எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, March 31, 2014

டெல்லி சலோ! நெஞ்சு பொறுக்குதில்லையே! :(

வருடம் 1919  மாதம் ஏப்ரல்  தேதி 13. சீக்கியர்களின் பைசாகி கொண்டாட்டங்கள் நடைபெறும் தினம்.  குரு கோவிந்த் சிங் "கால்ஸா" என்னும் சீக்கிய அறப்படை இயக்கத்துக்கு அடிக்கல் நாட்டிய நிகழ்வு. அம்ருத்சரில் இந்நாள் மிகச் சிறப்புடன் கொண்டாடப்படும்.  இப்போதும் கொண்டாடுவார்கள். அம்ருத்சரில் உள்ள ஜாலியாவாலாபாக் என்னும் பூங்காவின் திடலில் அக்கம்பக்கம் கிராமத்தில் இருந்து எல்லாம் ஆண், பெண், குழந்தைகள் எனப் பல்லாயிரக் கணக்கானோர் கொண்டாட்டத்துக்காகக் கூடினார்கள். நாற்புறமும் உயர்ந்த மதில்களால் சூழப்பட்டிருந்த இந்தத் திடலுக்குச் செல்ல ஒரே ஒரு குறுகிய வழி மட்டும் தான் உள்ளே செல்லவும், வெளியே வரவும் இருந்தது. இன்னொரு வாயிலும் இருந்தாலும் அது வீரர்களால் காவலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தது.


நாடெங்கும் கொந்தளித்துக் கொண்டிருந்த நேரம் அது.  திலகர் தலைமையில் உருவான சுதேசி இயக்கம் விஸ்வரூபம் எடுத்துக் கொண்டு மார்ச் ஒன்றாம் தேதி 1919 ஆம் ஆண்டு சத்தியாக்கிரகமாக உருவெடுத்தது.  பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இந்த இயக்கத்தைத் தங்கள் ஆட்சிக்கு வந்த வினையாகக் கருதினார்கள். இதை வளரவிட்டால் நாம் ஆட்சி செய்வது கஷ்டம் என்றும், முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்றும் நினைத்தனர்.  அவர்கள் நினைப்புக்கு ஏற்ப அப்போது சிட்னி ரெளலட் தலைமையில் அமைக்கப்பட்ட குழு பஞ்சாப், வங்காளம் ஆகிய பகுதிகளை மட்டும் கவனமாக ஆராய்ந்து ஊடகங்களைக் கட்டுப்படுத்தவும், ஆர்ப்பாட்டக்காரர்களை எவ்வித விசாரணையுமின்றிக் கைது செய்து சிறையில் அடைத்து வைக்கவும், அனுமதியோ தக்க வாரன்டோ இல்லாமல் எவரையும் சிறையில் அடைக்கவும் காவல்துறையினருக்கு வழி வகுத்துச் சட்டம் இயற்றப்பட்டது.  இது தான் ரெளலட் சட்டம் என்னும் பெயரில் நடைமுறைக்கு வந்தது.

இதை எதிர்த்து மக்கள் பெருமளவில் ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்தினதோடு அல்லாமல் தலைவர்கள் கைதையும் எதிர்த்தே ஜலியாவாலாபாக்கில் பெரும் கூட்டமாகத் திரண்டனர். அன்று கூட்டம் கூட்டவும், பொதுக்கூட்டங்கள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டிருந்தும் அதையும் மீறியே இவ்வளவு பெரிய கூட்டம் கூடியது.  அப்போது அங்கே அருகிலுள்ள ராணுவக் கன்டோன்மென்டில் இருந்து  ராணுவ ஜெனரல் ரெஜினால்ட் டையர் என்பவன் வரவழைக்கப்பட்டான்.  அவனுக்குக் கீழ் 65 கூர்க்காப் படை வீரர்களும் 25 பலூசிஸ்தான் வீரர்களும் இருந்தனர்.  அவர்களை அழைத்து வந்த டையர் அங்கே கூடி இருந்த மக்களுக்கு எவ்வித எச்சரிக்கையும் கொடுக்காமல் செல்வதற்கு இருந்த ஒரே வழியையும் அடைத்த வண்ணம், துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டான்.





அதோடு இல்லாமல் மேலும் இரண்டு யுத்த வண்டிகளில் மெஷின்கன்களோடும் வந்திருந்தான்.  ஆனால் அவை வெளியே நிறுத்தப்பட்டிருந்தன. முக்கியமான வழிகளை ராணுவ வீரர்களை நிறுத்திச் சுட வைத்த டையர் குறுகிய வழியாக வெளியேறும் மக்களையும் கொஞ்சமும் ஈவு இரக்கமில்லாமல் சுடச் சொன்னான்.  கூட்டத்தைக் கலைக்கச் செய்த எச்சரிக்கையாக அவன் இதைச் செய்யவில்லை என்றும் இந்தியர்களின் கீழ்ப்படியாமைக்குக் கொடுத்த தண்டனை என்றும் கூறி இருக்கிறான்.  பத்து நிமிடங்கள் நீடித்த இந்தத் துப்பாக்கிச் சூடில் ஒரு ராணுவ வீரனுக்கு 33 முறை என்னும் விகிதத்தில் மொத்தம் 1650 முறைகள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இறந்தவர்களில் பெண்களும், சிறுவர், சிறுமிகளும் அதிகம்.

இந்தப் படுகொலையில் அதிகாரபூர்வமாக 379 பேர் கொல்லப்பட்டதாக அறிவித்தாலும், இறந்தவர் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் என்று சொல்லப்படுகிறது. ஆயிரக்கணக்கானோர் காயமும் அடைந்தனர்.  பலர் தங்கள் உயிர் தப்பவேண்டி அங்கிருந்த கிணற்றில் போய் விழுந்தனர்.  அப்படி இறந்தவர்களும் அநேகம்.  அந்தக் கிணறு அன்று நீரால் நிரம்பாமல் மக்களின் ரத்தத்தால் நிரம்பியது. ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருந்ததால் காயமடைந்தவர்கள் வெளியே சென்று மருத்துவம் பார்த்துக்கொள்ளக் கூட முடியாமல் அங்கேயே இருக்கும்படியும் நேரிட்டது. அப்போது பஞ்சாபில் இருந்த துணை ஆளுநர் மைக்கேல் ஓட்வையர் தனக்கு இவை அனைத்தும் உடன்பாடானவைகளே என்ற செய்தியை இங்கிலாந்துக்கு  அனுப்பி மகிழ்ந்தார்.  இங்கிலாந்தின் ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸ் என்னும் பிரபுக்கள் சபையில் டையரைப் பாராட்டினார்கள்.  அவன் அங்கே ஒரு மாபெரும் வீரதீரக் கதாநாயகனாகச் சித்திரிக்கபப்ட்டான்.  தன் மேலதிகாரிகளுக்கு அளித்த வாக்குமூலத்தில் மக்கள் மனதிலே பெரும் தாக்கத்தை ஏற்படுத்த எண்ணிக் கூட்டம் சிதறிப் போகும் வரை தான் சுட்டதாகவும், இது குறைவு என்றும் இன்னும் அதிகம் சுட்டிருக்கலாம் எனவும்  தான் நினைத்த அளவுக்குத் துப்பாக்கிச் சூட்டை இன்னும் அதிகம் நிகழ்த்த முடியவில்லை என்றும் கூறியதோடு இந்நிகழ்ச்சியின் மூலம் பஞ்சாப் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் உள்ள மக்களுக்கு மனதில் ஒரு குலை நடுக்கத்தை ஏற்படுத்த நினைத்ததாகவும் தான் அவசியத்துக்கு  மேல் கடுமை காட்டியதாக நினைக்கவில்லை என்றும் இன்னும் கடுமை காட்டி இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளான்.

பின்னால் 1920 களில் ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் எனப்படும் மக்கள் சபையில் வின்ஸ்டன் சர்ச்சிலால் டையருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது.

மற்றப் படங்கள் தனிப் பதிவாக வரும்.

18 comments:

  1. பார்க்கும்போதே அதிர வைக்கும் இடம் இது. எத்தனை எத்தனை பெண்களும், குழந்தைகளும் உயிரைக் காத்துக்கொள்ள ஓடி இருப்பார்கள், அவர்களின் ஓலம் இன்னும் இங்கே ஒலிப்பது போலவே தோன்றும்....

    ReplyDelete
  2. //ந்தியா முழுவதும் உள்ள மக்களுக்கு மனதில் ஒரு குலை நடுக்கத்தை ஏற்படுத்த நினைத்ததாகவும் தான் அவசியத்துக்கு மேல் கடுமை காட்டியதாக நினைக்கவில்லை என்றும் இன்னும் கடுமை காட்டி இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளான்//

    அப்படிப் போடு!

    ReplyDelete
  3. கொடூரத்தின் உச்சகட்டம்.

    ReplyDelete

  4. நான் அமிர்தசரஸ் போயிருக்கிறேன். ஜாலியன்வாலாபாக் வுக்கும் சென்றிருக்கிறேன். இதையெல்லாம் எழுத்தில் படிப்பதைவிட நேரில் காணும் முறையில் அட்டென்பரௌவின் “ காந்தி திரைப்படத்தில் காட்டியிருக்கிறார்கள் நேரில் கண்ட இடத்தையும் திரைப்படத்தில் கண்ட காட்சியையும் நினைத்தால் ஐயோ நெஞ்சு பொறுக்கவில்லையே.

    ReplyDelete
  5. படித்துக் கொண்டு வரும்போதே மனது தவித்துவிட்டது. திரு GMB சொல்லியிருப்பது போல காந்தி திரைப்படத்தில் இதையெல்லாம் மிகவும் தத்ரூபமாக காட்டியிருந்தார், அட்டன்பரோ.

    வந்துட்டேன்!

    ReplyDelete
  6. வாங்க டிடி வரவுக்கு நன்றி.

    ReplyDelete
  7. ஆமாம், வெங்கட், தாக்கம் அதிகம் இருந்தது உண்மை தான்.

    ReplyDelete
  8. வாங்க ஶ்ரீராம், இது ஒண்ணுமே இல்லை. அங்கே ஒரு ம்யூசியம் இருக்கு. அதிலிருக்கும் படங்களையும், பேப்பர் கட்டிங்குகளையும் பார்த்தால், படிச்சால் வயிறு எரியும். :(

    ReplyDelete
  9. அந்த ம்யூசியத்தைப் படம் எடுக்கக் கூடாதுனு கண்டிப்பான அறிவிப்பு! :(( படங்கள் அவ்வளவு மோசம், கொடூரத்தின் உச்ச கட்டம்.

    ReplyDelete
  10. ஜிஎம்பி சார், காந்தி படத்தில் பலமுறைகள் பார்த்தாலும் நேரில் பார்க்கையில் தாக்கம் அதிகமாத் தான் இருக்கு! :(

    ReplyDelete
  11. வாங்க ரஞ்சனி, நேரில் பார்க்கையில் இன்னும் அதிகமான தவிப்பு ஏற்படுகிறது. எப்படி எல்லாம் கஷ்டப்பட்டிருக்காங்க, எத்தனை பேர் செத்திருக்காங்க, இதைப் போய்க் கத்தியின்றி, ரத்தமின்றிப் பெற்ற சுதந்திரம்னு எதை வைச்சுச் சொல்றாங்கனு புரியறதில்லை! :(

    ReplyDelete
  12. ஜாலியன் வாலாபாக் நிகழ்வு கொடுமையானது! படங்கள் நினைவை கிளறின! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  13. அங்கே ஒரு ம்யூசியம் இருக்கு. அதிலிருக்கும் படங்களையும், பேப்பர் கட்டிங்குகளையும் பார்த்தால், படிச்சால் வயிறு எரியும். :(//

    நீங்கள் சொல்வது போல் அந்த மியூசியத்தில் உள்ள படங்களை பார்த்த போது கண்கள் கலங்கி இப்படியும் கொடூரம் உண்டா என்ற கேள்விகள் மனதில் வரும்.

    அந்த குறுகிய வழியும், அந்த கிணறும் கைகுழந்தைகள், பெண்கள், வயதானவர்கள், சிறுவர்கள் என்று அனைத்து தரப்பினரும் அங்கும் இங்கும் ஓடும் காட்சி சுவரில் ஏற முடியாமல் சுடப்பட்ட பரிதாபம்.

    சுவரில் குண்டு துளைத்த இடங்களில் அடையாளம் இட்டு இருப்பதைப் பார்க்கும் போது நெஞ்சு துடித்துதான் போகும்.
    நாங்கள் அந்த இடத்தைப் பார்த்து வந்தபின் நீண்ட நாள் மனதில் ஒரு பாரம் இருந்தது.

    ReplyDelete
  14. வாங்க சுரேஷ், வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  15. வாங்க கோமதி அரசு, எல்லையோர மாநிலங்கள் ரொம்பவே கஷ்டப்பட்டிருக்கின்றன. நாங்க முதல்முறையா 74 ஆம் வருஷம் ராஜஸ்தான் போனப்போ அங்கு வந்து குடியேறி இருந்த பல அகதிகளைச் சந்தித்தது உண்டு. ஒவ்வொருவர் அனுபவமும் பயங்கரமாக இருக்கும். சிலவற்றை எழுதவே முடியாது! இப்படி எல்லாம் கஷ்டப்பட்டுக் கிடைத்த சுதந்திரத்தைத் திரும்பத் திரும்ப ஏன் கத்தியின்றி, ரத்தமின்றி பெற்றதுனு சொல்றாங்கனு தான் புரியலை. :(

    ReplyDelete
  16. கொடூரம்....:((

    அன்று எத்தனை பேர் உயிருக்கு பயந்து அல்லாடியிருப்பார்கள்...

    ReplyDelete
  17. வாங்க ஆதி, வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete