எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, August 11, 2014

படிக்கலைனாலோ, கருத்துச் சொல்லலைனாலோ விட்டுடுவோமா என்ன?

பால்கரில் செளராஷ்ட்ரா மெயில் நின்று கொண்டு இருந்தது. நாங்களும் வண்டியில் உட்கார்ந்து கொண்டு எப்போது கிளம்பும்னு யோசித்துக் கொண்டிருந்தோம். பக்கத்துப் ப்ளாட்ஃபார்மில் ஒரு வண்டி பால்கரில் இருந்து தாதருக்குக் கிளம்பிக் கொண்டு இருந்தது. எங்கள் வண்டியில் இருந்து சிலர் அதில் ஏறினார்கள். என்னடா இதுன்னு யோசிக்கும் போதே வண்டி சட்டுனு கிளம்பிவிட்டது. சரி, ஏதோ அவசரமாப் போவாங்கனு நினைச்சோம். ஒரு 1/2 மணி நேரத்துக்கு எல்லாம் விரார் என்னும் ஸ்டேஷனில் இருந்து ஒரு வண்டி வந்தது. இது போரிவிலிக்கு முன்னாலே அதாவது பால்கருக்கும், போரிவிலிக்கும் நடுவில் வரும். அந்த வண்டியில் இருந்து வந்தவர்கள் எங்களைப் பார்த்து, அதாவது எங்களை மட்டும் இல்லை பொதுவாக எங்கள் வண்டியில் இருந்தவர்களைப் பார்த்து நீங்க இன்னிக்குப் போக முடியாது. இங்கே இருந்து போன வண்டியும் பாதி வழியிலே நிக்குது. என்று சொன்னார்கள். எங்களுக்குத் தூக்கி வாரிப் போட்டது. கீழே இறங்கி யாரையாவது கேட்கலாம்னு யோசிக்கும்போது ஒலிபெருக்கியில் அறிவிப்புச் செய்தார்கள். பலத்த மழை காரணமாக வண்டி இன்று பம்பாய் செல்லாது எனவும், அங்கிருந்து வண்டி வர அறிவிப்பு வந்ததும்தான் கிளம்பும் எனவும் சொன்னார்கள். "இப்போ என்ன செய்யறது?" எங்களுக்கு அதிர்ச்சி. இதுக்கு முன்னாலே எல்லாம் இம்மாதிரி நடந்திருக்கு. அதுவும் முதல்முறை என் பெண் பிறந்து மதுரையில் இருந்து சென்னை வரும்போது சனிக்கிழமை காலை கிளம்பி ஞாயிறு அன்று இரவு   சென்னை வந்து சேர்ந்தோம். அப்போவும் இதே மழை, வெள்ளம்தான். அப்போ அப்பாவும், அம்மாவும் கூட இருந்தார்கள். அதனால் பயம் எல்லாம் இல்லை.

இதே மாதிரி ஒரு 2 வருஷத்துக்கு முன்னால் நசிராபாத்தில் இருந்து செகந்திராபாத் "காச்சிகுடா எக்ஸ்ப்ரஸ்ஸில்" போகும்போது (மீனாட்சி எக்ஸ்ப்ரஸ்னு பேர் மாறிடுச்சு) வண்டி தடம் புரண்டு விட்டது. அதே வண்டி இஞ்சின் எரிந்து போனது. ஆனால் அப்போ எல்லாம் என் கணவர் எங்களுடன் இருந்தார். ஆகவே முடிவு எடுக்கும் பொறுப்பு அவரிடம் இருந்தது. நாங்கள் உண்மையில் அந்தப் பிரயாணங்களை ரொம்பவே ரசித்தோம். ரெயில் நடுக்காட்டில் தடம் புரண்டு நின்றதும் பக்கத்து ஸ்டேஷன்களுக்கு எப்படித் தகவல் கொடுக்கிறார்கள் என்பதில் இருந்து மீட்பு வண்டி வந்து எப்படி மீட்கிறது என்பது வரை பார்த்தோம். அங்கேயே கூட வந்தவர்களில் சிலர் கல்லை அடுக்கி அடுப்பு மூட்டித் தேநீர் தயார் செய்து (பக்கத்துக் கிராமத்தில் இருந்து பால் வாங்கி வந்தார்கள்) எல்லாருக்கும் கொடுத்தார்கள். ஏதோ பிக்னிக் மாதிரி இருந்தது. தவிர அந்த வழியில் ரெயில் பிரயாணமே ரொம்ப ரசிக்கும்படியாய் இருக்கும்.

இப்போ என்ன செய்யறது? பம்பாய் எங்களுக்குப் புதிசு. போரிவிலி கருப்பா, சிவப்பா தெரியாது. மச்சினன் இருப்பது தத்தபாடா ரோடு என்று தெரியும். ஆனால் அது மேற்கு, கிழக்கு இரண்டு பகுதிகளையும் இணைக்கும் என்பதோ அவன் கிழக்குப் பகுதியில் இருந்தான் என்பதோ தெரியாது. அப்போ எங்க 2 பேர் கிட்டேயும் வீட்டில் தொலைபேசி இல்லை. ஃபோனிலும் தகவல் தெரிவிக்க முடியாது. கீழே இறங்கி ஸ்டேஷன் மாஸ்டரிடம் கேட்டதற்கு வேறு ஏற்பாடு ஏதும் செய்யவில்லை. எங்களுக்கு அலுவலகம் மூலம் தகவல் வந்தால்தான் செய்ய முடியும் என்றும் வண்டி சீக்கிரம் கிளம்பும் என்பதால் செய்யவில்லையோ என்று தான் நினைப்பதாகவும் தெரிவித்தார். மணி 10, 12 என்று ஓடிக் கொண்டு இருந்தது. ஒவ்வொருவராகக் கிளம்பிக் கொண்டு இருந்தார்கள். அங்கே ஸ்டேஷன் வாசலில் இருந்த ஆட்டோ, வாடகைக் கார் முதலியனவற்றில் போய்க் கொண்டிருந்தார்கள். எங்கள் பெட்டியிலும் உள்ளவர்கள் எல்லாம் இறங்கி நாங்களும், ராஜ்கோட்டில் ஏறியவர்களும்தான் பாக்கி. அவர்களும் போரிவிலிதான். ஆனால் அவர்கள் 7,8 பேர் இருந்தார்கள். மேலும் போரிவிலி மேற்கு என்றார்கள். நான் ரொம்பச் சமர்த்தாக நாங்கள் மேற்கா, கிழக்கா எனத்தெரியாது என்பதைச் சொல்லாமல் வாயை மூடிக் கொண்டேன். வேறு வழியில்லாமல் 1 மணி போல் இருக்கும் நாங்களும் இறங்கினோம். மூட்டை, முடிச்சுக்களைத் தூக்கிக் கொண்டு ஸ்டேஷனுக்கு வெளியே வந்து ஒவ்வொருத்தராகக் கேட்டோம். அவர்கள் கேட்ட பணத்தில் நான் ஒரு ஆட்டோவே வாங்கலாம் போல் இருக்கே என்று நினைத்தேன். ஒன்றும் சரிவராமல் பேசாமல் உள்ளே போய் உட்காரலாம். வண்டி கிளம்பும்போது ஏறிக் கொள்ளலாம் என்று நினைத்தபோது ஒருத்தர் தான் ஆட்டோவை எடுத்துக் கொண்டு வருவதாகவும் 400ரூ கொடுத்தால் போதும் எனவும் சொன்னார். நாங்கள் 200ரூ தான் கொடுக்க முடியும் என்று சொல்ல அவர் கடைசியில் 250/க்கு ஒத்துக் கொண்டு எங்களை ஏற்றிக் கொண்டார். போரிவிலியில் எங்கே என்று கேட்க நான் ரொம்பத் தெரிந்த மாதிரித் "தத்தப்பாடா ரோடு," என்றேன். அவர், "பஹின் ஜி., தத்தபாடா ரோட் மே கஹான்? பூர்வ் யா பஸ்சிம்?" என்று கேட்க, நான், "ஆப் ஜாயியே, மை பதாதி ஹும்." என்று சொன்னேன். ஆட்டோ கிளம்பியது.


படிச்சவங்க எண்ணிக்கையைப் பார்த்தால் நிறையவே தெரியுது.  ஆனால் யாருமே வந்து கருத்துச் சொல்லலை.  இதிலே என்ன கருத்துச் சொல்லறதுனு நினைச்சாங்களோ என்னமோ தெரியவில்லை. :)))) ஆனாலும் நாங்க சொல்ல வந்ததைச் சொல்லியே தீருவோம் இல்ல! :)) இது ஒரு மீள் பதிவு.  தொடரும்.

8 comments:

  1. தொடர் மீள்பதிவா...!

    :)))

    காச்சிகுடா, தத்தபாடு என்று பேர் எல்லாமே கொத்த பாடா இருக்கு! ஆனாலும் அட்ரசே இல்லாமல் கிளம்ப தைரியம் வேணும்தான்! தூரத்தில் இருந்து கொண்டு கஷ்டப்படுவதைவிட, சம்மந்தப்பட்ட ஏரியாவுக்குள் நுழைந்து விட்டால் சமாளித்துக் கொள்ளலாம் என்று எண்ணினீர்களோ!

    ReplyDelete
  2. சுவாரஸ்யமானப் பயணக் கட்டுரை. இதற்கு முந்தையப் பதிவும் படித்தேன். தொடருங்கள்.....எப்படி வீடு போய் சேர்ந்தீர்கள் ? அறிய ஆவல்.

    ReplyDelete
  3. இதை நான் படித்ததில்லைமா. எப்படித்தான் இத்தனை தொல்லைகளும் உங்களைத் தேடி வரதோ. மழக்கால மும்பை.

    ReplyDelete
  4. என்ன இப்படியெல்லாம் தலைப்பு போட்டு பயமுறுத்துறீங்க?

    இந்தக் காலத்தில் ஜிபிஎஸ்னால இந்தப் பிரச்சினை கிடையாது. அட்ரெஸ் கண்டு பிடிக்கறதுக்குள்ள போறும்னு ஆயிடுச்சுனு பழைய கதை சொன்னா என் பையன் என்னை லூசுனு நினைக்கறான்.

    ReplyDelete
  5. ஆமாம், ஸ்ரீராம். தொடர் மீள் பதிவு தான். :)

    ReplyDelete
  6. நன்றி ராஜலக்ஷ்மி. எல்லாத்திலே இருந்தும் மீண்டு தானே வரணும். :)

    ReplyDelete
  7. இப்போ மும்பை வந்ததும், பெட்டி வராமல் போனதில் இந்தப் பழைய நினைவுகள் வந்தன வல்லி. இது 2006 ஆம் வருஷம் எழுதினதுனு நினைக்கிறேன்.

    ReplyDelete
  8. வாங்க அப்பாதுரை, என்ன தான் ஜிபிஎஸ் எல்லாம் வந்திருந்தாலும் எல்லாராலும் பயன்படுத்த முடியுமா இந்தியாவில்? நாங்க இம்முறை விமான நிலையத்திலிருந்து வீட்டுக்கு நவி மும்பை வந்தப்போ நெருலில் மைத்துனர் வீட்டைத் தேடத் தான் வேண்டி இருந்தது. ஏனெனில் அவர் குடியிருப்பு வளாகத்தின் பெயரிலேயே இன்னமும் 2,3 அதே நெருலில் இருக்கிறது. கடைசியில் செக்டர் எண்ணை வைத்தும் வீட்டுக்கு எதிரே தமிழ்க்காரர் கடை இருப்பதையும் அடையாளம் சொல்லிக் கண்டு பிடித்தோம். :))))

    ReplyDelete