எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, March 25, 2013

கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா?

கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா?

நாம் கையோடு கை கோர்த்துக் கொள்ளலமா?



பெண் பார்த்தல் என்ற சடங்கு அந்த நாட்களில் இல்லை எனினும், அரசர்கள், பெருந்தனக்காரர்கள் சுயம்வரம் போன்ற ஒன்றை வைத்தும் பெண்ணுக்கேற்ற வரனைத் தேர்ந்தெடுத்தார்கள் என்பதையும் பார்த்தோம்.  இப்போப் பெண் பார்த்தாச்சு!  பஜ்ஜி, சொஜ்ஜி சாப்பிட்டாச்சு! பெண்ணின் தலைமயிரைப் பிடித்து இழுத்தாயிற்று.  உண்மையான தலைமயிர் தான் என்றும் உறுதியாகத் தெரிந்தாச்சு. பேசவும் பேசுகிறாள்.  கல்யாணமாகி வந்ததும் பேச்சை நிறுத்துவாளா என்பது வேறு விஷயம்.  இப்போதைக்குப் பெண் ஊமை இல்லை. நடை, உடை, பாவனை எல்லாம் சரி.  பெண்ணைப் பிடித்துவிட்டது.  அடுத்து என்ன?  நிச்சயம் செய்ய வேண்டும்.  இப்போதெல்லாம் நிச்சயதார்த்தம் என்னும் சடங்கே ஒரு சின்னக் கல்யாணம் போல் நடக்கிறது.  ஆனால் அந்த நாட்களில் பென்ணைப் பெற்றவர்களும், பிள்ளையைப் பெற்றவர்களும் ஊர்ப் பெரியவர்களில் சிலர் முன்னே அவர்கள் சாட்சியாக வெற்றிலை, பாக்குத் தட்டை மாற்றிக் கொள்வார்களாம். இதற்குப் பாக்கு, வெற்றிலை மாத்திக்கறதுனு பெயர்.  பெரும்பாலும் தஞ்சை ஜில்லாவில் இன்றளவும் பாக்கு, வெற்றிலை மாற்றினதாய்த் தான் சொல்வாங்க.  என் கல்யாணமும் என் அப்பாவும், அவரின் நண்பர் ஒருத்தர் மட்டுமே சாட்சியாக இருக்கப் பிள்ளை வீட்டுக்காரங்களோடு பாக்கு வெற்றிலை மாற்றிக்கொண்டே முடிவு செய்யப் பட்டது என்பதை ஏற்கெனவே எழுதி இருக்கேன். :))))

கல்யாணம் நிச்சயம் ஆனதும், கல்யாணத்துக்கு முதல்நாள் காலை விரதம் முடிந்ததும் அல்லது மாலை நல்லவேளையில் நடப்பதே உண்மையில் நிச்சயதார்த்தம் ஆகும்.  இதைப் பெரிய நிச்சயதார்த்தம் என்கின்றனர்.  கல்யாணத்துக்கு முன்னாடி பாக்கு, வெற்றிலை மாற்றிக் கொள்வதைச் சின்ன நிச்சியதார்த்தம் என்கின்றனர்.  இது இப்போதெல்லாம் குறைந்த பக்ஷமாகப் பெண்ணின், பிள்ளையின் செளகரியத்தை உத்தேசித்து ஒரு வருடம் முன்னேயே நிச்சயம் செய்து பின்னர் கல்யாணம் செய்கிற மாதிரி இருக்கிறது.  ஒரு சில கல்யாணங்களே நிச்சயம் முடிந்தவுடனேயோ அல்லது மூன்று மாதத்துக்குள்ளேயோ நடக்கின்றன.  திருமணத்தின் ஆரம்பமே நிச்சயதார்த்தம் தான் எப்போவுமே என்பதைத் தெரிந்து கொள்கிறோம்.  இதைப் பெண்ணின் தகப்பனார் அளிக்கும் வாக்குறுதி என்னலாம்.

தாம்பூலம் நம் வாழ்க்கையில் மிக உயர்ந்த ஸ்தானம் வகிக்கிறது.  அந்தத் தாம்பூலத்தில் பொருளையோ, பண்டமோ வைக்கிறோமோ இல்லையோ, வெறும் வெற்றிலை, பாக்கு, பழம் என்றாலும் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுகிறது.  ஒரு வெத்திலை, பாக்குக்கு வழியில்லை;  கல்யாணம் பண்ணினாங்களாம்னு சொல்றவங்களைப் பார்த்திருக்கலாம்.  வெற்றிலையின் பசுமை நிறம், சுண்ணாம்பின் தூய வெண்மையோடு, பாக்கின் பழுப்பு நிறம் சேர்ந்து சிவப்பாக மாறுகிறது.  பசுமையான வெற்றிலையில் வைக்கப் படும் கொட்டைப்பாக்கு, ஆவுடையாரையும் பாணத்தையும் குறிப்பதாகச் சொல்கின்றனர்.  உமாமகேசுவரருக்கு ப்ரீதி என வெற்றிலையையும், பாக்கையும் கூறுகின்றனர். திருமணத்தை உறுதி செய்ய மட்டும் தாம்பூலம் பயன்படுவதில்லை.  திருமணம் ஆனதும் முகூர்த்தத் தாம்பூலம் மிக முக்கியம்.  அதோடு பலத்த விருந்துச் சாப்பாடு ஜீரணம் ஆகவும் தாம்பூலம் தரிக்கின்றோம்.  தெய்வ வழிபாட்டிலும் வெற்றிலை, பாக்கு இல்லாமல் செய்ய மாட்டோம். சுமங்கலிகளுக்கு நாள், கிழமைகளிலும் சும்மா வீட்டுக்கு வந்துட்டுப் போனாலுமே தாம்பூலம் கொடுப்போம்.

சம்பந்திகளுக்கு பதில் மரியாதையில் தாம்பூலம் இடம் பெறு,ம்.  பெண்ணின் மாமன்மார், அத்தைமார், பையரின் மாமன்மார், அத்தைமார் போன்றோருக்கும் தாம்பூலம் விட்டுப்போகாமல் நினைவாய்க் கொடுக்க வேண்டும். அவ்வளவு ஏன்?  திருமணச் சடங்குகளிலேயே பெண் மணமகனுக்குத் தாம்பூலம் மடித்துக் கொடுப்பாள்.  பெண்ணின் சகோதரன் பக்குவமாகச் சுண்ணாம்பு, பாக்கு வைத்த தாம்பூலத்தை மடித்துத் தர அதைப் பெண் வாங்கித் தன் கணவனுக்குக் கொடுப்பாள். இதைப் பின்னால் பார்க்கலாம்.  ஆனால் இப்படியாகத் தாம்பூலம் என்பது நம் வாழ்க்கையில் இன்றளவும் மிக முக்கிய இடத்தைப் பிடித்துக் கொண்டிருக்கிறது.  பெண்ணின் பெற்றோரும், பையரின் பெற்றோரும் மிக மிக முக்கியமான உறவினர், ஊர் மக்கள் முன்னிலையில் இன்னாருடைய பெண்ணை, இன்னாருடைய பையருக்குக் கன்யாதானம் செய்து கொடுப்பதாக உறுதிமொழி கொடுத்து எழுதிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துத் தாம்பூலத்தட்டை மாற்றிக் கொள்வதே நிச்சயதார்த்தம்.  பல சினிமாக்களிலும் பார்த்தாச்சு இல்லையா? :))))

வெற்றிலையின் நுனியில் மஹாலக்ஷ்மி, நடுவில் சரஸ்வதி என்னும் வாக்தேவி, காம்பில் ஜ்யேஷ்டா தேவி, இடப்பக்கம் மஹாசக்தி, வலப்பக்கம் பூமி தேவி, உள்ளே மஹாவிஷ்ணு,, வெளியே சந்திரன், ஓரங்களில் ஈசன், பிரம்மா, மேலே இந்திரன், ஆதவன், எல்லாப் பக்கங்களிலும் மன்மதன்  என தேவதைகளின் இருப்பிடமாகக் கூறுகின்றனர்.  இதில் காம்பான ஜ்யேஷ்டாதேவியைக் கிள்ளி எறிந்துவிடுகிறோம். அதோடு தொடர்புடைய நரம்புகளையும் அகற்றிவிட்டே வெற்றிலை தரிக்கிறோம்.  வெற்றிலைக்கு மருத்துவ குணமும் உண்டு.  சின்னக் குழந்தை வயிற்றுப் பொருமலில் அழுது கொண்டே இருந்தால், வெற்றிலை ஒன்றோடு, ஒரு பல் பூண்டு, ஒரு சிட்டிகை உப்பு, பெருங்காயம் வைத்து அம்மியில் அரைத்துச் சாறு எடுத்து வடிகட்டிக் குடிக்கக் கொடுத்தால் சரியாகும்.  இது என் அனுபவத்தில் கண்டிருக்கிறேன்.  வெற்றிலையில் விளக்கெண்ணெய் தடவி விளக்கில் காட்டி வாட்டிப் பொறுக்கும் பதத்தில் தொப்புளில் வைத்தாலும் வயிற்று வலி சரியாகும். வெற்றிலையின் மகத்துவம் இன்னும் நிறைய என்றாலும் நாம் பார்க்க வேண்டியது நிச்சயதார்த்தம் இல்லையோ?

சமீப காலங்களில் தான் இந்த நிச்சயதார்த்தத்தில் தட்டுத் தட்டாக சீர் வரிசை வைக்கும் வழக்கம் ஏற்பட்டிருக்கிறது.   நிச்சயத்தின் போதே பிள்ளைக்கு, பெண்ணுக்கு நகைகள், ஆபரணங்கள் போடுவதும் வழக்கமாகி இருக்கிறது. இதை வைத்துப் பெண்ணின், பிள்ளையின் அந்தஸ்தையும் நிர்ணயம் செய்து கொள்கின்றனர்.  முன் காலத்தில் எத்தனை பெரிய பணக்காரர்களாக இருந்தாலும் வெறும், வெற்றிலை, பாக்கு, பழம் உள்ள தட்டு மட்டுமே! :)))) நிச்சயதார்த்தம் முடிச்சாச்சு.  அடுத்துக் கல்யாண வேலை நிறைய பாக்கி இருக்கே!  சீர் வரிசைகள் பத்திச் சொல்ல  வேணுமா?  கல்யாணம் பத்தி விளக்கம் கொடுத்தால் மட்டும் போதுமா?  கல்யாணம் பத்தி மட்டும் போதும்னு நினைக்கிறேன். :))))

படம்: சொந்தமோ சொந்தம்! :))))))

28 comments:

  1. //படம்: சொந்தமோ சொந்தம்! :))))))//

    சொந்தப் படத்தை வேறே நடுவிலே செருகிட்டீங்களா.. :))

    ReplyDelete
  2. மூணு மாசத்துக்கு முன்னாடியே நிச்சயதார்த்தம்; மணை போட்டு பக்கத்து பக்கத்லே வேறே உட்காரல்; சகோதரனிடமிருந்து வாங்கி தாம்பூலப் பரிமாற்றம், தாத்தா-பாட்டி, மாமா-மாமி, சித்தப்பா-சித்தி, பெரிம்மா- பெரிப்பான்னு அத்தனை பேருக்கும் நமஸ்காரம் செஞ்சு உறவுமுறைகளை பெண், பின்னாடி வர்ற போற புருஷனுக்கு அறிமுகப்படுத்துவது--
    இவ்வளவு இழைஞ்சு இழைஞ்சு செஞ்சிட்டு, கல்யாணத்திற்கு முதல்
    நாள் ரிசப்ஷன் மட்டும்... 'ஓ, நோ!'ன்னா... :)))

    ReplyDelete
  3. வாங்க ஜீவி சார், ஆமாம், போன வருஷம் என் அண்ணா பையரோட நிச்சியதார்த்தப் படம் அது! :)))))

    ReplyDelete
  4. ஜீவி சார், நான் ஒண்ணும் முன்னால் நிச்சயம் பண்ணிட்டு மணைபோட்டு உட்காருவதை ஆதரிச்சு எங்கேயும் எழுதலை. சொல்லப் போனால் எங்க பொண்ணு நிச்சயதார்த்தத்திலே தனித்தனியாக உட்கார்ந்தார்கள். தனித்தனியாக நமஸ்காரமும் செய்தார்கள். ஃபோட்டோ எடுக்கக் கூடாதுனு எங்க பொண்ணோட ஆர்டர்! :)))))

    திருமணம் ஆன பின்னால் என் கணவர்னு அறிமுகம் செய்து வைக்கிறதுக்கும், திருமணத்துக்கு முதல்நாள் நாளைக்குக் கல்யாணம் செய்துக்கப் போறவர்னு சொல்றதுக்கும் உள்ள வித்தியாசம் தெரிஞ்சிருக்கும்.

    மாம்பலம் பாணிக்ரஹா திருமண மண்டபத்தில் ஒரு பெண், முதல்நாள் ரிசப்ஷன் எல்லாம் முடிஞ்சப்புறமா கல்யாணத்தன்று அதிகாலையில் போலீசுக்குப் போய் மாப்பிள்ளை வீட்டார் மேல் புகார்கள் கொடுத்துத் திருமணத்தை நிறுத்தியது குறித்து அறிந்திருப்பீர்கள் தானே? :))))

    எங்க பையர் நிச்சயதார்த்தம் அவர் இல்லாமலே நடந்தது. நம்பினால் நம்புங்கள். அவர் கொடுத்த வாக்குறுதியின் பேரில் தான் நாங்க நிச்சயம் பண்ணினோம். கல்யாணத்துக்குத் தான் லீவு கிடைச்சு அவரால் வர முடிஞ்சது! :))))))

    மேலே சொன்ன அண்ணா பையர் கல்யாணத்திலும் ரிசப்ஷன் கல்யாணத்தன்று தான். எங்க குடும்பத்திலே யாருக்கும் முதல்நாள் ரிசப்ஷன் பிடிக்கிறதில்லை. :)))))

    ReplyDelete
  5. கல்யாணத்துக்கு முதல் நாள் ரிசபஷனா?

    ReplyDelete
  6. நான் உங்களைன்னு சொல்லலே. பொதுவா நடக்கறதைச் சொன்னேன்.
    கல்யாணத்திற்கு முதல் நாள் அப்பொழுதெல்லாம் மாப்பிள்ளை அழைப்பு இருந்தது. பொதுவாக மாப்பிள்ளைகளெல்லாம் ஊர் பையனாகவே இருந்ததால் 'பார்த்துங்கோங்கோ. இந்தப் பையனுக்கு நாளைக்கு கல்யாணம்' என்று ஊராருக்குத் தெரிவிக்கவே மாப்பிள்ளை அழைப்பு. சின்ன ஊர்களிலெல்லாம் பக்கத்திலிருக்கும் கோயிலில் முதல் நாள் நிச்சயதார்த்தம் வைத்துக் கொள்கிறார்கள். இப்பொழுதெல்லாம் கல்யாண சத்திரத்திலேயே சின்னதா ஒரு கோயில் வந்தது விட்டது. சாமி கும்பிட்டு விட்டு நல்ல காரியங்களைத் தொடங்குவதற்கு வசதியாக.

    மூன்று மாதங்களுக்கு முன்னாலேயே நடக்கும் நிச்சயதார்த்தம் என்பது ஒரு கமிட்மெண்ட். அவ்வளவு தான்.
    முற்றிலும் லெளகீக விஷயம். நடக்கப் போகிற கல்யாணத்தின் மாதிரி லக்ன பத்திரிகை படித்து இரண்டு சாராரும் கையெழுத்து இட்டு, பின்னால் அச்சடிக்கப் போகும் கல்யாணப் பத்திரிகைக்கு முன்மாதிரியான ஒரு ஒப்பந்த ஏற்பாடு. கலந்து கொண்ட நெருங்கிய சொந்தங்களோடு ஒரு விருந்து கொடுத்து விட்டால் சரி.
    பின்னாடி நடக்கப் போகிற கல்யாண ஏற்பாடுகளுக்கு ஒரு பிள்ளையார் சுழி இடல்.

    ReplyDelete
  7. அஸ்திவாரம் போட்டாச்சி... வீடு கட்டுவதை காண தொடருகிறேன்...

    ReplyDelete
  8. நாங்களும் துருமணம் உறுதி பண்னுவது பெண் வீட்டில் வைத்து நடக்கும் எங்கள் வீடுகளில் முன்பு மாப்பிள்ளை வரமாட்டார். இப்போது மாப்பிள்ளை வருகிறார்.

    இந்த ஊரை சேர்ந்த இன்னார் பேரன்,இன்னார் மகன், இவருக்கும், இன்னார் பேத்தி, இன்ன ஊரை இன்னார் மகள் என்று எழுதி இருவீட்டராரும் கைஎழுத்து போட்டு முகூர்த்தபட்டோலை வாசித்தல் என்று அதை வாசித்து வெற்றிலை பாக்கு தட்டை மாற்றிக் கொள்வார்கள். ஒரு தட்டில் மூன்று தேங்காய், வெற்றிலை பாக்கு மஞ்சள் மூன்று சீப்பு வாழைப்பழம், கல்கண்டு, குங்கும செப்பு (மரசெப்பு) இருக்கும்.
    இப்போது தட்டுதட்டாய் பழம், புடவை, நகை, வெள்ளி குங்கும செப்பு என்று மாறி விட்டது. மாப்பிள்ளை, பெண் சேர்ந்து போட்டோ எடுத்துக் கொள்ள மாட்டார்கள்

    முன்பு கலயாணத்திற்கு முன்பு காலை செய்யும் நிச்சியதாம்பூலத்தில் தான் புடவை, நகை அணிவிக்க படும்.
    இப்போது உறுதி செய்யும் போதும் புட்வை, நிச்சியதாம்பூலத்திற்கும் புடவை என்று இரட்டை செலவுகள் ஆகி விட்டது.

    ReplyDelete
  9. ஆமாம், அப்பாதுரை, இப்போது கிட்டத்தட்டப்பத்துப் பதினைந்து வருடங்களாக, மாப்பிள்ளை அழைப்பு என்பது சுத்தமாய் நிறுத்தப்பட்டதும், ரிசப்ஷனைக் கல்யாணத்துக்கு முதல் நாள் வைத்துக்கொண்டு அன்னிக்கு முடிச்சுடறாங்க. முக்கியமல்லா உறவினர்கள், நண்பர்கள், அலுவலகத்தில் கூட வேலை செய்பவர்கள்னு அன்னிக்கு மட்டும் ஆயிரம் பேருக்கும் மேல் வருவாங்க. முழி பிதுங்கும். இந்த அழகிலே பெண்ணும், பிள்ளையும் நிச்சயதார்த்தம் முடிஞ்சு ரிசப்ஷன் மேடைக்கு வரச்சேயே ஏழரை ஆகிடும். வரிசையில் நின்னு பரிசைக் கொடுத்து ஃபோட்டோ எடுத்துக் கொண்டு, ஸ்டில்லுக்கும் அசையாமல் நின்னு!

    போதும்டா சாமினு ஆகிடும். நாங்க எந்தக் கல்யாணம் ஆனாலும் முஹூர்த்தத்துக்குத் தான் போவோம். சீக்கிரம் முஹூர்த்தம் எனில் காலை ஆகாரத்தோட நடையைக் கட்டிடுவோம். தாமதமான முஹூர்த்தம் எனில் வீட்டில் எதானும் சாப்பிட்டுவிட்டு முஹூர்த்தம் பார்த்துவிட்டுச் சாப்பிட்டு வருவோம். இந்த முதல்நாள் ரிசப்ஷன் கூத்திலே மெல்லிசை வேறே சேர்ந்துடுச்சுன்னா அதை விடவும் நரகம் வேறே இல்லை.

    சில வீட்டுக் கல்யாணங்களில் சாப்பிடப் போனால் இடம் கிடைக்காமல் பின்னாலே நின்று கொண்டு இடம் பிடிக்கணும். இல்லைனா துண்டு போட்டு இடம் பிடிக்கணும். இரண்டு கல்யாணங்களில் எங்களுக்கு இருவித அனுபவமும் ஏற்பட்டது. அதுக்கப்புறமா முதல்நாள் ரிசப்ஷனா, போகவே மாட்டோம். :)))))

    ReplyDelete
  10. மாப்பிள்ளை அழைப்புக்கு அர்த்தம் அதுமட்டும் இல்லைனு நினைக்கிறேன் ஜீவி சார். :))))

    ReplyDelete
  11. வாங்க டிடி, நல்ல உறுதியான வீடாய்க் கட்டணும். :))))

    ReplyDelete
  12. வாங்க கோமதி அரசு, எங்களிலும் பெண் வீட்டில் தவிர்க்க முடியாமல் நிச்சயம் செய்வது உண்டு. எங்க பொண்ணோட நிச்சயதார்த்தம் எங்க வீட்டிலே தான் நடந்தது. அவங்க பாம்பேயிலிருந்து வந்திருந்ததால், திரும்ப பாம்பே போய் நிச்சயம் முடித்துத் திரும்பி சத்திரம் பார்ப்பதுனு தாமதம் ஆகும். அதோட அவங்க கல்யாணம் சீக்கிரம் வைக்கணும்னு வேறே வற்புறுத்தல். அதனால் அவங்க சொன்னபடியே எங்க வீட்டிலேயே நிச்சயம் பண்ணினோம்.

    பெண் வீட்டில் நடந்தால் அது நிச்சயதார்த்தம் என்றும் பிள்ளை வீட்டில் நடந்தால் லக்னப் பத்திரிகை வாசித்தல் என்றும் சொல்வார்கள். வைணவர்களில் பெண் வீடு, பிள்ளை வீடு இரு வீட்டாரும் கலந்து பேசி எங்கே நிச்சயம் பண்ணுவது என முடிவு பண்ணுவார்கள். பெரும்பாலும் பெண் வீட்டிலே நடக்கும். ஒரு சிலர் பிள்ளை வீட்டிலேயே செய்கின்றனர்.

    ReplyDelete

  13. /அண்ணா பையர் நிச்சயதார்த்தம்/
    / அண்ணா பையர் கல்யாண்ம்/ பையன் மரியாதை நிமித்தம் பையரா.?
    “ பெண்கள் முன்னேற்றம்- கதையல்ல நிஜம் “ என்று ஒரு பதிவு மேமாதம் 2011-ம் வருடம் எழுதி இருந்தேன். சுட்டி இதோ. அண்மை காலங்களில் சில திருமணங்கள் போகும் வழி கண்ட ஆதங்கம் பகிர்ந்தது.
    gmbat1649.blogspot.in/2011/05/blog-post_17.html

    ReplyDelete
  14. ஒரு இலையில் இத்தனை பேரா?!!

    தேதி மாறி பப்ளிஷ் ஆகி விட்டதா? மதுரையில் இருக்கிறேன். நெட் ஆக்சஸ் செய்வதில் சிரமங்கள். ஆனாலும் படிச்சுட்டேனே.....! :)


    ReplyDelete
  15. பின்னூட்டங்கள் முழுதும் படிக்க நேரமில்லை. கிளம்ப வேண்டும்! அப்பாதுரை ஆச்சரியப்பட்டிருக்கிறார். 20 வருடங்களுக்கு முன்னாலேயே ரிசப்ஷன் கலாச்சாரம் தொடங்கி விட்டதே!

    ReplyDelete
  16. ஹாஹா, ஸ்ரீராம், அது வெற்றிலையாக்கும், வெறும் இலை இல்லை. :)))))

    ReplyDelete
  17. என்ன இருபது வருஷம் முன்னாடியே ரிசப்ஷன் வந்துடுத்தா?? எனக்குத் தெரிஞ்சு தொண்ணூறுகளில் கூட இல்லை போலிருக்கே! ம்ம்ம்ம்ம்??????

    ReplyDelete
  18. @ஸ்ரீராம், மதுரையில் இருக்கீங்களா? அட??? மின்சாரமெல்லாம் எப்படி இருக்கு? :))))

    ReplyDelete
  19. மதுரையில் கரண்ட் அருமையாக இருக்கிறது. காலை ஆறு மணிக்கெலாம் எடுத்து விட்டார்கள். ஒன்பதரைக்கு மீண்டு(ம்) வந்த கரண்ட் மறுபடி பனிரெண்டு மணிக்குத்தான் போனது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். மறுபடி மூன்றே முக்காலுக்கெல்லாம் வந்து விட்டது. அப்புறம் மறுபடி மாலை 6 மணிக்குதான் போகும் என்று சொன்னார்கள். நான் கிளம்பி விட்டேன்.

    ReplyDelete
  20. என் பிள்ளையின் நிச்சயதார்த்தம் அவன் இல்லாமலேயே, அவன் சம்மதத்துடனே நடந்தது. பெண்ணை உட்கார வைத்து பத்திரிகை எழுதினோம். சாயங்கால டிபன்.
    ரிசப்ஷன் கல்யாணத்தன்றுதான்!
    என் அண்ணா பிள்ளையின் பெண்ணின் இருவரின் நிச்சயதார்த்தமும் பெண் பிள்ளை இருவரும் இல்லாமல் நடந்தது.

    பெண் பிள்ளை இருவரும் வெளிநாட்டில் இருந்ததால் இரண்டு பக்கப் பெரியவர்களும் கூடி பத்திரிகை எழுதினோம்.

    ReplyDelete
  21. வெற்றிலையில் இத்தனை விஷயங்களா? ..... நல்ல தகவல்.

    தொடரட்டும் கல்யாணப் பகிர்வுகள். தில்லி சென்ற பிறகு விட்டுப்போன பதிவுகளையும் ஒவ்வொன்றாய் படிக்கிறேன்.

    ReplyDelete
  22. நேர நிச்சயதார்த்தம் பார்க்கிறமாதிரி ஆச்சு. எங்க பெரிய பிள்ளை கூட நிச்சயத்துக்கு வர முடியவில்லை. ஒரே மாதத்தில் திருமணம் என்பதால் வீவு இல்லை.

    எங்களுக்கும் பாக்குவெத்திலை மாற்றல் தான்.
    ரிசப்ஷன் எல்லாம் கல்யாணத்துக்கு முன்னாள் நடப்பது 1982லியே நடந்திருக்கு.எங்க நாத்தனார் பெண் கல்யாணத்தில்.

    ReplyDelete
  23. ஹாஹா, ஸ்ரீராம், இங்கேயும் மின்சாரம் சம்சாரத்தை விட மோசமாய்ப் படுத்தல்! :)))))

    ReplyDelete
  24. //அண்ணா பையர் நிச்சயதார்த்தம்/
    / அண்ணா பையர் கல்யாண்ம்/ பையன் மரியாதை நிமித்தம் பையரா.?//

    ஜிஎம்பி சார், நாளைக்கு மரியாதை இல்லாமல் அத்தை பேசினானு ஒரு பேச்சு வரக் கூடாது பாருங்க! :)))) எங்க பையரையும், பையர்னு தான் சொல்வேன். :))))

    ReplyDelete
  25. //என் பிள்ளையின் நிச்சயதார்த்தம் அவன் இல்லாமலேயே, அவன் சம்மதத்துடனே நடந்தது. பெண்ணை உட்கார வைத்து பத்திரிகை எழுதினோம். சாயங்கால டிபன்.
    ரிசப்ஷன் கல்யாணத்தன்றுதான்!//

    வாங்க ரஞ்சனி, அநேகமா உங்களுக்கும்,எனக்கும் பல விஷயங்களில் பொருத்தம் இருக்கி
    றாப்போல் இதிலும், இதே தான் எங்க பையர் நிச்சயதார்த்தத்திலும். :)))) ரிசப்ஷன் பெண், பையர் இரண்டு பேர் கல்யாணத்திலும் கல்யாணத்தன்று மாலை தான். :))))

    ReplyDelete
  26. வாங்க வெங்கட், டில்லி போனதும் நிதானமாப் படிங்க. :)))

    ReplyDelete
  27. வாங்க வல்லி, 82 ஆம் வருஷமே வந்துடுத்தா? அப்போ சென்னை வாசம்தான். ஆனாலும் இம்மாதிரிப் பார்த்தது 95 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தான். :)))))

    ReplyDelete
  28. கெட்டிமேளம்... தொடரட்டும்.

    நம்ஊரில் மாப்பிள்ளை வீட்டாரும் பெண்வீட்டாரும் ஒருவர் வீட்டுக்கு ஒருவர் கொழுக்கட்டை,பலகாரத் தட்டுகளுடன் செல்வார்கள் இதையே நிச்சயதார்த்தமாக கொள்வார்கள். தட்டு மாற்றுவது எனச் சொல்வார்கள். பெண்ணு மாப்பிள்ளை வருவதில்லை. அப்புறம் திருமணநாள் குறிப்பார்கள்.

    ரிசப்சன் வைப்பதாக இருந்தால் திருமணத்தின் பின்தான் நடக்கும்.

    ReplyDelete