எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, May 28, 2010

காளஹஸ்தி கோயில் கோபுரமும், மக்களின் பீதியும்!

வட மாநிலங்களில் மன்னர்களின் அரண்மனைகள் பெரியவையாக இருக்கும். இன்றளவும் பல அரண்மனைகளைக் காண முடியும். அவற்றைப் பாதுகாத்தும் வைத்துச் சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்கும்படியாகச் செய்திருக்கின்றனர். அம்மாளிகைகளின் ஒரு பக்கத்திலே அவர்கள் வணங்கி வந்த கடவுளரின் கோயில்களும் காணப்படும். ஆகக்கூடி மாளிகைகளின் ஒரு அங்கமே கோயில்களாக இருந்திருக்கின்றன. ஆனால் தென்னாட்டிலோ எப்போது என்று சொல்ல முடியாத கால கட்டத்தில் இருந்தே கோயில்களே மன்னர்களின் புகழைப் பேசும் களங்கள். கோசெங்கட்சோழன் எழுப்பிய மாடக்கோயில்களுக்காகவே அவன் புகழை இன்றளவும் பேசுகிறோம். தஞ்சைப் பெருங்கோயிலோ ஆயிரமாண்டுகள் கடந்தும், ராஜ ராஜ சோழன் என்னும் சிவபாத சேகரனின் தொண்டைப் பேசுகிறது. இந்தக் கோயில்களை எல்லாம் இறைவனா கேட்டார்? இல்லையே! மன்னர்களே தங்கள் பக்தியின் மிகுதியால் எழுப்பிய கோயில்களே அவை எல்லாம். எந்த மன்னனும் சிற்பிகளையோ, ஸ்தபதிகளையோ வற்புறுத்தல் மூலம் இப்படியான அற்புதப் படைப்புகளைப் படைத்திருக்க முடியாது.

கோயில்களும், அவற்றின் மண்டபங்களும் பல வழிப்போக்கர்களுக்கும், சந்நியாசிகளுக்கும், யாத்ரீகர்களுக்கும் தங்குமிடங்களாய்ச் செயல்பட்டிருக்கின்றன. பெருவெள்ளம், புயல் போன்ற இயற்கைச் சீற்றங்கள் எழும்போதெல்லாம் கோயிலின் உயரமான மண்டபங்களில் ஏறித் தம் உயிர்,உடைமைகளை மக்கள் காப்பாற்றிக்கொண்டதாகவும் அறிகிறோம். எத்தனையோ வீடில்லா ஏழைகளுக்குக் கோயில் மண்டபங்களே தங்குமிடங்கள். இப்படிப் பலவகையிலும் பயன்படுமாறு கோயில்களை எழுப்பின மன்னர்கள் அவற்றைப் பராமரிக்கவும் தேவையான ஏற்பாடுகளைச் செய்துவிட்டுத் தான் சென்றிருக்கிறார்கள். ஆனால் அவற்றை எல்லாமும் அலட்சியம் செய்து அந்தச் சொத்தையும் அபகரிக்கும் மக்களும் தோன்றுவார்கள் என அவர்கள் எண்ணிக்கூடப் பார்த்திருக்க மாட்டார்கள்தான். 25 வருடத்துக்கும் மேலாகக் காளஹஸ்திக் கோயிலின் கோபுரம் பழுதடைந்திருக்கிறது. பலமுறை சுட்டிக்காட்டப் பட்டும் இருந்திருக்கிறது. இந்த தேசத்தின் பாரம்பரிய தர்மத்திற்கு மறு மலர்ச்சி கொடுத்த விஜயநகர சாம்ராஜ்யத்தின் அரசரான கிருஷ்ணதேவ ராயர் கட்டியதாகும். விஜயநகரப் பேரரசும், அதன் மன்னர்களும் கோயில்களைக் கட்டியதும், ஏற்கெனவே இருந்த கோயில்களுக்குச் செய்த திருப்பணிகளும் கணக்கில் அடங்காதவை. இப்படிக் கட்டப் பட்ட இந்தக் கோபுரம் இப்போது கிருஷ்ணதேவராயரின் ஆட்சிக்காலத்தின் 500-வது ஆண்டு விழா கொண்டாடப் பட்டு வரும் சமயம் விழுந்தது, நம்முடைய அலட்சியத்தையே காட்டுகிறது.

காளஹஸ்தி கோயிலின் ராஜகோபுரம் இடிந்து விழுந்தது பற்றிப் பலரும் பலவாறு பேசுகின்றனர். தன்னைக் காத்துக்கொள்ள முடியாத சிவனா என்றும் சிலருக்குப் பரிகசிப்பு. கோயிலைக் கட்டியது மனிதர்கள். பாதுகாக்கவேண்டிய கடமையும் மனிதர்களுக்கே. ஒரு சிலருக்கு அதனால் என்ன என்ற அலக்ஷியம். போனால் போகட்டும் என்று சொல்கின்றனர். வழிபாட்டுக்குரிய கோயில் என்று பார்க்காமல் வரலாற்றுச் சின்னம் என்ற அளவிலாவது பார்க்கலாமே? கிட்டத் தட்ட அறுபது வருடங்களாக அந்தக் கோயிலின் கோபுரம் பராமரிப்புப் பணிக்காகக் காத்துக்கொண்டிருந்திருக்கிறது. ஆனால் அறநிலையத் துறையின் அநுமதி கிட்டவில்லையோ என்னமோ? அப்படி ஒண்ணும் ஏழைக்கோயிலாகவும் தெரியவில்லை. நாங்க போயிருந்தப்போ நல்ல கூட்டம் இருந்தது. பெரும்பாலும் கூட்டம் இருக்கும் என்றே கேள்விப் பட்டேன். இப்போ சந்தோஷம் அடைய வேண்டிய ஒரே விஷயம் கோபுரம் மக்கள் கூட்டத்தின் நடுவே இடிந்து விழுந்து அதன் மூலம் பெரும் உயிரிழப்பு ஏற்படாமல் இருந்தது ஒன்றே.

கிருஷ்ணதேவராயர் காலத்தில் அவரால் கட்டப்பட்ட இந்தக் கோபுரத்தின் அஸ்திவாரம் பல வருடங்களாகப் பராமரிக்கப் படவில்லை. 1988-ம் ஆண்டிலிருந்தே விரிசல் ஏற்பட்டிருப்பதாகத் தமிழகத்தின் தலை சிறந்த ஸ்தபதி முத்தையா அவர்கள் கூறுகின்றார். ஐநூறு ஆண்டுகள் பழமையான இந்தக் கோபுரத்தில் விரிசல் ஏற்பட்டதுமே தகுந்த பாதுகாப்புகள் செய்யப்பட்டிருக்கவேண்டும் என்றும், அஸ்திவாரத்தை, "ரேப்ட்" என்பதைப் போட்டு வலுப்படுத்தி இருக்கவேண்டும் எனவும் திரு முத்தையா அவர்களின் கருத்து. இதற்கு நடுவில் பாமர மக்களின் அறியாமையையும், பயத்தையும் பயன்படுத்திக்கொண்டு ஜோதிடர்களின் தவறான கணிப்புகள். உடனே ஆயிரக்கணக்கான ரூபாய்கள் செலவில் பரிகாரங்கள், பூஜைகள், வழிபாடுகள் நடத்தவேண்டும் என்று அவர்களின் கருத்து.

கவனிப்பாரின்றி இடிந்து விழுந்த கோபுரத்தினால் பாதிப்பு எப்படி ஏற்படும்? அரசின் மெத்தனத்தால் நடந்த ஒன்றுக்குப் பொதுமக்களின் நடுவே பீதியைக் கிளப்பி விடும் ஜோசியர்களை என்னனு சொல்றது?? கோபுரம் இடிந்து விழுந்தது என்னமோ வருந்தத் தக்க ஒன்றே. அப்படி ஒண்ணு நிகழாமல் பார்த்துக்கொண்டிருக்கலாம். இதனால் பலருக்கும் உடைமைகள் சேதம் ஏற்பட்டிருக்கிறது. பலரும் வீடுகளை இழந்துள்ளார்கள். பலரின் வியாபாரம் செய்யும் கடைகளும் இடிந்துள்ளன. இதைவிடப் பெரிய சேதம் இன்னும் என்ன ஏற்படவேண்டும் என இந்த ஜோதிடர்கள் விரும்புகின்றனர்?? ஆட்சியாளர்கள் தர்மத்தின் பாதையில் சென்று நல்லாட்சி நடைபெறவேண்டும் எனக் கூறுவது சரியே. ஆனால் அதற்காகப் பாமர மக்களிடம் பீதியைக் கிளப்பும்படியான பலன்களைக் கூறுவதும் சரியல்ல. இந்த மாதிரி வருமானங்களை நம்பிப் பிழைப்பு நடத்தும் ஜோதிடர்கள் மக்கள் நடுவே பீதியைக் கிளப்புவது ஜோதிடத்தையும் கேவலப் படுத்தி, உண்மையான ஜோதிடர்களையும் தர்ம சங்கடத்தில் ஆழ்த்தும் ஒன்று. இந்த கோபுரம் விழப் போவது முன்கூட்டியே தெரிந்த ஒன்று. இப்போ இப்படிச் சொல்லும் இந்த ஜோதிடர்கள் கோபுரம் என்று, எந்தத் தேதியில், எத்தனை மணிக்கு இடிந்து விழப்போகிறது என்பதை முன் கூட்டியே சொல்லி எச்சரித்தார்களா?

சமீபத்திய புயலின் காரணமாகவே விரிசலும் பெரிதாகி இருந்திருக்கிறது.கோயிலின் முன்னாள் அறங்காவலர் ஆன அய்யாவு குருக்கள் சொல்கிறாப்போல் இதிலே தெய்வக் குற்றம்னு எதுவும் இல்லை. ஆட்சியாளர்களின் அலட்சியப் போக்கே காரணம். நிர்வாகத்திற்கும் முன்னெச்சரிக்கையாக நடக்கத் தெரியவில்லை. எதற்கெடுத்தாலும் அரசின் அநுமதி பெறவேண்டும். அவங்களும் என்ன செய்ய முடியும்?? ஆட்சியாளர்களுக்கோ தங்கள் பதவியைத் தக்க வைத்துக்கொள்ள கஜ கர்ணம் போடவேண்டி இருக்கிறது. இதெல்லாம் அவங்க கவனிக்க முடியுமா? போகட்டும், இனியாவது ஆகமவிதிப்படி, (ஆந்திராவில் இருந்தாலும் சைவ ஆகமங்களின் படியே தமிழ்நாட்டு சிவாசாரியார்களால் வழிபாடுகள் செய்யப் படுகின்றன காளஹஸ்தி கோயிலில்)ஆகமம் நன்கறிந்தவர்களைக் கொண்டு ராஜகோபுரம் கட்டப் படவேண்டும். அதற்கு வாயுலிங்கேஸ்வரரும், ஞானாம்பிகையும் அருள் புரியவேண்டும். கோபுரம் இடிந்து விழுந்ததால் கோயிலின் மற்ற வழிபாடுகளுக்கு எந்தக் குறையும் இருக்காது. மேலும் இந்தக் கோயிலை ராகு, கேதுவின் தோஷ நிவர்த்தி ஸ்தலம் என்று சொல்வதற்கும் ஆதாரங்கள் இல்லை என்கின்றார்கள். ஆகையால் மக்கள் மன வருத்தம் போகும்படி அரசு கோபுரத்தைக் கட்டிக்கொடுக்கும் என எதிர்பார்ப்போம். மத்திய அரசின் கவனத்திற்கு இதைக் கொண்டு வரவேண்டும். இம்மாதிரியான முக்கியக் கோயில்கள் அனைத்தும் மத்திய அரசின் நேரடி கவனத்தின் கீழ் கொண்டு வரவேண்டும். கோயில்கள் நம் நாட்டின் செல்வங்களோடு மட்டுமல்லாமல், நம் நாட்டின் கட்டிடக் கலைத் திறமைக்கு அழிக்க முடியாத சான்றும் கூட. இனியாவது மக்களும் விழித்துக்கொள்ளவேண்டும்.

இதுவே மேல்நாடுகள் என்றால் புராதனமான வரலாற்றுச் சின்னங்கள் எந்த மாதிரியாக இருந்தாலும் பாதுகாக்கப் பட்டு வருகின்றன. நாமோ புதியதாய் உருவாக்கவும் தெரியாமல், இருப்பதையும் பாதுகாக்கத் தெரியாமல் நமக்கென்ன என்று இருக்கிறோம். :((((((((

16 comments:

  1. நல்லாச்சொல்லுங்க கீதாம்மா, என்னன்னவோ படிச்சு மனசு நொந்துபோய் இருக்கேன். பழம்பெருமை வாய்ந்த சிற்பங்கள் அழிஞ்சுட்டுதுன்னா அப்புறம் அய்யோன்னா வருமா??.. அம்மான்னா வருமா?..

    ReplyDelete
  2. வாங்க சாரல், மனசுக்கு வேதனையே பழம்பெருமை வாய்ந்த கோபுரம் விழும்படி பண்ணிட்டாங்களேனு தான்! என்ன செய்ய முடியும்??

    இப்படித் தான் மீனாக்ஷி கோயில் பொற்றாமரையைச் சுற்றி இருந்த நாயக்கர் காலத்து ஓவியங்கள் அழிக்கப் பட்டன. அதுவும் தெரிந்தே அழித்தார்கள். இப்போ வேறே யாரையோ விட்டு வரையச் சொல்லி இருக்காங்க. என்ன இருந்தாலும் முந்நூறு வருடப் பழமை வாய்ந்த சித்திரங்களைப் போல் வருமா???

    ReplyDelete
  3. என்ன நினைவு சின்னமா இடிந்து விழுந்தது ?? ஆட்சியாளர்கள் கவலைப் பட . கோவில் கோபுரம்தானே ? அப்புறம் அவங்களுக்கு எதற்கு கவலை .. அவர்கள் பாட்டிற்கு தங்கள் வேலைகளை செய்வர் . இதனால் வேறு ஒரு குழுவிற்கு சில நாட்கள் நல்ல செய்தி கிடைத்து விட்டது. :(

    ReplyDelete
  4. //இப்போ இப்படிச் சொல்லும் இந்த ஜோதிடர்கள் கோபுரம் என்று, எந்தத் தேதியில், எத்தனை மணிக்கு இடிந்து விழப்போகிறது என்பதை முன் கூட்டியே சொல்லி எச்சரித்தார்களா? //

    எல்லாம் எரியற வீட்டுலே பிடுங்குனவரை லாபம்தான். இல்லே ஊர் ரெண்டு பட்டா...கூத்தாடிக்கு...
    சரிவருமோ?

    சரித்திர சம்பந்தமுள்ளதைப் போற்றிப் பாதுகாக்கத்தெரியாத மக்கள் இருக்கும் நாட்டுலே இப்படித்தான்...:(

    ReplyDelete
  5. எல்கே, பல நினைவுச்சின்னங்களுமே அழியும் நிலையில் தான் உள்ளன. என்ன செய்ய முடியும்? நமக்குப் புராதனங்களின் மீது பற்றே இல்லை. அது வந்தால் தான்! :(((((((( தரங்கம்பாடியிலே பார்த்திருக்கீங்களா? நாங்க இறங்கிப் போய்ப் பார்க்க முடியலைனாலும் போகும்போதும், வரும்போதும் பார்த்தது, அதுக்கே மனசு கலங்கும்!

    ReplyDelete
  6. வாங்க துளசி, வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாப்பதில் தென்னகம், குறிப்பாத் தமிழகம் ஆர்வம் காட்டுவதில்லைதான்! :((((

    ReplyDelete
  7. நல்லாச் சொல்லியிருக்கீங்க....ஆந்திர அரசு கோபுரத்தை திரும்பவும் கட்ட உத்தரவிட்டிருப்பதாகத் தெரிகிறது....ஆனால் 300-400 வருஷங்கள் முன்னால் கட்டியது மீண்டும் வராது. :(

    ReplyDelete
  8. ராம்ஜி யாஹூ, நன்றி

    ReplyDelete
  9. @திவா, நன்றி.

    @மெளலி, கோபுரம் கட்டட்டும், பார்ப்போம்! :(

    ReplyDelete
  10. //குறிப்பாத் தமிழகம் ஆர்வம் காட்டுவதில்லைதான்//

    என்னப் பாட்டி நீங்க? அத பாதுகாத்தா அவங்களுக்கு ஏதாவது வருமானம் உண்டா ??

    ReplyDelete
  11. செம்மொழி மாநாடு இருக்கும் போது இதை எல்லாம் கவனிக்க முடியுமா?? ..:(

    ReplyDelete
  12. @எல்கே தாத்தா, எத்தனை புராதனச் சின்னங்கள் கேட்பாரற்று இருக்கின்றன தெரியுமா?? :((((

    ReplyDelete
  13. @தக்குடு, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் காளஹஸ்தி கோயில் ஆந்திராவிலே இருக்கு, செம்மொழி மாநாடு தமிழ்நாட்டிலே கோவையிலே நடக்குது! பூகோளம் ஒழுங்காப் படிக்கக் கூடாதா? உங்க அண்ணனை விட மோசமா இருக்கியே! :P:P:P

    ReplyDelete
  14. புராதன சிற்பங்களை மீண்டும் கொண்டுவரமுடியுமா:(

    ReplyDelete