எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, March 22, 2014

காஃபி வித் கீதா!

இங்கே

மேற்கண்ட சுட்டியில் ஏற்கெனவே நான் காஃபி குடிக்க ஆரம்பிச்ச கதையை எல்லாம் எழுதிட்டேன். இந்தக் காஃபி இந்தியாவுக்கு எப்போ வந்தது?  அதைக் குறித்த ஒரு ஆராய்ச்சி மேற்கொண்டேன்.

இந்தக் காஃபி குறித்துக் கொஞ்சம் ஆராய்ச்சி செய்ததில் காஃபி குடும்பம் ரொம்பவே பெரிசுனு சொல்றாங்க.  இவங்கள்ளே 611 பெருசுங்களும் 13,100 சிறிசுங்களும் இருக்காங்களாம்.  ஆனால் இந்தியாவிலே  76 பெரிசுங்களும், 274 சிறிசுங்களும் தான் இருக்காங்களாம். காஃபி மரத்திலிருந்து எடுக்கப்படும் விதைகள் தான் காஃபிக் கொட்டை ஆகும். உலக அளவில் மிகப் பெரிய வணிகச் சந்தையைக் கொண்டது காஃபி. இதன் முன்னோர்கள் என்று பார்க்கப் போனால் விக்கி எதியோப்பியானு சொல்லுது.  அங்கே ஆடு மேய்ப்பவன் ஒருத்தன் ஆடு மேய்க்கையில் ஆடுகள் ஒருவிதச் சிவப்பு நிறப் பழங்களைச் சாப்பிட்டு உற்சாகம் கொண்டு துள்ளிக் குதிக்க அவனும் அந்தப் பழங்களைப் பறிச்சுச் சாப்பிட்டானோ, கொட்டையை உடைச்சுத் தின்னானோ தெரியலை. அதான் காஃபினு சொல்றாங்க.

முதல் முதல் அரேபியாவில் சதுரங்கள் விளையாடும் இடங்களில், கேளிக்கை விடுதிகளில் என்று பிரபலமான இடங்களில் தான் காஃபி கேன்ஸ் எனப்படும் காஃபிக் கடைகள் ஆரம்பிக்கப்பட்டனவாம். மெக்கா என்றும் சிலர் சொல்கின்றனர். காஃபி குடித்தால் ஏற்படும் புத்துணர்ச்சியால் கடைகள் மட்டுமின்றி காஃபி குடிப்பவர்களும் பெருகினார்கள்.  ஐரோப்பியன் காஃபி 1683 ஆம் ஆண்டில் வெனிஸ் நகரில் பிரபலமான பியாசான் மார்கோ பகுதியில் உள்ள கேஃப் ஃப்ளோரியன் கடையில் முதல் முதலாக அறிமுகம் ஆகி இன்றளவும் காஃபிக்குப் பெயர் பெற்ற இடமாக இருந்து வருகிறது.  கப்பல்களைக் காப்பீடு செய்யும் நிறுவனம் லாயிட்ஸ் ஆஃப் லண்டன் முதலில் காஃபிக் கடையாகத் தொடங்கப்பட்டதாம்.  அமெரிக்கக் கண்டம் இன்றைய நாட்களில் காஃபி உலகிலேயே அதிகம் குடிக்கும் கண்டமாக இருந்தாலும் தென் அமெரிக்காவில் 1668 ஆம் ஆண்டிலே தான் காஃபி முதல்முதலாகச் சுவைக்கப்பட்டது.  1773 ஆம் ஆண்டின் பாஸ்டன் டீ பார்ட்டி, கிரீன் டிராகன், காஃபி ஹவுஸில் தான் திட்டமிடப்பட்டது.  வால் ஸ்ட்ரீட்டில் உள்ள காஃபிக் கடைகளில் தான் நியூயார்க் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச், பேங்க் ஆஃப் நியூயார்க் முதலியன ஆரம்பிக்கப்பட்டு இன்று உலகின் நிதி நிலைமையையே கணிக்கும் ஓர் இடமாக மாறிவிட்டிருக்கிறது.

முதல் முதலாகத் தென் அமெரிக்காவில் 1720 ஆம் ஆண்டுகளில் காஃபிப் பயிர் பயிர் செய்யப்பட்டிருக்கிறது. இன்று உலக அளவில் கிட்டத்தட்ட 60 நாடுகளில் காஃபி உற்பத்தி செய்யப்படுகிறது.  காஃபி அதிகம் அருந்தும் நாடுகளில் அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் ஆகியவை முதலிடங்களைப் பெறுகின்றன.  17 ஆம் நூற்றாண்டில் இந்தியாவிலிருந்து பாபா பூடன் என்பவர் மெக்கா, ஏமன் போன்ற நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டபோது காஃபி குறித்து அறிந்து கொண்டார்.  அவர் இந்தியா வந்து அனைவருக்கும் அந்தச் செய்தியைப் பரப்பியதோடு அல்லாமல் சிக்மகளூர் மாவட்டத்தின் சந்திரகிரி மலைப் பிராந்தியத்தில் காஃபியைப் பயிராக்கினார்.  அதன் பிறகு நிகழ்ந்தது குறித்துச் சொல்ல வேண்டியதில்லை.  அதன் பின்னர் நம்மை ஆள வந்த பிரிட்டிஷார் வணிக ரீதியாகக் காஃபிப் பயிரைப் பயிரிட்டு அறிமுகம் செய்ய ஆரம்பித்தனர். காஃபியில் கப்புச்சீனோ, லாட்டே, போன்ற கலவைகளில் கலக்கப்படும் காஃபி பிரபலமானவை.  வெளிநாடுகளில் பெரும்பாலும் பால் சேர்க்காத காஃபியை மட்டுமே அருந்துகிறார்கள். இந்தியாவிலும் அதிசயமாக காஃபி வட மாநிலங்களில் பிரபலம் ஆகவில்லை.  காஃபிக்குப் பெயர் போன மாநிலங்கள் கர்நாடகாவும், தமிழ்நாடும் தான்.


எங்க பிறந்த வீட்டில் குழந்தைகளுக்குக் காஃபி கொடுப்பதில்லை.  பசும்பாலோ அல்லது கஞ்சியோ தான் கொடுப்பார்கள்.  கிட்டத்தட்டப் பத்து வயது வரை காஃபியின் சுவையே அறியாமல் வளர்ந்த நான் பின்னர் பள்ளி மாணவிகளின் கேலியினால் காஃபிதான் வேணும்னு வீட்டில் அடம் பிடித்துக் காஃபி குடிக்க ஆரம்பித்தாலும் அப்படி ஒண்ணும் காஃபி பிடிக்கலை.  அதோட எங்க அப்பா வீட்டில் மலையாளக் காஃபி தான்.   ரெட்டுத் துணி என்று சொல்லப்படும் கெட்டியான காடாத் துணியில் தான் காஃபி வடிகட்டுவார்கள்.  அடுப்பில் வெந்நீரை வைத்துக் (எத்தனை நபரோ அத்தனை தம்பளர்கள் நீர்) கொதிக்க வைத்துக் காஃபிப்பொடியைப் போட்டு அது கொஞ்சம் கொதித்ததும் ஒரு தட்டைப் போட்டு மூடிக் கீழே இறக்கி வைப்பார்கள்.  அதற்குள் பால் காய்ச்சும் படலம் ஆரம்பிக்கும்.   பால் காய்ந்ததும் இறக்கி வைத்த பாத்திரத்திலிருந்து டிகாக்‌ஷனை ரெட்டுத் துணியில் வடிகட்டுவார்கள்.  கடைசியில் சொட்டி டிகாக்‌ஷன் கூட வீணாகக் கூடாதுனு துணியைப் பிழிந்து எடுப்பார்கள். எனக்குப் பிடிக்காதது அதான்! :)  என் அம்மாவிடம் காஃபி ஃபில்டர் இருந்ததாக எனக்கு நினைவிலேயே இல்லை.  முதன் முதல் ஃபில்டர் காஃபி சாப்பிட்டது எங்க சித்தி வீட்டில் சின்னமனூரில்.  அங்கே ஃபில்டரில் காஃபி போடுவதே ஒரு பெரிய வித்தையாக எனக்குத் தெரிந்தது என்றாலும் சில நாட்களிலேயே கற்றுக்கொண்டு நிபுணியாகி விட்டேன்! :)))) அந்தக் காஃபியைக் குடிச்சதும் இங்கே எங்க வீட்டுக் காஃபி பிடிக்காமல் போயிடுச்சு!

காஃபி மஹாத்மியம் தொடரும்!

21 comments:

  1. ஓஹோ... பேஷ்.. பேஷ்.. தொடர்கிறேன்...

    ReplyDelete
  2. எங்கள் வீட்டில் எனக்கு நினைவு தெரிந்த நாள் முதலே காபிதான். என் மகன்களில் ஒருவனுக்கு காபி பிடிக்கும். ஒருவனுக்குப் பிடிக்காது! அவர்களுக்கு சுமார் 10 வயதுக்குப் பின்னர்தான் காஃபி அறிமுகப் படுத்தினோம்.

    ReplyDelete
  3. கர்நாடகாவில் Baட்டக் காபி என்று சொல்வார்களாம். Baட்ட என்றால் துணியாம். அதுவும் இதே போலத்தான். நீங்கள் சொல்வதுபோல துணியைப் பிழிந்து சாப்பிடவேண்டும் என்றால் ஒரு மாதிரித்தான் இருக்கும்.
    :)))

    ReplyDelete
  4. வாங்க டிடி, நாளைக்குக் காஃபி போடறச்சே படம் முடிஞ்சால் (நினைவு வரணும்)எடுத்துப் போடப் பார்க்கிறேன். :)))))

    ReplyDelete
  5. ஆமாம், என்னோட பிறந்த வீட்டில் எங்களுக்கெல்லாம் காஃபி கொடுத்ததே இல்லை. ஆனால் எங்க மன்னி தன் பெண்ணுக்கு ஒரு வயசில் இருந்தே காஃபி பழக்கி விட்டார். அதே அவளோட அண்ணா, என் அண்ணா பையர் காஃபி, டீ, பால் என எதுவுமே நோ தான்!

    ReplyDelete
  6. ஆமாம், இந்தத் துணியில் வடிகட்டினால் துணி வாசனை வராப்போல் தான் இருக்கும். :))) நமக்கெல்லாம் நாக்கு முழ நீளமாச்சே! :)

    ReplyDelete
  7. எனக்கு காபி பிடிக்கும் ஆனால் மனைவியும் பெண்ணும் நோ காபி

    ReplyDelete
  8. காஃபி ஆராய்ச்சி நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  9. காஃபி ஆராய்ச்சி கதை நன்றாக உள்ளது.சுவையான காஃபி போடுவதும் ஒரு கலைதான்.

    உங்கள் காஃபி கதையைப் படிச்சதும் என் உறவினப் பெண் ஒருவர் சொன்ன சம்பவம் நினைவு வந்தது.

    அவர் பிறந்த வீட்டில் காஃபியே போட்டதில்லயாம்! திருமணமான புதிதில் அவர் மாமியார் 'ஃபில்டரில் காஃ பிப்பொடியைப் போட்டு தண்ணீர் விடு. டிகாக்ஷன் இறங்கினதும் நான் வந்து கலக்கிறேன்' என்றாராம். இவருக்கு தண்ணீரைக் கொதிக்க வைக்க வேண்டும் என்பது கூட தெரியாதாம். குளிர்ந்த நீரை பொடியில் விட்டு வைத்து விட்டாராம். அன்று மாமியாரிடம் வாங்கின திட்டு இப்பவும் காஃபி போடும்போதெல்லாம் நினைவு வரும் என்பார்!

    ReplyDelete
  10. பத்து வயதுவரை குடிக்காத காப்பிக்கே இவ்வளவு நீளமான கட்டுரையா?

    ReplyDelete
  11. காஃபி மஹாத்மியம்! :)))))

    தொடரட்டும். நானும் தொடர்கிறேன்.

    ReplyDelete
  12. வாங்க எல்கே, காஃபி பிடிக்காதவங்க பலர் இருக்காங்க. :))) அப்போ வீட்டில் உங்களுக்கு மட்டும் காஃபியா? செலவு மிச்சம்! உண்மையாகவே! :)

    ReplyDelete
  13. வாங்க கோமதி அரசு, எல்லாம் ஒரு பதிவைப் படிச்சதன் விளைவு தான்! :))))

    ReplyDelete
  14. வாங்க ராதா பாலு, முதல் வரவுக்கு நன்றி. நீங்களும் திருச்சினு பார்த்தேன். திருச்சியிலே எங்கே இருக்கீங்க?

    ஹாஹாஹா, நீங்க சொன்ன சம்பவம் நிஜமாவே ஆச்சரியம் தான்! :))))

    ReplyDelete
  15. வாங்க வெங்கட், நீங்க காஃபி பிரியர் இல்லையா?

    ReplyDelete
  16. வாங்க செல்லப்பா சார், குடிக்காத காஃபிக்குத் தான் நீளமாக் கட்டுரை எழுதணும். :))) இன்னொரு பாகமும் போட்டிருக்கேன். முடிஞ்சாப் படிச்சுக் கருத்துச் சொல்லுங்க. :))))) இன்னும் இருக்கு, ஆனாச் சுருக்கிட்டேன்.

    ReplyDelete

  17. ஆஹா... பேஷ் பேஷ், இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்
    (பின்னூட்டங்களைச் சொல்கிறேன் )

    ReplyDelete
  18. ஹாஹாஹா, ஜிஎம்பி சார், இதுக்கெல்லாம் அசந்துடுவோமா என்ன! :))))

    ReplyDelete
  19. இங்கே வீடுகளில் இன்றைக்கும் காப்பியை டீ போடுவது போல நீரில் காப்பித் தூளைப்போட்டு வடிகட்டி பாலை விட்டுக் கொடுப்பார்கள். ரொம்ப கஷ்டகாலமாக இருக்கும்.
    ஹோட்டல்களில் கோத்தாஸ் காப்பி தான். செம டேஸ்ட்!
    சின்ன டம்ப்ளர்களில் (அதிலும் பை டூ என்று பங்கு போட்டுக் குடிப்பார்கள்) எச்சில் பண்ணி இவர்கள் குடிப்பதைப் பார்க்க ஆயிரம் கண் போதாது!

    அட! ராதா பாலு இங்கே வந்திருக்கிறாரே! எனது நீண்ட நாளைய பத்திரிகை உலகத் தோழி. ஆனால் இதுவரை சந்தித்ததில்லை.

    ReplyDelete
  20. @ஸ்ரீராம், அது Batte (பட்டே) காப்பி.

    ReplyDelete
  21. வாங்க ரஞ்சனி, அழைத்ததும் வந்ததுக்கு முதலில் நன்றி. :)

    கோத்தாஸ் காஃபினு தெரியாது. ஆனால் ஹோட்டல்களில் காஃபி நன்றாக இருக்கும். ஒருவேளை அதான் கோத்தாஸ் காஃபியோ என்னமோ! :)))

    ராதாபாலுவை உங்களுக்குத் தெரியுமா? பலரை உங்களுக்குத் தெரிந்திருக்கிறது. நீண்டநாட்களாக எழுதுகிறீர்கள் இல்லையா? ஆனால் எனக்கு இப்போ இரு வருடங்களாகத் தான் உங்களை அறிமுகம். :)))

    ReplyDelete