எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, February 20, 2007

215. பால் வடியும் முகம் நினைந்து, நினைந்து!

கும்பகோணம் போன நாங்கள் வழக்கமாய்த் தங்கும்ம் லாட்ஜில் இம்முறை
அறையே கிடைக்கவில்லை. நாங்கள் வாடிக்கையானவர்கள் என்பதால் ஏதோ
பேருக்கு ஒரு அறை கொடுத்தார்கள். எல்லா அறைகளும் "ரதி மீனா"வினால்
முன்பதிவு செய்யப் பட்டு விட்டது. அவங்க வீட்டுக் கல்யாணம் என்பதால்
பேருந்துகளும் முன்பதிவு செய்யப் பட்டு எங்களுக்குக் கும்பகோணம் வரை பஸ்ஸில் இடம் கிடைத்ததே பெரிய விஷயமாகிப் போனது. எங்களுக்குக் கொடுத்த அறை 4வது மாடியில். நல்லவேளையாக லிஃப்ட் இருந்தது, வேலையும் செய்தது. அறைக்குப் போனால் வெந்நீர்க்குழாயே இல்லை.
அக்கினி நட்சத்திரம் என்று சொல்லும் கத்திரி வெயிலிலும் தண்ணீரில் குளிக்க, குடிக்க முடியாத எனக்கு வெளியில் இருந்து வெந்நீர் என்ற பேரில் ஒருபக்கெட் குளிர்ந்த நீர் கிடைத்தது. அதிலே குளித்து முடித்து நாங்கள் முதலில் போனது "வெங்கட் ரமணா லாட்ஜில்" காலை ஆகாரத்திற்காக. கூடிய வரை வெளியில் போகும்போது சாப்பாட்டு விஷயத்தில் கொஞ்சம் கவனமாய் இருந்து கொள்வோம். எல்லா ஓட்டல் சாப்பாடும் ஒத்துக்
கொள்ளாது எனக்கு. அமீபயாசிஸ் உண்டு. அவருக்கோ என்றால் அல்சர் தொந்திரவு. ஆகவே இட்டிலி காலையில் சாப்பிட்டால் மதிய உணவாகக் கோயிலில் கிடைக்கும் தயிர்சாதம் தான் சாப்பிட்டுக் கொள்வோம்.
அதுவும் நான் தவிர்த்து விடுவேன். இளநீர், புதிய பழரசம் அல்லது பழங்கள் என்று சாப்பிட்டுக் கொள்வேன். (திருக்கைலை யாத்திரையின் போது அங்கேயே புதுசாக வேளா வேளைக்குச் சமைத்ததோடு அல்லாமல் வெங்காயம், பூண்டு, மசாலா, காரம் அதிகம் இல்லாத சாத்வீக உணவு. ஆகவே பிரச்னை இல்லை.) அநேகமாக எல்லாக் கோயில்களில் புளிசாதம், தயிர்சாதம் கிடைத்து விடும். ஆனால் நாங்கள் திருநெல்வேலி போனபோது "நவ திருப்பதி" யாத்திரையின் போது கொஞ்சம் கஷ்டப் பட்டோம்.
அங்கே எல்லாம் "கோஷ்டி" என்று சொல்லப் படும் ஆராதனை ஒரு
வேளைதான் நடக்கும். நான் மதுரையில் பார்த்திருக்கிறேன். ஆனால் மதுரையில் காலையிலேயே முடிந்து விடும். இங்கேயோ மத்தியானம் 11-00 லிருந்து 12-00 மணிக்குள் நடக்கிறது. அப்போது தான் பிரசாதம் கிடைக்கும். என்ன, சாப்பாடு பத்தியேப் பேசறேன்னு பார்க்கறீங்களா? இன்னிக்கு இது தான்.

இப்போத் தான் முக்கியமான விஷயம் அல்லது நிகழ்ச்சி வருகிறது. மற்ற
விஷயங்களைப் பின்னுக்குத் தள்ளி விட்டு இதை முன்னாலே சொல்லுகிறேன். 10-ம் தேதி சனி அன்று திருநெல்வேலிக்கு எங்களுக்குத் திருச்சியில் இருந்து குருவாயூர் விரைவு வண்டியில் முன்பதிவு
செய்திருந்தோம். அன்று காலையில் கும்பகோணத்தில் இருந்து திருச்சி செல்ல வேண்டும். அன்றைய தினம் எனக்கு விரத நாளாக அமைந்து விட்டது. வெளியில் சாப்பாடு சாப்பிட மாட்டேன். ஆகவே காலையில் ஒரு காஃபி மட்டும் நான் சாப்பிட்டேன். அவர் காலை ஆகாரம் சாப்பிட்டதும்
கிளம்பினோம். வழக்கம்போல் பேருந்து வேகமாய்ப் போய்க்கொண்டிருந்தது. என்னோட மறுபாதிக்கு ஒரே கவலை, நான் ஒண்ணுமே சாப்பிடாமல் வரேனேன்னு. வழியிலே வர பழம், கிழம்(ஹிஹிஹி) எல்லாம் வாங்கித் தரேன்னு சொல்லிட்டே வந்தார். நானும் வேணாம்னு சொல்லிச் சொல்லிப் பார்த்தேன்.. கேட்கலை.

சாயந்திரமாய் ஒரு 7 மணி போல் திருநெல்வேலி போகும், அங்கே போய்க்
கூடச் சாப்பிடாமல் இருந்தால் நாளைக்கு வெளியே போகணுமேன்னு ஒரே கவலை. தஞ்சாவூர் வந்தது. அங்கே ஒரு ஆவின் பால் கடை இருந்தது. அதைப் பார்த்த நான் உடனேயே சரி, பால் சாப்பிடலாமே, அதனால் ஒண்ணும் தப்பு இல்லைனு முடிவெடுத்து என் கணவரைப் போய் வாங்கிட்டு வரச் சொன்னேன். ரொம்பவே சந்தோஷமாய் வாங்கிட்டு வந்தார். இதிலே
உள்ள உள் விஷயம் புரியாமல் நானும் ரொம்பவே அப்பாவியாய் (!)
உட்கார்ந்திருந்தேன். வண்டியில் ஏறினதும் என் கிட்டே பால் வைத்திருந்த
பாத்திரத்தைக் கொடுத்தாரோ இல்லையோ, கையில் வாங்க முடியவில்லை, அவ்வளவு சூடு, எப்படித்தான் அதைப் பிடித்துக் கொண்டு வண்டியில் ஏறினாரோ தெரியலை. அது கிட்டத் தட்ட 250மி.லி.க்கு மேல் பிடிக்கும், அது
வழியன்னா வழியப் பால். ஏன் இவ்வளவு வாங்கிட்டு வந்தீங்கன்னு கேட்டா நீ முடிஞ்சதைச் சாப்பிடு, மிச்சம் நான் சாப்பிட்டுக்கறேன்னு ஆறுதல் வேறே.
கையிலேயே பிடிக்க முடியலை, வாயில் எங்கே விடறது? எத்தனை ரூபாய்க்கு வாங்கினீங்கன்னு கேட்டா 10 ரூதான்னு சொல்றார். 5 ரூக்கு வாங்கிட்டு வரக்கூடாதான்னு கேட்டால் பத்து ரூக்கு இவ்வளவு வரும்னு தெரியலை, நீயும் எத்தனை நாழிதான் பட்டினியோடு இருப்பே? நல்ல பசும்பால், உனக்காகச் சர்க்கரை போடாமல் வாங்கிட்டு வந்தேன்னு உபசரணை வேறு பலமா இருக்கு. இதை எப்படிக் குடிப்பது. ஆத்தவும் ஒண்ணும் இல்லை.

மனுஷன் எத்தனை நாளாக் காத்துட்டு இருந்தாரோ என்னை இப்படிப் பழி வாங்க? தம்ளர் இருக்கு, அதை எடுக்கலாம்னா பாலை யாராவது வாங்கிக் கையில் கொட்டாமல் வச்சுக்கணும். பஸ்ஸோ வேகமாய்ப் போகுது, என்ன செய்யறது? என்னோட மறுபாதி தம்ளரை எடுக்க முயல அந்த முயற்சியில் கொதிக்கும் பால் என் மேல் கொஞ்சம் சிந்த, நான் "வீல்" என அலற, பஸ்ஸின் வீலுக்குத் தான் ஏதோன்னு கண்டக்டர் நினைத்துப் பஸ்ஸை
நிறுத்த விசில் கொடுக்க, பேருந்து திடீர் பிரேக் போட்டு நிற்க, பால் என் தலை வழியாக முகத்தில் கொட்டி வழிந்து ஓட, பஸ்ஸில் எல்லாரும் என்னைக் கையில் ஒரு சூலமும், வேலும் கொடுத்து நமஸ்காரம் பண்ணாத குறையாகப் பார்த்தார்கள்.

பின்னே அவ்வளவு கொதிக்கிற பால் சரியாகத் தலை உச்சியில் போய் விழுந்து அபிஷேகம் மாதிரி முகத்தில் வழிந்து ஓடினால் அப்படித்தானே
தோணும். என்னோட மறுபாதி சிரிப்பை அடக்கப் பாடுபட்டுக் கொண்டிருந்தது
கண்ணில் பட நான் என்ன செய்யறது? வழக்கம்போல் நற நற நற நற நற, தான். இப்படியாக என்னோட முகமும் பால் வடியற முகம் தான். எல்லாரும்
ஒத்துக்குங்க.!

ஊத்துக்காடு வேங்கட கவியின் "பால் வடியும் முகம் நினைந்து" பாடல் பற்றி
நான் எழுதறதா நினைச்சு வந்தவங்களுக்கு, மன்னிக்கவும், இந்தத் தலைப்புப் போட்டாத் தான் எல்லாரும் வருவாங்கன்னு போட்டேன். ஊத்துக்காடும் போனேன், அதுவும் எழுதி உங்களை எல்லாம் சமாதானம் செய்துடறேன். வர்ட்டா?

19 comments:

  1. ithanai post potaachaa? ivlo vettiya irukingla :(

    ReplyDelete
  2. /என்னோட மறுபாதி தம்ளரை எடுக்க முயல அந்த முயற்சியில் கொதிக்கும் பால் என் மேல் கொஞ்சம் சிந்த, நான் "வீல்" என அலற, பஸ்ஸின் வீலுக்குத் தான் ஏதோன்னு கண்டக்டர் நினைத்துப் பஸ்ஸை
    நிறுத்த விசில் கொடுக்க, பேருந்து திடீர் பிரேக் போட்டு நிற்க, பால் என் தலை வழியாக முகத்தில் கொட்டி வழிந்து ஓட, பஸ்ஸில் எல்லாரும் என்னைக் கையில் ஒரு சூலமும், வேலும் கொடுத்து நமஸ்காரம் பண்ணாத குறையாகப் பார்த்தார்கள்//


    ஹாஹாஹாஹா..

    எத்தனை நாள் உங்களை பழிவாங்க காத்திருந்தாரோ உங்க மறுபாதி..

    தலையில் பால் வழிய, முகத்தில் பெரிய குண்க்குமம்..ம்ம்.. அம்மனே நேரில் வந்தது போல தோன்றி இருக்கிறது போல, மேடம்..

    தலைவி பதவியில் இருந்து அம்மன் பதவியா..

    பஸ்ல யாரும் வேப்பில்லை பிடுச்சு சாமியாடலை தானே..

    ReplyDelete
  3. //அவ்வளவு கொதிக்கிற பால் சரியாகத் தலை உச்சியில் போய் விழுந்து அபிஷேகம் மாதிரி முகத்தில் வழிந்து ஓடினால் அப்படித்தானே
    தோணும்.//
    oh my god! konjam carefulla irukka koodatha?
    ithu neenga vaangum 1001vathu vizhupun. :)

    ReplyDelete
  4. //திருக்கைலை யாத்திரையின் போது அங்கேயே புதுசாக வேளா வேளைக்குச் சமைத்ததோடு அல்லாமல் வெங்காயம், பூண்டு, மசாலா, காரம் அதிகம் இல்லாத சாத்வீக உணவு. ஆகவே பிரச்னை இல்லை//

    U missed out filter coffee in the list madam. he hee :)

    ReplyDelete
  5. தாயே வேப்பிலைகாரி, டும் டும் டும்......

    ஊத்துக்காடு விஜெயத்தை சொல்லுங்க முதல்ல....

    ReplyDelete
  6. நீங்க தப்பு செஞ்சுட்டீங்க. கும்பகோணத்துல வெங்கட்டமனாவுக்கு போனதுக்கு பதிலா(அனேகமா ARR/காசி) உங்க லாட்ஜ்லேர்ந்து பொடி நடையா போய் கும்பேஸ்வரர பாத்துட்டு அதொட வடக்கு பக்க மெயின் ரோட்டில"லெஷ்மி விலாஸ் பசும் பால் காபி கிளப்"க்கு போய் ஈயம் பூசுன பித்தளை டபரா செட்ல பசும்பாலில் போடப்பட்ட PB(Pure berry) சிக்கரி கலக்காத பில்டர் காபிய கொல்லிடம் பந்தி தடுக்குல உக்காந்து 3 உரி உரிஞ்சுட்டு(அவ்வளவுதான் இருக்கும்) அவங்ககிட்டயே விரதம் விஷயத்த சொன்னா தாமரை இலைல சத்து மா உருண்டை(நாட்டு சர்க்கரை போடப்பட்டிருக்கும். அது வேண்டாம்னா உப்பு போட்டு) கட்டிகிட்டு திருநெல்வேலி என்ன கயிலை வரைக்கும் போகலாம்.

    ReplyDelete
  7. போர்க்கொடி, நீங்க இன்னும் மயக்கத்திலேயே இருந்தா எப்படி? எல்லாம் நான் உங்க பதிவுப் பக்கம் வந்துட்டுத் தான் இருக்கேன். அண்ணனோடயும், அக்காவோடயும், மன்னியோடயும் பேசிட்டு இருந்தா நேரம் போறதே தெரியாது இல்லையா? இதிலே நான் ஒழுங்கா வேலை செய்யறதைப்பார்த்துப் பொறாமையா? ரங்கமணி கிட்டே போட்டுக் கொடுக்கிறேன். :D

    ReplyDelete
  8. நறநறநறநறநற, கார்த்திக், நீங்களுமா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்(கைப்புள்ள, உங்களுக்குப் பிடிக்காத க்ர்ர்ர்ர்ர் போட்டிருக்கேனே?)
    எஸ்.கே.எம். உங்களுக்காக ஸ்பெஷல் நற நற நற போதுமா?

    ReplyDelete
  9. அம்பி, அம்பி, இது என்ன புதுசா இருக்கு? திடீர்னு ஒரே பாசமழை? :P

    காபியை நான் எப்போவோ மறந்தாச்சு, நீங்க தான் இன்னும் விடலை.

    ReplyDelete
  10. மதுரையம்பதி,
    ஊத்துக்காடு விஜயம் வரும், பொறுங்க! எல்லாத் தரப்பு ரசிகர்களையும் சந்தோஷப்படுத்தற ஜனரஞ்சகமான பதிவு இல்லையா? நடு நடுவில் இப்படியும் வரும்.

    அபி அப்பா, நீங்க சொன்ன "பஞ்சாபகேச ஐயர்" ஹோட்டலில்தான் முதல்நாள் இரவு "அடை, அவியல்" சாப்பிட்டோம். பசும்பால் காபிதான் குடித்தோம். காலையில் பஸ்ஸுக்குப் போகும் வழிங்கிறதாலே "வெங்கட்ரமணா"வில் காபி சாப்பிட்டோம். அது எப்படிக் கரெக்டா சொல்றீங்க, காசி டவர்ஸ் இல்லாட்டா ஏ.ஆர்.ஆர்.னு? காசி டவர்ஸ் தான் எப்போவும் போறது. அவங்க உங்க சொந்தமா?

    ReplyDelete
  11. அபி அப்பா, இப்போ அங்கே சேர், டேபிள் போட்டிருக்காங்க. நீங்க போய் ரொம்ப நாள் ஆச்சோ? நான் மூன்று வருஷமா சேர், டேபிள் போட்டுப் பார்க்கிறேன்.

    ReplyDelete
  12. //காபியை நான் எப்போவோ மறந்தாச்சு, நீங்க தான் இன்னும் விடலை.
    //


    //நீங்க சொன்ன "பஞ்சாபகேச ஐயர்" ஹோட்டலில்தான் முதல்நாள் இரவு "அடை, அவியல்" சாப்பிட்டோம். பசும்பால் காபிதான் குடித்தோம். காலையில் பஸ்ஸுக்குப் போகும் வழிங்கிறதாலே "வெங்கட்ரமணா"வில் காபி சாப்பிட்டோம். //

    marantha aala paatha therila! kailaikku ponaalum sontha buthi maarumoo? :p

    ReplyDelete
  13. //கரெக்டா சொல்றீங்க, காசி டவர்ஸ் இல்லாட்டா ஏ.ஆர்.ஆர்.னு? காசி டவர்ஸ் தான் எப்போவும் போறது. அவங்க உங்க சொந்தமா? //

    4 மாடி, லிப்ட் என்பதால் காசி/ARR(வேறு சில புது ஹோட்டலில் லிப்ட் உண்டு) ஆனால் "வழக்கமான லாட்ஜ்" என்ற உங்கள் வார்த்தை- சோ காசி/ARR

    நான் செட்டியார் இல்லை

    நீங்கள் சாப்பிட்ட பஞ்சாமய்யர் ஹோட்டல் புதுசு. அதற்கு எதுத்தாப்புல அதே ஓட்டு வீடு ஹோட்டல் இப்பவும் உண்டு.

    அடை அவியல் சாப்பிடும் போது நாட்டி சர்க்கரை+ ஊத்துகுளி வெண்ணெய் (கேட்டால் மட்டுமே) ஆடாதொட இலையில் வைத்து தருவார்கள்.

    ReplyDelete
  14. அபி அப்பா, புதுசெல்லாம் இல்லை. அதே பழைய லட்சுமி விலாஸ் தான், நீங்க சொல்றதும், நான் சொல்றதும் ஒண்ணுதான்னு நினைக்கிறேன். இல்லாட்டி மங்களாம்பிகாவோ? ம்ம்ம்ம்ம், மங்களாம்பிகான்னு நினைக்கிறேன். பழைய வீடு, ஒட்டடையும், குப்பையும் சாப்பிடும்போது மேலே விழுமோன்னு பயமா இருக்கும். இது வரை விழுந்ததில்லை. ரொம்பவே குனிந்து தான் போகணும். கும்பேஸ்வரர் அம்மன் சன்னதிக்கு இடது பக்கத்து ரோடில் வருது. இருங்க, தெருப் பேர் என் மறுபாதிகிட்டே கேட்டுச் சொல்லறேன். என்ன இருந்தாலும் அவர் மண்ணின் மைந்தர் இல்லையா?

    @ஆப்பு, நான் "கைலைப் பயணத்தில்" கொடுக்காத காப்பியை மறந்ததாய்ச் சொன்னால், உங்களுக்கு வேறே அர்த்தம் வருது. இருங்க, உங்க கல்யாணத்திலே தங்கமணி கிட்டேச் சொல்லிக் காபி கொடுக்க விடாமச் செய்யறேன். சமையலில் மெனுவில் எல்லாம் கத்திரிக்காய் தான் ஸ்பெஷல். :P

    ReplyDelete
  15. அது "மங்கள விளாஸ்" நாகேஸ்வரன் வடக்குவீதி(டைமண்டு தியேட்டர் எதிர்புரம்)அதுல கல்லாவுல உக்காந்துருக்குர கனேசய்யர்தான் அம்சமா பிள்ளையார் மாதிரியே இருப்பார். மத்தபடி ஒட்டடை எல்லாம் சரிதான்.

    ReplyDelete
  16. \\பின்னே அவ்வளவு கொதிக்கிற பால் சரியாகத் தலை உச்சியில் போய் விழுந்து அபிஷேகம் மாதிரி முகத்தில் வழிந்து ஓடினால் அப்படித்தானே
    தோணும். \\

    :(((

    தலைவி முகத்துக்கு ஒன்னும் ஆகவில்லையே

    பார்த்து இருங்க..

    ReplyDelete
  17. :)))))

    மனைவிக்கு பாலாபிஷேகம் பண்ணிப்பாக்கணும்னு ப்ரீ-ப்ளான் பண்ணிதான் வந்துருப்பாரு.

    இது தெரிஞ்சுருந்த பிகு பண்ணிக்காம பழம் கிழமே வாங்கிச் சாப்பிட்டிருக்கலாமில்ல?? :))

    கும்பகோணம் வந்தீங்களே.. பக்கத்துல சிவபுரம் பாத்தீங்களா கீதா?

    ReplyDelete
  18. @வேதா, இது உங்களுக்கே நல்லா இருக்கா?

    @கோபிநாத, முகத்துக்கு ஒண்ணும் ஆகலை. விசாரிச்சதுக்கு ரொம்பவே நன்றி,
    @ராமநாதன், இல்லை, இன்னும் சிவபுரம் போகலை. உங்க ஊர் சிவபுரமா?

    ReplyDelete
  19. அபி அப்பா, நாகேஸ்வரன் கோவில் தெருவில் நீங்க சொல்றாப்பலே ஹோட்டல் ஒண்ணும் இல்லைனு என்னோட கணவர் சொல்றார். நாங்க போனது கும்பேஸ்வரர் கோவில் அம்மன் சன்னதிக்கு இடப்புறமாய் கும்பேஸ்வரர் வடக்கு வீதியில் இருக்கும் மங்களாம்பிகா ஹோட்டல். கும்பேஸ்வரர் சன்னதிக்குப் போகும் வழியில் கூட காளி பிராண்ட் முன்னால் இருந்ததே அதுக்குக் கொஞ்சம் முன்னாலெ ஒரு ஹோட்டல் இவங்களோடது தான்னு சொல்றாங்க, இருக்கு. ஆனால் அதிலே கூட்டம் இருக்காது. இதைத் தவிர "ராமா கஃபே"ன்னு ஒண்ணு இவங்களோட குழுவின் கிளை ஒண்ணு இருக்கு.

    ReplyDelete