எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, August 12, 2008

ராமாயணத் தொடரை ஒட்டிய சில எண்ணங்கள்ள்- பகுதி 2

ராமாயணத்தில் அரசியல் உண்டா?? தாராளமாய் உண்டு. இன்னும் சொல்லப் போனால் அரசியல் கண்ணோட்டத்தோடு பார்ப்பவர்களுக்கு இது ஒரு அரசியல் காவியமே ஆகும். ஒரு அரசன் எவ்வாறு ஆட்சி நடத்த வேண்டும் என்பதை வால்மீகி பல இடங்களில் விளக்கி இருக்கின்றார். அதிலும் தசரதன் மூலம் நன்கு விளக்குகின்றார். தசரதனைப் பற்றிச் சொல்லும் இடங்களில், தசரதன், நான்கு வேதங்களையும் அறிந்தவராயும், பின்னால் நடக்கக் கூடியவற்றை அறியும் திறன் படைத்தவனாயும், ஐம்புலன்களையும் அடக்கியவனாயும், மனிதர்களிடம் நட்புப் பாராட்டுபவராயும், குரு பக்தி நிரம்பியவராயும், குடிமக்களைத் தன் மக்கள் போல் கருதும் அரசனாகவும், நீதி, நேர்மை, நியாயம் போன்றவற்றில் பற்றுள்ளவராயும் சித்தரிக்கின்றார். குடிமக்களைப் போஷித்து, சிறப்பாக ஆளும் வல்லமை பெற்றவர்களே சிறந்த அரசனாய் இருக்க முடியும் என்பதையும் எடுத்துச் சொல்கின்றார். அரசன் ஆளுவதற்காக அல்லாமல், மக்களால் ஆளப் படுவதற்கென்றே அரசன், என்றும், மக்கள் தொண்டே மன்னனுக்கு முக்கியமாய் இருக்கவேண்டும் என்பதையும் எடுத்துச் சொல்கின்றார்.

"அறனிழுக்கா நல்லவை நீக்கி மறனிழுக்கா
மானம் உடைய தரசு."

என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்குக்கு ஏற்ப ஆட்சிமுறைக்கு உரிய அறத்தில் தவறாமல், நல்லறம் புரிந்து, வீரத்துடன், குறையில்லாத மானத்துடன் ஆட்சி புரிந்ததாய்ச் சொல்கின்றார் வால்மீகி.

"நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்"

என்னும் புறநானூற்றுப் பாடலுக்கு ஒப்ப, நாட்டுக்கு உயிர்நாடியாக இருப்பது நல்லரசனின் ஆட்சியே என்றும் தெரிய வருகின்றது, இந்த மாபெரும் காவியத்தினால்.

அரசன் தானாகத் தன்னிச்சையாக எந்தவிதமான முடிவும் எடுக்காமல் தன் அமைச்சர்களைக் கலந்து ஆலோசிப்பது குறித்தும் இதில் சொல்லப் படுகின்றது. தன் சொந்த மகனாகவே இருந்தாலும் யுவராஜ பட்டாபிஷேகம் செய்வதற்கு முன்னால், தன் அமைச்சர்களைக் கலந்து ஆலோசித்து அவர்களின் சம்மதம் பெற்றே ராமனின் பட்டாபிஷேகத்தை நிச்சயம் செய்கின்றார் தசரதச் சக்கரவர்த்தி. பட்டாபிஷேகம் நடக்கப் போகின்றது என்பதால் தன் மகனுக்கு அரச நீதி பற்றிய அறிவுரைகளும் தசரதர் ராமனுக்கு எடுத்துக் கூறுகின்றார். ஒரு அரசன் எவ்வாறு இருக்கவேண்டும், காமம், குரோதம், போன்ற துர் எண்ணங்களுக்கு இடம் கொடாமல், நாள் தோறும் நாட்டு நடப்புகளைத் தெரிந்து கொள்வது முக்கியம் என்றும், பிறநாட்டு விபரங்களை ஒற்றர்கள் மூலம் அறியவேண்டும் எனவும், மக்கள் மனம் மகிழுமாறும், நீதி தவறாமலும் வழக்குகளை விசாரித்து நீதி வழங்க வேண்டும் எனவும், நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் தங்கள் அரசனைப் பற்றிப் பெருமை கொள்ளும்படி நடக்கவேண்டும் எனவும் கூறப் படுகின்றது.

இதைப் போலவே குலகுருவான வசிஷ்டரும் ராமருக்கு அரச நீதிகளைக் கூறுகின்றார். அமைச்சர்களைக் கலந்து ஆலோசிக்காமல் முடிவு எடுக்கக் கூடாது, வீண் பகை கொள்ளக் கூடாது, அன்பு நெறியைக் கடைப்பிடித்தல் எனப் பல்வேறு நல்வழிகளும் அரசனுக்கு உரியனவாய் எடுத்துச் சொல்லப் படுகின்றது.

"வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழும் குடி."

என்னும் வள்ளுவப் பெருந்தகையின் வாக்குக்கு ஏற்ப மன்னர்கள் தங்களை உடலாகவும், குடி மக்களைத் தங்கள் உயிராகவும் கருத வேண்டும் என்று வசிஷ்டர் ராமருக்கு எடுத்துச் சொல்வது எக்காலத்துக்கும் பொருந்தும் ஒன்றாகும்.

"இறை காக்கும் வையகமெல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின்."

என்பதற்கொப்ப நல்லரசன் நல்வழியில் ஆட்சி புரிந்து வந்தால் அவனை அவனின் நற்செயல்களே காக்கும் என்பதையும் வசிஷ்டர் வாயிலாக எடுத்துச் சொல்கின்றார் வால்மீகி. மேலும் மன்னனாகவே ஆகப் போகின்றவன் ஆனாலும் அவனுக்கும் பதவி ஆசை இருக்கக் கூடாது என்பதும், ஆட்சியில் அமரப் போகின்றோம் என்ற இறுமாப்பு இருக்கக் கூடாது, எப்போதுமே ஒரே மாதிரியான மனநிலையில் இருக்கவேண்டும் என்றும் குறிப்பிடப் படுகின்றது. அதற்கேற்ப ராமரும் தசரதர் அழைத்து, ராமருக்கு முடி சூட்டும் தன் முடிவைச் சொன்னதும், ராமரின் மனதில் மகிழ்வும் இல்லை, தளர்வும் இல்லை, எனவும், இது தசரத மன்னனின் ஆணை, அதை ஏற்று நடக்கின்றேன் என்றே ராமன் கூறுவதாயும் வால்மீகி கூறுகின்றார்.

இவ்விதம் மன்னர்கள் எவ்வாறு ஆட்சி நடத்தவேண்டும் என்ற கூற்றுகளும், கருத்துக்களும் அக்காலத்திற்கு மட்டுமில்லாமல், எக்காலத்திற்கும் பொருந்தும் வகையில் இருக்கின்றது அல்லவா??
அடுத்து ராமாயணம் ஒரு காதல் காவியமா?? இளைஞர்களுக்கு எவ்வகையில் ஏற்றது??

No comments:

Post a Comment