எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, March 19, 2014

முதல் பரிசை வாங்கிக் கொடுத்த ஆப்பிள்கன்னங்களும், அபூர்வ எண்ணங்களும் விமரிசனம்!

இதுவும் உளவியல் ரீதியான கதையே. பதின்ம வயதுப் பெண்ணின் மனமும், ஆணின் மனமும் இயங்கும் விதம் குறித்து எழுதப் பட்டுள்ளது. பெண் சகஜமாய்ப்பழகுவதாலேயே அவள் மனம் இப்படித் தான் என நிர்ணயிப்பது கடினம். அதையே இந்தக் கதையும் சுட்டிக் காட்டுகிறது. தேனை அருந்த வண்டு மலரை மொய்க்கிறது.  அருந்தவும் ஆரம்பிக்கிறது. ஆனால் ஆதவனைக் கண்டதும் மலர்ந்த மலரோ, ஆதவன் மறைந்ததும் கூம்பி விடுகிறது.  இதை அறியாத வண்டோ பூவுக்குள் மாட்டிக் கொள்கிறது. அது நினைப்பதோ தான் மலரின் மனதில் இடம் பெற்றிருப்பதாகவே.  ஆனால் அதுவோ மலரின் மனதுக்கு அருகே கூடச் செல்லவில்லை. மலரின் கைக்குள் சிக்கிக் கொண்டு அதன் தாங்க முடியா காதல் வெள்ளத்திற்கு ஒரு தடுப்புச் சுவராகவே பயன்படுகிறது  இதை அறியா வண்டோ மலரின் மணம் புவியெங்கும் பரவுவதை உணராமல் தனக்காகவே மணம் வீசுவதாக நினைக்கிறது.

சிறு வயதில் இருந்தே ஒன்றாகப் பழகியவர்கள் ஸ்ரீநிவாசனும் ஜெயஸ்ரீயும். குழந்தை முதல் ஒன்றாகவே பழகியதால் ஜெயஸ்ரீ ஸ்ரீநிவாசனை ஒரு ஆணாகவே நினைக்கவில்லை, அல்லது நினைத்தாலும், புரிந்தாலும் அவள் மனம் பளிங்கு போல் இருப்பதால் கல்மிஷம் இல்லாமல் பழகி வருகிறாள்.  இங்கே ஜெயஸ்ரீ பழகுவது ரகசியமாகவே இல்லை,  இரு தரப்புப் பெற்றோருக்கும் தெரிந்தே என்பதில் இருந்து பெற்றோரும் தவறாகவே நினைக்கவில்லை எனப் புரிகிறது.   ஜெயஸ்ரீ தன் வழக்கப்படி டெய்லரிடம் தன் ரவிக்கையின் சின்ன சின்ன மாறுதல் செய்யக் கூட ஸ்ரீநிவாசனிடம் கொடுத்து அனுப்புகிறாள்.

முதலில் எல்லாம் அவள் கொழு மொழு கன்னங்களின் அழகில் மயங்கிய ஸ்ரீநிவாசனுக்கு நாளாக, ஆக, அவள் உடலின் மாற்றங்கள் கண்களை மட்டுமில்லாமல் மனதையும் ஈர்க்கிறது.  அவள் வயதுக்கு வந்திருக்கும் விஷயமே புரியாத அளவுக்கு வெகுளியான ஸ்ரீநிவாசனுக்கு அவள் உடலின் மாற்றங்கள் விளைவிக்கும் விபரம் தெரியா உணர்ச்சிகள் புரியாத புதிராகவே இருக்கிறது.

ஸ்ரீநிவாசன் அளவுக்கு ஜெயஸ்ரீ வெகுளி யே அல்ல என்பது டெய்லரைக் குறித்த அவள் விமரிசனத்திலும், ஸ்ரீநிவாசனை விபரம் தெரியாத முட்டாள் என்பதிலும் தெரிந்தாலும், அவள் மனதில் ஸ்ரீநிவாசன் இடம் பெறவே இல்லை என்பதும், அவள் ஒரு சகோதரன் போலவோ, அல்லது நல்லதொரு நண்பனாகவோ தான் கருதி  வருகிறாள் என்பதும் தெரிகிறது.  ஸ்ரீநிவாசனின் மனதில் தான் சலனத்தைக் கிளப்பி விட்டிருக்கிறோம் என்பதை அவள் சற்றும் உணரவே இல்லை.  அப்படி உணர்ந்திருந்தால் அவனைத் துணைக்கு அழைத்துக் கொண்டு  எங்கும் சென்றிருக்க மாட்டாளே.

ஒரு தோழியாக, சிநேகிதியாக, எல்லாவற்றுக்கும் மேல் சகோதரியாக, தாயாக என ஜெயஸ்ரீ அவனிடம் நடந்து கொள்கிறாள்.  அது தான் அவள் அவன் பசி பார்த்து வயிறு முட்ட உணவு வாங்கிக் கொடுக்கும்படி நடந்து கொள்வது காட்டுகிறது. இதில் காதல் என்னும் பேச்சுக்கே இடம் இல்லை.   ஆனால் ஸ்ரீநிவாசனுக்கு வயது காரணமாகவும் இயல்பாகவே ஆண், பெண் மாற்றுப் பாலினத்திடம் உள்ள ஈர்ப்புக் காரணமாகவும் அவளிடம் இனம் தெரியா உணர்வு பூர்வமான பாசம் தோன்றுகிறது. இது தான் காதலோ என்றெல்லாம் யோசிக்கிறான்  ஸ்ரீநிவாசன்.  படிப்பில் சுமார் ரகமான அவன் அவள் படிப்பிற்கும், அழகுக்கும் தான் தகுதியா என்ற்ல்லாம் யோசித்து அவளை எவ்விதத்திலேனும் கவர எண்ணுகிறான்.

சிறு வயதிலிருந்தே ஓவியம் வரைவதில் தேர்ச்சி பெற்றிருந்த ஸ்ரீநிவாசன், ஜெயஸ்ரீக்குப் படங்கள் வரைந்து உதவி செய்த ஸ்ரீநிவாசன், இப்போது ஜெயஸ்ரீயைக் கவர்வதற்காகவும் தன் முழுத் திறமையும் காட்டி அவன் மிகவும் ரசிக்கும் ஜெயஸ்ரீயின் ஆப்பிள் கன்னங்களை நன்றாகத் தெரியும்படி அவள் படத்தை மிக அழகாக வரைந்து ரசிப்பதோடு அல்லாமல் அவள் மேல் கொண்டிருக்கும் காதல் வெளிப்படும் வண்ணம் கடையில் இருந்து வாங்கி வந்த ஆப்பிள் பழத்தோடு அவள் கன்னங்களை ஒப்பிட்டு ரசிக்கிறான்.  இது அவள் மேல் அவன் கொண்டிருக்கும் காதலின் வெளிப்பாடு என நினைப்பு வந்தாலும், அடுத்து அவன் செய்யும் காரியம் ஒருவேளை இது வாலிப வயதில் அனைத்துப் பதின்ம வயது விடலை வாலிபருக்கும் பெண்ணின் கவர்ச்சியான உடல் மீது தோன்றும்  ஈர்ப்போ என்னும் எண்ணமும் வருகிறது.

அந்த ஆப்பிளைக் காதலின் சின்னமான இதய வடிவில் வெட்டித் தான் வரைந்த ஓவியத்தின் கன்னங்களின் மீது வைத்து அதைக் கடித்து ருசி பார்க்கிறான். இங்கே தான் கொஞ்சம் சந்தேகம் வருகிறது இது வெறும் உடல் ஈர்ப்புத் தானோ என. பொதுவாக இந்த வயதிலேயே எல்லா ஆண், பெண்ணிற்கும் ஒருவர் மீது ஒருவருக்குத் தோன்றும் ஈர்ப்புத் தான் என உறுதியாகவும் ஆகிறது.

விபரம் புரியா வயது. பெண்ணின் உடல் காட்டும் கோணங்கள், சுண்டி இழுக்கும் பார்வை, சகஜமான பேச்சு எல்லாம் சேர்ந்து அவன் மனதில் புதியதோர் உலகமே சிருஷ்டி ஆகிறது.  அந்த ஓவியத்தைத் தன் தாயிடம் மறைக்காமல் காட்டி விடுகிறான்.  இங்கே அவன் போடும் கணக்கு, தாய்க்குத் தெரியட்டும் என்பதாகவும் இருக்கலாம். தாயின் மூலம் அவளிடம் தான் கொண்டிருக்கும் காதலைத் தெரிவிக்கலாம்.  இரு தரப்புப் பெற்றோரும் நெருங்கிய நண்பர்கள் ஆதலால் சுலபமாகத் தன் ஆசை நிறைவேறும் என்ற மனக்கோட்டையாகவும் இருக்கலாம். இத்தனைக்கும் பின்னரே அவள் தன் ரவிக்கையை ஆல்டர் செய்ய அவனிடம் கொடுத்து அனுப்புகிறாள்.  அவனைப்பொறுத்தவரை அவள் காலால் இட்ட வேலையைத் தலையால் செய்யும் நிலைமையில் இருந்தான். அதோடு அவள் ரவிக்கையைத் தொடுவதும் அவனுக்கு அவளையே தொடுவது போன்ற உணர்வையும் தந்திருக்கலாம்.

ஆனால் டெய்லர் தூக்கிப் போடும் குண்டில் அவனுக்கு அதிர்ச்சி ஏற்படுகிறது.  அவன் கண்ணுக்கு இனிய காதலி யாருடனோ சுத்துவதாக டெய்லர் சொல்லக் கேட்ட அவனுக்கு ஒரே திகைப்பு.  அவளிடம் காதலைத் தெரிவித்துவிட வேண்டும் என முடிவு செய்தும் ஏனோ தயங்குகிறான். அவளே ஏதேனும் சொல்லுவாளோ என்னும் எண்ணம். ஆனால் அவளோ இவனைக் குறித்தோ இவன் எண்ணங்களைக் குறித்தோ நினைக்கவே இல்லை.  அவனும் மழுப்பலாகப் பேசி விட்டு வீடு திரும்பிப் படத்தைப் பூர்த்தி செய்து தன் தாயிடம் காட்டி ஒப்புதலும் வாங்கி விட்டான். அவள் பிறந்த நாள் பரிசாகக் கொடுக்க வேண்டும் எனத் தாய் சொல்ல அவனும்  காத்திருந்து அவள் பிறந்த நாளுக்குத் தன் தாயோடு அந்தப் படத்தையும் அழகாகப் பரிசுப் பாக் செய்து எடுத்துச் சென்றால்!

சென்றவனுக்கு ஒரே அதிர்ச்சி காத்திருக்கிறது. அவள் அத்தை பிள்ளை, முறை மாப்பிள்ளை வந்திருக்கிறான். காதலுக்கு அவன் வில்லனோ என்று பார்த்தால் கடவுளே, அவன் தான் கதாநாயகன்,  நம் ஸ்ரீநிவாசன் வெறும் தோழனே. ஜெயஸ்ரீ சுற்றியதெல்லாம் அந்த அத்தை பிள்ளையோடு தான் என்பதும், இருவருக்கும் திருமணம் ஏற்கெனவே நிச்சயம் செய்யப்பட்டு விட்டது எனவும் தெரிந்து கொள்கிறான். ஜெயஸ்ரீயின் அத்தை பிள்ளையின் கம்பீரத்தையும், அழகையும், படிப்பையும், வேலையையும் பார்த்துவிட்டு ஜெயஸ்ரீயின் அழகுக்கும், படிப்புக்கும்  இவனே ஈடு கொடுக்கக் கூடியவன் என்ற சத்தியமான உண்மை ஸ்ரீநிவாசனுக்குப் புரிகிறது.  தான் கொண்டு வந்த பரிசைக் கூடக் கொடுக்காமல் பிரமையுடன் இருக்கும் அவனிடம் இருந்து அதை வாங்கிப் பார்த்த ஜெயஸ்ரீ ஆச்சரியம் அடைவதோடு வருங்காலக் கணவனிடமும் காட்டி மகிழ்கிறாள்.


அவள் தன்னைப் பற்றி அவனிடம் கூறி இருப்பதை அந்த மாப்பிள்ளை மூலமே அறிந்து கொண்ட ஸ்ரீநிவாசன் இப்போது அவள் துளியும் கல்மிஷமில்லாமல் தான் வரைந்து வந்த படத்தைக் கூட வருங்காலக் கணவனிடம் மறைக்காமல் காட்டி மகிழ்வதைக் கண்டதும் அவள் மனதில் தான் இருக்கும் இடம் என்னவென்று புரிந்து கொள்கிறான். ஸ்ரீநிவாசன் மனதில் இத்தனை நாட்கள் மறைந்திருந்த அன்பெனும் சூரியன் இப்போது ஆசை என்னும் மேகத்திலிருந்து வெளி வந்து பளிச்செனப் பிரகாசிக்க அவன் மனதிலும் தெளிவு பிறக்கிறது.  ஆனாலும் படத்தை மாட்ட அடிக்கும் சுத்தியலில் இருந்து பறந்து வந்த ஆணி அவன் நெற்றியில் மோதியதை எவருமே கவனிக்காத மாதிரி அவன் மனதிலும் சிறு வலி ஒன்று ஏற்படுகிறது. இதையும் எவரும் அறியவே முடியாது.  கோடையில் தெரியும் மேற்கு வானின் மின்னல் போல் ஸ்ரீநிவாசன் மட்டுமே அறிவான். நாளாக ஆக அந்த வலி மறையும். ஸ்ரீநிவாசனுக்கு என ஒருத்தி வருகையில்.  அது வரை அவன் காத்திருக்கத் தான் வேண்டும் என்றாலும் இந்த முதல் காதல் அவனால் மறக்க முடியாத ஒன்றாகி விட்டது.


வைகோ சார் திரும்பத் திரும்ப என்னைத் தொந்திரவு செய்து எழுத வைக்கலைனா எழுதி இருப்பேனானு சந்தேகமே. ஆனால் என்னுடையதை விடவும் மற்றவர்கள் விமரிசனங்கள் இன்னமும் சிறப்பாகவே அமைந்திருந்தன. அனைவருக்கும் மீண்டும் வாழ்த்துகள். இதில் என்னை விடாப்பிடியாகப் பங்கு பெற வைக்கும் வைகோ சாருக்கு என் நன்றி.

28 comments:

  1. கதை அழகு என்றால் நீங்கள் விமர்சனம் செய்யும் அழகு இன்னும் மேல். எத்தனை காதல்கள் அரங்கேறாமல் இப்படியும் நடக்கின்றன. இத்தனை உளநலம் தெரிந்து அருமையாக எழுதி இருக்கிறீர்கள் கீதா. எழுதியவருக்கும் விமர்சனம் செய்து பரிசு பெற்ற உங்களுக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. வைகோ ஐயாவிற்குத் தான் முதலில் நன்றி...

    உங்களுக்கு பாராட்டுக்கள் மட்டும் தான்... ஹிஹி...

    வாழ்த்துக்கள் அம்மா...

    ReplyDelete
  3. உங்களின் தகவலுக்கு :

    http://dindiguldhanabalan.blogspot.com/2014/03/Clay-Man.html

    ReplyDelete
  4. மிக அருமையான விமர்சனம்! கதையை படிக்கவில்லை! படிக்கத்தூண்டுகிறது விமர்சனம்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. அருமையான அழகான மன இயல்ரீதியாக ஒருபக்க ஈர்ப்பை சொல்லும் காதல் கதையின் விமர்சனம் மிக அருமை.
    வை,கோ சாருக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. மனம் நிறைந்த பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    முதல் பரிசினை வென்ற இந்த இனிய செய்தியை தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளதற்கு என் நன்றிகள்.

    மேலும் மேலும் இதே போட்டிகளில் தொடர்ந்து கலந்துகொண்டு, மேலும் பல பரிசுகளைத் தாங்கள் வென்றிட வேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறேன்.

    அன்புடன் கோபு [VGK]

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள் கீதா மேடம்.

    ReplyDelete
  8. //ஆனால் என்னுடையதை விடவும் மற்றவர்கள் விமரிசனங்கள் இன்னமும் சிறப்பாகவே அமைந்திருந்தன. //

    இந்த உணர்வு தான் இன்னும் இன்னும் எதையும் சிறப்பாகச் செய்ய நம்மை ஊக்குவிக்கும் போலிருக்கு.
    போதாக்குறைக்கு 'இப்படியெல்லாம் முயற்சி செய்து எழுதினால், பரிசு நிச்சயம்' என்கிற மாதிரி வை.கோ சார் வேறே எழுதுவதற்கு டிப்ஸ்லாம் கொடுத்து ஊக்குவிக்கிற மாதிரி இருக்கே!

    ரெண்டு மூணு தடவை பரிசு பெற்ற நீங்கள் இதுவரை பரிசு பெறாதவர்களை ஊக்குவிக்கிற மாதிரி பரிசு பெற உபயோகமான ஏதாவது guidelines சொல்லிக் கொடுத்து உதவக்கூடாதா?..

    ReplyDelete
  9. வாங்க வல்லி. பாராட்டுக்கு நன்றி.

    ReplyDelete
  10. வாங்க டிடி, உண்மைதான். வைகோ சாருக்குத் தான் நன்றி சொல்லணும். :))))

    ReplyDelete
  11. சொன்னதுமே வந்து (அதிசயமா) உங்க பதிவைப் படிச்சுட்டுப் பின்னூட்டமும் போட்டுட்டேன்.

    ReplyDelete
  12. வாங்க தளிர் சுரேஷ், கதையைப் படிச்சிருப்பீங்கனு நினைக்கிறேன். :)

    ReplyDelete
  13. வாங்க கோமதி அரசு, வாழ்க்கையின் ஒவ்வொரு கணங்களையும், நுணுக்கமாகப் பார்ப்பதோடு மற்றவர் பார்வைகளிலும் வைகோ சார் பார்க்கிறார். பதின்ம வயதுப் பிள்ளையின் ஆசா,பாசங்களைக் குறித்து நன்கு புரிந்து வைத்திருக்கிறார்.

    ReplyDelete
  14. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி வைகோ சார்.

    ReplyDelete
  15. வாங்க ஶ்ரீராம், ரொம்ப பிசி போல, ஒரே வார்த்தையில் பின்னூட்டம்! :)))

    ReplyDelete
  16. நன்றி ராஜலக்ஷ்மி மேடம். நீங்கள் எழுதுவதும் நன்றாகவே இருக்கிறது.

    ReplyDelete
  17. வாங்க ஜீவி சார், உண்மையிலேயே மூன்றாம், இரண்டாம் பரிசு விமரிசனங்கள் நன்றாகவே இருந்தன. அவ்வளவுக்கெல்லாம் எனக்கு எழுத வரலை! :))) மற்றபடி அனைவருமே சிறப்பாக எழுதுகிறார்கள். பரிசு பெறாதவர்களை ஊக்குவிக்கலாம். ஆனால் வழிகாட்டும் அளவுக்குத் தகுதி எனக்கிருப்பதாக நான் நினைக்கவில்லை. :)))))

    பொதுவாகக் கதையின் மையக்கரு, நிகழ்வு நடக்கும் சூழ்நிலை போன்றவற்றைப் பார்த்து நான் எழுதுகிறேன். ஆரம்பத்தில் 200 வார்த்தைகள் தான் இருக்கணும்னு நினைச்சுச் சுருக்கமாய்த் தான் கொடுத்தேன். அப்புறமா இரண்டு மூன்று கதை விமரிசனங்கள் படிச்சப்புறமாத் தான் எனக்கு எப்படி எழுதணும்னு புரிய வந்தது. :))))

    ReplyDelete
  18. சிறப்பான விமர்சனம்.

    வை.கோ. அவர்களின் தளத்திலேயே படித்தேன்.....

    பரிசு பெற்றமைக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  19. //பொதுவாகக் கதையின் மையக்கரு, நிகழ்வு நடக்கும் சூழ்நிலை போன்றவற்றைப் பார்த்து நான் எழுதுகிறேன். ஆரம்பத்தில் 200 வார்த்தைகள் தான் இருக்கணும்னு நினைச்சுச் சுருக்கமாய்த் தான் கொடுத்தேன். அப்புறமா இரண்டு மூன்று கதை விமரிசனங்கள் படிச்சப்புறமாத் தான் எனக்கு எப்படி எழுதணும்னு புரிய வந்தது. :))))//

    கரெக்ட்! இது தான் சரியான சுயவிமரிசனம். அந்த விமரிசனப் போட்டியைப் பொருத்த மட்டில் ரமணி சாருக்கும் எப்படி விமரிசனங்கள் எழுதினால் நன்றாக அமையும் என்பது பற்றி இப்படியான ஒரு புரிதல் இருப்பதினால் தான் உங்களைப் போல அவரும் தொடர்ச்சியாக வெற்றி வாகை சூடுகிறார் என்று நினைக்கிறேன்.

    சட்டியில் இருப்பது தானே அகப்பையில் வரும்?.. வந்த விமரிசங்களுக்குள் தானே தேர்வு?இந்த மாதிரி சிறப்பாக விமரிசனம் எழுதக் கூடியவர்களின் எண்ணிக்கை கூடி அவர்களும் இந்த விமரிசனப் போட்டியில் கலந்து கொள்வார்களே ஆனால் பரிசு பெறும் வெற்றியாளர்களின் லிஸ்டில் பார்த்த பெயர்களையே பார்க்கிற நிலையும் மாறும் புதுமையான புதுசு புதுசாக பலரின் விமரிசனங்களை படிக்கும் வாய்ப்பும் பலருக்கு கிட்டும், இல்லையா?

    நிறைய பேர்களை எழுத வைக்க உங்கள் வெற்றிகள் வழிகாட்டுமானால் அதுவே பதிவுலகம் கொண்டாடக் கூடிய ஒரு நிகழ்வு இல்லையா?..

    அந்த எண்ணத்தில் தான் சொன்னேன். உங்களைப் போன்ற நன்றாக எழுதக்கூடிய பலரின் எழுத்துக்களைப் படிக்க வேண்டும் என்கிற ஆசையில் தான் சொன்னேன். தங்கள் மறுமொழிக்கு மிக்க நன்றி, கீதாம்மா.

    ReplyDelete
  20. வாங்க வெங்கட், பாராட்டுக்கு நன்றிப்பா.

    ReplyDelete
  21. @ஜீவி சார்,

    உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி. வ.வா.பி.ரி. :))))சந்தோஷமாய் இருக்கு.

    ஆனால் ஒரு விஷயம். வந்த விமரிசனங்களுக்குள் தான் தேர்வு என்றாலும் யார் எந்த விமரிசனம் எழுதி இருக்கிறார்கள் என்பது குறித்து நடுவருக்குத் தெரியாது. ஆகவே திரும்பத் திரும்ப ஒருவரே தேர்வாவது அவருக்கே வெளியான பின்னர் தான் தெரியவரும். :))) ஒருவேளை எழுத்து நடையின் மூலம் அறியலாமோ என்னமோ! :))))

    ReplyDelete
  22. மற்றபடி நான் படித்தவரை விமரிசனங்கள் எழுதி இருப்பது கதையை ஒவ்வொருவரும்பார்க்கும் மாறுபட்ட கோணத்திலேயே இருக்கிறது.

    ReplyDelete
  23. //ஆனால் ஒரு விஷயம். வந்த விமரிசனங்களுக்குள் தான் தேர்வு என்றாலும் யார் எந்த விமரிசனம் எழுதி இருக்கிறார்கள் என்பது குறித்து நடுவருக்குத் தெரியாது. //

    அப்படியா?..

    //ஆகவே திரும்பத் திரும்ப ஒருவரே தேர்வாவது அவருக்கே வெளியான பின்னர் தான் தெரியவரும். :)))//

    பாவம் நடுவர்!

    அப்போ விதவிதமாய் புதுசு புதுசாய்
    மாறுபட்ட விமரிசனங்களை நாம் படிக்க வேண்டுமானால், இது வரை இந்த விமரிசனப் போட்டியில் கலந்து கொள்ளாத இன்னும் பலர் கலந்து கொள்ள வேண்டும் போலிருக்கு.
    பதிவுலகில் தான் சிறப்பாக எழுதக்கூடியவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்?.. எத்தனை எழுத்தாளர்கள்?.. உங்களுக்குத் தெரிந்த திறமைசாலிகளின் காதுகளில் தான் இந்த போட்டி பற்றி கிசுகிசுத்து வையுங்களேன். எல்லாம் நிறைய பேரின் கற்பனை ஆற்றலை பார்க்க படிக்க சந்தர்ப்பம் கிடைக்குமே என்பதற்காகத்தான்.. :))

    ReplyDelete
  24. //விமரிசனங்கள் எழுதி இருப்பது கதையை ஒவ்வொருவரும்பார்க்கும் மாறுபட்ட கோணத்திலேயே இருக்கிறது.//

    என்ன தான் மாறுபட்ட கோணமாக இருந்தாலும், இந்த பெயர் இருக்கிறதே அது தான் எல்லாத்தையும் மறைத்துக் கொண்டு முன்னாடி முன்னாடி நிற்கும். என்ன சொல்கிறீர்கள்?..

    ReplyDelete
  25. @ஜீவி சார், இதோ வைகோ சார் கொடுத்த போட்டி விதிகள் உள்ள பதிவின் சுட்டி. அதிலே குறிப்பிட்டிருக்கிறார் பாருங்க, நடுவர் யார்னு விமரிசனம் எழுதறவங்களுக்கோ, விமரிசனம் யாரோடதுனு நடுவருக்கோ தெரியாதுனு! :)))) அதன் சுட்டி.

    இங்கே

    ReplyDelete
  26. என் சுற்று வட்டத்தில் உள்ள பல திறமைசாலிகளும் ஏற்கெனவே வைகோ சாரின் பதிவுகளை ஏற்கெனவே அறிந்தவர்கள். ஆகையால் புதுசா யாரையும் எனக்குத் தெரியலை. அவருக்கே எக்கச்சக்கமான பின்னூட்டங்கள் வருதே! :))))) என்னோட வட்டம் ரொம்பச் சின்னது. :))))அதிலே உள்ளவங்களும் வைகோ சாரின் பதிவுகளைப் படிக்கிறாங்க.

    ReplyDelete
  27. பதில்களுக்கும் கொடுத்திருந்த தகவல் சுட்டிக்கும் மிகுந்த நன்றி, கீதாம்மா.

    பார்ப்போம். இனி யாரெல்லாம் பரிசு பெறுகிறார்கள் என்று பார்ப்பதை விட யாரெல்லாம் எப்படிலாம் புதுமையா எழுதியிருக்காங்கன்னு படிக்கறதிலே ஆர்வம் கூடியிருக்கு.

    மீண்டும் நன்றிகள்.

    ReplyDelete