    அவர்கள் விரைவில் உடல் நலம் பெற
    இறைவனை வேண்டுகிறேன்.


    நான் திரு.அசோகமித்திரன் கதைகள் படித்து இருக்கிறேன்.

    சென்னையைப்(பழைய)பற்றி அவர் எழுதிய புத்தகம் என் பையன் வைத்து இருந்தான்.

    ReplyDelete
  12. OMG..... can't believe this... I 've read you as well as your chithappa and love both of your writings...

    -Srini

    ReplyDelete
  13. @ரா.ல. ஓகே, ஓகே, அந்த க்ர்ர்ர்ர்ர்ர்ரை உங்களைத் தவிர மத்தவங்க பகிர்ந்துக்கட்டும், சரியா?? :))))))))))))

    ReplyDelete
  14. வாங்க கோமதி அரசு, நீங்க சொல்லும் புத்தகம் நான் படிச்சதில்லைனு நினைக்கிறேன். கருத்துக்கு நன்றி.

    ஸ்ரீநி, வாங்க ஏற்கெனவே ஒருதரம் வந்திருக்கீங்களோ? எங்க பையர் பெயரும் இதுதான்னு சொன்ன நினைவு. :D உங்க பாராட்டுக்கு நன்றிங்க.

    ReplyDelete
  15. ’ஒரு பார்வையில் சென்னை நகரம்’என்பது புத்தகத்தின் பெயர்.

    கவிதா பப்ளிகேஷன் வெளியிட்டது.
    சென்னை நகரில் 50 வருஷம் வசித்த
    அனுபவத்தால் சென்னையைப் பற்றி எழுதியிருக்கிறார்.

    ReplyDelete
  16. தங்கள் சித்தப்பாவிற்கு என் பணிவான வணக்கங்கள்.

    உங்களுடைய எழுத்துகளை அவருடன் பகிர்ந்து கொண்டதுண்டா? அவர் அட்வைஸ் செஞ்சதுண்டா?

    இதுவரையிலும் பெரிய/சிறிய தமிழ் எழுத்தாளர்களின் கதைகளோ நாவலோ எதுவும் நான் படித்ததில்லை(பொ.செ.தவிர) என்பதால் திரு அசோகமித்திரனும் அந்த லிஸ்டில் இருப்பதில் ஆச்சரியமில்லை. Priya வின் பின்னூட்டத்தைப் பார்த்தபின் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் வந்துள்ளது.

    விரைவில் அது நிறவேறும் என்று நம்புகிறேன்.

    அவர் விரைவில் நலம் பெற பிரார்த்திக்கிறேன். நன்றி

    ReplyDelete
  17. @கோமதி அரசு, நீங்க சொன்ன புத்தகம் பற்றி அடுத்த முறை அவரைப் பார்க்கும்போது கேட்கிறேன். அறிமுகத்துக்கு நன்றிங்க.

    ReplyDelete
  18. @கபீரன்பன், நல்ல கேள்வி, உண்மையைச் சொன்னால் நான் இணையத்தில் எழுதுகிறேன் என்பதே என் கணவரையும், இரு குழந்தைகளையும் தவிர யாருக்கும் 2 வருஷத்துக்கும் மேலே சொன்னதில்லை. சிதம்பர ரகசியம் தொடர் எழுதும்போது தான் அதன் வரவேற்பைப் பார்த்துவிட்டு என் கணவர் ஒரு முறை சித்தப்பாவிடம் சொன்னார். ஆனால் கணினியில் படிக்க அவருக்குத் துணை வேண்டும். அவருடைய பிள்ளைகளை/மருமகள்களைப் படிக்கச் சொல்லி எப்படி இருக்குனு கேட்டிருக்கிறார். அவ்வளவே. மற்றபடி எனக்கு அறிவுரை கூறியது என்று எடுத்துக்கொண்டால் விமரிசனம் எப்படி வந்தாலும் அதைப் பெரிது பண்ணாமல் இருக்கணும் என்ற ஒன்று மட்டுமே. எழுதும் பொருளையோ, எழுதும் விதத்தையோ, கருத்தையோ பற்றி எதுவும் கூறவில்லை. உங்கள் கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  19. ஆமாங்க... உங்களுக்கு நல்ல ஞாபகம்...

    Srini

    ReplyDelete
  20. அட்சோ! அட்சோ ! இதுகெல்லாம் க்ர்ர்ர்ர் சொல்லலாமா !! பின்னூட்டம் போட்டு திட்டும் வாங்கி கட்டி கொள்ளும் நாங்க தான் பாவம்!
    நாங்க சொல்ல வந்தது தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்ற அர்த்தத்தில் தான் !
    மட்றபடி திரு அசோகமித்திரன் அவர்களின் கதை எழுதும் விதம் ,நகைசுவை இழையோட சொல்லும் பாங்கு வேறு
    அவரின் களமும் வேறு ;காலமும் வேறு !!
    நீங்கள் அடுத்த தலைமுறை !ஆன்மிக அறினர் என்ற சிறப்பு தகுதி உங்களுக்கு உண்டு டீச்சர் (குரு )
    நீங்கள் அவர் இன்னார் என்று தெரியப்படுத்தியபோது கூட உங்கள் மேல் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்க தான் செய்தது!
    அதற்கு அடுத்த தலைமுறையை சார்ந்த எங்களுக்கு உங்கள் எழுத்துகளையும் அதனால் உங்களையும் ரொம்ப ரொம்ப பிடிக்கும்
    கீதாம்மா ! தோழி புவனாவின் கருத்தும் இதே தான் என்று நினைக்கிறேன்

    ReplyDelete
  21. இன்று தான் இப்பொழுது தான் பார்த்தேன். இப்பொழுது உடல் நலன் தேறிவிட்டாரா?..

    பிரியா என்கிற பெயரில் பின்னூட்டமிட்டிருப்பவருக்கு தங்கள் சித்தப்பா பற்றிய என்னுடைய பதிவை படிக்க நீங்கள் பரிந்துரைத்திருக்கலாம்.
    முதலிலேயே படித்திருந்தால் அ.மி. அவர்கள் உங்களுக்கு சித்தப்பா உறவு என்று தெரிந்திருக்கும்.

    ReplyDelete
  22. வாங்க ஜீவி சார், உடம்பு தேறி இருக்கார்! என்றாலும் அவரால் முன்போல் இயங்க முடியலை என்ற குறை எல்லா வயசானவங்களுக்கும் இருக்கிறாப் போல் இருக்கு. அப்புறம் ப்ரியாவுக்கு உங்க வலைப்பக்கத்தை அறிமுகம் செய்யறேன். ஆனால் நான் சித்தப்பாவின் பெயரைச் சொல்லிக்கொண்டு என்னை முன்னிலைப்படுத்திக்கொண்டு வரவேண்டாம்னு தான் அதிகம் அவரைப் பத்திப் பேசலை. என்னுடைய தனித்தன்மையால் எல்லாருக்கும் பிடிக்கும் வண்ணம் எழுத நினைக்கிறேன். அதுவும் ஒரு காரணம். நான் முக்கியமாய்ப் புராணங்களைத் தேர்ந்தெடுத்ததுக்கு அதுவும் ஒரு காரணம். :))))))))))

    ReplyDelete
  23. அசோக மித்திரன் அவர்களுக்கு எண்பதாவது பிரந்த தினத்துக்கான இனிய வாழ்த்து(க்)கள்.



    //அவரை முதன் முதலில் பார்த்தபோது எனக்குப் பத்து வயதிருக்கும்...//

    அச்சச்சோ!!!!!உங்களுக்கும் எழுபதாவது பிறந்த தின வாழ்த்து(க்)கள்ப்பா.

    ReplyDelete
  24. @thulasi, you too Brutus??? :))))))))
    எனக்குப் பத்து வயசிருக்கும் சரி, சித்தப்பாவின் வயசு அப்போ என்னனு கேட்கலையே? :P:P:P

    ReplyDelete