தங்கத் தவளை பெண்ணே!
சவடால் கதைப் போட்டி. எங்கள் 2K+11. ராஜா வேட்டையாடி விளையாடுகையில் நடந்தவைகளைக் கேள்விப்பட்ட ஜோசியர் "அவரை விடாதீர்கள் !" எனக் கத்த நினைத்துத் தம்மை அடக்கிக் கொண்டு சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டார். பின்னர் தம் அறைக்குச் சென்று உள்ளே தாழிட்டுக் கொண்டார்.
அவரை, துவரை, கவரை ஹோய்
ஹோய், கவரை துவரை அவரை டோய்
டோய் துவரை, அவரை, கவரை ஹோய்
எனத் திரும்பத் திரும்பக் கூறினார். ஒவ்வொரு முறையும் அவர் உடல் சிலிர்த்துக்கொண்டது. எதையோ எதிர்பார்க்கிறாப்போல் காணப்பட்டார். அவர் எதிரே ஒரு கண்ணாடி.

அதிலே சற்று நேரத்திற்கெல்லாம் சில காட்சிகள் தெரிய ஆரம்பித்தன. ஏழு கடல்கள், ஏழு மலைகள் தாண்டி, ஏழு கிணறுகள் தாண்டி அங்கே வசிக்கும் விசித்திரமான தவளைக் குடும்பங்களைத் தாண்டிச், சென்றால் அங்கே ஓர் அவரைப் பந்தல். அதிலே காய்த்தன பச்சைப்பசேலென அவரைக்காய்கள். அதிலே ஒரு அவரைக்காய் மட்டும் தனித்துத் தெரிந்தது. அது அளவில் கொஞ்சம் பெரிசாகவும், அதோடு முழுத்தங்கமாகவும் இருந்தது. அதையே உற்றுப் பார்த்துக்கொண்டு, "விடாதீர்கள் அவரை" என மீண்டும் கத்தினார் ஜோசியர். உடனே அங்கே தூரத்தில் காவல் காத்துக்கொண்டிருந்த முரட்டுத் தவளை ஓன்று வந்து, கண்ணாடியில் தெரிய இங்கிருந்தே அதனிடம், மறுபடியும் தன் மந்திர ஸ்லோகத்தைக் கூறிப் பின் "விடாதீர்கள் அவரை" என்று முடித்தார்.
அந்தத் தவளை பதில் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் அந்தப் பெரிய அவரைக்காயிடம் போய், கேலி செய்வது போல் தன் குரலெடுத்துக்கத்த ஆரம்பித்தது. அவரைக்காய் திடீரெனப் பேசியது. " உன்னை அழிக்கும் வழி எனக்குத் தெரியும். பொறுத்திரு; என் மனைவி ஒரு பெரும்படையோடு வருவாள். பாம்புக்கூட்டங்களை அழைத்துவந்து உங்களை எல்லாம் அழிப்பாள்." என்று பெருமிதத்தோடு கூறியது.
"ஹாஹாஹா, அவள் அப்படி ஏதேனும் செய்யக் கூடாது என்று தானே அவளை நாங்கள் தங்கத்தவளைப் பெண்ணாக மாற்றிவிட்டோம்! ஹையா! ஜாலி, ஜாலி, இப்போ என்ன பண்ணுவே, இப்போ என்ன பண்ணுவே?" என்று அந்தத் தவளை தாவிக் குதித்தது. மனம் நொந்து போனான் இளவரசன்/ராஜா/ராஜகுமாரியின் கணவன்?? எங்கள் ப்ளாக் இதிலே எதுவேணாலும் வைச்சுக்குங்க!
ஜோசியர் மீண்டும் கூறினார், "விடாதீர்கள் அவரை!" பின்னர் அந்தக் கண்ணாடியை மூடி வைத்துவிட்டு சந்தோஷமாகத் தன் எதிர்காலத்தைக் குறித்துக் கனவு காண ஆரம்பித்தார்.
இங்கேயோ தங்கத்தவளைப் பெண்ணாக வந்த ராஜகுமாரி ராஜா புங்கவர்மன் ஏதோ செய்யப் போறான்னு நீனைச்சா அவன் வேட்டைனு போயிட்டு கடைசியில் எலி வேட்டை ஆடிவிட்டு அதற்கே களைத்துப் போய்க் கொட்டாவி விட்டுத் தூங்கிவிட்டான் என்பதைப் பார்த்துவிட்டு மனம் வருந்தினாள். என்ன செய்யலாம் என யோசித்துத் தன் தவளைக்குரலில் விடாமல் கத்த ஆரம்பித்தாள். ராஜாவுக்குத் தூக்கம் கலைந்தது. அப்போது பச்சை வண்ண ஆடைக்காவலன் சந்தடியில்லாமல் அறைக்குள் நுழைந்தான். ராஜாவுக்குப் பயத்தில் பேச்சே வரவில்லை. "சே, நீயெல்லாம் ஒரு ராஜா, உனக்கெல்லாம் ஒரு வாளா!" என்றான் காவலன். ராஜா அசடு வழியச் சிரித்து, "என்ன விஷயம், உன் சம்பள பாக்கி....." என இழுக்க, "விட்டுத்தள்ளுங்க, நான் அதைக் கேட்க வரலை இப்போ! உங்க கிட்டே ஒரு ரகசியத்தைச் சொல்லிட்டுப் போக வந்தேன்.' என்றான்.
"ரகசியமா? என்னது அது?' என்று ராஜா கேட்க, "நானும், உங்க கிட்டே சம்பளம் கேட்காமல் நீங்களும் பணக்கார ராஜாவாக ஒரே ஒரு வழி இருக்கு." என்றான் ப.வ.காவலன். ராஜா ஆர்வத்தோடு தன் மூக்கை நீட்ட, அதில் ஓங்கிக் குத்திய காவலன், "என்ன பறக்காவட்டித்தனம்! இருங்க!" என்று சொல்லிவிட்டுச் சுற்றும் முற்றும் பார்த்தான். "விடாதீர்கள் அவரை!" என்றான். ராஜா பயத்தில் துள்ளிக் குதிக்க, தன் தலையில் மடேர் மடேர் என அடித்துக்கொண்ட காவலன்," இது ஒரு ரகசிய மந்திரமாக்கும்" என்றான். "ஹிஹிஹி, என்னைத்தான் எதிரிகளிடம் பிடிச்சுக் கொடுக்கிறயாக்கும்னு நினைச்சுட்டேன்." என அசடு வழிய, "நீங்க கெட்ட கேட்டுக்கு எதிரிவேறேயா?" எனத் தனக்குள் முணுமுணுத்த ப.வ.காவலன் ஜோசியர் அறையின் ஜன்னல் வழியாகத் தான் கண்ட காட்சிகளைக் கூறினான்.

எல்லாவற்றையும் கேட்ட ராஜா, தங்கத்தவளைப்பெண்ணின் கணவன் தங்க அவரைக்காயாக இருக்கிறான் எனக் கேள்விப்பட்டுவிட்டு அங்கே எப்படிச் செல்வது எனக் காவலனையே கேட்டான். காவலன் மறுபடி தலையில் அடித்துக்கொண்டு, "நீயெல்லாம் ஒரு ராஜா, உனக்குக் காவலன் ஒரு கேடு!" என்று சொல்லிவிட்டு ஜோசியரைத் தாஜா செய்ய நாட்டியக்காரியை அனுப்பச் சொன்னான். ராஜாவுக்கு நாட்டியக்காரியை அனுப்பவேண்டும் என்றதும் தானும் உடன் செல்லவேண்டும் என்ற சபலம் தட்டியது. காவலன் கண்டிப்பாக ராஜா போகக் கூடாது என்று சொல்ல அரை மனசோடு ராஜா சம்மதித்தான். நாட்டியக்காரியோ ஒரு வருஷமாகச் சம்பளம் கிடையாது, புத்தாடைகள் கிடையாது; ஜோசியரை மயக்கறது என்றால் அதற்கேற்ற மதுவகைகள் கிடையாது; நான் போக மாட்டேன்." என்று பிடிவாதம் பிடிக்க இதுதான் சாக்கு என்று ராஜா அவளைத் தாஜா செய்யும் சாக்கில் கொஞ்ச ஆரம்பித்தார்.
தங்கத் தவளைப்பெண் எல்லாவற்றையும் பார்த்துவிட்டுக் காவலனின் புத்திசாலித்தனத்தில் மகிழ்ந்து கொண்டிருந்தாள். ராஜாவும் நாட்டியக்காரியும் குலாவுவது கண்டு அவளுக்குப் பொறாமையும் கோபமும் வர மீண்டும் தவளைக்குரலில் கத்தி ஆர்ப்பாட்டம் செய்தாள். காவலன்," ஜோசியரைப் பத்தி உனக்குத் தெரியுமா?" என்று தங்கத்தவளை கிட்டே கேட்க, "விடாதீர்கள் அவரை" என்று தவளைக்கத்தல் கத்தினாள் ராஜகுமாரி. காவலன் அதிபுத்திசாலியாதலால் இதிலே ஏதோ சூட்சுமம் இருக்குனு புரிந்து கொண்டான். நாட்டியக்காரியைப் பலவந்தமாகப் பழைய மதுவையே எடுத்துக்கொண்டு ஜோசியரிடம் போய் அவரை மயக்கி விஷயங்களைத் தெரிந்து வரச் சொல்லி அனுப்பி வைத்தான்.
நாட்டியக்காரியையும் ,மதுவையும் பார்த்ததுமே ஜோசியர் உளற ஆரம்பித்தார். தான் முன்னர் இருந்த நாட்டில் அவரை ராஜகுமாரனின் பணச் செருக்கையும் அவன் சபையில் தான் இருந்தபோது இரண்டு பேருக்கும் வந்த சண்டையையும், அவனைப் பழிவாங்கவென்றே தான் இந்த நாட்டுக்கு வந்து அவனையும் அவரைக்காயாக மாற்றிவிட்டு, ராணியையும் தவளையாக மாற்றித் தன் அடிமையாக வைத்திருப்பதையும் உளறிக்கொட்டிக் கிளறி மூடினார். அப்படியா? அங்கே செல்ல வழி என்ன? என்று நாட்டியக்காரி கேட்க, தன் கண்ணாடியைக் காட்டிய ஜோசியர் அதைத் தேய்த்தால் அதிலிருந்து வரும் ஒளிக்கிரணங்களில்
ஜிலுக்கு குலுக்கு பாய் பாய், என்னும் மந்திரத்தைச் சொன்னால் அது பறக்கும் பாயாக மாறும் என்றும்

அதில் ஏறிச் செல்லவேண்டும், அங்கே போய், அந்தத் தங்க அவரைக்காயைப் பறித்துக்கொண்டு,
அவரை, துவரை, கவரை ஹோய்
ஹோய், கவரை துவரை அவரை டோய்
டோய் துவரை, அவரை, கவரை ஹோய்" என்னும் மந்திரத்தைச் சொன்னால் தங்க அவரை ராஜா உருவம் பெற்றுவிடுவான் என்றும், மீண்டும் அதே மந்திரத்தை மட்டும் சொல்லாமல் கூடவே
, கவரை, துவரை, விடாதீர்கள் அவரை என்னும் மந்திரத்தை மட்டும் தனியாகச் சொன்னால் தான் அவரைக்காயாக நிரந்தரமாக ஆகிவிடுவோம் என்றும் தனக்கு அப்படி ஒரு சாபம் இருப்பதாகவும், அதனால் தான் கவரை, துவரையைச் சேர்த்துச் சொல்லாமல் வெறும் "விடாதீர்கள் அவரை" என்பதை மட்டுமே சொல்வதாகவும் கூறிவிட்டார். அவரை மயக்கித்தூங்க வைத்த நாட்டியக்காரி ராஜாவை நம்பாமல் காவலனிடம் எல்லாவற்றையும் கூற, அவனும் ஜோசியரின் கண்ணாடியைத் தேய்த்து அதிலிருந்து வரும் ஒளிக்கிரணங்களில்
ஜிலுக்கு, குலுக்கு பாய் பாய் என்னும் மந்திரத்தைச் சொல்லப் பாய் பறந்து வந்தது. அதில் ஏறிய காவலன் ராஜாவும் கூட வரவேண்டும் என்று அழுது அடம் பிடிக்கிறதைப் பார்த்துச் சகிக்காமல் கூடவே ராஜாவையும் ஏற்றிக்கொண்டான். தங்கத்தவளைப் பெண்ணோ தான் தத்தித்தத்தியே வந்துவிடுவதாய்ச் சொல்லிவிட்டாள்.

ஏழு மலைகள், ஏழு கடல்கள், ஏழு கிணறுகள் தவளைக்குடும்பங்கள் தாண்டி அவரைத் தோட்டத்துக்குப் போனால் அங்கே எல்லாமும் தங்க அவரைக்காய்களாக இருந்தன. எது ராஜா அவரை எனப் புரியவில்லை. சற்று நேரம் பிரமித்துப் போன காவலன், மந்திரத்தைத் திரும்பத் திரும்ப உருப்போட ஆரம்பித்தான். அப்போது முன்னம் பார்த்த பெரிய தவளை வந்து ஹாஹாஹா எனச் சிரிக்க தங்கத்தவளைப் பெண் அங்கே வந்து சேர்ந்தாள் ஒரு பெரும் பாம்புக்கூட்டத்துடன்.

அவள் தன் தங்கத்தோலைக்கழட்டி மானுடப் பெண்ணாக மாறிப் பாம்பாட்டியின் உதவியோடு பாம்புகளைப் பிடித்து வந்திருந்தாள். அதுக்குத்தான் பின்னாடி வரேன்னு சொல்லி இருக்கிறாள். பாம்புகள் தவளைகளைப் பிடிக்கச் செல்ல தவளைகள் பயந்து ஓட அவரைப்பந்தலில் இருந்த அவரைக்காய்கள் நிஜமாக மாற ஒரே ஒரு காய் மட்டும் தனித்துப் பெரியதாகத்தங்கமாய்த் தெரிய அதைப் பறித்த தங்கத்தவளைப்பெண் அந்த மந்திரத்தைச் சொல்லச் சொன்னாள்.
காவலனும் சொல்ல ராஜாவும் உருவம் பெற்றான். பின்னர் அந்தப் பறக்கும் பாயைப் பிடித்துக்கொண்டு, மீண்டும் மந்திரத்தைச் சொல்லக் கண்ணாடி எதிரே தெரிந்தது. அதில் தூங்கிக் கொண்டிருந்த ஜோசியர் தெரிய அவரைப் பார்த்துக் காவலன் சொன்னான்.
கவரை, துவரை, விடாதீர்கள் அவரை!இங்கே பார்க்கவும்