எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, October 18, 2007

கொலு ஏன் வைக்கிறோம்?




பொதுவாக முதல் மூன்று நாட்கள் தேவியை "துர்கை" வடிவிலும், பின்னர் "மஹாலட்சுமி" வடிவிலும், பின்னர் "சரஸ்வதி" வடிவிலும் பூஜை செய்து வருவது வழக்கம். நீரால் சூழப் பட்ட இவ்வுலகம் ஊழிக்காலத்தில் அனைத்து உயிர்களும் இறைவனிடத்தில் ஒடுங்கிய
வேளையில், மது, கைடபர் என்னும் இரு அரக்கர்கள், அடுத்த படைப்புக்காகத் தயார் நிலையில் இருந்த பிரம்மாவைக் கொல்ல முயன்றனர். அவர்கள் அம்பிகையிடம் வாங்கி வந்த வரம் அவர்களுக்கு அவ்வளவு தைரியத்தைக் கொடுத்தது. அப்போது மஹாவிஷ்ணுவானவர் தேவியின் யோகமாயையால் அந்த அசுரர்களைக்
கொன்றது, முதல் மூன்றுநாள். இவளைத் தான் "துர்கை" எவராலும் வெல்ல
முடியாதவள் என வணங்குகிறோம்.

இவ்வுலகம் நீரினால்தான் சூழப் பட்டிருந்தது என்பதைக் குறிக்கும் விதமாயும், நீர் வாழ் ஜந்துக்கள் தான் முதன் முதல் தோன்றியவை என்பதையும் குறிக்கும் விதமாயும், நாம் கொலுவிலும் கீழே தெப்பக்குளம் மாதிரிக் கட்டி அதில் நீர்வாழ் ஜந்துக்களான மீன், ஆமை,
போன்ற பொம்மைகளை மிதக்க விடுகிறோம். இறைவனின் முதல் அவதாரமும் மச்சம் என்று சொல்லப் படும் மீன் தான் என்பதும் குறிப்பிடத் தக்கது.
இவற்றோடுதான் செடி,கொடிகள், மரங்கள், மலைகள் போன்றவையும் இடம் பெறும்.

இரண்டு, மூன்று படிகளில் மற்ற உயிரினங்களான பறவைகள், ஊர்வன, மிருகங்கள் போன்றவையும்,. அதற்கு மேல் ஆதிமனிதர்களைப் போன்ற குறவன், குறத்தி, செட்டியார் பொம்மை, வேடுவன், வேடுவப் பெண்மணி, பாம்பாட்டி போன்றவர்களும் வைக்கப் படுவார்கள். அதற்கு மேல் படியில் சாதாரணமனிதர்களும், ஆதிசங்கரர், விவேகானந்தர், புத்தர், ராகவேந்திரர், ராமானுஜர் போன்ற மகான்களும் இடம் பெறுவார்கள். அதற்கடுத்து படிகளில் தெய்வத்தின் அவதாரங்கள், திருவிளையாடல்களைக் குறிக்கும் பொம்மைகளும், எல்லாவற்றுக்கும் மேல்படியில் அம்பிகையின் கலசமும், அம்பிகையின் உருவப் பொம்மையும் இடம் பெறும்.

மூலாதாரத்தில் இருந்து மேலெழும்பும் குண்டலினி சக்தியானது எப்படி சஹஸ்ராரத்தை அடைகிறதோ, படிப்படியாக அவ்வாறே படிகளையும் வைத்துப் பொம்மைகளையும் வைத்து மனித வாழ்வின் கடைசி எல்லை, பரப் பிரம்மப் பேரானந்தமய நிலையை அடைவது தான்
என்பதைக் குறிப்பால் உணர்த்துவதே கொலுவைப்பதின் உண்மையான தாத்பரியம்.

இறைவனின் பத்து அவதாரங்களும் அவ்வாறே மனிதனின் படிப்படியான வளர்ச்சியைக் காட்டும் விதமாகவே அமைந்துள்ளது. மீனாக, ஆமையாக, பன்றியாக, சிங்கமாக, வடிவெடுத்தவர் ஆதிமனிதனை நினைவு படுத்தும் விதமாய்க் குட்டையான மனிதனாகவும்,
சற்றே கோபமுள்ள பரசுராமனாகவும், சர்வ தகுதிகளும் நிரம்பப் பெற்ற பூரண மனிதன்
ஆன ராமன் ஆகவும், இந்த மாதிரியான மனிதன் அடுத்து அடைவது தெய்வ நிலை
என்பதைக் குறிக்கும் பலராம, கிருஷ்ண அவதாரமாகவும், கடைசியில் அனைத்து உயிர்ச்சக்தியும் ஒடுங்கும் இடம் இறைசக்தியிடமே என்பதைக் குறிக்கும் கல்கி அவதாரம்
கடைசி என்றும் வைத்திருக்கின்றனர் நம் முன்னோர்கள். கொலுவில் இருந்து
எங்கேயோ போயிட்டதாய் நினைக்க வேண்டாம். கொலுவும் தொடரும், இன்னும்
இரண்டு நாள் தானே! வருவேன்!

3 comments:

  1. //மூலாதாரத்தில் இருந்து மேலெழும்பும் குண்டலினி சக்தியானது எப்படி சஹஸ்ராரத்தை அடைகிறதோ, படிப்படியாக அவ்வாறே படிகளையும் வைத்துப் பொம்மைகளையும் வைத்து மனித வாழ்வின் கடைசி எல்லை, பரப் பிரம்மப் பேரானந்தமய நிலையை அடைவது தான்
    என்பதைக் குறிப்பால் உணர்த்துவதே கொலுவைப்பதின் உண்மையான தாத்பரியம். //

    கலக்கறீங்க...

    ReplyDelete
  2. ஆக ராமர் மனிதர் தான் தெய்வ நிலையை அடையவில்லை என்று சொல்லுறீங்க...

    நீங்களும் அரசியல் பேச ஆரம்பிச்சிட்டிங்க போல இருக்கேன்...

    சிவ... சிவா..

    ReplyDelete
  3. மெளலி, ரொம்பப் பேருக்குக் கொலுவின் உண்மையான தத்துவம் புரியலை, அதான்! :D

    @சிவா, ராமர் ஒரு நாளும், ஒரு சமயத்திலும் தன்னை "இறைவன்" எனச் சொல்லிக் கொண்டதில்லை. கம்பராமாயணத்தில் கம்பரும், துளசி ராமாயணத்தில் துளசிதாசரும் அவ்வாறு பக்திப் பரவசத்தில் மூழ்கி எழுதி இருக்கிறார்கள். இது பற்றியும் ஒரு தொடர் விரைவில் எழுதும் எண்ணங்களுடன்.

    ReplyDelete