எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, November 18, 2011

கவரை, துவரை, விடாதீர்கள் அவரை! (எங்கள் சவடால் 2K+11)

தங்கத் தவளை பெண்ணே!
சவடால் கதைப் போட்டி. எங்கள் 2K+11.


ராஜா வேட்டையாடி விளையாடுகையில் நடந்தவைகளைக் கேள்விப்பட்ட ஜோசியர் "அவரை விடாதீர்கள் !" எனக் கத்த நினைத்துத் தம்மை அடக்கிக் கொண்டு சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டார். பின்னர் தம் அறைக்குச் சென்று உள்ளே தாழிட்டுக் கொண்டார்.

அவரை, துவரை, கவரை ஹோய்

ஹோய், கவரை துவரை அவரை டோய்

டோய் துவரை, அவரை, கவரை ஹோய்

எனத் திரும்பத் திரும்பக் கூறினார். ஒவ்வொரு முறையும் அவர் உடல் சிலிர்த்துக்கொண்டது. எதையோ எதிர்பார்க்கிறாப்போல் காணப்பட்டார். அவர் எதிரே ஒரு கண்ணாடி.
அதிலே சற்று நேரத்திற்கெல்லாம் சில காட்சிகள் தெரிய ஆரம்பித்தன. ஏழு கடல்கள், ஏழு மலைகள் தாண்டி, ஏழு கிணறுகள் தாண்டி அங்கே வசிக்கும் விசித்திரமான தவளைக் குடும்பங்களைத் தாண்டிச், சென்றால் அங்கே ஓர் அவரைப் பந்தல். அதிலே காய்த்தன பச்சைப்பசேலென அவரைக்காய்கள். அதிலே ஒரு அவரைக்காய் மட்டும் தனித்துத் தெரிந்தது. அது அளவில் கொஞ்சம் பெரிசாகவும், அதோடு முழுத்தங்கமாகவும் இருந்தது. அதையே உற்றுப் பார்த்துக்கொண்டு, "விடாதீர்கள் அவரை" என மீண்டும் கத்தினார் ஜோசியர். உடனே அங்கே தூரத்தில் காவல் காத்துக்கொண்டிருந்த முரட்டுத் தவளை ஓன்று வந்து, கண்ணாடியில் தெரிய இங்கிருந்தே அதனிடம், மறுபடியும் தன் மந்திர ஸ்லோகத்தைக் கூறிப் பின் "விடாதீர்கள் அவரை" என்று முடித்தார்.

அந்தத் தவளை பதில் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் அந்தப் பெரிய அவரைக்காயிடம் போய், கேலி செய்வது போல் தன் குரலெடுத்துக்கத்த ஆரம்பித்தது. அவரைக்காய் திடீரெனப் பேசியது. " உன்னை அழிக்கும் வழி எனக்குத் தெரியும். பொறுத்திரு; என் மனைவி ஒரு பெரும்படையோடு வருவாள். பாம்புக்கூட்டங்களை அழைத்துவந்து உங்களை எல்லாம் அழிப்பாள்." என்று பெருமிதத்தோடு கூறியது.

"ஹாஹாஹா, அவள் அப்படி ஏதேனும் செய்யக் கூடாது என்று தானே அவளை நாங்கள் தங்கத்தவளைப் பெண்ணாக மாற்றிவிட்டோம்! ஹையா! ஜாலி, ஜாலி, இப்போ என்ன பண்ணுவே, இப்போ என்ன பண்ணுவே?" என்று அந்தத் தவளை தாவிக் குதித்தது. மனம் நொந்து போனான் இளவரசன்/ராஜா/ராஜகுமாரியின் கணவன்?? எங்கள் ப்ளாக் இதிலே எதுவேணாலும் வைச்சுக்குங்க!

ஜோசியர் மீண்டும் கூறினார், "விடாதீர்கள் அவரை!" பின்னர் அந்தக் கண்ணாடியை மூடி வைத்துவிட்டு சந்தோஷமாகத் தன் எதிர்காலத்தைக் குறித்துக் கனவு காண ஆரம்பித்தார்.


இங்கேயோ தங்கத்தவளைப் பெண்ணாக வந்த ராஜகுமாரி ராஜா புங்கவர்மன் ஏதோ செய்யப் போறான்னு நீனைச்சா அவன் வேட்டைனு போயிட்டு கடைசியில் எலி வேட்டை ஆடிவிட்டு அதற்கே களைத்துப் போய்க் கொட்டாவி விட்டுத் தூங்கிவிட்டான் என்பதைப் பார்த்துவிட்டு மனம் வருந்தினாள். என்ன செய்யலாம் என யோசித்துத் தன் தவளைக்குரலில் விடாமல் கத்த ஆரம்பித்தாள். ராஜாவுக்குத் தூக்கம் கலைந்தது. அப்போது பச்சை வண்ண ஆடைக்காவலன் சந்தடியில்லாமல் அறைக்குள் நுழைந்தான். ராஜாவுக்குப் பயத்தில் பேச்சே வரவில்லை. "சே, நீயெல்லாம் ஒரு ராஜா, உனக்கெல்லாம் ஒரு வாளா!" என்றான் காவலன். ராஜா அசடு வழியச் சிரித்து, "என்ன விஷயம், உன் சம்பள பாக்கி....." என இழுக்க, "விட்டுத்தள்ளுங்க, நான் அதைக் கேட்க வரலை இப்போ! உங்க கிட்டே ஒரு ரகசியத்தைச் சொல்லிட்டுப் போக வந்தேன்.' என்றான்.

"ரகசியமா? என்னது அது?' என்று ராஜா கேட்க, "நானும், உங்க கிட்டே சம்பளம் கேட்காமல் நீங்களும் பணக்கார ராஜாவாக ஒரே ஒரு வழி இருக்கு." என்றான் ப.வ.காவலன். ராஜா ஆர்வத்தோடு தன் மூக்கை நீட்ட, அதில் ஓங்கிக் குத்திய காவலன், "என்ன பறக்காவட்டித்தனம்! இருங்க!" என்று சொல்லிவிட்டுச் சுற்றும் முற்றும் பார்த்தான். "விடாதீர்கள் அவரை!" என்றான். ராஜா பயத்தில் துள்ளிக் குதிக்க, தன் தலையில் மடேர் மடேர் என அடித்துக்கொண்ட காவலன்," இது ஒரு ரகசிய மந்திரமாக்கும்" என்றான். "ஹிஹிஹி, என்னைத்தான் எதிரிகளிடம் பிடிச்சுக் கொடுக்கிறயாக்கும்னு நினைச்சுட்டேன்." என அசடு வழிய, "நீங்க கெட்ட கேட்டுக்கு எதிரிவேறேயா?" எனத் தனக்குள் முணுமுணுத்த ப.வ.காவலன் ஜோசியர் அறையின் ஜன்னல் வழியாகத் தான் கண்ட காட்சிகளைக் கூறினான்.
எல்லாவற்றையும் கேட்ட ராஜா, தங்கத்தவளைப்பெண்ணின் கணவன் தங்க அவரைக்காயாக இருக்கிறான் எனக் கேள்விப்பட்டுவிட்டு அங்கே எப்படிச் செல்வது எனக் காவலனையே கேட்டான். காவலன் மறுபடி தலையில் அடித்துக்கொண்டு, "நீயெல்லாம் ஒரு ராஜா, உனக்குக் காவலன் ஒரு கேடு!" என்று சொல்லிவிட்டு ஜோசியரைத் தாஜா செய்ய நாட்டியக்காரியை அனுப்பச் சொன்னான். ராஜாவுக்கு நாட்டியக்காரியை அனுப்பவேண்டும் என்றதும் தானும் உடன் செல்லவேண்டும் என்ற சபலம் தட்டியது. காவலன் கண்டிப்பாக ராஜா போகக் கூடாது என்று சொல்ல அரை மனசோடு ராஜா சம்மதித்தான். நாட்டியக்காரியோ ஒரு வருஷமாகச் சம்பளம் கிடையாது, புத்தாடைகள் கிடையாது; ஜோசியரை மயக்கறது என்றால் அதற்கேற்ற மதுவகைகள் கிடையாது; நான் போக மாட்டேன்." என்று பிடிவாதம் பிடிக்க இதுதான் சாக்கு என்று ராஜா அவளைத் தாஜா செய்யும் சாக்கில் கொஞ்ச ஆரம்பித்தார்.

தங்கத் தவளைப்பெண் எல்லாவற்றையும் பார்த்துவிட்டுக் காவலனின் புத்திசாலித்தனத்தில் மகிழ்ந்து கொண்டிருந்தாள். ராஜாவும் நாட்டியக்காரியும் குலாவுவது கண்டு அவளுக்குப் பொறாமையும் கோபமும் வர மீண்டும் தவளைக்குரலில் கத்தி ஆர்ப்பாட்டம் செய்தாள். காவலன்," ஜோசியரைப் பத்தி உனக்குத் தெரியுமா?" என்று தங்கத்தவளை கிட்டே கேட்க, "விடாதீர்கள் அவரை" என்று தவளைக்கத்தல் கத்தினாள் ராஜகுமாரி. காவலன் அதிபுத்திசாலியாதலால் இதிலே ஏதோ சூட்சுமம் இருக்குனு புரிந்து கொண்டான். நாட்டியக்காரியைப் பலவந்தமாகப் பழைய மதுவையே எடுத்துக்கொண்டு ஜோசியரிடம் போய் அவரை மயக்கி விஷயங்களைத் தெரிந்து வரச் சொல்லி அனுப்பி வைத்தான்.

நாட்டியக்காரியையும் ,மதுவையும் பார்த்ததுமே ஜோசியர் உளற ஆரம்பித்தார். தான் முன்னர் இருந்த நாட்டில் அவரை ராஜகுமாரனின் பணச் செருக்கையும் அவன் சபையில் தான் இருந்தபோது இரண்டு பேருக்கும் வந்த சண்டையையும், அவனைப் பழிவாங்கவென்றே தான் இந்த நாட்டுக்கு வந்து அவனையும் அவரைக்காயாக மாற்றிவிட்டு, ராணியையும் தவளையாக மாற்றித் தன் அடிமையாக வைத்திருப்பதையும் உளறிக்கொட்டிக் கிளறி மூடினார். அப்படியா? அங்கே செல்ல வழி என்ன? என்று நாட்டியக்காரி கேட்க, தன் கண்ணாடியைக் காட்டிய ஜோசியர் அதைத் தேய்த்தால் அதிலிருந்து வரும் ஒளிக்கிரணங்களில் ஜிலுக்கு குலுக்கு பாய் பாய், என்னும் மந்திரத்தைச் சொன்னால் அது பறக்கும் பாயாக மாறும் என்றும்
அதில் ஏறிச் செல்லவேண்டும், அங்கே போய், அந்தத் தங்க அவரைக்காயைப் பறித்துக்கொண்டு,
அவரை, துவரை, கவரை ஹோய்

ஹோய், கவரை துவரை அவரை டோய்

டோய் துவரை, அவரை, கவரை ஹோய்"


என்னும் மந்திரத்தைச் சொன்னால் தங்க அவரை ராஜா உருவம் பெற்றுவிடுவான் என்றும், மீண்டும் அதே மந்திரத்தை மட்டும் சொல்லாமல் கூடவே , கவரை, துவரை, விடாதீர்கள் அவரை என்னும் மந்திரத்தை மட்டும் தனியாகச் சொன்னால் தான் அவரைக்காயாக நிரந்தரமாக ஆகிவிடுவோம் என்றும் தனக்கு அப்படி ஒரு சாபம் இருப்பதாகவும், அதனால் தான் கவரை, துவரையைச் சேர்த்துச் சொல்லாமல் வெறும் "விடாதீர்கள் அவரை" என்பதை மட்டுமே சொல்வதாகவும் கூறிவிட்டார். அவரை மயக்கித்தூங்க வைத்த நாட்டியக்காரி ராஜாவை நம்பாமல் காவலனிடம் எல்லாவற்றையும் கூற, அவனும் ஜோசியரின் கண்ணாடியைத் தேய்த்து அதிலிருந்து வரும் ஒளிக்கிரணங்களில் ஜிலுக்கு, குலுக்கு பாய் பாய் என்னும் மந்திரத்தைச் சொல்லப் பாய் பறந்து வந்தது. அதில் ஏறிய காவலன் ராஜாவும் கூட வரவேண்டும் என்று அழுது அடம் பிடிக்கிறதைப் பார்த்துச் சகிக்காமல் கூடவே ராஜாவையும் ஏற்றிக்கொண்டான். தங்கத்தவளைப் பெண்ணோ தான் தத்தித்தத்தியே வந்துவிடுவதாய்ச் சொல்லிவிட்டாள்.


ஏழு மலைகள், ஏழு கடல்கள், ஏழு கிணறுகள் தவளைக்குடும்பங்கள் தாண்டி அவரைத் தோட்டத்துக்குப் போனால் அங்கே எல்லாமும் தங்க அவரைக்காய்களாக இருந்தன. எது ராஜா அவரை எனப் புரியவில்லை. சற்று நேரம் பிரமித்துப் போன காவலன், மந்திரத்தைத் திரும்பத் திரும்ப உருப்போட ஆரம்பித்தான். அப்போது முன்னம் பார்த்த பெரிய தவளை வந்து ஹாஹாஹா எனச் சிரிக்க தங்கத்தவளைப் பெண் அங்கே வந்து சேர்ந்தாள் ஒரு பெரும் பாம்புக்கூட்டத்துடன்.
அவள் தன் தங்கத்தோலைக்கழட்டி மானுடப் பெண்ணாக மாறிப் பாம்பாட்டியின் உதவியோடு பாம்புகளைப் பிடித்து வந்திருந்தாள். அதுக்குத்தான் பின்னாடி வரேன்னு சொல்லி இருக்கிறாள். பாம்புகள் தவளைகளைப் பிடிக்கச் செல்ல தவளைகள் பயந்து ஓட அவரைப்பந்தலில் இருந்த அவரைக்காய்கள் நிஜமாக மாற ஒரே ஒரு காய் மட்டும் தனித்துப் பெரியதாகத்தங்கமாய்த் தெரிய அதைப் பறித்த தங்கத்தவளைப்பெண் அந்த மந்திரத்தைச் சொல்லச் சொன்னாள்.

காவலனும் சொல்ல ராஜாவும் உருவம் பெற்றான். பின்னர் அந்தப் பறக்கும் பாயைப் பிடித்துக்கொண்டு, மீண்டும் மந்திரத்தைச் சொல்லக் கண்ணாடி எதிரே தெரிந்தது. அதில் தூங்கிக் கொண்டிருந்த ஜோசியர் தெரிய அவரைப் பார்த்துக் காவலன் சொன்னான்.

கவரை, துவரை, விடாதீர்கள் அவரை!


இங்கே பார்க்கவும்

32 comments:

  1. ஹிஹிஹி, எங்கள் ப்ளாக் வைச்சிருக்கும் போட்டிக்கு எழுதின கதை இது. கஷ்டப்பட்டுக் குறைச்சேன். மனசிலே தோணினதை எல்லாம் எழுதியாச்சு. பரிசு கிடைக்குதோ இல்லையோ; கவலையில்லை; மனதுக்குப் புதிய உற்சாகம் பிறந்தது. எங்கள் ப்ளாகுக்கு நன்றி.

    என்ன இருந்தாலும் குழந்தைத்தனம் தான் ரொம்ப வசதி! அப்படியே இருந்துட்டா எவ்வளவு நல்லா இருக்கும்! எழுதும்போதே சிரிப்பை அடக்க முடியலை.

    ReplyDelete
  2. மனசில் தோணினதை எழுதினாலும் அதில் குழந்தைத்தனத்தோடு அற்புதமான கதை கிடச்சிருக்கு.

    ReplyDelete
  3. படம் போடமுடியலை; காலம்பர, இப்போத் தான் போட்டிருக்கேன். எல்லாம் சரியா வந்திருக்கானு பார்க்கணும். :))))

    ReplyDelete
  4. !!! ???? :-(:-( !!!!!!!!!! :)))

    ReplyDelete
  5. jeyasri,

    http://engalblog.blogspot.com/2011/11/blog-post_03.html

    இங்கே போய்ப் பாருங்க. புரியும். சும்ம்ம்ம்ம்ம்ம்ம்மா ஜாலிக்கு!

    ReplyDelete
  6. ரொம்ப ரசிச்சு எழுதியிருக்கீங்க.. ரசிச்சு படிக்க முடியுது. நிறைய இடங்கள்ள வாய் விட்டு சிரித்தேன். இந்தாங்க, பிடிங்க பத்தாயிரம் அவரை.

    ReplyDelete
  7. எதை எதையோ பாத்திருப்பீங்க.. கொஞ்சம் சிரமம் பாக்காம மீண்டும், ஒரு தடவை பாருங்கள்
    1) உங்க வீட்டு 'சுவரை'
    2) போஸ்ட்மன் தரும் 'கவரை'
    3) கரண்டு பில்லில் 'பவரை' (1 யூனிட் = 1 கிலோ வாட்; அதான் பவர் )
    4) பாத்ரூம் 'ஷவரை'

    ReplyDelete
  8. அதே அதே கீதா.எழுதும்போதே ஒரு பத்துவயசு குறைந்துவிட்டது:)
    உங்களோட கவரை,துவரை,அவரை சூப்பர். படு சூப்பர்.

    மது மங்கை மந்திரப்பாய் தூள் கிளப்பீட்டீங்க:)

    ReplyDelete
  9. //அவரை, துவரை, கவரை ஹோய்

    ஹோய், கவரை துவரை அவரை டோய்

    டோய் துவரை, அவரை, கவரை ஹோய்" //

    இந்த அந்தாதி எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது மேடம்! :-)

    வெற்றி பெற வாழ்த்துகள்! :-)

    ReplyDelete
  10. வாங்க விச்சு, கதையை எழுதின உடனேயே வந்து பாராட்டியதுக்கு நன்றிங்க.

    ReplyDelete
  11. அப்பாதுரை, நல்லா இருக்கோ இல்லையோ, மனதில் உற்சாகம் தோன்றியது என்னவோ உண்மை! உங்கள் பாராட்டுக்கு நன்றி. அதுசரி பத்தாயிரம் அவரையும் தங்கத்திலே தானே தரீங்க??

    அதுக்குக் குறைஞ்சு வாங்கறதில்லை. :)))))

    ReplyDelete
  12. மாதவன் ஶ்ரீநிவாசகோபாலன், எம்புட்டுப் பெரிய பேருங்க!

    முதல்லே இப்படித்தான் தற்கால பாணியில் யோசிச்சேன், அப்புறமா ராஜா காலம்தான் பிடிச்சது. அங்கேயே போயிட்டேன். நன்றிங்க.

    ReplyDelete
  13. வாங்க வல்லி, உங்க கதையை பார்த்துத்தான் எனக்கு இன்ஸ்பிரேஷனே! அதனால் முதல்லே உங்களுக்குத்தான் பரிசு. பாராட்டுக்கு நன்றிம்மா.

    ReplyDelete
  14. வாங்க ஆர்விஎஸ், ரொம்ப நாள் கழிச்சு வரீங்க. (ஹிஹிஹி, மொக்கைக்குத்தான் உங்க ஓட்டோ)

    அந்தாதி பிடிச்சதுக்கும், பாராட்டுக்கும் நன்றிங்க. வாழ்த்துக்கும் நன்றி.

    ReplyDelete
  15. எங்கள் ப்ளாகில் எழுதியிருந்ததைப் போல் நகைச்சுவை ரசத்துடன் கதையைக் கொண்டு சென்றிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. மொத்தம் ஆயிரத்து இருபத்து நான்கு வார்த்தைகள் உள்ளன. கதை நன்றாக உள்ளது. எங்கள் பதிவில் உள்ள நகைச்சுவையை கேரி ஓவர் செய்துள்ளீர்கள் என்பது ஒரு சிறப்பு அம்சம். வாழ்த்துகள்.

    ReplyDelete
  17. எழுத்து எழுதுறவங்க மனதை இலேசாக்குவது உண்மை. படிக்கிறவங்க மனசும் இலேசாகும் போது இரண்டு மடங்கு பலனாச்சே. வல்லிசிம்ஹன் சொல்றாப்புல இது வயதைக் குறைக்கும் அனுபவம் (வயசானவங்களுக்குத் தான் புரியும்னு சில பேர் சொல்வாங்க, விடுங்க :)
    கொஞ்சம் கூட யதார்த்தத்துக்கு கவலைப்படாம கற்பனை உலகில் கொஞ்சம் நேரம் பறந்து விட்டு வரும் thrill தனிதான்.. இந்த மாதிரி ஏதாவது யோசிச்சு ஏதாவது கிறுக்குத்தனமா செய்யறதுனாலயே எங்கள் பிளாக் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
    நீங்களும் அட்டகாசமா எழுதியிருக்கீங்க. ஜிலுக்கு பிலுக்கு பாய் பாய் இனிமே என்னோட ஆஸ்தான மந்திரம்.

    ReplyDelete
  18. கலக்கறிங்க கீதாம்மா :))

    பசங்களுக்கு சொல்ல இன்னைக்கு ஒரு கதை கிடைசாச்சு :))

    ReplyDelete
  19. உளறிக்கொட்டிக் கிளறி மூடினார். //

    நியாபகம் வருதே நியாபகம் வருதே ரமணி சந்திரன் கதையின் நியாபகம் வருதே :))

    ReplyDelete
  20. வாங்க கீதா சந்தானம், பாராட்டுக்கும் வரவுக்கும் நன்றிங்க. அடிக்கடி வாங்க.

    ReplyDelete
  21. கெளதம் சார், ஆஹா! வ.வா.பி.ரி??? நன்றிங்க.

    வார்த்தைகள் கூடுதலா இருந்தா பொற்காசுகளையும் கூட்டிடுங்களேன். செரியா?

    ReplyDelete
  22. வாங்க அப்பாதுரை, மந்திரத்தைத் தப்பாய்ச் சொன்னால் அப்புறமா நேர்மாறான பலனைக் கொடுக்கப் போறது! :)))))))) மந்திரத்தை நல்லாப் பார்த்துப் படிச்சு உருப்போடுங்க. :))))))

    ReplyDelete
  23. வாங்க ப்ரியா, ரமணி சந்திரன் உங்கள் இஷ்டமான எழுத்தாளர் போலிருக்கு. :)))))

    நான் அதிகம் படிச்சதில்லை. அதனாலே எந்தக் கதையிலே சொல்றார்னு கண்டுபிடிக்க முடியலை. இது வழக்கமா ஒருத்தரை ஒருத்தர் கிண்டல் செய்யறச்சே சொல்வோமே! :)))))))))

    குழந்தைங்களுக்குனு மட்டுமா? நாமளே குழந்தைதானே! அதான் எல்லாருக்குமா இருக்கட்டும்னு எழுதினேன். ரொம்ப மாசங்கள் கழிச்சு வந்ததுக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றிங்க.

    ReplyDelete
  24. இவ்ளோ வார்த்தைகள் இருக்கணும்னு ஒரு ரூலா என்ன? ஏமாந்தா ரூல்ஸ் போட்டுக்கிட்டே இருப்பாங்க போலிருக்கே?

    ReplyDelete
  25. வார்த்தைகளைப் பொறுமையாக எண்ணிப் பாக்கறாங்களா.. என்னங்க இது..?!

    ReplyDelete
  26. நான் எண்ணலை அப்பாதுரை, எத்தனை வார்த்தைகள்னு ஏதோ ரூல் இருந்தது. அதுவும் சரியா நினைவில் இல்லை. குறைச்சிருக்கேன். இரண்டு பாகமாப் போடக் கூடாதுனு சொல்லிட்டாங்க. இல்லைனா இரண்டு பதிவாப் போட்டிருக்கலாம். :))))))) எண்ணி பார்த்திருக்கலாம். இதுக்குனு தனி ஆளைப் போட்டிருப்பாங்களோ??? டவுட்ட்ட்டு!!!

    ReplyDelete
  27. ஹா..ஹா...எங்களையும் மந்திரங்கள் சொல்ல வைத்து விட்டீர்கள். கற்பனை வானில் நீந்தும்போது வயது பின்னோக்கிப் போகும் சுவாரஸ்யம். அப்பாதுரை கமெண்ட்ஸ் சிந்திக்க வைத்ததன!! போட்டி நடக்கும்போது போட்டி விதிகள் பற்றி கமெண்ட்ஸ் அடிக்கக் கூடாது என்று சொல்லலாமா என்று குழுவுடன் விவாதிக்க வேண்டும்!!

    ReplyDelete
  28. வாங்க ஶ்ரீராம், ஹிஹிஹி, எல்லாருக்கும் மந்திரம் ரொம்பப் பிடிச்சிருக்கு போல. அந்த நேரம் மனசிலே தோணினதைக் கை தட்டச்சியது.

    விவாதிங்க, விவாதிங்க, பரிசு மட்டும் பெரிசாக் கொடுக்க மறந்துடாதீங்க! :))))))))

    ReplyDelete
  29. "கவரை,துவரை,அவரை....." .
    ரசனையாக இருக்கின்றது.

    ReplyDelete
  30. எல்லோருக்கும் மந்திரம் பிடிச்ச மாதிரி, எனக்கும் மந்திரம் ரொம்ப பிடிச்சுது. இந்த மாதிரி கதைகளை படிக்கறதுல இருக்கற சுவாரசியமே தனிதான். அம்புலிமாமா கதைகளை இப்பகூட ரசிச்சு படிக்கலாம். உங்க கதையும் அது மாதிரிதான் இருந்துது. ரசிச்சு படிச்சேன்.

    ReplyDelete
  31. சூப்பர்! கவரை துவரை, இந்த மாதிரி நிறையக் கதை எழுதற வரை விடாதீங்க அவரைன்னு எல்லாரும் உங்களைப் பாத்து சொல்லப் போறாங்க. அழகா படங்களையும் சேர்‌த்திருக்கீங்க. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  32. எழுதிய உங்கள் வயது மட்டுமா? வாசித்த எங்கள் வயதும் குறைந்து விட்டதே:))! அருமை.

    வார்த்தைகள் எண்ணிப்பார்ப்பது சிரமமே இல்லை இப்போது. வொர்ட் ஃபைலில் கொண்டு சேருங்கள். எத்தனை வார்த்தைகள் என்பதை அதே காட்டும். ஈசியா அங்கேயே குறைச்சுகிட்டு வரலாம். [ஹி. அனுபவம்].

    வெற்றி பெற வாழ்த்துகள்!

    ReplyDelete