எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, January 14, 2011

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 30

வங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனைத்
திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப்பறை கொண்டவாற்றை யணி புதுவைப்
பைங்கமலத்தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத்தமிழ்மாலை முப்பதுந் தப்பாமே
இங்கிப்பரிசுரைப்பார் ஈரிரண்டுமால் வரைத்தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்றின்புறுவர் எம்பாவாய்!

மார்கழி மாதம் முடிந்துவிட்டது. நோன்பும் முடிந்து விட்டது. கண்ணனும் வந்துவிட்டான். அவனிடம் வேண்டியதைக் கேட்கவும் கேட்டாயிற்று. இனி பொங்கல் கொண்டாடவேண்டியதுதான். ஆகவே இத்தனை நாட்களும் ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொன்றாய்ப் பாடிய பாடலைத் தான் பாடியதையும், அதை தினம் தினம் பாடலாம் என்றும், குறைவில்லாச் செல்வம் பெறலாம் என்றும் கூடப் பாடியோர், பாடலைக்கேட்டோர், இனி பாட இருப்போர் என அனைவரையும் வாழ்த்துகிறாள் ஆண்டாள். இதை பலஸ்ருதி என்று சொல்லலாம்.

வங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனைத்
திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி= அமுதம் எடுக்க வேண்டிக் கடைந்த கடல் பாற்கடல். அதுதான் இங்கே வங்கக் கடல் எனக் குறிப்பிடப் பட்டுள்ளது. வங்கம் என்பது இங்கே கப்பல்களையும் குறிக்கும். நம் மனதைக் கடலாகக் கொண்டால் அதில் மிதக்கும் அனைத்து எண்ணங்களும் கப்பல்கள் எனலாம். அத்தகைய மனதை இறைஅருள் என்னும் மத்தால் கடைந்து பகவானின் கடாக்ஷம் என்னும் அமுதத்தைப் பெறலாம். இன்னொரு பொருளில் பாற்கடலைக் கடைந்த போது அதில் இருந்து மா என்னும் மஹாலக்ஷ்மி தோன்றினாள். அவளை அடைந்தவன் ஸ்ரீமந்நாராயணன். மாவை அடைந்தவன் மாதவன் என்ற பொருளிலும் இங்கே வங்கக் கடல் கடைந்த மாதவனை என்று கூறுகிறாள் ஆண்டாள். அடுத்து கேசி என்னும் அரக்கனை அழித்தான் குழந்தை கண்ணன். ஆகவே கேசவன் என்ற பெயரும் பெற்றான். அந்த மாதவனை, கேசவனை இந்த ஆயர்பாடியின் கோபிகைகளான நாம், நிலவைப் போன்ற திருமுகம் கொண்ட அழகான பெண்கள் என்று கூறுகிறாள் ஆண்டாள். அந்த அழகான சேயிழையார் அனைவரும் சேர்ந்து கண்ணன் இருக்கும் இடத்துக்கே சென்று,


அங்கப்பறை கொண்டவாற்றை யணி புதுவைப்
பைங்கமலத்தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன= அவனிடம் வேண்டிப் பெற்றது இந்தப் பரமபக்தியாகிய அமுத ஊற்று. அதன் மூலம் கண்ணன் மனதை அவர்கள் வென்றார்கள். அவனிடமிருந்தே தங்களுக்கு வேண்டியவற்றையும் கேட்டுப் பெற்றார்கள். இவற்றை எல்லாம் தன் அளப்பரிய பக்தியால் உணர்ந்து பாடியது யார் தெரியுமா?? இப்பூவுலகுக்கே ஒரு அழகான அணி போல் விளங்கும் புதுவை என்னும் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒருத்தர் இருக்கிறார். அவர் குளிர்ச்சியான மலர்மாலைகளைக் கண்ணனுக்குப் படைப்பார் தினமும், அந்த மாலைகளைப் பின்னர் கண்ணனின் பிரசாதமாகத் தானும் அணிந்து கொள்வார். ஆனால் அவர் மகளான கோதையோ தான் சூடிக் களைந்த பின்னரே கண்ணனுக்கு அணிவிப்பாள். கண்ணனுக்கும் அதுவே உவக்கும். அந்தப் பெரியவர் பெயர் பட்டர்பிரான் என அனைவரும் அழைக்கும் பெரியாழ்வார் ஆகும். அவருடைய திருமகள் தான் கோதை, என்னும் ஆண்டாள்.

சங்கத்தமிழ்மாலை முப்பதுந் தப்பாமே
இங்கிப்பரிசுரைப்பார் ஈரிரண்டுமால் வரைத்தோள்= அந்தக் கோதை சொன்ன தமிழ் மாலைகள் தாம் இந்தப்பாடல்கள். முப்பது பாடல்கள், இவை அனைத்தும் கோதை என்னும் ஆண்டாள் அடுத்து வருவோருக்கு அளித்த அருமையான பரிசு ஆகும். இந்தப் பரிசைத் தினம் தினம் தப்பாமல் சொல்லுபவர்களுக்குத் தன் நான்கு புஜங்களாலும்

செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்றின்புறுவர் எம்பாவாய்!= சிவந்த வரியோடிய செந்தாமரைக் கண்களோடு கூடிய அழகிய இன்முகத்தை உடைய லக்ஷ்மிதேவியை மார்பில் சூடிய திருமால் எடுத்து அணைத்துத் தன் நெஞ்சோடு அவர்களைச் சேர்த்துத் தன் இன்னருளைத் தருவான். தன் அடியார்கள் தன் திருவருளைப் பெற்று இன்புறும் வண்ணம் அவர்களுக்குத் தன் இன்னருளைப் பொழிவான். இத்துடன் திருப்பாவை முடிகிறது. இதைத் தினமும் சொல்லலாம். மார்கழி மாசம் எல்லாருமே திருப்பாவை பொருள் எழுதுவார்கள் அல்லது அதை ஒட்டி ஏதேனும் எழுதுவார்கள். அது வேண்டாம்னு இத்தனை வருஷமா எழுதாமல் வைத்திருந்தேன். இப்போ நாராயணீயம் தினம் அரை மணி படிக்கிறதாலே அதைலிருந்தும் சில பாடல்களைச் சொல்லலாம் என்று நினைத்தபோது இந்தத் திருப்பாவையையும் போட முடிவு செய்து எழுதினேன்.


நாராயணீயத்தில் பட்டத்திரி வேண்டுவதாவது
"அஜ்ஞாத்வா தே மஹத்த்வம் யதிஹ நிகதிதம் விஸ்வநாத க்ஷமேதா:
ஸ்தோத்ரஞ் சைதத் ஸஹஸ்ரோத்தர மதிகதரம் த்வத்ப்ரஸாதாய பூயாத்
த்வேதா நாராயணீயம் ஸ்ருதிஷூ ச ஜநுஷா ஸ்துத்யதா வர்ணநேந
ஸ்ப்பீதம் லீலாவதாரை ரிதமிஹ குருதா மாயுராரோக்ய ஸெளக்க்யம்

ஏ பரமாத்மா, விஸ்வத்துக்கெல்லாம் அதிபதியே! உனது சரித்திரத்தையோ பிரபாவங்களையோ முழுதும் நான் அறிந்தேன் இல்லை. ஆகவே இங்கு நான் சொன்னதில் தவறு இருந்தால் பொறுத்து அருளவும். என் வர்ணிப்பு சரியாய் இல்லை எனில் மன்னித்து அருளவும். ஆயிரம் ஸ்லோகங்களுக்கும் மேல் உள்ள இந்த ஸ்தோத்திரத்துக்கு உமது அனுகிரஹம் உதவட்டும். வேதப்ரமாணமான லீலா அவதாரங்களின் ஸ்துதிகளே இந்த ஸ்தோத்ரத்தை வளர்த்து வந்தது. நாராயணனைப் பற்றியதாலும், நாராயணனாகிய நான் எழுதியதாலும் இது நாராயணீயம் என்றே அழைக்கப்படும். இதைப் படிக்கும் உன் பக்தர்களுக்கும், இந்த அகில உலகில் உள்ள பக்தர்களுக்கும் நீண்ட ஆயுளையும், திடகாத்திரமான ஆரோக்யத்துடன் கூடிய தேகத்தையும், மற்றும் எல்லாவிதமான ஐஸ்வரியங்களையும் தந்து அருளட்டும்.


நாராயணீயம் ஸ்லோகம் சம்ஸ்கிருதத்தில் போட நினைச்சுப் போட முடியவில்லை. சரியான ஃபாண்ட் கிடைக்கவில்லை. திடீர்னு ஆரம்பிச்சதாலே சில தளங்களில் சென்று தரவிறக்க முடியவில்லை. நான் எழுதி இருப்பதில் சில தவறுகள் இருக்கலாம். அவை என்னாலேயே ஏற்பட்டவை. மேலும் சொல்லி இருக்கும் பொருளும் பொதுவான பொருளையே எடுத்துக்கொண்டேன். மூலப் பொருளைச் சிதைக்காமல் கூற முயன்றிருக்கிறேன். அவ்வளவே.

திருப்பாவை உரைக்குத் துணை செய்தவர்கள்

உபய வேதாந்தி வேளுக்குடி திரு கிருஷ்ணன் அவர்கள், பொதிகைத் தொலைக்காட்சி உரைகள்.
உபய வேதாந்தி திரு அநந்தபத்மநாபாச்சாரியார் அவர்கள், ஜெயா தொலைக்காட்சி உரைகள்.

1 comment:

  1. இந்த முப்பது நாளும் பக்தி ரசத்தில் பரவசமாணோம்.......
    பதிவுகளுக்கு நன்றி கீதாம்மா.
    ஆண்டாள் திருப்பாவையையும் பட்டரின் உரையையும் இணைத்து விளக்கங்கள் சொன்ன விதம்
    மிக நன்றாக இருந்தது .,தொடரட்டும் உங்களின் அருட் பணி!

    ReplyDelete