
மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்,
நீராடப் போதுவீர், போதுமினோ நேரிழையீர்,
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்,
பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்!//
மார்கழி மாதம் பீடு நிறைந்த மாதம் எனச் சொல்லுவதுண்டு. தேவர்களின் பிரம்ம முஹூர்த்தம் ஆன இந்த மாதத்தில் தான் ஆண்டாள் பாவை நோன்பு இருக்கின்றாள். இந்தப் பாவை நோன்பு என்பது சங்க காலத்திலேயே வழக்கில் இருந்திருக்கின்றதாய்த் தெரிய வருகின்றது. பரிபாடலில் கீழ்க்கண்டவாறு அம்பா ஆடல் என்ற பெயரில் பாவை நோன்பு விளங்கி வந்திருக்கின்றது தெளிவாகின்றது. ஆண்டாளும், தன் மனதுக்கிசைந்த மணாளனுக்காகப் பாவை நோன்பு இருக்கின்றாள். காத்யாயனி நோன்பு எனவும் அழைக்கப் பட்டது.
கனைக்கும் அதிகுரல் கார் வானம் நீங்க,
பனிப் படு பைதல் விதலைப் பருவத்து, 75
ஞாயிறு காயா நளி மாரிப் பின் குளத்து,
மா இருந் திங்கள் மறு நிறை ஆதிரை
விரிநூல் அந்தணர் விழவு தொடங்க,
புரி நூல் அந்தணர் பொலம் கலம் ஏற்ப,
‘வெம்பாதாக, வியல் நில வரைப்பு!‘ என 80
அம்பா ஆடலின் ஆய் தொடிக் கன்னியர்,
முனித் துறை முதல்வியர் முறைமை காட்ட,
பனிப் புலர்பு ஆடி, பரு மணல் அருவியின்
ஊதை ஊர்தர, உறை சிறை வேதியர்
நெறி நிமிர் நுடங்கு அழல் பேணிய சிறப்பின், 85
தையல் மகளிர் ஈர் அணி புலர்த்தர,
வையை! நினக்கு மடை வாய்த்தன்று.
மையாடல் ஆடல் மழ புலவர் மாறு எழுந்து,
பொய் ஆடல் ஆடும் புணர்ப்பின் அவர், அவர்
தீ எரிப் பாலும் செறி தவம் முன் பற்றியோ, 90
தாய் அருகா நின்று தவத் தைந் நீராடுதல்?
நீ உரைத்தி, வையை நதி!
இது மார்கழி மாதம் முழு நிலவு நாளன்று ஆதிரை நட்சத்திரம் கூடிய நாளில் ஆரம்பித்து, அடுத்த முழுநிலவு நாள் வரும் வரையிலும் ஒரு மாதம் நோன்பு இருந்ததாய்ப் பழைய நூல்களில் இருந்து தெரிய வருகின்றது. முதலில் மழை வளத்துக்காகவே இருக்கப் பட்ட இந்த நோன்பு பின்னர் தாங்கள் விரும்பிய மணவாளனை அடைவதற்காகவும் நோன்பு ஆரம்பித்துப் பெண்கள், முதியவர்களின் வழிகாட்டுதலின்படி இருக்க ஆரம்பித்தார்கள் என மு.ராகவையங்கார், பண்டிதமணி போன்றோர் கூறுகின்றார்கள்.

இந்த நோன்பு பற்றி பாகவதத்திலும் குறிப்பிடப் பட்டிருக்கின்றதாயும் தெரிய வருகின்றது. கோகுலத்துப் பெண்கள் அனைவரும் இந்த மார்கழி மாதம் அதிகாலையில் எழுந்து, யமுனையில் நீராடி, ஆற்றங்கரை மணலில், காத்யாயனி என்னும் சக்தி தேவியின் உருவத்தைச் சமைத்து, சந்தனம், குங்குமம், மஞ்சள், வாசனைத் திரவியங்கள், மலர்கள் போன்றவற்றால் அலங்கரித்து, கண்ணன் புகழ் சொல்லும் பாடல்களைப் பாடிக் கொண்டு ஒருவருடன் ஒருவர் கை கோர்த்துக் கொண்டு ஆடிப் பாடி நீராட்டத்தோடு வழிபாடும் செய்தனர் என்று தெரிய வருகின்றது. இந்த நோன்பு அவர்கள் இருந்ததின் நோக்கமே, கண்ணனைத் தங்கள் மணாளனாய் அடையவேண்டும் என்பதே.
சங்க காலத்தில் மழை வேண்டிச் செய்யப் பட்ட இந்த நோன்பைச் செய்ததும் மிகவும் சிறிய பெண்கள் என்று தெரிய வருகின்றது. சிறு பெண்கள் என்றால் ஒன்பது வயதுக்கும் கீழே உள்ள பெண்கள்.காலப் போக்கில் பக்தி நெறி பரவப் பரவ ஒன்பது வயதுக்கு மேற்பட்ட பெண்களும், திருமணத்தை எதிர்நோக்கி இருக்கும் பெண்களும் பாவை நோன்பை இருக்க ஆரம்பித்தனர்.
மார்கழி மாதம் மதி நிறைந்த நன்னாள் ஆன பெளர்ணமி அன்று ஆரம்பித்திருப்பதாலேயே ஆண்டாள் "மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்" என்று ஆரம்பித்திருக்கவேண்டும். கிட்டத் தட்ட பாகவதக் கதையையே இந்த முப்பது பாடல்களில் சொல்லி விடுகின்றாள் ஆண்டாள்.
இந்தப் பாடலில் பெண்களை நீராட அழைக்கும்போதே கண்ணனின் வளர்ந்த கோகுலம் பற்றியும், நந்தன் பற்றியும், யசோதை பற்றியும் சொல்லி விடுகின்றாள். மிகவும் மென்மையான சுபாவம் படைத்த நந்தகோபன், கண்ணனுக்கு ஏதேனும் ஒன்று என்றால் கூர்வேல் கொடுந்தொழிலன் ஆகிவிடுகின்றானாம். கண்ணனின் கார்மேகம் போன்ற மேனி அழகையும், உதிக்கின்ற செங்கதிர் போன்ற அவன் முகத்தின் அழகையும் சொல்லிவிட்டு ஆண்டாள் அப்படிப் பட்ட கண்ணன் "நமக்கே பறை தருவான்" என்றது இந்த இடத்தில் கண்ணனையே சரணம் என அடைந்தவர்களுக்கு, ஆத்மஞானம் கிடைக்கும். அவர்கள் கண்ணனாகிய மெய்ப்பொருளின் தத்துவத்தைப் புரிந்து கொள்வார்கள் என்ற அர்த்தத்திலே இருக்கின்றது என நம்புகின்றேன். கீதையின் தத்துவ சாரம் இந்த "பறை தருவான்" என்ற வரியிலே இருக்கின்றது.
காத்யாயனி பற்றியும் 'பறை தருவான்' பற்றியும் மேலும் விளக்கும்படி வேண்டுகிறேன்.
ReplyDelete(காத்யாயனி விரதம் பற்றி குமரன் ஒருமுறை எழுதினார்னு நினைக்கிறேன். பார்க்கணும்)