எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, October 19, 2007

யாதுமாகி நின்றாள் அன்னை!






மஹிஷனைப் போலவே "சும்ப, நிசும்பர்"களும் தேவர்களை வெற்றி கொண்டு அதன் காரணமாக மமதையால் அனைவரையும் துன்புறுத்தினர். இவர்களும் "பெண்" என்றால் துச்சமாகக் கருதினார்கள். ஏற்கெனவே அதீத பலம் பெற்ற இவர்களுடன், சண்டன், முண்டன், குரூரன், ரக்தபீஜன், தூம்ரலோசனன் ஆகியோரும் சேர்ந்து கொண்டனர்.
இவர்களின் தொல்லை அதிகம் ஆயிற்று. ஒளிந்து வாழ வேண்டிய நிலைக்கு ஆளாயினர் தேவாதிதேவர்கள். தீமையும், நன்மையும் சமனாக இருக்க வேண்டிய பூமியில் தீமை ஓங்கவே தேவர்கள் தங்கள் குருவான பிரகஸ்பதியின் துணையுடன் அம்பிகையைப் பிரார்த்திக்கலாயினர். எப்படி என்றால் :


எல்லா உயிர்களிடத்தும் "விஷ்ணுமாயை" ஆனவளும்,
அனைத்து உயிர்களிடத்தும் "சைதன்ய" வடிவானவளும்,
"புத்தி" வடிவானவளும்,
"நித்திரை" வடிவானவளும்,
"பசி" வடிவானவளும்,
"நிழல்" வடிவானவளும்,
"சக்தி" வடிவானவளும்,
"ஆசை" வடிவானவளும்,
"பொறுமை" வடிவானவளும்,
"ஜாதி" வடிவானவளும்,
"வெட்கம்" வடிவானவளும்,
"அமைதி" வடிவானவளும்,
"சிரத்தை" (திட நம்பிக்கை) வடிவானவளும்,
"ஒளி" வடிவானவளும்,
"செல்வம்" வடிவானவளும்,
"தொழில்" வடிவானவளும்,
"நினைவு" (ஞாபகசக்தி) வடிவானவளும்,
"கருணை" வடிவானவளும்,
"திருப்தி" வடிவானவளும்,
"தாய்" வடிவானவளும்
:ஞானம்" வடிவானவளும்,
ஐம்புலன்களையும் அடக்கி ஆளும் வல்லமை பெற்றவளாயும் விளங்கும் தேவிக்கு நமஸ்காரம்."

என்று தேவியின் ஒவ்வொரு வடிவையும் தனித்தனியாகக் குறிக்கும் தோத்திரத்தால்
தேவியை வணங்கிப் பூசிக்கவே, மனம் மகிழ்ந்த தேவியானவள், தன்னிலிருந்து
தோற்றுவிக்கப் பட்ட "கெளசிகி"யின் காந்தியால் சும்ப, நிசும்பர்களைக் கவர்ந்தாள். கெளசிகியின் இனிய கானத்தால் அசுரர்கள் கவரப் பட்டனர். அவளைத் திருமணம் செய்து கொள்ள ஆசைப் பட்ட சும்ப, நிசும்பர்கள் அவளுக்குத் தூது அனுப்பினார்கள். தேவி
அப்போது அந்தத் தூதுவனிடம் தான் தன்னால் வெல்லப் பட்டவனையே திருமணம் செய்து கொள்ள நிச்சயித்திருப்பதாய்க் கூறினாள். கோபம் கொண்ட தூதுவன் திரும்பி வந்து சும்ப,
நிசும்பர்களிடம் நடந்ததைக் கூறினார்கள். அவனும் முதலில் தூம்ரலோசனன், சண்ட,
முண்டர்கள், ரக்த பீஜன், பின்னர் நிசும்பன், கடைசியில் சும்பன் என்று வரிசைகிரமமாக
வந்து தாயைப் பெண்டாள நினைத்த தங்கள் துர் எண்ணத்தால் அன்னையால் வதம் செய்யப் பட்டனர்.

மனம் மகிழ்ந்த தேவர்கள் எவ்வாறு ஒரு விதையில் இருந்து செடியானது, மரமாகி,
இலை, கிளைகளுடன், பூ, காய், கனியாகிப் பெரிய விருட்சமாகிறதோ அது போலப்
புவனேஸ்வரியான அந்த சக்தி பீஜத்தில் இருந்து தோன்றிய தேவியர்களே இத்தனை
வடிவங்களும் எனத் தெளிந்து கொண்டனர். தேவியைப் பலவாறு துதித்துப்
போற்றினார்கள்.

உலகுக்கு அன்னை அவளே!
அவளே நாராயணி,
அவளே ஸ்ரீவித்யா!
அவளே ஸ்ரீகெளரி,
அவளே கெளமாரி,
அவளே காத்யாயினி,
அவளே மஹாலட்சுமி,
அவளே சரஸ்வதி,
அவளே பரப்பிரும்மம். அனைத்துக்கும் ஆதாரமாயும், அனைத்திலும் நிறைந்திருப்பவளும், அனைத்துக்கும் உயிர் கொடுப்பவளும், அனைத்தையும் காப்பவளும், அனைத்தையும் அழித்துத் தன்னில் ஒடுங்கச்செய்பவளும் அவளே! அந்த ஆதிசக்தியை வணங்கிப்
போற்றுவோம்.

"ஆதிப்பரம்பொருளின் ஊக்கம் - அதை
அன்னை எனப் பணிதல் ஆக்கம்:
சூதில்லை காணுமிந்த நாட்டீர் - மற்றத்
தொல்லை மதங்கல் செய்யும் தூக்கம்.

மூலப் பழம்பொருளின் நாட்டம் -இந்த
மூன்று புவியும் தன் ஆட்டம் :
காலப் பெருங்களடஹ்தின் மீதே - எங்கள்
காளி நடமுலகக் கூட்டம்.

காலை இளவெயிலின் காட்சி -அவள்
கண்ணொளி காட்டுகின்ற மாட்சி:
நீல விசும்பினிடை இரவில் -சுடர்
நேமி யனைத்துமவள் ஆட்சி.

நாரணனென்று பழவேதம் -சொல்லும்
நாயகன் சக்தி திருப்பாதம்:
சேரத் தவம் புரிந்து பெறுவார் இங்குச்
செல்வம் அறிவு சிவபோதம்.

ஆதி சிவனுடைய சக்தி -எங்கள்
அன்னையருள் பெறுதல் முக்தி:
மீதி உயிரிருக்கும்போதே - அதை
வெல்லல் சுகத்தினுக்கு யுக்தி.

பண்டை விதியுடைய தேவி -வெள்ளைப்
பாரதி யன்னையருள் மேவி,
கண்ட பொருள் விளக்கும் நூல்கள் -பல
கற்றலில்லாதவனோர் பாவி.

மூர்த்திகள் மூன்று, பொருள் ஒன்று -அந்த
மூலப் பொருள் ஒளியின் குன்று:
நேர்த்தி திகழும் அந்த ஒளியை - எந்த
நேரமும் போற்று சக்தி என்று."

-சுப்ரமணிய பாரதியின் இந்த "சக்தி விளக்கம்' கவிதையைப் பார்த்துத் தான் எழுதி இருக்கேன்.

3 comments:

  1. ஒரே மூச்சா உட்கார்ந்து எழுதியாச்சு, இனி விஜயதசமி தான். பார்த்தன் தன்னுடைய அஞ்ஞாத வாசத்தில் இருந்து வெளியே வந்து தன்னுடைய ஆயுதங்களை ஒளித்து வைத்திருந்த வன்னிமரத்தில் இருந்து எடுத்துப் பூஜித்த நாள் "ஆயுதபூஜை"யாகவும், அவன் போருக்குப் புறப்பட்ட நாள் "விஜயதசமி"யாகவும் கொண்டாடப் படுவதாய் ஐதீகம். இது பற்றி வேறு சில கருத்துக்களும் உண்டு. அவற்றோடு பின்னர் சந்திக்கும் எண்ணங்களுடன்

    ReplyDelete
  2. ஆஹா! ஒரு முடிவோடு தான் இருக்கீங்க போல. உங்கள் மின்னல் வேக தட்டச்சுக்கு தலை வணங்கும் இந்த நேரத்தில், வீட்டு சமையல், மற்றும் சுண்டல் பொறுப்பை கவனிக்கும் சாம்பு மாமாவுக்கும் என் வந்தனங்கள். :p

    ReplyDelete
  3. ஒவர் ஸ்பீடா இருக்கீங்க....

    ஒன்னும் சொல்லுறதுக்கு இல்ல....

    அந்த பிற கருத்துக்களையும் சொல்லி முடிச்சுடுங்க....

    ReplyDelete