எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, July 09, 2015

திருவனந்தபுரத்தில் ஓர் இரவு!

எல்லோரும் எப்படி இருக்கீங்க? சென்ற வாரப் பயணத்திலே கெட்டுப் போன வயிறு! ஒரு வாரம் ஆயிடுச்சு வயிறு சரியாக. போன வியாழன் அன்று மதியம் சப்பாத்தி சாப்பிட்டதில் ஆரம்பித்தது! நேற்றுவரை தொந்திரவு தான்.  நாலு நாளாக மோர் சாதம் தான்! இன்னிக்குச் சாப்பிட முடியுமானு பார்க்கணும். :) வயிற்றுத் தொந்திரவால் தான் ஶ்ரீராம் போட்ட கவுனி அரிசிப் பதிவுக்குக் கூட உடனடியாகப் போகலை! ஒத்துக்காமல் போயிடுச்சுன்னா! :)))))  இப்போ நம்ம கதையைப் பார்ப்போமா? முக்கி முக்கி நாலரைக்கு திண்டுக்கல் வந்த வண்டி ஐந்தரை மணி போல் மதுரைக்கு வந்து சேர்ந்தது. அங்கே இஞ்சின் மாத்துவாங்க என்று சொன்னதால் வண்டி பத்து நிமிஷம் நிற்கும் எனத் தெரிந்து கொண்டு கீழே இறங்கிப் போய் ரங்க்ஸ் இரண்டு பேருக்கும் தேநீர் வாங்கி வந்தார். பரவாயில்லை ரகம் தான்.

திருநெல்வேலி வரும்போது எட்டு மணி ஆயிடுச்சு.  முன்னர் திருநெல்வேலி சுற்றுப் பயணம் போனப்போ இதே குருவாயூரில் திருச்சியிலிருந்து போனோம். அப்போ திருநெல்வேலிக்கு ஏழு மணிக்கே போன நினைவும் வந்தது. முன்னெல்லாம் ரயிலில் அல்வா விற்க மாட்டார்கள். இப்போல்லாம் அல்வா பாக்கெட்டும் ரயிலிலேயே விற்கிறாங்க. என்னிக்குச் செய்தது? எவ்வளவு தூரம் சுத்தமானது என்பது கேள்விக்குரிய விஷயம்! மதுரையில் தண்ணீர் நிரப்பிய எங்கள் வண்டியில் திருநெல்வேலி வருவதற்குள்ளாகத் தண்ணீரும் தீர்ந்து போய் விட்டது. பாதி தான் நிரப்பி இருக்காங்க! தேனீப் பக்கமிருந்து குருவாயூர் செல்லும் ஒரு தம்பதியினர் மதுரையில் எங்கள் வண்டியில் ஏறி இருந்தனர். சற்று நேரத்துக்கெல்லாம் அவங்க ரொம்பவே சிநேகிதம் ஆகிப் போக நாங்கள் போகும் இடம் தெரிந்து கொண்டு, எங்கள் பயண விபரமும் தெரிந்து கொண்டு பல உபயோகமான தகவல்களைக் கொடுத்தார் அந்தப் பயணி.

ரயில்வேயில் அதிகாரியாக இருந்து பணி ஓய்வு பெற்றிருக்கும் அவர் நாகர்கோயில், திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் சில வருடங்கள் வேலை செய்ததால் அது குறித்த முக்கியத் தகவல்களையும் கொடுத்து உதவினார். முக்கியமாய்த் திருவனந்தபுரம் ரயில்வே ஸ்டேஷனில் பயணியர் ஓய்வு விடுதியில் அறைகள் நிறைய இருப்பதாகவும் கிடைக்க வாய்ப்பு உண்டு என்றும் சொன்னார். என் தம்பி நம்பிக்கையான பதில் கொடுக்கவில்லை. ஓய்வு விடுதி இருப்பதாகவும் அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆனால் இவர் முக்கிய அதிகாரியாக இருந்திருப்பதால் கோயிலில் வழிபாட்டு விபரங்களில் இருந்து அனைத்தும் தெரிந்து வைத்திருந்தார். காலை ஏழரைக்குள்ளாக திருவனந்தபுரம் அனந்தபத்மநாப  சுவாமியைத் தரிசிக்க வேண்டும் எனவும் ஏழரையிலிருந்து எட்டரை வரை மகாராஜா கோயிலுக்கு வருவார் என்றும் அந்த நேரம் கோயிலில் சாமானியர்களுக்கு தரிசனம் இல்லை என்பதையும் தெரிவித்தார்.

எட்டு மணிக்குத் திருநெல்வேலி போனாலும் ஒன்பது மணிக்குள்ளாக நாகர்கோயில் சென்ற வண்டி சரியாகப் பதினொன்றரை மணிக்கெல்லாம் திருவனந்தபுரம் போய் விட்டது.  ரயில் நின்றது நாலாம் நடைமேடையிலோ அல்லது ஐந்தாம் நடைமேடையிலோ. பயணியர் ஓய்வு விடுதி இருந்தது முதல் நடைமேடையில். அந்த இரவு நேரத்தில் வெளியே போகவும் யோசனையாக இருந்தது. ஆனால் வெளியே சென்றால் எதிரேயே பல ஹோட்டல்கள் இருப்பதாக அந்த ரயில்வே அதிகாரி சொல்லி இருந்தார். என்றாலும் ரயில்வே ஸ்டேஷன் என்றால் தனி தானே! உயரமான படிகளில் திக்கித் திணறி  ஏறினோம். கிட்டத்தட்ட ஒரு வாரம் இருப்போம் என்பதால் தினமும் தோய்க்க முடியாது என்று அதற்காக உடைகள் தினம் ஒன்று என்னும் விகிதத்தில் இருந்ததால் என் பெட்டி ரொம்பவே கனம்!

அதற்குள்ளாக வழக்கம்போல் ஓர் இளைஞர் என்னைப் பார்த்துவிட்டு என் பெட்டியைத் தான் வாங்கிக் கொண்டார். அவசரப்பட்டு அவர் முதலில் இறங்காமல் நான் இறங்க இறங்கவே அவரும் இறங்கினார். முதல் நடைமேடைக்கு வந்ததும் நாங்கள் ஓய்வு விடுதியைப் பற்றிக் கேட்க அவர் மலையாளம் எங்களுக்குக் குறைச்சு( உண்மையாகவே குறைச்சு)ப் புரிய எங்கள் தமிழ் அவருக்குப் புரியவே இல்லை.  நடந்தோம். நடந்தோம். ஓர் இடத்தில் பயணியர் ஓய்வு விடுதி என அறிவிப்புப் பலகை தொங்க, அங்கிருந்து வந்து கொண்டிருந்த ஓர் ரயில்வே ஊழியப் பெண்மணியிடம் ஓய்வு விடுதி பற்றிக் கேட்டோம். மேலே சென்று விசாரிக்கச் சொன்னார். மேலே சென்ற ரங்க்ஸ் பத்து நிமிடம் கழித்துக் கீழே வந்து காலை ஏழு மணி வரை தான் தருவாங்களாம்.  ஆனால் ஏ.சி. அறை! 650 ரூ வாடகை என்று சொல்ல, தம்பி விசாரித்து வைத்திருந்த இடத்தில் 2,800 வாடகை அதற்கான வரி என கிட்டத்தட்ட 3,000 ரூபாய் ஒரு இரவுக்கு எனச் சொன்னது நினைவுக்கு வர இது சொர்க்கம் என்று தோன்றியது. ஒரு கூலியாளைப் பிடித்து சாமான்களைத் தூக்கச் சொல்லி மேலே சென்றோம்.  பொதுவாகவே ரயில்வேயில் தங்குமிடங்கள் எல்லாம் அறைகள், குளியலறை, கழிப்பறை எல்லாமும் பெரிதாகவே இருக்கும். துணி காயவைக்கத் தனி இடம் இருக்கும். அது போல் இங்கும் இருந்தது. நாங்கள் வரப் போவதால் ஏசியைப் போட்டு வைத்திருந்தார். பணம் கட்டி விட்டோம். ஆனால் ரசீது கொடுக்கவில்லை. சரி, காலையில் தருவார்னு பேசாமல் படுத்துட்டோம்.  மணி பனிரண்டு ஆகி இருந்தது.  உண்மையாகவே சொர்க்கம் தான்!


20 comments:

  1. அட, நம்ம மதுரை!

    தி.புரம் இருமுறை சென்றிருக்கிறேன். அ.ப.சுவாமி கோவில் ஒருமுறை பார்த்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், நம்ம மதுரை தான்! :))) இறங்கி கோபு ஐயங்காருக்குப் போக மாட்டோமானு இருந்தது! :)

      Delete
  2. இதுவரை நல்லாத்தான் போயிட்டுருக்கு... அடுத்து என்ன நடந்தது...?

    ReplyDelete
    Replies
    1. அப்புறமாவும் நல்லாவே போச்சு டிடி, இங்கே வந்ததில் இருந்து தான் தொந்திரவு. இன்னும் சரியாகலை! :)

      Delete
  3. நீங்கள் தந்திருக்கும் வாடகை முடிந்து கொண்டிருந்த அந்த நாள் கணக்கு. மறு நாள் காலை மறுபடியும் 650 தரவேண்டும். சரியா?

    ReplyDelete
    Replies
    1. இது அநியாயக் கொள்ளையா இருக்கே ஶ்ரீராம்! :))) வட மாநிலங்களில் தான் நீங்க எத்தனை மணிக்கு வந்தாலும் காலை/பகல் பனிரண்டு மணியோடு ஒரு நாள் கழிந்ததாகக் கணக்கு எடுத்துப்பாங்க. அது கூட அயோத்யாவில் பரவாயில்லை. தமிழ்நாட்டில் ஒரு சில ஹோட்டல்களில் இம்முறை இருக்கிறது. என்றாலும் பல பெரிய ஹோட்டல்களில் 24 மணி நேரமே கணக்கு! இது ரயில்வே வேறேயே! ஒரு நாளைக்கான 24 மணி நேரத்துக்கு ஏசி அறை வாடகையே கோடை நாட்களில் 650 ரூபாயும், மற்ற நாட்களில் 450 ரூபாயும் தான். ஆனால் நாங்க தங்கி இருந்த அறையை ஆன்லைனில் மறுநாள் காலை தங்க யாரோ முன்பதிவு செய்ததால் எங்களுக்குக் காலை ஏழு மணி வரை நேரம் கொடுத்துவிட்டு முழுத் தொகையும் வாங்கியதோடு அதற்கு ரசீதும் தரவில்லை. :))

      Delete
    2. நாங்க நிறைய ரயில்வே பயணியர் விடுதியில் தங்கி இருந்திருக்கோம். திருச்சி, தஞ்சை போன்ற ஊர்களில். வசதியாகவே இருக்கும். திருச்சியில் பதினைந்து அறைகளோ என்னமோ இருக்கு. இதைத் தவிர விஐபி அறைகளும் உண்டு. தஞ்சையிலும் பத்து அறைகள் போல் உள்ளன. தஞ்சையில் அநேகமாய்க் காலியாகவே காணப்படும்.

      Delete
  4. படித்தேன். தொடர்ந்து படிக்க வந்தால்தான் பதிலில் அர்த்தம் இருக்கும். தூக்க ஸொர்கத்திலிருந்து வந்து எழுதுவதைப் படிக்கிறேன் அன்புடன்

    ReplyDelete
    Replies
    1. வாங்க காமாட்சி அம்மா, உங்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கிறது. குறைந்த நேரம் தூங்கினாலும் நல்ல ஆழ்ந்த தூக்கம் என்றால் அது சொர்க்கம் தானே! :)

      Delete
  5. ஆஹா....அப்புறம் என்னாச்சு...அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. வாங்க உமையாள் காயத்ரி, ஒண்ணும் விசேஷமாக ஆகலை! :)

      Delete
  6. அப்போ திருவனந்தபுரத்தில் ஒரு வாரம் தங்கலையா? திருச்சி ரயில்வே பயணியர் விடுதியில் தங்கி இருக்கிறோம் ரயில்வே காரர்கள் முன்னுரிமை பெறுகிறார்கள் ஒரு முறை ஒரு நாள் மட்டும்தான் தங்க அனுமதி. அதன் பின் அவரவர் சாமர்த்தியம்

    ReplyDelete
    Replies
    1. ரயில்வேகாரர்களுக்கு மறுப்பதில்லை என்றாலும் முதலில் பயணிகள் என்பது தான் கொள்கை. பொதுவாக எங்களுக்குக் கிடைத்தே வந்திருக்கிறது. இரண்டு நாட்கள் வரை தங்கி இருந்திருக்கோம். மூன்றாம் நாள் தங்கினால் அதிக வாடகை! மூன்று நாட்களுக்கு மேல் தங்கவும் முடியாது.

      Delete
    2. திருவனந்தபுரத்தில் ஒருவாரம் தங்க முடியலை! :( மொத்தப் பயணத்திட்டமே நான்கு நாட்கள் தான்!

      Delete
  7. நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிகின்றது! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நன்றி சுரேஷ்!

      Delete
    2. அட?? மதுரையம்பதி? நல்வரவு.

      Delete
  8. ரயில்வே பயணியர் அறைகள் இப்போ ஆன்லைன்லயே புக் செய்யலாம். இல்லை என்றால் ரெயில்வே டிக்கெட் ரிசர்வ் செய்ததும் அங்கேயே புக்கிங்க் செய்து விடலாம். ஆன்லைன் லிஸ்டில் திருவனந்தபுரம் உள்ளது. சமீபத்தில் இங்கு சென்னையில் இருந்தே துளசிக்கும் அவரது மனைவிக்கும் நான் காட்பாடி ரயில்வே பயணியர் அறை புக் செய்தேன். ஏசி அறை. 450 ரூபாய்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க துளசிதரன்/கீதா, ஆன்லைன் புக்கிங் உண்டுனு தெரியும். ஆனால் நாங்க ஒருவேளை கல்யாண மண்டபம் வசதியா இருந்தால் அங்கேயே போய் விடும் எண்ணத்தில் இருந்ததால் முன்பதிவு செய்யவில்லை. அங்கே இடம் இல்லைனு முதல்நாளே போன தம்பி சொன்னதும் தான் வெளியே அறை தேட வேண்டி வந்தது. மற்றபடி காட்பாடி ஊர் சின்னது என்பதால் ஏசி அறை 450 ரூபாயாக இருக்கலாம். அல்லது குளிர்காலமாக இருந்திருக்கலாம். திருவனந்தபுரத்திலும் மார்ச் முதல் செப்டெம்பர் வரை 650 ரூபாயும் அக்டோபர் முதல் பிப்ரவரி வரை 450 ரூபாயும் எனப் போட்டிருக்காங்க. ஆன்லைனில் புக்கிங் செய்தாலும் அறைகள் நிறைய இருப்பதால் எப்படியும் ஒரு அறையாவது காலி இருக்கும்.

      Delete