எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, September 12, 2014

சகுனத்துக்குக் கிடைத்த மூன்றாம் பரிசு!

இதை எழுதுவதற்காகக் கதையை மீண்டும் படிக்க வேண்டி வைகோ சாரின் பதிவைப் படிக்கத் திறந்தால், கறுப்புப்  பூனை குதித்துக் குதித்து ஓடியது.  சரி தான், நல்ல சகுனம்னு நினைத்த வண்ணம் எழுத ஆரம்பித்தேன்.  இந்த சகுனம் பார்ப்பது என்பது இந்தியர்களிடம் மட்டும் இல்லை.  மற்ற வெளிநாட்டினரிடமும் உள்ளதே.  ஆகவே இதற்காக நாம் வெட்கப் பட வேண்டாம். மனித மனம் எப்போவும் நன்மையையே எதிர்பார்க்கும். சகுனம் பார்ப்பதும் பார்க்காததும் அவரவர் விருப்பம் என்றாலும் அங்கெல்லாம் பெரும்பாலும் அஃறிணைப் பொருட்களின் இடம் மாறுதல், வீட்டுச் செல்லங்கள் குறுக்கே வருதல் போன்றவை மாத்திரமே பார்க்கப்படுகின்றன.  நம் நாட்டில் அதுவும் தமிழ்நாட்டில் மனிதர்களை வைத்துக் கூட சகுனம் பார்ப்பது என்பது இன்றும் நடக்கிறது. அதிலும் விதவைப் பெண்களை ஒதுக்கித் தள்ளுவது என்பதும், அவர்கள் எதிரே வந்தால் நல்லது நடக்காது என்றும் வெறுப்பவர்கள் பலர் இன்றும் உள்ளனர். அவ்வளவு ஏன், பெற்ற பெண்ணாகவே இருந்தாலும், விதவையாகிவிட்டால் அந்தப் பெண் எதிரே வந்தால் நல்ல காரியம் நடக்காது எனச் சொல்லும் பெற்றோரைப் பார்த்திருக்கிறேன்.


பரிக்ஷைக்குப் போகும்போதும் சகுனம் பார்ப்பார்கள்.  நேரம் பார்ப்பார்கள்.  ஆனால் பரிக்ஷைக்கு நன்கு படிப்பது முக்கியம் என்பது பெரும்பாலான பெற்றோருக்குத் தெரிவதில்லை; புரிவதில்லை.  படிக்காமல் வீணே நாட்களைக் கழித்துவிட்டுப் பின்னர் சகுனம் சரியில்லை, ராகு காலத்தில் பரிக்ஷை ஆரம்பிச்சது என்றெல்லாம் சொல்வது சப்பைக்கட்டுத் தான்.


நாள் என் செய்யும் வினைதான் என்செயும் எனை நாடிவந்த
கோள் என் செய்யும் கொடும் கூற்று என்செயும் குமரேசன் இரு
தாளும், சிலம்பும், சதங்கையும், தண்டையும் சண்முகமும்
தோளும், கடம்பும், எனக்கு முன்னே வந்து தோன்றிடினே.


எனக் குமரகுருபரர் கந்தரலங்காரத்திலே கூறியது போல் இறைவன் எந்நேரமும் நமக்குத் துணை இருக்க சகுனம் வந்து என்ன செய்துவிடும்!  கல்மிஷமில்லாமல் இருக்கும் சிவராமனுக்குக் கிடைத்த அவப்பெயர் தான் கதைக்கருவே.  மிகச் சிறிய கருவை வைத்துக் கொண்டு  தேவையான இடங்களில் நகாசுவேலைகளைச் செய்து கதையை எழுதி இருக்கிறார் வைகோ அவர்கள்.   அன்றாட நிகழ்வுகளை உன்னிப்பாய்க் கவனித்து அதோடு மட்டுமில்லாமல் மனித மனங்களின் எண்ணங்களையும், அவை ஒரு மனிதரைத் தூக்கி வைக்கும் அதே நாக்கால் தூக்கி எறிவதையும் நன்கு புரிந்து கொண்டிருக்கும் ஆசிரியர் சம்பவ தினத்தன்று நடந்த ஒரு சிறு நிகழ்ச்சியை வைத்துக் கதையைப் பின்னி நம்மைக் கட்டிப் போட்டு விடுகிறார்;


அடுக்குமாடிக் குடியிருப்பில் இருப்பவர்கள் மாடி ஏறி, இறங்கினாலோ அல்லது லிஃப்டில் போனாலோ ஒருத்தருக்கொருத்தர் பார்க்காமல் இருக்க முடியாது. பார்த்துத் தான் தீர வேண்டும். பலதரப்பட்டவர்களும் இருப்பார்கள். அவர்களில் விதவைகளும் இருக்கலாம்; சுமங்கலிகளும் இருக்கலாம்; பிராமணர்களும் இருக்கலாம்; மற்றவர்களும் இருக்கலாம். எல்லாம் தெரிந்து கொண்டு தானே அங்கே குடி போகிறோம்! இங்கே சிவராமன் இருக்கும் குடியிருப்பில் லிஃப்ட் பயன்பாட்டுக்குக் கட்டுப்பாடுகள் இருப்பதையும் அதனால் தான் படிகளில் ஒருவரை ஒருவர் சந்திக்க நேர்கிறது என்பதையும் ஆசிரியர் குறிப்பிட்டுச் சொல்லி இருக்கிறார்.


காவிரிக்குத் தினமும் குளிக்கச் செல்லும் ஶ்ரீமதிப்பாட்டி நம் கதாநாயகர் சிவராமனுக்கு உறவு தான். ஶ்ரீமதிப்பாட்டி காவிரியில் தினந்தோறும் குளித்துவிட்டு வரும்போது அலுவலகம் செல்லும் சிவராமனைப் பார்ப்பவர்கள் தான். ஶ்ரீமதிப்பாட்டி சுமங்கலியாக இருந்தவரைக்கும் கணவனோடு காவிரிக்குச் சென்றவர்கள் கணவன் இறந்ததால் தன் இரண்டாம் மகனுடன் செல்ல ஆரம்பித்திருக்கிறார்.  கணவன் இறந்துவிட்டதால் தான் விதவை, சிவராமன் அலுவலகம் செல்கையில் எதிரே வரக்கூடாது என ஒதுங்கி இருந்து அவர் கீழே இறங்கி அலுவலகம் செல்லும் திசையில் சென்ற பின்னர் ஶ்ரீமதிப்பாட்டி மேலே ஏறுவார்.  ஆனால் ஒருநாள் கவனிக்காமல் நேருக்கு நேரே சந்திக்கையில், நேரடியாக சிவராமனிடம் பாட்டியே, தான் எதிரே வந்துவிட்டதால் சகுனம் சரியில்லை என்றும், சற்று உட்கார்ந்து விட்டு போகச் சொல்லியும் சிவராமன் மனதில் துளியும் கல்மிஷமின்றித் தான் சகுனம் பார்ப்பது இல்லை என்றும், இறைவனின் நாமங்களை உச்சரித்த வண்ணம் செல்வதால் தனக்குப் பிரச்னைகள் ஏற்படாது என்றும் சொன்னவர் இத்தனை வருடங்கள் கணவனோடு வாழ்ந்து அனுபவித்த பழுத்த பழமான ஶ்ரீமதிப்பாட்டியை சகுனத் தடை எனத் தான் சொல்ல மாட்டேன் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டுப் பாட்டியை எப்போதும்போல் சகஜமாகத் தனக்கெதிரே வரும்படியும் சொல்கிறார்.


இத்தனை நல்லமனம் படைத்த சிவராமன் வைகுண்ட ஏகாதசி தினத்தன்று சுவாமி தரிசனம் செய்ய வரும் மாமியாரை வரவேற்று அழைத்துவர வேண்டி அன்று காலை நான்கு மணிக்கே எழுந்து ரயில் நிலையம் செல்கிறார். மாமியாரை அழைத்து வந்து வீட்டில் விட்டு விட்டு ஏழு மணிக்குள் அலுவலகமும் கிளம்பவேண்டும்.  லிஃப்டோ விடிந்த பின்னரே இயங்கும்.  மாடிப்படிகளில் இறங்கி வந்து  ஆட்டோ பிடித்து ஓட்டுநரைக் காத்திருக்க  வைத்து அன்றாடத் தேவைக்கான பாலை வாங்கி மீண்டும் மாடி ஏறி மனைவியிடம் கொடுக்க மாடி ஏறுகையில் ஶ்ரீமதிப்பாட்டியையும், அவர் மகனையும் பார்க்க நேர்கிறது. இருவரும் காவிரிக்குச் சென்று கொண்டிருந்தனர்.  மனதில் எவ்விதமான கெட்ட எண்ணங்களும் இல்லாத சிவராமன் இதை சாதாரணமான சந்திப்பாகவே எடுத்துக் கொள்கிறார்.


ஆகவே மீண்டும் கீழே இறங்கி ரயில் நிலையம் சென்று மாமியாரை அழைத்துவந்து வீட்டில் விட்டு விட்டு வழக்கமான நேரத்தில் அலுவலகமும் கிளம்பி விடுகிறார்.  அலுவலகத்தில் இருக்கையில் தான் ஶ்ரீமதிப்பாட்டி வழுக்கி விழுந்து தலையில் அடிபட்டு, இப்போவோ, அப்போவோ என்று கிடக்கும் நிலைமையை மனைவியின் வாயிலாக அறிந்து கொள்கிறார்.  ஏதும் நடக்கும் முன்னர் சிவராமனின் மனைவியும், தன் தாயை அழைத்துக் கொண்டு கோயிலுக்கும் போயிட்டு வந்து விடுகிறார்.  மாமியாரும் மாப்பிள்ளை சிவராமனுக்காகத் திரட்டுப்பாலும் காய்ச்சுகின்றார். இந்த இடத்தில் சிவராமன் தன் மனைவி சமையலில் அவ்வளவு கெட்டிக்காரி இல்லை என்பதை ஜாடையாகச் சுட்டிக்காட்டுகிறார்.  ஆனால் தாயைப்போலவே, நன்கு சமைக்கும் பெண்களும் இருக்கிறார்கள்.  :)


ஶ்ரீமதிப்பாட்டி வீட்டில் தான் இருக்கிறார்கள் என்பதால் சிவராமன் தன் மனைவியுடன் ஶ்ரீமதிப்பாட்டிக்காகத் திரட்டுப்பாலும் எடுத்துக் கொண்டு அவரைப் பார்க்கப் போகிறார்.  அங்கே பாட்டிக்கும் கொடுத்துவிட்டுச் சுற்றி இருப்பவர்களுக்கும் கொடுக்கையில் இரண்டாவது மகன், அதாவது பாட்டியுடன் தங்கி இருப்பவர் அந்தக் கலவரமான மனநிலையிலும் அந்தத் திரட்டுப்பால் பாத்திரத்தை வாங்கி மிச்சம் இருப்பது எல்லாவற்றையும் சாப்பிட்டு விடுகிறார். இது முதல் அதிர்ச்சி சிவராமனுக்கு. தாய் சாகக் கிடக்கும்போது இவர் இப்படிக் கொஞ்சம் கூடக்கூச்சநாச்சம் இல்லாமல் திரட்டுப்பாலை விழுங்குவது நமக்கே ஒரு மாதிரியாகத் தான் இருக்கிறது.  பின்னர் பாட்டியின் மூத்த பிள்ளை குடும்பத்தோடு வருவதை நிச்சயம் செய்து கொண்டு வீட்டிற்கு வரும் சிவராமனுக்கு இரவு பத்தரை மணி அளவில் பாட்டியின் உயிர் பிரிந்தது தெரிந்து உடனே அங்கே சென்று சம்பிரதாயமான சில சடங்குகளைச் செய்து கொடுத்து உதவுகிறார்.  மறுநாளும் காலையில் பாட்டியின் கடைசிக்காரியம் முடிந்ததும், தங்கள் வீட்டிலிருந்து சாப்பாடு கொண்டு தருவதாகவும் அதற்கான ஏற்பாடுகள் நடப்பதாகவும் வலியச் சொல்கிறார் சிவராமன்.


இங்கே ஒரு சின்ன திருத்தம் சொல்லணுமோனு நினைக்கிறேன்.  சாதாரணமாகச் சாவு நிகழ்ந்த வீட்டில் கர்த்தாக்கள், அதாவது பிள்ளை, நாட்டுப்பெண் ஆகியோர் வீட்டை விட்டுப் பதின்மூன்று நாட்களுக்கு வெளிக்கிளம்ப மாட்டார்கள்.  பதின்மூன்றாம் நாள் காலை, (புண்யாஹவசனம்) ஹோமம், கர்த்தாவுக்கு சுத்திகரிப்பு அபிஷேஹம் எல்லாம் ஆனதும் அன்று காலையோ, மாலையோ முதலில் கோயிலுக்குப் போகச் சொல்வார்கள்  முதல் முதல் கோயில் தான் போகணும். அது வரைக்கும் யார் வீட்டுக்கும் போகக் கூடாது.  துக்கத்தை எதிர்கொண்டு போகக் கூடாது என்பார்கள். ஆகவே பாட்டியின் பிள்ளைகள், மற்றும் நாட்டுப் பெண் ஆகியோர் சிவராமன் வீட்டுக்கு வந்து சாப்பிட்டது என்பது கொஞ்சம் உறுத்தலாக இருக்கிறது. அவர்களுக்கு மட்டும் சாப்பாட்டை அவர்கள் வீட்டில் தான் கொண்டு வைக்க வேண்டும். மற்ற உறவினர்கள் தீட்டில்லாதவர்கள் சிவராமன் வீட்டில் வந்து சாப்பிடலாம்.  இதை வைகோ அவர்கள் எப்படியோ மறந்திருக்கிறார். வாசல் தெளிக்காமல் வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது என்பதைக் குறிப்பிட்டவர் இதை மறந்தே போயிட்டார் போல! :))).


அதை விடுங்க.  விஷயத்துக்கு வருவோம்.  இவ்வளவு பரோபகாரியான சிவராமனைக் குற்றம் சாட்டுகிறார் இரண்டாம் மகன். அன்று குளிக்கச் செல்கையில் சிவராமன் ஒத்தப் பிராமணனாக எதிரே வந்ததில் தான் தன் தாய் கீழே விழுந்து அடிபட்டுக் கொண்டதாகத் திரட்டுப்பாலை வழித்து முழுங்கிய இரண்டாவது பிள்ளை சொல்வது தான் கொடுமை! ஒத்தப் பிராமணனாக சிவராமன் எதிரே வந்தது தான் தன் தாய் வழுக்கி விழுந்து சாகக் காரணம் என்று அவர் மேல் பழியைப் போடுவது தான் தன் தாயைச் சரிவரக் கவனிக்கவில்லை என யாரேனும் சொல்லிட்டால் என்ன செய்வது என்ற குற்ற உணர்ச்சியிலிருந்து தப்பிக்கவேண்டித் தானே அன்றி உண்மையில் சிவராமன் காரணமே அல்ல. இன்னொரு பக்கம் பாட்டியைக் கடைசி வரை கிட்டே இருந்து பார்த்துக்கொள்ளாத மூத்த மருமகள் இந்த மட்டும் பாட்டி போய்ச் சேர்ந்தாளே என சந்தோஷப் பட்டுக்கொள்கிறார்.  எல்லோருடைய பேச்சையும் அதிர்ச்சியுடன் கேட்கும் சிவராமனுக்குப் பகல் தூக்கத்தில் பாட்டி வந்து தன்னை ஆசீர்வதிப்பது போல் கனவு வருகிறது.  அது கனவில்லை; உண்மை!  சிவராமன் தீர்காயுசோடு சந்தோஷமாக இருக்கணும்  என மனப்பூர்வமாப் பாட்டி ஆசீர்வதித்திருப்பார்.


உப்பும், நீரும் இறங்க இறங்க துக்கம் போகும் என்பார்கள்.  ஆனால் இவர்களுக்கோப் பாட்டி போனதை விட ஒத்த பிராமணன் சகுனம் தான் பெரிதாகத் தெரிகிறது. அதற்குப் பாட்டியின் மூத்த மருமகள் இந்த மட்டும் தொந்திரவு கொடுக்காமல் போய்ச் சேர்ந்த பாட்டியை வாழ்த்துவது எவ்வளவோ பரவாயில்லை. உண்மையும் அதுதானே.  எல்லோருமோ கிடக்காமல், கொள்ளாமல், பிறருக்குச் சங்கடம் தராமல் போகத் தானே விரும்புவோம். அது எளிதில் கிடைக்குமா?  அந்த வகையில் பாட்டி அதிர்ஷ்டசாலி தான். ஏகாதசி மரணமும், துவாதசி தகனமும் எளிதில் கிடைக்காதே!



சகுனம், சிவராமன், மற்றும் நடுவர்

நடுவர் அவர்கள் இந்தக் கதை குறித்து எழுதிய விமரிசனத்துக்கு விமரிசனம் பகுதியில் ஶ்ரீமதிப் பாட்டியின் வீடு சிறியது என்பதால் அங்கே சாப்பாடு போட முடியாது என சிவராமன் தன் வீட்டில் போட்டதாகக் காரணம் சொல்லி இருக்கிறார்.  மற்றவர் வரை இது சரி.  ஆனாலும் கர்த்தாக்கள் மூன்று பேரும், ஶ்ரீமதிப்பாட்டியின் மூத்த பிள்ளை, மனைவி, சகுனம் பார்த்த இரண்டாம் பிள்ளை ஆகிய மூவரும் ஶ்ரீமதிப் பாட்டியின் வீட்டிலேயே சாப்பிட இடம் இல்லாமல் இருந்திருக்காது என நினைக்கிறேன்.  அவங்க அங்கேயே தான் சாப்பிட்டாகணும். :))))   கர்த்தாக்கள் வெளியே போகக் கூடாது.

அப்பாடா, இன்னொண்ணை ஆரம்பிச்சு வைச்சாச்சு!  இன்னிப் பொழுதுக்கு வம்பு வளர்த்தாச்சு. வர்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டா? :)))))))

36 comments:

  1. இந்த சகுனம் பார்ப்பது என்பது இந்தியர்களிடம் மட்டும் இல்லை. மற்ற வெளிநாட்டினரிடமும் உள்ளதே.

    ~எக்காலமும் எல்லாவிடத்திலும் உண்டு. அச்சம் இயல்பான தன்மை. நன் நிமித்தங்களும், தீ நிமித்தங்களும் பெரிதும் பேசப்படுகின்றன. கோளறு பதிகம் ஆட்சி செலுத்துகிறது, சிவராமனிடம்.

    வம்பை வளர்த்தாச்சு. 'டர்ர்ர்ர்ர்னு' கிளம்பியுமாச்சு!

    ReplyDelete
  2. இந்த சகுனம் பார்ப்பது என்பது இந்தியர்களிடம் மட்டும் இல்லை. மற்ற வெளிநாட்டினரிடமும் உள்ளதே.

    ~எக்காலமும் எல்லாவிடத்திலும் உண்டு. அச்சம் இயல்பான தன்மை. நன் நிமித்தங்களும், தீ நிமித்தங்களும் பெரிதும் பேசப்படுகின்றன. கோளறு பதிகம் ஆட்சி செலுத்துகிறது, சிவராமனிடம்.

    வம்பை வளர்த்தாச்சு. 'டர்ர்ர்ர்ர்னு' கிளம்பியுமாச்சு!

    ReplyDelete
  3. //சகுனத்துக்குக் கிடைத்த மூன்றாம் பரிசு!//

    தாங்கள் விமர்சனம் எழுதி அனுப்பிய வேளை நல்ல சகுனம் தான் போலிருக்கு.

    பரிசு கிடைத்துள்ளதே ! :)))))

    பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    மேலும் மேலும் பல பரிசுகள் கிடைத்திட ப்ராப்தம் சாதகமாக அமையட்டும்.

    இதனைத் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளதற்கு என் நன்றிகள்.

    [கடைசி 2 பாராக்களை வேறு கலரில் காட்டி அதற்கான இணைப்பினையும் கொடுத்திருக்கலாம்.]

    அன்புடன் கோபு

    ReplyDelete
  4. //அப்பாடா, இன்னொண்ணை ஆரம்பிச்சு வைச்சாச்சு! இன்னிப் பொழுதுக்கு வம்பு வளர்த்தாச்சு. வர்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டா? :)))))))//

    அதே ..... அதே .....

    அப்போ நானும் வர்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டா? :)))))))

    ReplyDelete
  5. சிறப்பான விமர்சன சகுனம்..

    எந்தப் புற்றில் எந்தப்பாம்போ?

    பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது..

    ஆலாபனை செய்யப்போவது யார்?

    ReplyDelete
  6. வாங்க "இ" சார், நம்ம வேலை அதோட முடிஞ்சுதுல்ல! :))))

    ReplyDelete
  7. வைகோ சார், சொன்னதை உடனே செய்துட்டோமுல்ல! :))))

    ReplyDelete
  8. வாங்க ராஜராஜேஸ்வரி, தெரியலை, பொறுத்திருந்து பார்ப்போமா? :)))

    ReplyDelete
  9. ////அப்பாடா, இன்னொண்ணை ஆரம்பிச்சு வைச்சாச்சு! இன்னிப் பொழுதுக்கு வம்பு வளர்த்தாச்சு. வர்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டா? :)))))))//

    ”பத்த வெச்சுட்டையே பரட்டை”

    16 வயதினிலே என்ற திரைப்படத்தில் ரஜினிகாந்த் ஐப்பார்த்து ஒருத்தன் இப்படிச் சொல்லுவான். :)))))

    ReplyDelete
  10. //Geetha Sambasivam said...
    வைகோ சார், சொன்னதை உடனே செய்துட்டோமுல்ல! :))))//

    இது எப்படி இருக்கு ?

    இதுவும் 16 வயதினிலேயில் அடிக்கடி வரும் ரஜினியின் ஓர் வசனம்.

    உடனே செய்து முடித்துள்ளதற்கு என் நன்றிகள். “இது எப்படி இருக்கு?” ஜோராவே பளிச்சினு இருக்கு. VGK

    ReplyDelete
  11. பரிசுக்குப் பாராட்டுகள்.

    சாஸ்திரங்களுக்கும் சம்பிரதாயங்களுக்கும் அந்தக் காலத்தில் எவ்வளவோ அர்த்தங்கள், காரணங்கள். அத்தனையும் இந்தக் காலத்துக்கும் (அப்படியே) பொருந்துமா என்ற கேள்வி வரும் எப்போதும்!

    ReplyDelete
  12. வைகோ ஸார் கதைகளுக்குப் பெரும்பாலும் நான் அப்போதே பின்னூட்டமிட்டிருப்பேன். இந்த விமர்சனங்கள் படிக்கும்போது படித்த கதை என்று பரிச்சயம் வரும்போது இதற்கு நாம் என்ன பின்னூட்டம் இட்டோம் அப்போது என்று தெரிந்துகொள்ள அவ்வப்போது ஆர்வம் வரும். அவர் அந்தப் படைப்பின் லிங்க் அங்கு தருவதில்லை என்பதால் உடனடியாகப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்காது! :)))

    ReplyDelete
  13. இதில் இன்னொன்று. இப்போது விமர்சனம் செய்பவர்கள் கருத்து கூட, அப்போது அவர்கள் பின்னூட்டம் இட்டிருந்தால் அந்தக் கருத்தோடு ஒத்துப் போகிறதா என்றும் பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன்.

    ReplyDelete
  14. ஸ்ரீராம். said...

    வாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் ! வணக்கம்.

    //வைகோ ஸார் கதைகளுக்குப் பெரும்பாலும் நான் அப்போதே பின்னூட்டமிட்டிருப்பேன். இந்த விமர்சனங்கள் படிக்கும்போது படித்த கதை என்று பரிச்சயம் வரும்போது இதற்கு நாம் என்ன பின்னூட்டம் இட்டோம் அப்போது என்று தெரிந்துகொள்ள அவ்வப்போது ஆர்வம் வரும். அவர் அந்தப் படைப்பின் லிங்க் அங்கு தருவதில்லை என்பதால் உடனடியாகப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்காது! :)))//

    -=-=-=-

    //வைகோ ஸார் கதைகளுக்குப் பெரும்பாலும் நான் அப்போதே பின்னூட்டமிட்டிருப்பேன். //

    ஆம். பின்னூட்டமிட்டிருப்பீர்கள். மிக்க நன்றி.

    //இந்த விமர்சனங்கள் படிக்கும்போது படித்த கதை என்று பரிச்சயம் வரும்போது இதற்கு நாம் என்ன பின்னூட்டம் இட்டோம் அப்போது என்று தெரிந்துகொள்ள அவ்வப்போது ஆர்வம் வரும்.//

    தங்களைப்போன்ற ஆயிரத்தில் ஒருத்தருக்குத்தான் இந்த மாதிரியான ஆர்வங்கள் வரும். பாராட்டுக்கள்.

    // அவர் அந்தப் படைப்பின் லிங்க் அங்கு தருவதில்லை என்பதால் உடனடியாகப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்காது! :)))//

    லிங்க் கொடுக்கலாம் தான். ஆனால் அன்று நான் வெளியிட்டதற்கு இன்று நான் வெளியிடுவதற்கும் சற்றே வித்யாசம் இருக்கும் என்பதை முதலில் தெரிவித்துக்கொள்கிறேன்.

    விமர்சனப்போட்டிக்கான கதை என்பதால் என் சொந்தக்கருத்துகள் பலவற்றை இப்போது நீக்கி ’சிக்’கென வெளியிட வேண்டியதாக உள்ளது.

    [உதாரணமாக: சமீபத்திய என் VGK-34 'பஜ்ஜீன்னா .... பஜ்ஜி தான் ! கதையைச் சொல்லலாம்.]

    அதுபோல சில கதைகளை நான் தேர்ந்தெடுத்து போட்டிக்காக இப்போது வெளியிடும்போது மேலும் சில நகைச்சுவைக் காட்சிகளை, வாசகர்களுக்கு மேலும் ஒருவித ’கிக்’ ஏற்படுத்த வேண்டி அவற்றில் புதிதாகச் சேர்ப்பதும் உண்டு.

    [உதாரணமாக: VGK-07 ’ஆப்பிள் கன்னங்களும் அபூர்வ எண்ணங்களும்’ என்ற கதையைச் சொல்லலாம். ]

    லிங்க் கொடுப்பதால் மேலும் ஒரு ஆபத்து உள்ளது. அதில் பலரும் எழுதியிருக்கும் பின்னூட்டங்களையே ஒரு அவியலாக்கி ஒருவர் ஒரு விமர்சனமாக எழுதி அனுப்ப வாய்ப்புகள் உள்ளன. அதுபோலவே சிலர் செய்வதாகவும் என்னால் அவ்வப்போது நன்கு உணர முடிகிறது.

    ஏனெனில் எனக்கு யார் யார் எந்தெந்த கதைகளுக்கு என்னென்ன பின்னூட்டங்கள் கொடுத்திருந்தார்கள் என என்னால் தூக்கத்தில் என்னை எழுப்பிக்கேட்டாலும் சொல்ல முடியும். அந்த அளவுக்கு பலரின் வித்யாசமான பின்னூட்டங்களை மனதில் கிரஹித்துக்கொண்டுள்ளேன். இயற்கையாகவே எனக்கு ஞாபக சக்தியும் கொஞ்சம் ஜாஸ்திதான்.

    இவ்வாறு அவர்கள் அந்த என் பழைய பதிவின் பின்னூட்டங்களையே அவியல் ஆக்கித்தராமல், நம் நடுவர் அவர்களின் எதிர்பார்ப்புக்குத் தகுந்தபடி தங்களின் சொந்த நடையில் அழகாக விமர்சனம் தர வேண்டும் என்பதாலும், நான் அந்தக்கதைக்கான பழைய லிங்க் ஏதும் தராமல் இருந்து வருகிறேன்.

    இருப்பினும் அவற்றை கண்டுபிடிப்பது சிலருக்கு மட்டும் மிகச்சுலபமாக உள்ளது. இந்த என் விமர்சனப்போட்டிக்காகவே COMPLETE ஆகவே என் பழைய கதைகள் அத்தனையையும் INDEX செய்து தயாராக வைத்திருப்பார்களோ ... என்னவோ :)))))

    உலகம் பலவிதம். ஒவ்வொன்றும் ஒருவிதம்.

    அன்புடன் கோபு

    ReplyDelete
  15. ஹிஹிஹி, வைகோ சார், ரஜினி ரேஞ்சுக்கு என்னையும் உயர்த்தியதில் நன்றி. :))))

    ReplyDelete
  16. //சாஸ்திரங்களுக்கும் சம்பிரதாயங்களுக்கும் அந்தக் காலத்தில் எவ்வளவோ அர்த்தங்கள், காரணங்கள். அத்தனையும் இந்தக் காலத்துக்கும் (அப்படியே) பொருந்துமா என்ற கேள்வி வரும் எப்போதும்!//

    பொருந்தும் என்பதே என் கருத்து. என்ன இப்போதுள்ள மக்களுக்குப் பொறுமை இல்லை என்பதோடு எதிலும் அவசரம் வேறே. நாமாக நினைச்சுக்கறது தான் இப்போதுள்ள காலத்துக்குப் பொருந்தி வராது என்பதெல்லாம். :))))

    ReplyDelete
  17. வைகோ சாரின் பெரும்பாலான கதைகள் நான் இப்போது விமரிசனத்திற்காகவே படிக்கிறேன். இதிலே காசிக்குப் போனவர்களுடைய கதை மட்டும் மங்கையர் மலரிலேயோ என்னமோ படிச்சிருக்கேன். இந்த பஜ்ஜிக் கதை மட்டும் அவரோட பதிவிலேயே எதுக்கோ படிச்சிருக்கேன். ஏன்னு நினைவில் இல்லை. மற்றபடி பெரும்பாலான கதைகளே நான் படிக்காதவை தான். :))))

    ReplyDelete
  18. ஆமாம் , பஜ்ஜி கதையைப் படிக்கிறச்சே முன்னால் என்ன பின்னூட்டம் கொடுத்திருப்போம், பின்னூட்டம் கொடுத்தோமா இல்லையா என்றெல்லாம் எனக்கும் தோன்றியது. ஆனால் அந்தக் கதையைத் தேடிப் படிக்கத் தோணலை. :))))

    ReplyDelete
  19. //இருப்பினும் அவற்றை கண்டுபிடிப்பது சிலருக்கு மட்டும் மிகச்சுலபமாக உள்ளது. இந்த என் விமர்சனப்போட்டிக்காகவே COMPLETE ஆகவே என் பழைய கதைகள் அத்தனையையும் INDEX செய்து தயாராக வைத்திருப்பார்களோ ... என்னவோ :))))) //

    ஆச்சரியமாத் தான் இருக்கு. நான் உங்களோட அடைப்பதிவைத் தான் முதலில் யாரோ சுட்டி கொடுத்துப் படித்தேன். அப்புறமாய் மிளகாய்ப்பொடிப் பதிவு. அதன் பின்னரோ, அந்த சமயமோ அப்பாதுரை வந்துட்டுப் போய் உங்க வீட்டு ஜன்னல் பத்தி எழுதியதும், உங்க ஜன்னல் குறித்து நீங்க எழுதினது. இவையும், பஜ்ஜி பதிவும் தான் நல்லா நினைவில் இருக்கு. ஆனால் அப்போதிலிருந்து தொடர்ந்து படித்து வருகிறேன். :))))

    ReplyDelete
  20. அன்பின் கீதா சாம்பசிவம் - அருமையான விமர்சனம் எழுதி அதற்குப் பரிசும் பெற்றமைக்குப் பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா​

    ReplyDelete
  21. அன்பின் கீதா சாம்பசிவம் - அருமையான விமர்சனம் எழுதி அதற்குப் பரிசும் பெற்றமைக்குப் பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  22. //ஏனெனில் எனக்கு யார் யார் எந்தெந்த கதைகளுக்கு என்னென்ன பின்னூட்டங்கள் கொடுத்திருந்தார்கள் என என்னால் தூக்கத்தில் என்னை எழுப்பிக்கேட்டாலும் சொல்ல முடியும். அந்த அளவுக்கு பலரின் வித்யாசமான பின்னூட்டங்களை மனதில் கிரஹித்துக்கொண்டுள்ளேன். இயற்கையாகவே எனக்கு ஞாபக சக்தியும் கொஞ்சம் ஜாஸ்திதான்.//

    பாராட்டுகள் ஸார். எனில், என்னுடைய பின்னூட்டங்கள் நினைவிருக்குமா?



    லிங்க் தராததற்கு நீங்கள் சொல்லியிருக்கும் காரணத்தை யோசித்துப் பார்க்கும்போது சரி என்றுதான் தோன்றுகிறது. முன்யோசனையுடன்தான் செயல் பட்டிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  23. //தங்களைப்போன்ற ஆயிரத்தில் ஒருத்தருக்குத்தான் இந்த மாதிரியான ஆர்வங்கள் வரும். பாராட்டுக்கள்.//

    ஹிஹிஹிஹி....

    ReplyDelete

  24. பரிசு கிடைத்ததற்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  25. //எனக்கு யார் யார் எந்தெந்த கதைகளுக்கு என்னென்ன பின்னூட்டங்கள் கொடுத்திருந்தார்கள் என என்னால் தூக்கத்தில் என்னை எழுப்பிக்கேட்டாலும் சொல்ல முடியும்.

    wow!

    ReplyDelete
  26. ஆமாம், ஶ்ரீராம், வைகோ சாரின் ஞாபக சக்தி பிரமிக்கத் தான் வைக்கிறது. :)

    ReplyDelete
  27. நன்றி சீனா சார், வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

    ReplyDelete
  28. ஜிஎம்பி சார் நன்றி.

    ReplyDelete
  29. அப்பாதுரை, வருகைக்கு நன்றி. எங்கள் ப்ளாகில் உங்கள் கேள்விக்கு விடை பின்னர் ஒரு நாளில். :)))) எழுதினால் பெரிசாகப்போயிடும் என்பதோடு பலருக்கும் பிடிக்காது. :(

    ReplyDelete
  30. பரிசுக்கு வாழ்த்துக்கள் கீதா மேடம்

    ReplyDelete
  31. ஸ்ரீராம். said... to VGK

    *****ஏனெனில் எனக்கு யார் யார் எந்தெந்த கதைகளுக்கு என்னென்ன பின்னூட்டங்கள் கொடுத்திருந்தார்கள் என என்னால் தூக்கத்தில் என்னை எழுப்பிக்கேட்டாலும் சொல்ல முடியும். அந்த அளவுக்கு பலரின் வித்யாசமான பின்னூட்டங்களை மனதில் கிரஹித்துக்கொண்டுள்ளேன். இயற்கையாகவே எனக்கு ஞாபக சக்தியும் கொஞ்சம் ஜாஸ்திதான்.***** - VGK

    //பாராட்டுகள் ஸார். //

    மிக்க நன்றி, ஸ்ரீராம்.

    //எனில், என்னுடைய பின்னூட்டங்கள் நினைவிருக்குமா?//

    வித்யாசமான பின்னூட்டங்கள் மட்டும் நிச்சயமாக நன்கு நினைவில் இருக்கும்.

    உதாரணமாக சமீபத்தில்
    http://gopu1949.blogspot.in/2014/07/blog-post_29.html
    இந்த என் பதிவினில் முதல் பின்னூட்டம் கொடுத்திருந்தீர்கள். அதன் கடைசி வரிகளில் நம் நடுவர் அவர்களை மனதில் வைத்து ஒரு கருத்தினைச் சொல்லியிருந்தீர்கள்.

    [யானை மறைந்து நின்றாலும் காட்டிக் கொடுக்கும் தும்பிக்கைகள் சில நேரம்.] என்று.

    மிகவும் ரஸித்துச் சிரித்த இதை எப்படி என்னால் மறக்க முடியும்?

    இதையே நான் உங்களுக்கு ஒரு பதிலாகக் கொடுத்திருந்தேன், இதோ இந்தப்பதிவின் பின்னூட்டத்தில்: http://gopu1949.blogspot.in/2014/09/blog-post.html

    இதைப்படித்த இந்த திருமதி. கீதா சாம்பசிவம் மேடம் என்னைப்பல கேள்விகள் கேட்டு வண்டு குடைவதுபோல குடைந்து எடுத்து விட்டார்கள்.

    அவர்கள் அதே பதிவினில் எழுதியுள்ளதைப் பாருங்கோ ஸ்ரீராம் .... இதோ இங்கே:

    ஶ்ரீராமின் இந்தப்பின்னூட்டத்தை இங்கே காணமுடியவில்லையே? யானையைக் குறித்து அவர் சொல்லி இருப்பதை இங்கே கானோமே! ??????

    அப்புறம் இவர்களுக்கு தனியே மெயில் மூலம், தாங்கள் கொடுத்திருந்த அந்த பின்னூட்டம் எங்கே உள்ளது என்று லிங்க் கொடுத்து விளக்கி புரியவைக்க வேண்டியதாப்போச்சு :)))))

    //லிங்க் தராததற்கு நீங்கள் சொல்லியிருக்கும் காரணத்தை யோசித்துப் பார்க்கும்போது சரி என்றுதான் தோன்றுகிறது. முன்யோசனையுடன்தான் செயல் பட்டிருக்கிறீர்கள்.//

    இந்தப்போட்டியினால் பல்வேறு அனுபவங்கள் எனக்குக் கிடைத்துள்ளன.

    முன்யோசனை இல்லாவிட்டால் .... போச்சு ! :) ஆளை அப்படியே காலைவாரிவிட்டு ஒரேயடியாகக் கவிழ்த்து விடுவார்களாக்கும். :)))))

    ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் !

    அன்புடன் VGK

    ReplyDelete
  32. மூன்றாம் பரிசு பெற்றதற்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  33. வாங்க ராஜலக்ஷ்மி, நன்றி.

    ReplyDelete
  34. வைகோ சார், மறு வரவுக்கு நன்றி.

    வெங்கட், நன்றி.

    ReplyDelete
  35. உப்பும், நீரும் இறங்க இறங்க துக்கம் போகும் என்பார்கள். ஆனால் இவர்களுக்கோப் பாட்டி போனதை விட ஒத்த பிராமணன் சகுனம் தான் பெரிதாகத் தெரிகிறது. அதற்குப் பாட்டியின் மூத்த மருமகள் இந்த மட்டும் தொந்திரவு கொடுக்காமல் போய்ச் சேர்ந்த பாட்டியை வாழ்த்துவது எவ்வளவோ பரவாயில்லை. உண்மையும் அதுதானே. எல்லோருமோ கிடக்காமல், கொள்ளாமல், பிறருக்குச் சங்கடம் தராமல் போகத் தானே விரும்புவோம். அது எளிதில் கிடைக்குமா? அந்த வகையில் பாட்டி அதிர்ஷ்டசாலி தான். ஏகாதசி மரணமும், துவாதசி தகனமும் எளிதில் கிடைக்காதே! //

    நடைமுறை உண்மையை நன்றாக சொன்னீர்கள்.
    பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  36. தொடர் வெற்றிகளுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete