எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, September 24, 2017

நவராத்திரி ஐந்தாம் நாளுக்கான தகவல்கள்!

நவராத்திரி ஐந்தாம் நாளுக்கான தேவி ஸ்கந்த மாதா எனப்படுவாள். ஸ்கந்தனுக்கு உகந்த நாளும் செவ்வாய்க்கிழமையே. ஸ்கந்தனின் மாதாவான இவளுக்கும் செவ்வாயே உகந்த நாள். அக்னி சொரூபம் ஆன ஸ்கந்தனின் திரு அவதாரத்திற்குக் காரணகர்த்தா இவளே. அக்னி எவ்வாறு அனைத்துப் பொருட்களையும் சுட்டெரிக்கின்றதோ அவ்வாறே நம்மைச் சூழ்ந்து சுட்டெரிக்கும் துன்பத்தை இவள் சுட்டெரிப்பாள். அங்காரகனால் ஏற்படும் தோஷங்களையும் போக்குபவள் இவளே. நவராத்திரி செவ்வாய்க்கிழமைகளில் இவளை வணங்குதல் நன்மை பயக்கும். பாற்கடலை அசுரர்களும் தேவர்களும் கடையும்போது முதலில் வந்தது கடும் விஷமே. அந்த ஆலகாலவிஷத்தை உண்ட ஈசனின் கண்டத்தைப் பிடித்தாள் அன்னையவள். நீலகண்டனான ஈசன் அப்போது ஆடிய தாண்டவம் புஜங்க தாண்டவம் என அழைக்கப் படும். அந்தத் தாண்டவத்தின் போது தோன்றியவளே ஸ்கந்தமாதா ஆவாள்.



இவளை  வைஷ்ணவி எனவும் அழைப்பார்கள்.. மாத்ருகா வர்ண சொரூபிணி என வர்ணிக்கப்படும் சதாக்ஷியும் இவளே. சாகம்பரியும் இவளே! மஹாலக்ஷ்மியாகவும் அழைக்கப்படுகிறாள்.
சாகம்பரி க்கான பட முடிவு
சாகம்பரி க்கான பட முடிவு
படங்களுக்கு நன்றி கூகிளார் வாயிலாக விக்கி பீடியா!

கைகளில் சங்கு, சக்கரத்துடன் காணப்படுகையில் வைஷ்ணவி எனப் படுவாள். இன்றைய தினம் சுகாசனம் எனப்படும் அமர்ந்த கோலத்தில் அம்பிகையை சாந்த துர்கையாக அலங்கரிக்கலாம். ஆறு வயதுப் பெண் குழந்தையை காளிகாவாகப் பாவித்து வழிபட வேண்டும். கடலை அல்லது கடலை மாவுடன் மஞ்சள் பொடி சேர்த்து மயில், அன்னம்,போன்ற பறவைக்கோலம் போடலாம்.

செவ்வரளி, சந்தன இலை போன்றவற்றால் மாலை கட்டியும் அர்ச்சனைகள் செய்தும் அம்பிகையை வழிபடலாம். இன்றைய நிவேதனமாகத் தயிர் சாதமே செய்யலாம். அல்லது சுண்டக்  காய்ச்சிய பசும்பாலில் குழைந்த சாதத்தைப் போட்டுக் கிளறி, நெய் சேர்த்துச் சர்க்கரையும் சேர்த்துக் கிளறவும். நெய்யில் முந்திரி, திராக்ஷையை வறுத்து சேர்க்கவும்.  மாலை கடலைப்பருப்புச் சுண்டல் செய்யலாம்.

கடலைப்பருப்பை லேசாகச் சூடு வர வறுத்து விட்டு இரண்டு, மூன்று மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் குக்கரில் வைக்காமல் நேரடியாக வேக வைக்கவும். கடலைப்பருப்பு நசுங்கும் பதத்தில் வெந்ததும் உப்புச் சேர்த்துக் கொண்டு இரண்டு நிமிடம் வேக விட்டுப் பின்னர் வடிகட்டிக் கொள்ளவும். வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றிக் கடுகு, இஞ்சி, பச்சை மிளகாய், கருகப்பிலை சேர்த்துப் பெருங்காயமும் சேர்க்கவும். வெந்த கடலைப்பருப்பைப் போட்டு இரண்டு டீஸ்பூன் சாம்பார்ப் பொடியும் சேர்க்கவும். பின்னர் பச்சைக் கொத்துமல்லி சேர்க்கவும். தேவையானால் எலுமிச்சம்பழம் பிழிஞ்சுக்கலாம்.  நவராத்திரி நாள் இல்லைனா, காரட், வெங்காயம் துருவிச் சேர்க்கலாம்.

நமஸ்கார ஸ்லோகங்கள்!

 14. யா தேவீ ஸர்வ பூதேஷு காந்தி ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம:

காந்தி என்றால் ஒளி, வெளிச்சம் என்றும் பொருள் வரும். தனிப்பட்ட முறையில் அலங்கரித்துக் கொள்ளுவதையும் குறிக்கும். அந்த அலங்கரிப்பினால் ஏற்படும் தனிப்பட்ட கவரும் தன்மையையும் குறிக்கும். இங்கே ஒளி என்றே எடுத்துக் கொள்ள வேண்டும். ஒளி இல்லையேல் உலகில்லை அல்லவா?? பகலில் சூரிய ஒளி தேவைப்படுகின்றது. இரவில் மாற்றாக சந்திரன் ஒளி குளுமையாகக் கிடைக்கின்றது. வெறும் இருட்டு மட்டுமே இருந்தால் என்ன தெரியும்?? எதுவும் தெரியாது, புரியாது. நம் அனைவருக்கும் இவ்வாறு ஒளியின் அவசியம் தேவைப்படுகின்றது. அதை உணருவது நம் கண்களே அல்லவா?? நம் அனைவருக்கும் அந்தக் கண்களுக்கு ஒளியைத் தரும் தேவியாக உறைபவளுக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.

15. யா தேவீ ஸர்வ பூதேஷூ லக்ஷ்மி ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம:

உயிர் வாழ அனைவருக்கும் உணவு தேவை, அந்த உணவை எல்லாராலுமா உற்பத்தி செய்ய முடியும்? யாரோ உற்பத்தி செய்கின்றார்கள். நாம் விலை கொடுத்து வாங்குகின்றோம். அதற்குப் பணம் தேவை அல்லவா?? பணம் இல்லை எனில் எதையும் வாங்க முடியாது. தேவைக்குத் தக்க பணம் இல்லாமால் ஒருவராலும் இருக்க முடியாது. நாம் ஆசைப்பட்டு சேர்த்து வைக்கும் பணம் இல்லை இது,. தேவைக்கான பணமே இங்கே குறிப்பிடப் படுகின்றது. அந்தச் செல்வத்தைத் தருபவள் லக்ஷ்மி தேவி தான். அந்த லக்ஷ்மி தேவி வடிவில் எந்த தேவி உறைகின்றாளோ அவளுக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.

16. யா தேவீ ஸர்வ பூதேஷூ வ்ருத்தி ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:
பொதுவாய் சொத்துக் குவிப்பையும், மேன்மேலும் வட்டி வாங்கிச் சேர்ப்பதையுமே குறித்தாலும், வளர்ச்சியைக் குறிக்கும் இந்த வ்ருத்தி என்னும் சொல்லானது இங்கேயும் நல் வளர்ச்சியை மட்டுமே குறிக்கின்றது. செழிப்பாக இருக்கும் மனிதன், குடும்பத்தையும், குடும்பம் சமூகத்தையும், சமூகம் நகரத்தையும் நகரம், மாவட்டங்களையும், மாவட்டங்கள் மாநிலங்களையும், மாநிலங்கள் நாட்டையும் எவ்வாறு செழிப்பாக்குகின்றதோ, அந்தத் தனி மனிதனின் செழிப்பு, வளர்ச்சி ஒவ்வொருவருக்கும் தேவை. அதைக் கொடுப்பவள் தேவியே. இங்கே வ்ருத்தி வடிவில் உறைகின்ற தேவிக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.

நேத்திக்கும் சுண்டல் கலெக்‌ஷனுக்குப் போனாலும் அதே கடலைப்பருப்புச் சுண்டல் தான் (ஹிஹிஹி,வேறே வீடுங்க) கிடைச்சது! இன்னொரு வீட்டில் மத்தியானமே கூப்பிட்டுப்பாயசம் கொடுத்தாங்க! க்ர்ர்ர்ர்ர்ர் நம்ம வீட்டில் இல்லைனதும் பாருங்க, யாருமே கொலுவும் வைக்கலை! சுண்டலும் கொடுக்கலை. சுண்டல் கொடுக்காதவங்க வீட்டிலே இவங்களைப் பாட அனுப்பலாம்னு வல்லி சிம்ஹன் ஒரு வீடியோ அனுப்பினார். அதை எங்கள் ப்ளாக் வாட்சப் குழுவில் பகிர்ந்தேன். பேசாமல் அதையே இங்கேயும் போடலாமோ? :)))))

7 comments:

  1. எங்களுக்கு சுண்டல் வருமா ?

    ReplyDelete
    Replies
    1. எங்கே கில்லர்ஜி! ஒருத்தருமே கண்ணில் காட்டலை! :)

      Delete
  2. நல்ல தகவல்கள்.

    இன்னைக்கு இனிப்பு பிரசாதம் கிடையாதா? இங்க ஹோட்டல்ல என்ன மெனுன்னு செக் பண்ணிக்கிட்டு லஞ்ச் சாப்பிடப் போகிற மாதிரி (மெனு நல்லா இல்லைனா போகமாட்டேன்), இனி நவராத்திரி கொண்டாடற வீட்டுல என்ன மெனுன்னு கேட்டுக்கணும் போலிருக்கு.

    ReplyDelete
    Replies
    1. வாங்க நெ.த. அதான் பால் சாதம் சொல்லி இருக்கேனே, பார்க்கலை? நாளைய தேவி முக்கியமாக மஹாலக்ஷ்மி என்பதால் பால் சம்பந்தப்பட்ட பொருட்கள் நிவேதனம் செய்வார்கள்.

      Delete
    2. "மஹாலக்ஷ்மி என்றும் சொல்வதால்" என்று படிக்கவும்.

      Delete
  3. யாதேவி சர்வ பூதேவி அன்பு (சம்ஸ்கிருதம் தெரியவில்லை ) ரூபேண சமஸ்திதா
    நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம ( என்று எழுதிய நினைவு அதுவே இப்போது மீண்டும் )

    ReplyDelete
    Replies
    1. அன்புக்கு "ப்யார்" எனச் சொல்லி அதை ஏற்கெனவே வெளியிட்டிருக்கேன். முந்தைய பதிவில்னு நினைக்கிறேன்.

      Delete