எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, December 29, 2008

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், தேவகிக்குக் கிடைத்தது! பகுதி 17


தேவகியின் பித்துப் பிடித்த தாய் மனத்தின் ஏக்கம் அதிகம் ஆகிக்கொண்டே போனது. அவளுடைய ஏக்கம் தாங்கமுடியாமல் ஒரு நாள் அவள் களிமண்ணால் சிறியதொரு குழந்தை பொம்மையைத் தன் கைகளாலேயே செய்தாள். அதை அந்தக் காலித் தொட்டிலில் இட்டாள். தாலாட்டுப் பாடினாள். அவ்வளவு தான். அவளின் சந்தோஷம் எல்லை மீறிற்று என்று சொல்லும்படிக்கு தினமும் காலையில் சீக்கிரம் எழுந்து, தினமும் புதுக்களிமண்ணை எடுத்து குழந்தை பொம்மை செய்து, அதற்குப் பூக்கள் வைப்பதும், அலங்காரங்கள் செய்வதும், தொட்டிலில் இட்டுத் தாலாட்டுவதும், பாலூட்டுவதுமாக இருந்தாள்.

மாணிக்கம்கட்டி வயிரம்இடைகட்டி
ஆணிப்பொன்னால்செய்த வண்ணச்சிறுத்தொட்டில்
பேணிஉனக்குப் பிரமன்விடுதந்தான்
மாணிக்குறளனே. தாலேலோ
வையமளந்தானே. தாலேலோ. (2) 1.


அந்தக் குழந்தை பொம்மையைத் தாலாட்டிப் பாலூட்டித் தூங்க வைப்பதாக தேவகி செய்வதை பார்த்த வசுதேவருக்கும், கர்காசாரியாருக்கும் மனம் தாளவில்லை. தேவகியின் மனநிலைமை அவர்களுக்கு மிக நன்காய்ப் புரிந்தது. அவளைப் பொறுத்தவரையில் களிமண்ணால் செய்யப் பட்ட அந்தச் சின்னஞ்சிறு குழந்தை பொம்மை அவள் தூக்கிக் கொடுத்த அந்த மறக்கமுடியாத நீலமேக வண்ணன் தான் என்பதையும், கடவுளே வந்து தன் வயிற்றில் பிறந்திருக்கின்றார் என்று தேவகி உறுதியாக நம்புவதையும் புரிந்து கொண்டார்கள்.

சங்கின்வலம்புரியும் சேவடிக்கிண்கிணியும்
அங்கைச்சரிவளையும் நாணும்அரைத்தொடரும்
அங்கண்விசும்பில் அமரர்கள்போத்தந்தார்
செங்கண்கருமுகிலே. தாலேலோ
தேவகிசிங்கமே. தாலேலோ. 4.

ஒருநாள் தேவகி அரண்மனை மேன்மாடத்தில் நின்றுகொண்டு இலக்கில்லாமல் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தபோது விண்ணில் தவழ்ந்து கொண்டிருந்த ஒரு கரிய நிற மேகத்தைக் கண்ணுற்றாள். அந்தக் கருநீல நிறம் அவளுக்கு அவள் பெற்றெடுத்த அருமைக் குமாரனை நினைவூட்டியது. ஆஹா, இந்தக் கருநீல நிறம், என் அருமைக் குழந்தையின் நிறம்போலவே இருக்கின்றதே? உற்றுப் பார்த்தாள் தேவகி. அவள் கண்ணிற்கு அந்தக் கருநீல மேகம் ஒரு குழந்தை போலவே காட்சி அளித்தது. சின்னஞ்சிறு கால்கள் முளைத்தன, கைகள் முளைத்தன. அழகுக் கண்கள், ஆஹா, அந்தக் கண்கள் தான் எத்தனை எத்தனை அழகு? கண்களாலேயே சிரிக்கின்றானே இந்தக் குழந்தை? வசீகரித்தது பார்வை. அவள் நினைவிலும், கனவிலும், விழிப்பிலும், தூக்கத்திலும்,நிற்கையிலும், நடக்கையிலும் அந்தக் கண்களின் பார்வை துரத்தித் துரத்தி வந்தது அவளை.

கானார்நறுந்துழாய் கைசெய்தகண்ணியும்
வானார்செழுஞ்சோலைக் கற்பகத்தின்வாசிகையும்
தேனார்மலர்மேல் திருமங்கைபோத்தந்தாள்
கோனே. அழேல்அழேல்தாலேலோ
குடந்தைக்கிடந்தானே. தாலேலோ. 7.

அவள் படும் வேதனையைப் பார்த்துக் கொண்டிருந்த வசுதேவர் ஒரு நாள் அவளுக்கு கரிய நிறப் பளிங்கினால் ஆன குழந்தை சிலை ஒன்றை எங்கிருந்தோ வரவழைத்துக் கொடுத்தார். தேவகியின் ஆனந்தத்துக்கு அளவே இல்லை. அட, இவன் என்னுடைய கிருஷ்ணன் போலவே இருக்கின்றானே? ஆம், வசுதேவர் மிகச் சிரமப் பட்டு கோகுலத்தில் வளர்ந்து கொண்டிருந்த தன்னுடைய மகனைப் போலவே சிலையைச் செய்ய வைத்திருந்தார். ஆகவே கம்சன் கண்களில் படாமலும் காக்கவேண்டும். ஆகவே மிகச் சிரமப் பட்டு இதைக் கம்சனுக்குத் தெரியாமல் மறைக்கவேண்டுமே??? ஆனால் தேவகிக்கோ, இனி தினம், தினம் களிமண்ணால் புதுப் புது குழந்தை பொம்மைகள் செய்யவேண்டியதில்லை. இந்தக் குழந்தை நிஜமாகவே என்னுடைய "கன ஷ்யாம்" என்று குதூகலம் அடைந்தாள் தேவகி. ஆம், தேவகி அவன் நிறத்தை ஒட்டி அவனுக்குச் சூட்ட நினைத்த பெயர் கன ஷ்யாம் அல்லது கிருஷ்ணா என்பதாகும். தன்னுடைய கனஷ்யாம் போலவே இருக்கின்றானே இவன்? தேவகியின் வாழ்க்கையில் அன்றிலிருந்து ஒரு புதிய அத்தியாயம் ஆரம்பித்தாற்போல் ஆயிற்று.

மெய்திமிரும்நானப்பொடியோடு மஞ்சளும்
செய்யதடங்கண்ணுக்கு அஞ்சனமும்சிந்துரமும்
வெய்யகலைப்பாகி கொண்டுஉவளாய்நின்றாள்
அய்யா. அழேல்அழேல்தாலேலோ
அரங்கத்தணையானே. தாலேலோ. 9.


அந்தப் பொம்மையைக் குளிப்பாட்டினாள். அலங்கரித்தாள், கண்ணுக்கு மை இட்டாள், சந்தனம் தடவினாள், பூக்களால் அலங்கரித்தாள். தாலாட்டினாள், பாலூட்டினாள், என்னுடைய கனஷ்யாம் என்று கொஞ்சினாள். கனஷ்யாம் யார் என்பது வசுதேவர், கர்காசாரியார், தேவகி மூவரைத் தவிர வேறு யாருக்கும் புரியவில்லை. அடுத்தடுத்து குழந்தைகளைப் பறி கொடுத்ததால் தேவகி இவ்வாறு நடந்து கொள்வதாய் நினைத்தனர் அனைவரும். கொஞ்சம் அசந்தாலும் குழந்தை கோகுலத்தில் வளருவது கம்சனுக்குத் தெரிந்துவிடும் என்பதால் மிக மிகக் கவனமாய் இருந்தனர் மூவரும். அந்தக் குழந்தையுடன் பேசுவாள் தேவகி. உயிருள்ள குழந்தையைக் கொஞ்சுவது போலவே அதையும் கொஞ்சிக் கெஞ்சிப் பாராட்டிச் சீராட்டினாள். அத்தோடு மட்டுமா? அதைத் தூங்கவைக்க தேவகி தினமும் அந்த பொம்மைக் குழந்தைக்குத் தாலாட்டுகள் பாடினாள். திடீரெனக் குழந்தை அழுவதுபோல் தோன்றும் அவளுக்கு. அடடா, அழுகின்றதே என விரைந்து ஓடி வந்து அந்த பொம்மையைத் தூக்கித் தோளில் போட்டுக் கொண்டு தாலாட்டுப் பாடுகின்றாள் தேவகி.

"கண்ணான கண்ணுறங்கு, கண்மணியே நீ யுறங்கு,
ஆரடிச்ச கண்ணீரு ஆறாப் பெருகுறது?
அடிச்சாரைச் சொல்லி அழு, ஆக்கினைகள் செய்து வைப்பேன்,
தொட்டாரைச் சொல்லி அழு, தோள் விலங்கு பூட்டி வைப்பேன்,

ஆரடிச்ச கண்ணீரு ஆறாப் பெருகுறது??

அம்மா அடிச்சாளோ அமுதூட்டும் கையாலே?
அப்பா அடிச்சாரோ அரவணைக்கும் கையாலே?

ஆரடிச்ச கண்ணீரு ஆறாப் பெருகுறது??

மாமன் அடிச்சானோ, மல்லிகைப் பூச்செண்டாலே??(தேவகியின் மனம் விம்முகின்றது)
அத்தை அடிச்சாளோ, அல்லிப் பூச் செண்டாலே?
பாட்டி அடிச்சாளோ, பால் போட்டும் சங்காலே?

ஆரடிச்ச கண்ணீரு ஆறாப் பெருகுறது??
ஆறிரண்டும் காவேரி, அதனடுவே சீரங்கம்.............


இதற்கு மேலே தேவகியால் தாங்க முடியவில்லை. கங்கை, யமுனை, காவிரி, நர்மதை என ஆறுகள் அனைத்தும் இப்போது தேவகியின் கண்களிலே,

எனக்கும் ...................

1 comment:

  1. அழகான பாசுரங்களை பொருத்தமாக எடுத்தளித்திருக்கிறீர்கள். இந்த தாலாட்டும் (என் வலைபூவிலும் இட்டிருக்கேன் முந்தி).

    //எனக்கும் ...................//

    :'(((

    ஒரு வகையில் இப்படியேனும் கண்ணனுடன் வாழ்வது சுகம்தானம்மா.

    ReplyDelete