எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, September 28, 2017

நவராத்திரி ஒன்பதாம் நாளுக்கான தகவல்கள்!

 இன்றைய தினம் கடைசி நாள். ஆகவே அம்பிகை சித்தாத்ரியாக வழிபடப்படுவாள். வேண்டியதை நிறைவேற்றித் தரும் அன்னை இவள். பத்து வயதுப் பெண் குழந்தையை சுபத்ராவாக வழிபட வேண்டும். சும்ப, நிசும்பர்களை சம்ஹரித்த தினமான இன்றைய தினம் அன்னையைக் காமேஸ்வரியாகவும் வழிபடுவார்கள். அனைத்து சித்திகளையும் அள்ளித் தரும் இவளைக் குறித்து முன்பே பார்த்தோம்.



எல்லாமும் ஒரு மகாசக்தியிலிருந்தே தோன்றியது என்பதை இவள் தன்னை வழிபடுபவர்களுக்குப் புரிய வைப்பாள். இவ்வுலகத்தின் ஆசாபாசங்களைத் துச்சமாகக் கருதும் மனோநிலை ஏற்படும். பேரானந்தம் எனப்படும் உணர்வு அவனுக்கு எளிதில் சித்திக்கும், இன்றைய தினம்  அம்பிகையை வெண்பட்டாடை உடுத்திய சரஸ்வதியாகவும் அலங்கரிக்கலாம். இன்றைய தினம் சரஸ்வதிக்கே முக்கிய வழிபாடு. என்றாலும் தாமரை மலர் மீது நான்கு திருக்கரங்களுடன் வீற்றிருக்கும் சித்தாத்ரி தேவியையும் வட மாநிலங்களில் வழிபடுவார்கள். சரஸ்வதி பிரம்மாவின் மனைவி எனப் பொதுவாகச் சொல்லப்பட்டாலும் இவளும் ஆதி பராசக்தியின் ஓர் அங்கமே ஆவாள். சாவித்திரி, காயத்திரி, பிராமணி ஆகிய பெயர்களிலும் வழிபடப்படுகின்றாள். சரஸ்வதி ஸூக்தம் இவளையே உலகின் ஆதி காரணி என்று சொல்கிறது. சக்தி தாசர்களின் தாரா வழிபாட்டில் வழிபடப்படும் சரஸ்வதியின் எட்டு வடிவங்கள் வாகீஸ்வரி, சித்ரேஸ்வரி, துளஜா(சியாமளா), கீர்த்தீஸ்வரி, அந்தரிட்ச சரஸ்வதி, கட சரஸ்வதி, நீல சரஸ்வதி, கினி சரஸ்வதி ஆகியோர்கள் ஆவார்கள்.  கட சரஸ்வதியை தண்டி மகாகவியும், சித்ரேஸ்வரியை சாலிவாகன மன்னனும் சியாமளா தேவியைக் காளிதாசனும் வழிபட்டதாக சரஸ்வதி மகாத்மியம் கூறுகிறது.

நதியாக ஓடி அந்தர்யாமியாகக் காட்சி கொடுப்பவளும் இவளே ஆவாள். சரஸ் என்னும் பெயருக்கேத் தடையில்லாமல் பிரகாசிக்கும் ஒளி என்று பொருள். கலைகளைத் தடையின்றிப் பிரவாஹிக்கச் செய்யும் சக்தி இவளிடமே உள்ளதால் சரஸ்வதி என்ற பெயர் பெற்றாள்.
காமேஸ்வரி க்கான பட முடிவு
காமேஸ்வரி க்கான பட முடிவு
படங்களுக்கு நன்றி கூகிளார்

இன்றைய தினம் பச்சைக்கற்பூரம் போன்ற வாசனாதி திரவியங்களால் ஆயுதங்களைக் கோலமாக வரையலாம். மருக்கொழுந்து, துளசி, வெண்ணிற மலர்களான மல்லிகை போன்றவை அன்னையின் வழிபாட்டுக்கு ஏற்றது.  இன்றைய தினம் அனைத்து சித்திகளையும் பெறுவதால் காலை அக்கார அடிசில்,  உளுந்து வடை, எள் உருண்டை, அப்பம் அல்லது அதிரசம் போன்றவையும் மாலைக் கறுப்புக் கொண்டைக்கடலை, வெல்லம் சேர்த்த மாவு உருண்டை போன்றவையும் நிவேதனம் செய்ய ஏற்றவை. ஒரு சிலர் இன்றைய தினம் புட்டு நிவேதனம் செய்வார்கள். கடலைப்பருப்புச் சுண்டலும் ஏற்றது!

எள் உருண்டை:  விசேஷ நாட்களுக்கு எள் உருண்டை முத்துருண்டை பிடிக்கக் கூடாது. வெறும் வாணலியில் எள்ளை நன்கு களைந்து கல்லரித்து வடிகட்டிக் கொண்டு வறுக்க வேண்டும். அதோடு வெல்லத் தூள் சேர்த்து மிக்சியில் ஒரு அடி அடித்த பின்னர் வெளியே எடுத்துத் தேங்காய்த் துருவல், ஏலக்காய் சேர்த்துக் கொண்டு உருண்டைகளாக உருட்ட வேண்டும். இந்த உருண்டையை நவராத்திரியில் வரும் சனிக்கிழமைகளிலும் செய்யலாம்.

வெல்லம் சேர்த்த மாவு உருண்டை! பாசிப்பருப்பைக் களைந்து கொண்டு நீரை வடிகட்டிக் கொண்டு வெறும் வாணலியில் சிவக்க வறுக்கவும். மிக்சியில் பொடி செய்யவும். பொடி நன்றாக வரும். அதிலே வெல்லத் தூளைக் கலந்து மீண்டும் மிக்சியில் சேர்த்து அடிக்கவும். ஏலத்தூள் சேர்க்கவும். ஒரு கிண்ணம் பாசிப்பருப்பு எனில் முக்கால் கிண்ணம் வெல்லத் தூள் சேர்த்தால் போதும். இரண்டு டேபிள் ஸ்பூன் நெய்யை நன்கு காய்ச்சி கலவையில் ஊற்றி உருண்டை பிடிக்கவும்.

அக்கார அடிசில் செய்முறை ஏற்கெனவே கொடுத்திருக்கேன். ஆகவே மீண்டும் கொடுக்கச் சுட்டியைத் தருகிறேன்.  அக்கார அடிசில்

பத்து நாட்களும் கன்னிப் பெண்களை மேற்சொன்ன முறைகளிலும், சுவாசினிகளை அந்த அந்த நாளுக்கான தேவியாகவும் வழிபடுதல் ஐதீகம். வசதி இருப்பவர்கள் ஆடை, அணிகலன்கள் அளிக்கலாம். எதுவும் முடியாதவர்கள் தேவி மஹாத்மியத்தின் துர்க சப்தச்லோகி, துர்க்கா சூக்தம், தேவி மஹாத்மிய ஸ்தோத்திரம் போன்றவற்றையோ லலிதா சஹஸ்ரநாமத்தையோ லலிதா நவரத்தினமாலையையோ தினம் சொல்லி வந்தால் போதும். அம்பிகை அருள் நிச்சயம் கிடைக்கும். நாம ஒண்ணுமே கொடுக்க முடியலைனாக் கூட அம்பிகை நமக்கென உரியதைக் கொடுக்காமல் இருக்க மாட்டாள்! ஆகவே நம்பிக்கையுடன் அம்பிகை அருளுக்குப் பிரார்த்தித்துக் கொண்டாலே போதும்!

சரஸ்வதி - தொடர்ச்சி!
தங்கக் கலசத்தில் அந்த நெருப்புக் கொழுந்து வைக்கப் பட்டது. சரஸ்வதியை அழைத்து நீ நீர் உருவெடுத்து நதி ரூபத்தில் சென்று இந்தத் தீக்கொழுந்தை கடலினடியில் சேர்ப்பித்துவிடு எனச் சொல்ல, சரஸ்வதியாலும் அந்த நெருப்பைத் தாங்க முடியவில்லை. பின்னர் பிரம்மன் கங்கை, யமுனை, நர்மதை, தாபி போன்ற மற்ற நதிகளையும் அழைத்து அந்தத் தங்கக் கலசத்தை தீக்கொழுந்தோடு எடுத்துச் சென்று சமுத்திரத்தின் அடியில் வைக்கப் பணித்தார். இவ்விதம் அந்தத் தீக்கொழுந்தானது கடலினடியில் சென்று மறைந்தது. அது முதன்முதல் சரஸ்வதி கையில் கொடுக்கப் பட்ட இடமே பத்ரிநாத்தில் உள்ள தப்த குண்டம் என்று சொல்லுகின்றனர்.


பிரம்மசக்தியாகத் திகழும்போது சரஸ்வதிக்கு பிராம்மி என்ற பெயர் உண்டு. பிரம்ம வித்யை இவள் முகமாகவும், நான்கு வேதங்கள் நான்கு திருக்கரங்களாகவும், இசையும் இலக்கணமும் ஸ்தனங்களாகவும், எண்ணும், எழுத்தும் இரு கண்களாகவும், இதிஹாசம், புராணம் ஆகியவை இரு திருவடிகளாகவும் கொண்ட இவள் கையில் இருக்கும் வீணை ஓங்கார வீணை. ஓங்காரத்தின் வடிவானது. கச்சபி என்னும் பெயருடைய இந்த வீணை பரமேஸ்வரனால் பிரம்மாவுக்கு அளிக்கப் பட்டு சரஸ்வதிக்கு வந்தது.
சரஸ்வதி க்கான பட முடிவு

பொதுவாக வெண்பட்டாடை தரித்து வெண்தாமரை மலராசனத்தில் நான்கு திருக்கரங்களுடன் சுவடி, ஜபமாலை, வீணை இவற்றைத் தாங்கியவண்ணம் காணப் படும் சரஸ்வதி, ஆங்காரசக்தியாய்த் தோன்றும்போது எட்டுக்கரங்கள், மணி, சூலம், கலப்பை, சங்கு, சக்கரம், வில், அம்பு, உலக்கை ஆகியவற்றோடு காட்சி கொடுப்பாள். உக்ரவடிவாய் கெளரியின் தேகத்தில் இருந்து தோன்றிய இவளே கம்பாசுரனை வதம் செய்தாள் என்று தேவி மகாத்மியம் கூறும். வாகீஸ்வரியாக வடிவம் கொள்ளும்போது வாணி நான்குகரங்கள், ஜடாமகுடம், ரத்னகுண்டலம், தண்டம், சுவடி, ஜபமாலை, கிண்டி ஆகியவை தாங்கி முக்கண்களுடன் காட்சி கொடுப்பாள். நான்கு முகங்கள், ஆறு கரங்கள், ஜபமாலை, சுவடி, வீணை, கமண்டலத்துடன் சரஸ்வதியாகக் காட்சி கொடுப்பாள். மான் தோலாடை அணிந்து இடது மூன்று கரங்களில் வரதம், சூத்திரம் ஆகியவற்றையும் வல மூன்று கரங்களில் சுவடி, குண்டிகை, அபயமுத்திரை தாங்கியும் நான்முகவடிவினளாக பிரம்ம பத்னியாக சரஸ்வதி காட்சி கொடுப்பாள் .
கல்விக்கு அதிதெய்வமாகப் போற்றப் படுபவள் சரஸ்வதியே! யாகத்தைக் காக்கும் தேவதையாகவும், யாகத்தை நடத்துபவர்களுக்குத் தேவையான ஞானம், தேஜஸ், வெற்றி ஆகியவற்றைக் கொடுப்பவளும் சரஸ்வதியே.

யஜுர்வேத மந்திரம் ஒன்று, “வீரமும் அறிவும் நிறைந்த சரஸ்வதி திடசித்தமுடையவர்களாக எங்களை விருத்தி அடையச் செய்வாளாக!” என்று பிரார்த்தித்துக் கொண்டு யக்ஞத்தில் நெய்யை அளிக்கிறது. ஞானாம்பிகை, ஞானேஸ்வரி, ஞானசக்தி என்று போற்றப் படுபவளும் இவளே. நாவில் சரஸ்வதியை வைத்திருப்பதாய்ச் சொல்லும் பிரம்மனே இவளைத் துதித்ததும் தான் சனத்குமாரருக்கு “பதிஞானத்தின்” உட்பொருளை உபதேசித்தான் என்கின்றனர் பெரியோர்கள். தேவகுருவான பிரஹஸ்பதியும் கலைமகளைத் துதித்ததுமே “சப்தசாஸ்திரம்” என்னும் நூலை இந்திரனுக்குக் கற்பித்தார். சரஸ்வதியின் அருட்கடாட்சம் பெற்றே கவிஞன் காளிதாசன், சியாமளா தண்டகம், சியாமளா தந்திரம், போன்றவற்றில் தேவியின் சொரூபத்தையும், லீலைகளையும் பற்றி எழுதியுள்ளான்.
சகல கலைகளுக்கும் அதி தேவதையான இவளே சாரதை எனவும் போற்றப் படுகிறாள். தனம் தரும் லக்ஷ்மியாகவும், வீரம் செறிந்த துர்க்கையாகவும் வணங்கப் படுபவளும் இவளே. இவளைக் குறித்தே சாரதா நவராத்திரி கொண்டாடப் படுகிறது. இந்த சாரதையை சிருங்கேரியில் நல்ல முஹூர்த்த வேளை பார்த்துப் பிரதிஷ்டை செய்தவர் ஆதிசங்கரர் ஆவார். ஸ்ரீசக்ரமும் இங்கே பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளது.

இவள் மற்ற மதங்களிலும் முக்கியமாய் சமணம், பெளத்தம் ஆகிய மதங்களிலும் காணப்படுகிறாள். சமணர்கள் வாக்தேவி, ஸ்ருதிதேவி என்றும் ஜின ஐஸ்வர்யா என்றும், ஜினவாணி, ஆகமஸ்வரூபி என்றும் அழைப்பார்கள். பெளத்தர்கள் மகா சரஸ்வதி, வஜ்ர சாரதா, வஜ்ரவீணாதாரா, ஆர்ய சரஸ்வதி, வஜ்ர சரஸ்வதி, என ஐந்து வடிவங்களில் சரஸ்வதியை அமைத்து வழிபடுகின்றனர். மஞ்சுஸ்ரீ எனவும் பெளத்தத்தில் சரஸ்வதி அழைக்கப் படுகின்றாள்.

நவராத்திரியின் ஒன்பதாம் நாளான இன்றைய வழிபாடு இவளுக்கே உரியது. புத்தகங்கள் வைத்தும் வழிபடுவார்கள். ஆயுதங்களைச் சுத்தம் செய்து அவற்றையும் வைத்து வழிபடுவார்கள். இசைக்கருவிகளுக்கும் சிறப்பு வழிபாடு உண்டு. இன்று பூராவும் வழிபாட்டில் இருக்கும் புத்தகங்கள், ஆயுதங்கள், இசைக்கருவிகளை விஜயதசமி அன்று எடுத்துப் பயன்படுத்துதல் சிறப்பாகக் கருதப் படும். பள்ளிக்கு முதன் முதல் செல்லும் குழந்தைகளுக்கு விஜயதசமி அன்று பள்ளியில் சேர்த்தல் சிறப்பாகக் கருதப் படும். அன்றைய தினம் ஒரு தாம்பாளத்தில் அல்லது சுத்தம் செய்யப் பட்ட தரையில் நெல் பரப்பி அந்த நெல்லில் "ஹரி ஓம்" எனக் குழந்தையின் அம்மாவோ, அப்பாவோ குழந்தையின் கையைப் பிடித்துக் கொண்டு எழுதச் செய்வார்கள்.

அம்பிகை பத்தாம் நாளான விஜயதசமி அன்று சிவசக்தி ஐக்கிய சொரூபிணியாகத் தோற்றம் அளிக்கின்றாள். அன்று மாலையில் நக்ஷத்திரங்கள் தோன்ற ஆரம்பிக்கும் விஜயா என்னும் முகூர்த்தத்திலேயே அவள் அம்பு போட்டு அசுரனை வதம் செய்ததால் அந்த நேரம் சுப முஹூர்த்தநேரமாகவும், நல்ல காரியங்களை ஆரம்பிக்கக் கூடிய நேரமாகவும் குறிப்பிடப் படுகின்றது. தீய சக்திகளை அம்பிகை அழித்த அந்த நல்லநேரமே விஜயதசமி என இன்றும் அம்பு போடுதல் என்னும் நிகழ்ச்சியாகப் பல கோயில்களிலும் சிறப்பாய் நடக்கின்றது. நம் வாழ்விலும் தீமைகளை அழித்து, நன்மைகள் பெருகி வாழ்வில் வளம் பெற அம்பிகையைப் பிரார்த்திப்போம்.

அனைவருக்கும் விஜயதசமி நல்வாழ்த்துகள்.

17 comments:

  1. நல்ல பதிவு. நிறைய விஷயங்களைத் தெரிந்துகொண்டேன். அதிலும் பிரசாதப் பகுதியை விரும்பிப் படித்தேன்.

    என் பெண், கொலு வைக்கணும் என்று சொல்றா. எங்கள் அகத்தில் வழக்கம் இல்லை என்பதால் வைப்பதில்லை. கோவில்களிலும் கொலு வைக்கிறார்கள் (பெரிய அளவில்)

    எல்லார் வீட்டிற்கும் அட்டென்டென்ஸ் கொடுத்துவிட்டு வருவது (நவராத்திரியின்போது) சிரமமில்லையோ?

    ReplyDelete
    Replies
    1. ///அதிலும் பிரசாதப் பகுதியை விரும்பிப் படித்தேன்.//

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இது நீங்க சொல்லியா நாங்க தெரிஞ்சு கொள்ளோணும்??:).

      Delete
    2. அதிரா... ரெண்டு நாளைக்கு முன், கீதா சாம்பசிவம் மேடம் சொன்னமாதிரி எலுமிச்சை சாதம் பண்ணினேன். ரொம்ப நல்லா வந்திருந்தது. அதனால் இவங்க எழுதியிருக்கிற பிரசாதப் பகுதியைப் பார்த்து எனக்குப் பிடித்தவற்றை செய்துபார்க்கலாம் என்று நினைத்திருக்கிறேன்.

      பிரசாதப் பகுதியைப் பிடிக்காதவர் யார்? திருப்பதிக்குப் போனாலும், கோவிலுக்கு உள்ளே (கர்ப்பக்க்ரஹத்தைச் சுற்றியுள்ளபகுதி) 5 நிமிடம் உட்காராமல் வந்தாலும் வருவார்கள், லட்டு வாங்காமல் வருபவர்களைப் பார்த்திருக்கிறீர்களா? இல்லை, நீங்கதான் உங்க வீட்டு நவராத்திரிக்கு யாராவது வந்தால், பிரசாதம் எதுவும் தராம, ஒரு டம்ளர் தண்ணியைக் கொடுத்து அனுப்பிச்சா, அடுத்த முறை யாராவது எட்டிப்பார்ப்பாங்கன்னு நினைக்கறீங்க?

      பிரசாதம் ரொம்ப முக்கியமானது (குறைந்தபட்சம் என்னைப் போன்றவர்களுக்கு)

      Delete
    3. வாங்க நெ.த. இங்கே திருச்சி வந்ததில் இருந்து நவராத்திரி கலெக்‌ஷன் குறைச்சல் தான். ஆனால் சென்னையில் அம்பத்தூரில் நிறைய இருக்கும்! ஒரு நாளைக்கு இத்தனை வீடுனு கணக்கு வைச்சுட்டுப் போயிட்டு வருவோம். தூரக்க இருந்தால் மட்டும் துணைக்கு ஆள் கிடைச்சால் சரி, இல்லைனா ரங்க்ஸ்தான் துணைக்கு வருவார். அதுவும் சொந்தக்காரங்க என்றால் மட்டும்! :)

      Delete
    4. எல்லோருமே சாப்பிடுகிறோம். சாப்பிடத் தான் சமைக்கிறோம். ஆகவே நாம் விரும்புவதைப் பிரசாதமாகப் பண்ணிச் சாப்பிடுவதில் என்ன தடை? எதுவும் இல்லை! சுவாமிக்குப் படைக்காமல் சாப்பிடுவது தான் தப்பு! உன் அருளால் இன்னிக்கு எனக்கு இது கிடைச்சது என்று அறிவித்துவிட்டு வீட்டுக்கு வரும் நாலுபேருக்குக் கொடுத்துட்டு, இல்லைனாலும் கொண்டு போய்க் கொடுத்துட்டுச் சாப்பிடுவது தான் சிறந்தது. அதிதி தேவோ பவஹ! என்பார்கள். அதிதி என தினமும் வரலைனாலும் கொண்டு போய்க் கொடுக்கலாமே!

      Delete
  2. படித்தேன்.

    எல்லோர் வீட்டுக்கும் போய்வருவது சாத்தியமில்லை நெல்லை. முடிந்தவரை நெருங்கியவர்கள் வீடுகளுக்கு போய்வரலாம். எங்கள் வீட்டு வரலக்ஷ்மி விரதத்துக்கு வந்தவர்கள் வீடுகளில் கொலு இருந்தால் நாங்கள் அவர்கள் அழைத்ததும் போய்வருவோம்! இப்படி பதில் மொய்தான்!

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஶ்ரீராம், கொலு இல்லைனாலும் சிலர் சரஸ்வதி பூஜைக்கு அழைப்பார்கள். இது எல்லாம் அவரவர் விருப்பம். நாலு பேரோடு கலந்து பழகிக் களித்து ஒருவருக்கொருவர் உணவு வகைகளைப் பரிமாறிக் கொண்டு, அவரவர் சக்திக்கு ஏற்ற பரிசில்கள் அளித்துக் களித்து இருப்பதற்காகத் தானே பண்டிகைகள். இதன் மூலம் நட்பு பெருகும். சமத்துவம் வரும்!

      Delete
  3. ஊருக்கு வந்ததால் உங்கள் ந்வராத்திரி பதிவுகளை படிக்க முடியவில்லை.
    சேர்த்து படிப்பேன். இன்றைய பதிவு அருமை.
    நவராத்திரி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கோமதி அரசு, நிதானமாய்ப் படியுங்கள். மகன், மருமகள், பேரனோடு உங்கள் பொழுது இனிமையாகக் கழிய வாழ்த்துகள்.

      Delete
  4. என்ன கீதாக்கா நீங்க சொல்லிக்கொண்டு இருக்கிறீங்க? நீங்கள் ஆரம்பிச்சது வியாழக்கிழமைதானே? அப்போ உங்களுக்கு நாளை வெள்ளிக்கிழமைதானே வீட்டுப் பூசை.. சனிக்க்கிழமைதானே விஜயதசமி கர்ர்ர்:).. புதன் கிழமை ஆரம்பிச்ச எனக்குத்தேன் இன்று 9ம் நாளாக்கும்.. சரி விடுங்கோ அது போகட்டும்.. கடவுள் எல்லாத்தையும் ஏற்றுக் கொள்வார்ர்... மனம் நல்லதா, வஞ்சகம் சூது இல்லாததா இருக்கோணும் அதுதான் முக்கியம்.

    மிக அருமையான பல தகவல்கள் சொல்லியிருக்கிறீங்க ஒவ்வொரு நாளும்.

    உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. அதிரஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ, எத்தனை தரம் சொல்லறது? நான் மறுநாளைக்கான தகவல்களை அனைவரின் சௌகரியத்துக்காகவும் முதல் நாளே போடறேன் என! அதான் இன்று வெள்ளிக்கிழமை சரஸ்வதி பூஜைக்கான தகவல்கள் நேற்று வியாழக்கிழமை அன்றே வந்திருக்கு! இப்போப் புரியுதா? உடனே தேம்ஸ் நதிக்கு ஓடாதீங்க! நிதானமா முதல்லேருந்து படிங்க! :)

      Delete
  5. ஒன்பதாம் நாள் சிறப்பறிந்தேன். இதுபோன்ற விழாக்கள் நம்மை மேம்படுத்துகின்றன. நிதானப்படுத்துகின்றன. கலையை ரசிக்க வைக்கின்றன.

    ReplyDelete
    Replies
    1. நன்றி முனைவர் ஐயா!

      Delete
  6. நிறைய விடயங்கள் தந்தீர்கள்

    உங்களுக்கும் விஜயதசமி நல்வாழ்த்துகள்.

    மற்றவர்கள் தளத்தைவிட உங்களது தளம் அகலமாக இருக்கிறது ஆகவே இடும் புகைப்படங்களை பெரிதாக்கி இடலாமே.... ? எனது தளத்தில் இட முடியாது காரணம் இடமில்லை சின்ன யோசனை மட்டுமே.....

    ReplyDelete
    Replies
    1. கில்லர்ஜி... இந்தப் பகுதில சரஸ்வதி படம் அழகாக இருப்பதாத் தோணித்து. அதை கிளிக் செய்து பெரிதுபடுத்திப் பார்க்கலாம்னா கிளிக் பண்ணமுடியலை. நல்ல யோசனை சொன்னீர்கள்.

      Delete
    2. வாங்க கில்லர்ஜி, படத்தைப் பெரிசு பண்ணி இருக்கேன். இப்போப் பார்த்துட்டுச் சொல்லுங்க!

      நெ.த. குறிப்பா சரஸ்வதி படம்! பெரிசா வந்திருக்கா?

      Delete
    3. ச.இ.அ.வ. படம் சுமார்தான். சிறிய படம்னா அழகாக இருந்திருக்கும். அதே படத்தைப் பெரிதாக்கினால் சுமார்தான். கிளாரிட்டி போயிடுது.

      Delete