எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, November 21, 2018

சாமியே சரணம் ஐயப்பா! 5



அந்தப் பாடலில் சொல்லப்பட்ட விஷயங்களான உலோபம், அசூயை, சத்வகுணம் ஆகியவற்றில் சிலவற்றுக்கான பொருள்
உலோபம் என்றால் பொதுவாக யாருக்கும் எதுவும் கொடுக்காத பேராசைக் காரன் என்ற பொருளில் தான் இங்கே வரும்.

அசூயை என்பதும் இங்கே பொறாமை என்ற அர்த்தத்தில் தான் எடுத்துக் கொள்ளணும்.

சத்வகுணம்: மிகவும் உயர்ந்த ஒரு குணம். இந்த சத்வ குணம் நிரம்ப உள்ளவர்களைத் தான் நாம் "ரொம்ப நல்லவங்க" என்ற அடை மொழியுடன் அழைக்கிறோம். ஆனால் எதற்கும் கலங்காமல் நிச்சலனமாக இருப்பவர்களை "சத்வகுணம்" கொண்டவர்கள் எனச் சொல்லலாம். அது தவிர்த்து மென்மையாகவும் இனிமையாகவும் பேசுபவர்களையும் கடுஞ்சொல் பேசாதவர்களையும் சத்வகுணம் உள்ளவர்களாய்ச் சொல்லலாம்.

ரஜோகுணம் என்பது தைரியத்தைக் குறிப்பிட்டாலும், கொஞ்சம் சுறுசுறுப்பையும் குறிக்குமோன்னு தோணுது. வேகத்தையும் குறிக்கும் ரஜோகுணம். ஆனால் அந்த வேகத்தோடு விவேகமும் சேர்ந்து இருக்க வேண்டும்.

தமோகுணம், வேண்டாததைப் பேசுதல், செய்யுதல், அசட்டுத் தனமான கோபம், ஆணவம் போன்றவற்றுக்குக் காரணகர்த்தா இது. இறைவனிடம் நாம் செல்லும்போது அனைத்தையும் துறந்து "பரிபூரண சரணாகதி" அடைய வேண்டும். இறைவன் ஒருவனே பெரியவன் என்ற எண்ணம் நம்மிடம் இருக்க வேண்டும் என்பதாலேயே பதினெட்டுப் படிகள். பதினெட்டுப் படிகளும் பதினெட்டுத் தேவதைகளையும் குறிக்கும் எனவும் பார்த்தோம். இது தவிர, சபரி மலை தவிர ஐயப்பன் இன்னும் பதினெட்டு இடங்களில் பிரதிஷ்டை செய்யப் பட்டிருப்பதாயும் சொல்கின்றனர். அவை எல்லாமே கேரளத்தில் தான் உள்ளது.

பொன்னம்பலமேடு
கெளதென் மலை
நாகமலை
சுந்தரமலை
சிற்றம்பல மலை
கல்கி மலை
மாதங்க மலை
மயிலாடும்மேடு
ஸ்ரீபாத மலை
தேவர்மலை
நீலக்கல் மலை
தாலப்பாறமலை
நீலிமலை
கரிமலை
புதுச்சேரிமலை
காளகட்டி மலை
இஞ்சிப்பாறை மலை
சபரிமலை
ஆகிய பதினெட்டு இடங்கள் ஆகும்.

சபரிமலையில் விஸ்வகர்மாவின் உதவியுடன் கோயில் கட்டிவிட்டு, விக்ரஹப் பிரதிஷ்டை செய்ய வேண்டுமெனத் தவித்த மன்னனுக்கு இரவு கனவில் ஐயன் தன்னுடைய யோக கோலத்தைக் காட்டி அருளினார். மெய்சிலிர்த்த மன்னன் கண்விழித்தபோது அவர் எதிரில் பரசுராமர் நின்றிருந்தார். மன்னனிடம், "மன்னா, உன் கனவில் கண்ட வடிவைப் போலவே விக்ரஹம் செய்து, இங்கே சபரிமலையில் பிரதிஷ்டை செய்து விடு. சாஸ்தா என் வேண்டுகோளின்படி இந்த மலைநாட்டில் பதினெட்டு இடங்களில் கோவில் கொள்ளுவதாய்ச் சொல்லி இருக்கிறார். இந்தக் கோயிலில் பிரதிஷ்டை செய்யும் சமயம், நானும், அகத்தியரும் பங்கு கொள்வோம்!" எனத் தெரிவித்து மறைந்தார்.

அதன்படியே வடிவமைக்கப் பட்ட விக்ரஹத்தைக் கோயிலில் பிரதிஷ்டை செய்யும்போது பரசுராமர், அகத்தியர், மற்ற முனிவர்கள் அனைவரும் மன்னனுக்கு உதவினார்கள். தை மாதம் முதல் நாள் தேய்பிறை பஞ்சமிதிதியில் சனிக்கிழமை, உத்திர நட்சத்திரம் கூடிய நன்னாளில் விக்ரஹப் பிரதிஷ்டை செய்யப் பட்டது. பூஜை முறைகள் ஒழுங்கு செய்யப் பட்டது. தெய்வமே தனக்கு மகனாய் வந்ததை நினைத்து, நினைத்து, அந்தத் தெய்வக் குழந்தையின் எளிமையையும். எவரும் அணுகும் வண்ணம் இருந்த தன்மையையும் நினைத்து, நினைத்து வியந்தார் மன்னர். மீண்டும் பந்தளம் திரும்பிய மன்னன், தான் பெற்ற மகன் ஆன "ராஜராஜனு"க்குப் பட்டம் கட்ட ஏற்பாடுகள் செய்தார்.ராஜராஜனுக்குப் பட்டாபிஷேகம் நடந்தது. என்றாலும் பெறாத மகன் ஆன "மணிகண்டனின்" மகத்துவத்திலேயே மன்னன் மூழ்கி, அனைவரிடமும் சாஸ்தாவின் மகிமையை எடுத்துக் கூறினார். பட்டாபிஷேஹம் செய்து பார்க்க முடியாத மகனுக்கு, ஆண்டு தோறும் சங்கராந்தி அன்று தன்னால் அளிக்கப் பட்ட "திரு ஆபரணங்களை"ப் பூட்டி அழகு பார்க்க நினைத்து, வித விதமாய் ஆபரணங்கள் செய்து, சபரிமலை ஐயப்பனுக்குக் கொடுத்தார். பின்னர் ஐயன் நினைவிலேயே தவம் இருந்து ஐயன் திருவடியை அடைந்தார். என்றாலும் மன்னன் ஆரம்பித்து வைத்த வழக்கப் படியே இன்றும், சங்கராந்தி அன்று பந்தள அரண்மனையில் இருந்து "திரு ஆபரணங்கள்" வந்து ஐயனுக்குச் சார்த்தப் படுகிறது. தன் கோயிலில் தன் மூல விக்ரஹத்தைப் பிரதிஷ்டை செய்த சங்கராந்தி அன்று ஒவ்வொரு வருஷமும் தான், எதிரே உள்ள காந்த மலையில் ஜோதி வடிவாய்த் தோன்றுவதாயும் மன்னனுக்கு ஐயன் வாக்களித்தார். அந்தப் படி ஒவ்வொரு சங்கராந்தி அன்றும் மாலையில் சபரிமலையில் தர்மசாஸ்தாவின் விக்ரஹம் பிரதிஷ்டை செய்யப் பட்டிருக்கும் சன்னதிக்கு எதிரே உள்ள காந்தமலையில் ஐயனின் ஜோதி உருவம் காட்சி அளித்து வருகிறது.

தன்னைத் திருமணம் செய்து கொள்ள ஆசைப் பட்ட மகிஷியை ஐயன், தான் இந்தப் பிறவியில் ராஜகுமாரனாகப் பிறந்திருந்தாலும், ஒரு பிரம்மச்சாரியாகவே வாழப் போவதாயும், மற்றொரு பிறவியில் மகிஷியை மணந்து கொள்ளுவதாயும் கூறினார். அதுவும் எப்படி? "ஒவ்வொரு வருஷமும் ஐயனைக் காண வரும் பக்தர்களில் எந்த வருஷம் புதிய பக்தர்கள் இல்லையோ அந்த வருஷம் திருமணம் நடக்கும்" எனக் கூறி இருக்கிறார். புதிதாய் ஐயப்பன் கோவில் செல்லும் பக்தர்களைக் "கன்னி ஐயப்பன்" என அழைப்பது உண்டு. ஒவ்வொரு வருஷமும் புதிய, புதிய பக்தர்கள் சென்று வருவதால் மஹிஷியின் தவம் இன்னும் முற்றுப் பெறவில்லை. அவள் சன்னிதியில் இருந்து வெளியே வந்து, இந்த வருஷமும் கன்னி ஐயப்பன் மாரா? எனப் பார்த்துவிட்டுப் பின்னர் கோபத்துடன் கதவைச் சாத்திக் கொள்வதாய் ஐதீகம். அந்தப் படிக்கு அவள் சன்னதி சாத்தப் படுகிறது. முருகனுக்கு ஆறுபடை வீடு இருப்பது போலவே ஐயப்பனுக்கும் ஆறுபடை வீடு இருக்கிறதாய்ச் சொல்கின்றனர். அவை ஆரியங்காவு, அச்சன் கோவில், பந்தளம், குளத்துப்புழா, எரிமேலி, சபரிமலை ஆகியவை. அடுத்து மதுரை அழகர்கோவிலில் இருக்கும் பதினெட்டாம்படிக் கருப்பணசாமி பற்றிப் பார்ப்போம்!


மதுரையின் வடக்கே உள்ள அழகர்மலையின் மூலவரான பரமஸ்வாமியையும், உற்சவர் ஆன சுந்தரராஜப் பெருமாளையும் கண்டு களிக்க வந்த சேர மன்னன், சுந்தரராஜப் பெருமாள் என்று அழைக்கப் பட்ட கள்ளழகரின் அழகைக் கண்டு வியந்தான். அந்த விருஷபாத்திரி மலைப்பகுதியில் மலைக்கள்ளர்கள் நிறையவே உண்டு. அவர்களின் இஷ்ட தெய்வம் இந்த அழகர் பிரான். கள்ளர்களால் அதிகம் வணங்கப் பட்டதாலேயே கள்ளழகர் என்ற திருநாமம் இவருக்குக் கிடைத்தது என்றும் சொல்லுவார்கள். கள்ளர்களைப் போலவே தலையில் கொண்டை, கையில் வளரி என்னும் ஆயுதம்,(தற்காலத்தில் பூமராங் என்று அழைக்கப் படுகிறது), சாட்டைக் கம்பு, தலையில் எடுத்துக் கட்டிய உருமால், காதுகளில் கடுக்கன்கள், இடுப்பிலும், மார்பிலும் ஒரே ஆடையை இடுப்பில் அரையாடையாகவும், மார்பில் மேலாடையாகவும் கிராமத்து மக்களைப் போல் உடுத்தும் பாங்கு, இவற்றால் கவரப் பட்ட மன்னன் சேரநாடு சென்றும் கள்ளழகர் நினைவாகவே இருந்தான். பின்னர் அங்கே இருந்த "மலையாளக் கருப்பு" கோயிலுக்குப் போய் அவரை வணங்கும்போது அவரிடம் எப்படியாவது அந்தக் கள்ளழகரை இங்கே கொண்டு சேர்ப்பித்து விடு என வேண்டிக் கொண்டார். கருப்பு மன்னனின் ஆசையை நிறைவேற்ற நினைத்தார். தனக்கும் தாய் தானே ஒரு வகையில், ஆகவே பெருமாளை எப்படியாவது சேரநாட்டுக்குக் கடத்திவிடலாம் என நினைத்துத் தன் பதினெட்டுப் பட்டிகளில் இருந்தும், தன் பரிவார தேவதைகளைச் சேர்த்துக் கொண்டு அழகர் மலைக்கு வந்து சேருகிறார்.

கள்ளரின் அழகைப் பார்த்த அவருக்குக் கண் இமைக்க முடியவில்லை. பார்த்துக் கொண்டே இருக்கிறார். வந்த வேலை மறந்து விடுகிறது. எம்பெருமான் கள்ளர்களை விட்டுவிட்டு, மதுரையை விட்டுப் போவானா? அவன் மாயையே, இம்மாதிரி கருப்பை வந்த வேலையை மறக்கச் செய்கின்றது. அங்கேயே இருந்து தினமும் வணங்கிக் கொண்டிருந்த மலையாளக் கருப்புக்குத் திடீரென ஒருநாள் தான் வந்த வேலையும், தற்போது இருக்கும் நிலையும் புரிய, அழகரையே என்ன செய்வது எனக் கேட்கிறார். அழகரும், "நீ திரும்பிப் போகவேண்டாம். இங்கேயே இருந்து எனக்குக் காவல் காத்துக் கொண்டு இருந்துவிடு. நான் வெளியே போகும் நாட்களில் கோவிலைப் பாதுகாக்கும் பொறுப்பு உன்னுடையது. என்னுடைய கணக்கு, வழக்குகளுக்கும் நீ பொறுப்பு எடுத்துக் கொள், உன் முன்னிலையில் என்ன தீர்ப்பு வருகின்றதோ அதற்கு மக்கள் கட்டுப் படுவார்கள். உன் முன்னிலையில் ஒருவன் பொய்யாகச் சத்தியம் செய்ய மாட்டான். உண்மையே உன் முன்னிலையில் நிற்கும். என்னைத் தரிசிக்க வரும் பக்தர்கள் முதலில் உன்னைத் தரிசித்துவிட்டே பின்னர் என்னைத் தரிசிக்க வருவார்கள்" என்று ஆசி வழங்குகிறார்.

கருப்பும் தன்னுடைய பதினெட்டுப் பரிவார தேவதைகளையும், பதினெட்டுப் படிகளாய் மாற்றி அன்று முதல் அழகர்கோயிலில் காவல் இருக்க ஆரம்பிக்கின்றார். இவருடைய பெயரும் அப்போது முதல் "பதினெட்டாம்படிக் கருப்பு" என வழங்க ஆரம்பித்தது. மலையாளத்தில் இருந்து வந்தபடியாலும், பதினெட்டு படிகள் உள்ளதாலும், இவர் சாஸ்தாவின் ஒரு ரூபமே என மக்கள் நம்பிக்கை. மேலும் ஐயப்பனும் கரிய திருமேனி படைத்தவர் எனக் கூறுவது உண்டு. இங்கே பதினெட்டுப் படிகளும், கதவும் தான் தரிசிக்க முடியும். வாசல் கதவு தான் கருப்பண்ணசாமி சன்னதி. சந்தனத்தால் (ஐயப்பனுக்கும் சந்தனம் விசேஷம்) அலங்கரிக்கப் பட்ட இந்தக் கதவின் இருபக்கமும் இரு பெரிய அரிவாள்கள் வைக்கப் பட்டிருக்கும். இவற்றிற்கே பூஜைகள் நடக்கும் இந்தச் சன்னதிக்கு முன்னர் நின்று பேசித் தீர்த்து வைக்கப் பட்ட வழக்குகள் மதுரை மாவட்டத்தில் கணக்கில் இல்லை என்றே சொல்லலாம். யாராக இருந்தாலும் இந்தச் சன்னதிக்கு முன்னர் பொய்ச் சத்தியமோ, பொய்ச் சாட்சியோ கூறுவது இல்லை. இன்றளவும், அழகர் சித்திரைத் திருவிழாவுக்கு மதுரைக்குச் செல்வதற்கு முன்னர், கருப்பண்ணசாமி சன்னதியில் அழகரின் நகைகளின் ஜாபிதாவைச் சொல்லிவிட்டுப் பின்னர் திரும்பும்போது அதே ஜாபிதாபடியே நகைகள் கணக்குகளைக் காட்டிவிட்டுமே செல்வார்கள்.

18 comments:


  1. //தமோகுணம், வேண்டாததைப் பேசுதல், செய்யுதல், அசட்டுத் தனமான கோபம், ஆணவம் போன்றவற்றுக்குக் காரணகர்த்தா இது. இறைவனிடம் நாம் செல்லும்போது அனைத்தையும் துறந்து "பரிபூரண சரணாகதி" அடைய வேண்டும். இறைவன் ஒருவனே பெரியவன் என்ற எண்ணம் நம்மிடம் இருக்க வேண்டும் என்பதாலேயே பதினெட்டுப் படிகள்.//
    பதினெட்டும் படிகள் விளக்கம் அருமை.

    "பதினெட்டாம்படிக் கருப்பு" வரலாறும் அருமை.



    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி! பலரும் பதினெட்டாம்படிக் கருப்பு பற்றி நான் சொல்லும் கதை(வரலாறு)யை ஏற்கவில்லை! :)))))

      Delete
  2. படித்தேன், ரசித்தேன்.

    மதுரை பதினெட்டாம் படிக்க கருப்பு செய்திகள் சிறப்பு, சுவாரஸ்யம்.

    ReplyDelete
  3. சோம்பேறித்தனத்துக்கும் தமோ குணம் என்றுதான் சொல்வார்கள் இல்லையா?

    ReplyDelete
    Replies
    1. "தமோ"குணம் அதிகம் உள்ளவர்களுக்குச் சோம்பேறித் தனம் இருக்கும் ஶ்ரீராம்! :))))

      Delete
  4. கள்ளழகர் பற்றிய வரலாறு அறிந்தேன் சகோ. வாழ்க நலம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கில்லர்ஜி!

      Delete
  5. பதினெட்டாம்படிக் கருப்பு - இது இதுவரை அறியாதது அக்கா.புதியதான தகவல் அறிந்தேன்...நிறைய தத்துவக் கருத்துகளும்...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்க கீதா. ஐயப்பன் பற்றிய தத்துவங்கள் எல்லாம் நம்மால் புரிஞ்சுக்க முடியாதவை!

      Delete
  6. தேனில் நனைத்த பலாச்சுளை போல ஐயனின் சரிதம்..

    பதினெட்டாம்படி கருப்பசாமி இஷ்ட தெய்வம்...

    மகிழ்ச்சி... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. வாங்க துரை! மதுரைப்பக்கம் பதினெட்டாம்படிக் கருப்பும், மாடக்குளம் கருப்பும் ரொம்பவே பிரபலம்.

      Delete
  7. வைணவக் கோவில்களில் காவல் தெய்வங்கள் (திசைக்கு, கோவிலுக்கு) வைத்திருப்பதைப் படித்திருக்கிறேன். புதிய தகவல்கள் நிறைந்த பதிவு. சபரிமலையைப் பற்றியும் அதிக தகவல்களை அறிந்துகொண்டேன்.

    அழகர் கோவில் என்று சொல்லிவிட்டு தோசை பிரசாதம் பற்றி ஒன்றும் சொல்லலையே என நான் கேட்கமாட்டேன். எப்போது பார்த்தாலும் பிரசாதமா என்று நீங்கள் கோபப்படுவீர்கள். ஹா ஹா.

    ReplyDelete
    Replies
    1. அநேகமாய் இப்படி எல்லா ஊர்களிலும் எல்லை தெய்வங்கள் உண்டு நெல்லைத் தமிழரே! அழகர் கோயில் பிரசாத ஸ்டாலில் விற்பது கான்ட்ராக்ட் எடுத்துச் செய்யும் தோசை. பிரசாத தோசை சின்ன வயசில் சாப்பிட்டது. இப்போப் போயிருந்தப்போ பட்டாசாரியாரிடம் கேட்டதுக்கு, "தளிகை ஏற்பாடு பண்ணினால் தோசை போட்டுத் தருவோம்! இங்கிருந்து நாங்க பிரசாதங்களை நேரிடையாக உங்களுக்குத் தருவதற்கு அறநிலையத் துறை அனுமதி இல்லை!" என்றார். ஆனால் திருப்புல்லாணியில் மடப்பள்ளியில் பாயசம் பிரசாதம் தருகின்றனர். ஆனால் அதற்கு அறநிலையத் துறை மூலமாய்த் தான் போகணும். முன் பணம் கட்டிச் சீட்டு வாங்கிக் கொண்டால் (நாம் பாத்திரம் எடுத்துச் செல்லணும். இல்லைனா ஒரு கிண்ணம் அல்லது தம்பளரில் அவங்களே தருவாங்க) பாயசம் கிடைக்கும்.

      Delete
  8. விளக்கத்தை ரசித்துப் படித்தேன்...

    ReplyDelete
  9. மூன்று வகைக் குணங்களை ஒப்புமையோடு விளக்கிய விதம் அருமை.

    ReplyDelete
    Replies
    1. வாங்க முனைவர் ஐயா. நீண்ட நாட்கள் கழித்து வருகை தந்ததுக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  10. பல விஷயங்களை சிறப்பாக சொல்லியிருகிறீர்கள்.

    ReplyDelete