எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, December 18, 2008

கண்ணன் வருவான், கதை சொல்லுவான் பகுதி 11

இங்கே மதுராவில் பஞ்சம் தலைவிரித்தாடுகின்றது. மதுராவை ஒட்டி உள்ள கோகுலத்தில் ஷூரர்களின் ஒரு பிரிவின் தலைவனாய் இருந்த நந்தகோபன் தன் முந்நூறு பசுக்களையும் இந்தப் பஞ்சத்தில் இருந்து காக்க வழி தெரியாமல் விழிக்கின்றான். பலவகையான பிரார்த்தனைகள் செய்யப் படுகின்றன. தன்னை நம்பி இருக்கும் தன் குலத்தவர் வாடாமல், அவர்களுக்குத் தேவையானவற்றைத் தன்னால் முடிந்தவரையில் செய்து கொடுக்கின்றான் நந்தகோபன். அவன் மனைவியான யசோதையும் இதற்கு ஒத்துழைக்கின்றாள். அங்கிருக்கும் அனைத்து யாதவர்களுக்கும் அவர்கள் இருவரும் தந்தை போலவும், தாய் போலவும் தெரிகின்றனர். ஒரே ஒரு குறை தான் நந்தனுக்கு. தன் குலம் விளங்க ஒரு குழந்தை இல்லையே என. தன் பசுக்களையும், தன் குடிமக்களையுமே சொந்தக் குழந்தைகள் போல் அன்புடன் நடத்தி வந்தான். எனினும் இப்போதைய இந்தப் பஞ்சத்திற்கு கம்சனின் நடவடிக்கைகளே காரணம் என்பதில் அங்கே யாருக்கும் சந்தேகமே இல்லை. ஒன்றன் பின் ஒன்றாகப் பச்சிளம் குழந்தைகள் ஆறு பேரை கம்சன் கொன்றுவிட்டான் கொடூரமாய். இந்தப் பஞ்சம் நிச்சயமாய் அதன் காரணமாகவே ஏற்பட்டுள்ளது என்பதில் வ்ரஜபூமியில் யாருக்கும் சந்தேகமே இல்லை.

என்றாலும் யாரும் வாயைத் திறக்கவில்லை. இதோ, தேவகி ஏழாவது முறையாகக் கர்ப்பம் தரித்துப் பிரசவத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றாள். ஆனால்?? இது என்ன? வசுதேவரின் மற்றொரு மனைவியான ரோகிணியும் கர்ப்பமாய் இருக்கின்றாள் போல் தெரிகின்றதே? நடக்கப் போவதைப் பார்த்தால் ரோகிணிக்குச் சீக்கிரமாய்க் குழந்தை பிறக்கும் போலும் தெரிகிறதே?? கம்சனுக்கும் செய்தி எட்டியுள்ளது. தன்னை அழிக்கத் தன் தங்கையான தேவகியின் கர்ப்பத்தில் பிறக்கும் எட்டாவது குழந்தையா? இரண்டில் ஒன்று பார்த்துவிடுவோம். எப்படி இந்த தேவகி தன் குழந்தையைக் காப்பாற்றப் போகின்றாள்?? ம்ம்ம்ம்?? ஆனால் இது என்ன? இந்த ஷூரக் கூட்டத்தின் தலைவன் ஆன கோகுலத்து நந்தன் ஏன் இன்னும் கப்பமே செலுத்தவில்லை? ஆள் அனுப்பவேண்டியது தான். கம்சன் உத்தரவுகள் பிறப்பித்தான். ஷூரர்களுக்கும், யாதவக் குலத்தில் சிலருக்கும் ஆச்சாரியராய் இருந்தவர் கர்கர். கர்காசாரியார் ஒரு நாள் திடீரென கோகுலத்துக்கு விஜயம் செய்கின்றார். நந்தனுடன் பேச்சு வார்த்தை நடத்துகின்றார். நந்தன் பதில் பேசாமல் மெளனமாய் ஆசாரியரின் பேச்சைச் செவி மடுக்கின்றான். அடுத்த நாளே ஆசாரியர் தெரிவித்தாற்போல் கம்சனின் ஆட்கள் வந்து நந்தனை மதுராவிற்கு வந்து கம்சனைச் சந்திக்குமாறு சொல்லுகின்றனர். நந்தனும் புறப்படுகின்றான் கம்சனைச் சந்திக்கத் தகுந்த முன்னேற்பாடுகளுடனும், பரிசுப் பொருட்களுடனும்.

நந்தன் மதுரா வந்து சேர்ந்து கம்சனையும் சந்திக்கின்றான். ஏற்கெனவே மிகுந்த மனக்குழப்பத்தில் இருக்கின்றான் கம்சன். இப்போது பிறக்கப் போவது ஏழாவதா/ எட்டாவதா? அடிக்கடி இந்தச் சந்தேகம் வேறே வந்துவிடுகின்றது. ஒற்றர்கள் வேறே ஷூரர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் தேவகியின் பிரசவத்தை எதிர்ப்பார்ப்பதைப் பற்றியும், நாடு முழுதும் பிறக்கப் போகும் அந்தக் காப்பாளன் பற்றியும், தெய்வீகக் குழந்தை பிறக்கப் போகும் நன்னாள் பற்றியும் பேசுவதையும், தன்னுடைய கொடூரங்கள் சகிக்க முடியாமல் போவதாய்ப் பேசிக் கொள்வதையும் கேட்டுக் கொண்டு வந்து சொல்கின்றனர். இந்நிலையில் நந்தனைச் சந்தித்த கம்சன், அவன் ஏன் இன்னும் கப்பம் செலுத்தவில்லை எனக் கேட்க, விவசாயம் சரிவர நடைபெறாததையும், ஏழை விவசாயி படும் கஷ்டத்தையும் நந்தன் சொல்கின்றான். நிலத்தை அவனிடமிருந்து பிடுங்கும்படி கம்சன் சொல்ல நந்தன் மிகப் பணிவோடு மறுக்கின்றான். அது அதர்மம் என எடுத்துக் காட்டுகின்றான். “ஹா, ஹா, அதர்மம்? எது அதர்மம் நந்தா? பணம் கொடுக்க முடியவில்லை எனில் அவர்களுக்கு நிலம் எதுக்கு?? பணம் கிடைக்குமென்றால், அதனால் வரும் சுகத்தை அனுபவிக்க முடியுமென்றால் நான் எந்த அளவுக்கும் போகத் தயாராய் இருக்கின்றேன். அது சரி, இது என்ன நான் கேட்பது? உன்னுடைய ஷூரர்கள் ஏதோ ரட்சகன் வந்து பிறந்து என்னை அழிக்கப் போவதாய்ப் பேசிக் கொள்கின்றார்களாமே?? ஜாக்கிரதை! நான் இருக்கும் வரையில் எதுவும் நடவாது! அவர்களை அடக்கி வை!” என்று சொல்கின்றான்.

நந்தன் கம்சன் அறியாவண்ணம் தனது சிரிப்பை அடக்கிக் கொண்டு, "அரசே, தங்களை மீறி நாங்கள் யார் என்ன செய்யமுடியும்? தாங்கள் கூறியது போலவே அவர்களை அடக்குகின்றேன். ஆனால் அதற்கு முன்னர் நான் வசுதேவரைப் பார்க்கவேண்டுமே? எங்கள் ஷூர வம்சத்தின் தலைவரும், அரசரும் அவர்தானே? அவரிடம் பேசிவிட்டு நான் சென்று மற்றவர்களிடம் வசுதேவரின் இஷ்டம் இது எனச் சொன்னால் ஒத்துக் கொள்ளலாம். அதுதான் எனக்கு எளிதும் கூட", என்று சொல்லுகின்றான். சற்றே யோசித்த கம்சன், பின்னர் ரொம்பவும் தான் மறுத்தால் பின்னால் அனைவரும் சந்தேகம் கொள்வார்கள் என்று சம்மதிக்கின்றான். நந்தன் வசுதேவரைச் சந்திக்கச் செல்கின்றான்.

5 comments:

  1. அப்பாடி. ஒரு வழியா உங்களைப் பிடிச்சிட்டேன்.

    ReplyDelete
  2. அப்பாடி, நானும் இன்னிக்கு ஒரு வழியா எல்லாருடைய பின்னூட்டத்துக்கும் பதில் சொல்லிட்டேன். நன்றி கவிநயா.

    ReplyDelete
  3. தொடரட்டும் உங்கள் தொண்டு. மேலும் புதிய விளக்கங்கள் கொடுக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. வாங்க ஆ, இதழ்கள், உங்க பதிவுகளும் நல்லா இருக்கு. ஆணா, பெண்ணா சொல்லவே இல்லை??

    ReplyDelete
  5. என் வலைப்பதிவை பார்த்துமா தெரியவில்லை.

    பல தரப்பட்ட ரசனையுள்ள ஒரு பையன்.

    ReplyDelete