எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, July 31, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், 2-ம்பாகம்!

மிருகவேட்டையா? மனித வேட்டையா?


ஆம், ஜராசந்தன் வந்தே விட்டான். அவன் மட்டுமா? அவனோடு கூட விதர்ப்ப நாட்டுப் பட்டத்து இளவரசன் ருக்மி, சேதி நாட்டு அரசன் தாமகோஷன், அவந்தியின் இளவரசர்கள் விந்தனும், அனுவிந்தனும், தந்தவக்ரன், தாரதன் போன்ற மன்னர்களும், மாமன்னர்களும் கூடவே வந்தனர். இவர்கள் அனைவரும் ஒன்று கூடிவிடாமலும், தனக்கெதிராக எதுவும் செய்யாமல் இருக்கும்படியும் பார்த்துக்கொள்ளவே தந்திரமாய் அவர்களைத் தன்னோடே அழைத்து வந்தான் ஜராசந்தன். இதனால் அவனுக்கு இரட்டிப்பு லாபம். அந்த மாமன்னர்களுக்குத் தங்களுக்கு ஜராசந்தன் போதுமான மரியாதை கொடுத்து வருகிறான் என்ற திருப்தியும் இருக்கும், அதே சமயம் அவர்கள் நடவடிக்கை அவன் கண்ணெதிரேயே இருக்கும். இவர்கள் அனைவரும் உல்லாசமாகப் பேசிச் சிரித்துக்கொண்டு வந்த்தைப் பார்த்தால் மன்னர்கள் அனைவரும் ஏதோ வேட்டைக்கு, காட்டு மிருகங்களை வேட்டையாடி விளையாடிக் களிக்க வந்திருப்பது போல் பட்டது. உண்மையில் மனித வேட்டைக்கு வந்திருக்கிறார்கள் என்பது ஜராசந்தன் கூடியவரையில் வெளியே தெரியாமல் பார்த்துக்கொண்டான்.

அதனால் ஜராசந்தன் சென்ற இடமெல்லாம் நல்ல வரவேற்பு அளிக்கப்பட்டது அவனுக்கும், உடன் வருபவர்களுக்கும். மிக உயர்தர விருந்து, கேளிக்கைகள், நடனம், நாடகம், பாடல் போன்ற நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப் பட்டு இரவுப் பொழுதை இனிமையாக்கின. உசினாரா, சேதி, விதர்ப்பா போன்ற நாடுகளின் அரசர்கள் மட்டுமின்றி குடிமக்களும் பெரும் ஆவலோடும், மகிழ்வோடு இந்தப் பெரிய அரச ஊர்வலத்தை ரசித்து வரவேற்று உபசரித்து மகிழ்ந்தனர். மக்களிடையே ஜராசந்தன் பெற்ற வெற்றிகள் மெல்லிய குரலில் கிசுகிசுவெனப் பேசப் பட்டது. இவற்றையெல்லாம் கண்டும் காணாதவன் போல் ஜராசந்தன் தன் குறி கண்ணனை வேட்டையாடுவது ஒன்றே என்பதை மனதில் கொண்டு மேலே மேலே பிரயாணப் பட்டிருந்தான். கரவீரபுரத்தின் அரசனான ஸ்ரீகாலவ வாசுதேவனுக்கு அவன் அனுப்பி வைத்த ஒற்றர்கள் கொண்டு வந்த செய்திகளின் மூலமாய்க் கண்ணன் அந்த மலைப்பகுதிகளின் அடர்ந்த காடுகளிலேயே எங்கேயோ ஒளிந்திருப்பதும், அவனைப் பிடிப்பது அப்படி ஒன்றும் கஷ்டமான காரியம் இல்லை என்பதும், அது குழந்தைகளோடு விளையாடும் கண்ணாமூச்சி ஆட்டத்தை ஒத்த்தே என்பதும் ஆகும். இந்த நம்பிக்கையைப் பெற்றிருந்த தைரியத்தினால் கண்ணனை அடியோடு அழித்துவிடலாம் என்றே ஜராசந்தன் ஆவலோடு காத்திருந்தான்.

ஆனால் விதர்ப்பாவுக்குள் நுழைந்ததிலிருந்தே அந்த அடர்ந்த மலைக்காடுகளின் ஊடே பிரயாணம் மேற்கொள்ளுவது சிரமமாக மட்டுமின்றி களைப்பைத் தருவதாயும் இருந்தது. மேலும் உணவு விஷயத்தில் அதிகமாய் சேமிப்பில் வைத்துக்கொள்ளவும் கஷ்டமாய் இருந்ததோடு மலைப் பிரதேசத்தில் பிரயாணம் மேற்கொள்ளுவதுபலவிதமான தடைகளையும் ஏற்படுத்தியது. படை வீரர்களுக்கு மட்டுமின்றி கூடவே பிரயாணம் மேற்கொண்ட அரசர்களுக்கும், அரசகுமாரர்களுக்கும் இதன் முடிவு என்ன என்பதில் சந்தேகம் மிகுந்தது. வீரர்களோ உற்சாகம் இழந்து காணப்பட்டனர். ஜராசந்தன் மட்டும் நம்பிக்கையை இழக்கவில்லை. ஆகையால் அவர்களுக்குள் கிசுகிசுத்துக்கொண்டாலும் அவனோடு உடன் பிரயாணம் மேற்கொண்டனர். கடைசியில் ஒருவழியாய் அவர்கள் அனைவரும் கோமந்தக மலையின் அடிவாரத்துக்கு வந்தே விட்டனர். ஆனால் மலையின் செங்குத்தான உயரத்தையும் அதில் ஏறவே முடியாதபடிக்கு அடர்ந்து கிடந்த மரங்களையும் பார்க்கையில் அவர்கள் நம்பிக்கை காணாமல் போயிற்று. மேலும் மலையின் மேல் பழவகைகளும், தண்ணீரும் அபரிமிதமாய்க் கிடைக்கும்போல் , ஆங்காங்கே பழமரங்களும், வெள்ளியை உருக்கினாற்போன்ற அருவிகளும் காட்சி அளித்தன. உணவு வகைகளும் அதிகமாய் இருந்தால் இந்த முற்றுகையை மலைமேல் இருப்பவர்கள் எத்தனை மாதங்கள் வேண்டுமானாலும் தாங்குவார்கள் போல் தெரிகிறதே? சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு பலசாலிகளாயும், தைரியசாலிகளாயும் மலை ஏறுவதில் பயிற்சி பெற்றவர்களுமான இருவரைத் தேர்ந்தெடுத்தான் ஜராசந்தன். மலைமேல் செல்ல வழி ஏற்படுத்துமாறு ஆணையிட்டான். ஆங்காங்கே கூரிய பாறைகளின் நுனிகள் தெரிந்தன. அவற்றைப் பற்றிக்கொண்டு ஏறலாம் என்றால் அவை வழுக்கின. கரடு, முரடான பாறைகள் கைகளிலும், கால்களிலும், உடலிலும் பட்டுக் காயத்தை உண்டாக்கின.

ஆனால் எதற்கும் அஞ்சாமல் அந்த இருவரும் மலைமேல் ஏற முற்பட்டனர். ஜராசந்தன் முகத்தில் மகிழ்ச்சி உதயமாயிற்று. ஆனால், அந்தோ! ஒரு பாறையிலிருந்து மற்றொரு பாறைக்குத் தாவிய அவ்விருவரின் மேலேயும், மேலே மலை உச்சியிலிருந்து தள்ளப்பட்ட பாறைகள் விழ, அவர்கள் இருவரும் மலைக்கணவாய்களில் விழுந்தனர். அனைவரும் மேலே பார்க்க, மலையின் மேல் தெரிந்த அந்தப் பீடபூமியின் ஒரு கோணத்திலிருந்து சில மனிதர்கள் நின்று கொண்டு கீழிருந்து மேலே ஏறுபவர்களைப் பாறைகளைத் தள்ளுவதன் மூலம் தடுத்துக்கொண்டிருப்பது தெரிய வந்தது. கண்ணுக்கு இருவரே தெரிந்தாலும், அங்கே இன்னும் நூற்றுக்கணக்கான நபர்களும் இருக்கவேண்டும் என்பதும் புரிந்தது. ஜராசந்தன் வேறு வழியில்லாமல் மந்திராலோசனையைக்கூட்டினான்.

அவன் நண்பர்களான மற்ற அரசர்கள் எந்தவிதமான பரிசுகளும் இல்லாத, பலனே இல்லாத இந்த வேட்டையைத் தொடருவதில் ஊக்கமின்றிக் காட்சி அளித்தனர். மேலும் கரவீரபுரம் மிகவும் தூரத்தில் இருந்ததால் அங்கிருந்து உணவுப் பொருட்கள் வருவதிலும் தாமதம் ஏற்பட்டது. வீரர்களுக்குச் சரியான உணவு அளிக்க முடியவில்லை. இந்த முற்றுகையோ எத்தனை நாட்கள்/மாதங்கள் தொடர்ந்தாலும் மலைமேல் இருப்பவர்களைப் பிடிக்கமுடியுமா என்பதில் சந்தேகம் தான். ஜராசந்தன் தன் நண்பர்களின் மனதைப் புரிந்து கொண்டான். ஆனால் அவனுக்குப் பின்வாங்க இஷ்டமே இல்லை. மகதச் சக்கரவர்த்தியான அவன் இரு இடைச்சிறுவர்களுக்குப் பயந்து பின்வாங்கினான் என்பது ஆர்யவர்த்தம் முழுதும் பரவினால் அவன் கெளரவம் என்னாவது? மக்கள் அவனை மதிப்பார்களா? அதோடு அவனைக் கோழை என இழிவாய்ப் பேசுவார்களே? இந்தக் கிருஷ்ணன் தான் யுத்தத்துக்குப் பயந்து யுத்த பூமியில் இருந்து தான் மட்டும் தப்பிக்கவேண்டுமென ஒருவருக்கும் தெரியாமல் இரவோடு இரவாக ஓடிவந்துவிட்டான். ஆகவே தன் நண்பர்களுக்குப்பல பரிசில்கள் தருவதாய் ஆசை காட்டினான். மேலும் பல பதவிகளையும் பெற்றுத் தருவதாயும், தனக்குச் சமமாய் நடத்துவதாயும் உறுதி அளித்தான். ஆனால் அவன் எவ்வளவு ஆசை காட்டியும் அவன் நண்பர்களான அரசர்களும், அரசகுமாரர்களும் அசைந்து கொடுக்கவில்லை. மலை மேல் உள்ளவர்களின் மீது தாக்குதல் நடத்துவதில் உள்ள அபாயத்தை ஜராசந்தனுக்குச் சுட்டிக் காட்டினார்கள்.

7 comments:

  1. அருமை, நன்றிகள் ஜி பகிர்ந்தமைக்கு

    ReplyDelete
  2. கீதா mam,

    கொஞ்ச நாளாவே நீங்க எழுதற இந்த series-அ follow பண்ணிண்டு வரேன் .. இதுக்கு comment போட என்னிக்குமே எனக்கு தைரியம் வரல ! அவளோ அழகா எழுதரேள் நீங்க (இன்னிக்கு நன்னா இல்லையா அதான் comment பண்ணறியா ன்னு நெனைக்க வேண்டாம் ). I somehow felt I must share with you this- that how much i respect the way you are taking on this mighty plot!

    கிச்சு கத சொல்றது சாதாரண விஷயமில்ல ! சின்ன வயச்லேர்ந்து கேட்டுண்டிருக்கேன் இந்த கதைகள! அலுக்கரதே இல்ல ! கொழந்தைகள் -லேர்ந்து வயசானவா வரைக்கும் ரசிக்கவும் /சிந்திக்கரதுக்கும் அதுல நெறையா விஷயம் இருக்கு .

    our mythology is one of the greatest treasure chest of stories! esp- mahabharatha... so many characters.. plots! கதைகள் /உப கதைகள் -நு ஆரம்பிச்சு .. எவளோ பெரிய philosophy கள மிக easy-யா விளக்கிடறது ! அது என்னிக்குமே அலுக்காது ...

    pizza and burger ; curd rice and maavadu-வ replace பண்ண முயற்சி பண்ணிண்டுருக்கற இந்த காலத்துல , இத போல கதைகள நாம எப்டியும் carry forward பண்ணனும் .. infact, என் friends நெறையா பெருக்கே இந்த கதைகளெல்லாம் சொல்ல யாருமில்ல .. யாருக்கும் தெரியல .. விட்டா mani ratnam movie தான் நெஜம் ராமாயணம்னு சொல்லுங்க போலருக்கு !

    கடவுள் இருக்கு இல்லைங்கற பிரச்சன கெடயாது .. அது அவாளவாளோட சொந்த விருப்பு வெறுப்பு .. but இது நம்ம "culture".. நம்ம epics.. history.. and it's life's in our hands.. that much i believe!

    great work mam!
    hats off!

    ReplyDelete
  3. எல்கே, ஒரு வரியில் சொல்றது நமக்கு வழக்கம் இல்லையே! :))))))))

    ReplyDelete
  4. நன்றி ராம்ஜி யாஹூ

    ReplyDelete
  5. வாங்க மாதங்கி, உங்களைப் போன்ற சிலர் கொடுக்கும் ஊக்கமே எனக்கு டானிக்காகச் செயல்படுகிறது. இங்கே பின்னூட்டம் கொடுக்காட்டிப் பரவாயில்லைம்மா. நான் அதிகம் பின்னூட்டம் எதிர்பார்க்கவும் இல்லை. நீங்க இவ்வளவு பாராட்டி இருக்கிறதே எனக்கு ரொம்ப சந்தோஷமாயும், எழுதி வருவதற்குப் பலன் கிட்டியதாயும் இருக்கு. ரொம்ப நன்றிம்மா. வார்த்தைகளே இல்லை.

    ReplyDelete
  6. maami, niraya per padikkaranga.. aanal comment poduvathu illai

    ReplyDelete