
கோசலை பெரிதும் விம்மி அழ, சுமித்திரை அனைவரையும் தேற்ற, தசரத மன்னனோ தேரைத் தொடர்ந்து, "ராமா, லட்சுமணா, சீதா!" எனக் கதறியபடி பின் தொடர சுமந்திரர் தேரை ஓட்டினார். ராமர் தேரை வேகமாய் ஓட்டுமாறு சுமந்திரரிடம் சொல்ல தேரும் வேகமாய் ஓட ஆரம்பித்தது. பின் தொடர்ந்த தசரதரைத் தடுத்த மந்திரிமார், "ராமன் வனவாசம் முடிந்து சுகமாய்த் திரும்ப வேண்டுமானால், நெடும்பயணம் மேற்கொண்டிருக்கும் அவனைத் தொடர்ந்து தாங்கள் செல்வது சாஸ்திர விரோதம்!" எனக் கூறித் தடுக்கின்றார்.
துளசி ராமாயணட்த்தில் இந்நிகழ்ச்சிகள் பெரும்பாலும் சுருக்கமாகவே சொல்லப் பட்டிருப்பதாய்த் தெரிகின்றது, மேலும் முதன் முதலில் காசிக்குச் சென்ற குமரகுருபரர் மூலமே கம்பனின் ராமாயணம் பற்றி அறிய வந்த துளசிதாசர் தாமும் "ராம சரித மானச" என்னும் காவியத்தை எழுதியதாகவும், ஆகவே அவர் பாடல்களில் பெரும்பாலும் ராமனும், சீதையும் தெய்வங்களாகவே காட்டப்பட்டிருப்பதாயும் அறிகின்றோம்.
தேரோடு ஓடிய தசரத மன்னன் தன் மந்திரிகளால் தடுக்கப் பட்டவன், அரண்மனைக்குத் திரும்பும் வழியில் கீழே விழுந்து விட கோசலையும், கைகேயியும் சேர்ந்து அவரைத் தூக்க முயல தசரதர், கைகேயியைத் தடுக்கின்றார். "நீ என் மனைவியே அல்ல! உனக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை! பரதன் ஒருவேளை இந்நாட்டை ஏற்றானாகில், நான் இறந்தபின்னர் அவன் எனக்கு அளிக்கும் கடன்கள் என்னை வந்து அடையாமல் போகட்டும்! ஒரு விதவையாக நீ இந்நாட்டை அனுபவித்துக் கொண்டு வாழ்வாயாக!" என்கின்றார். தேர் அயோத்தியின் எல்லையைக் கடந்து விட்டது என்ற செய்தி மன்னனுக்கு வந்து சேர, கதறி அழுத மன்னன், "கோசலை, எங்கே இருக்கின்றாய்? எனக்குத் திடீரெனக் கண் தெரியாமல் போய்விட்டதே? என்னை உன் இருப்பிடம் கொண்டு செல்!" எனக் கூறக் கோசலையின் மாளிகை வந்து சேருகின்றார்கள் அனைவரும். அப்போது அறிவிற் சிறந்த, மிக்க ஞானம் உடையவள் ஆன சுமித்திரை தன் தெளிவான பேச்சால் அனைவரையும் தேற்றுகின்றாள்: "ராமன் காட்டுக்குச் செல்வது குறித்து வருந்த வேண்டாம், இதனால் அவனுக்குப் பெருமையே, காடும் அவனுக்கு நாடாக மாறும், காற்றும் தென்றலாய் வீசும், சூரிய, சந்திரர்கள் அவனுக்கு மகிழ்வையே தருவார்கள். அவனுக்குத் துரதிர்ஷ்டம் என்பதே இல்லை. கோசலை நீ அனைவருக்கும் ஆறுதல் சொல்வதிருக்க இவ்வாறு துக்கத்தில் ஆழலாமா?" என்றெல்லாம் சொல்கின்றாள். இது இங்கே நிற்கட்டும். காட்டுக்குச் சென்று கொண்டிருந்த ராமர் தன்னைப் பின் தொடர்ந்த மக்களைப் பார்த்து நாட்டுக்குத் திரும்புமாறு கேட்க மக்கள் மறுத்து ராமரைப் பின் தொடர்கின்றனர்.
தமஸா நதிக்கரையை அடைந்த ராமரின் தேர் அன்றிரவு அங்கே ஓய்வெடுக்கத் தங்குகின்றனர். அப்போது சுமந்திரரிடம் ராமன், மக்கள் நன்கு அயர்ந்து தூங்கும்போது நதியைக் கடந்துவிடவேண்டும் எனவும், மக்களுக்குத் தெரியவேண்டாம் எனவும், தேரை அயோத்தி நோக்கிச் சற்று தூரம் ஓட்டிவிட்டுப் பின்னர் வேறுவழியாக வந்து அழைத்துச் செல்லுமாறும் கூறுகின்றார். அம்மாதிரியே சுமந்திரரும் செய்ய கோசல நாட்டையும், அதன் கிராமங்கள், நகரங்கள், நதிகளையும் கடந்து கங்கைப் பிரதேசத்துக்குத் தேர் வந்து சேர்கின்றது. ராமர் அங்கே சுமந்திரரைப் பிரிய எண்ணுகின்றார். ஆனால் கம்பரோ முதன் முதல் தேர் நிற்கும் இடத்திலேயே சுமந்திரர் பிரிந்ததாய்க் கூறுகின்றார். அதன் பின்னர் ராமன், தன் இளவல் லக்குவனோடும், சீதையோடும் காட்டுவழியில் இரண்டு யோசனைகள் இரவில் வழி நடந்ததாய்க் கூறுகின்றார்.
"தையல் தன் கற்பும் தன் தகவும் தம்பியும்
மை அறு கருணையும் உணர்வும் வாய்மையும்
செய்ய தன் வில்லுமே சேமமாகக் கொண்டு
ஐயனும் போயினான் அல்லின் நாப்பணே!"
இவ்விதம் காட்டு வழியில் சென்றவர்கள் உதயத்தில் இரண்டு யோசனை தூரம் கடந்ததாய்த் தெரிவிக்கும் கம்பன் இவ்வாறு கூறுகின்றார்:
"பரிதி வானவனும் கீழ்பால் பருவரை பற்றாமுன்னம்
திருவின் நாயகனும் தென்பால் யோசனை இரண்டு போனான்
அருவி பாய் கண்ணும் புண்ணாய் அழிகின்ற மனமும் தானும்
துரித மான் தேரில் போனான் செய்தது சொல்லலுற்றாம்."
என்று சொல்லிவிட்டுப் பின் சுமந்திரரைப் பின் தொடர்கின்றார் கம்பர். நாம் வால்மீகியின் கருத்துப் படி ராமன் என்ன செய்தான் என்று பார்ப்போம். கங்கைக் கரையை வந்தடைந்தனர் ராம, லட்சுமணர்கள் சீதையோடு, அங்கே அப்போது ஸ்ருங்கவேரபுரம் என்னும் இடத்தில் தங்க முடிவு செய்கின்றனர். அந்த இடத்தின் அரசன் ராமனின் நீண்ட நாள் நண்பன் என்றே வால்மீகி கூறுகின்றார். நிஷாதார்கள் என்னும் அந்த வம்சத்தைச் சேர்ந்த மன்னன் ஆன குகன் என்பவன் ராமன் வந்திருப்பதை அறிந்து தன் மந்திரி, பரிவாரங்களுடன் கால்நடையாகவே ராமனை நோக்கி வந்தானாம். அதைப் பார்த்த ராமன் தன் நண்பனைக் காணத் தம்பியோடு வேகமாய் எழுந்து ஓடிச் சென்று கட்டித் தழுவிக் கொண்டாராம். ராமரை வரவேற்ற குகன் ஏராளமான தின்பண்டங்களையும், காய், கனிகளையும் அளிக்கின்றானாம். ஆனால் ராமன் தாம் விரதம் மேற்கொண்டதைச் சொல்லி அதை மறுத்துவிட்டுத் தண்ணீர் மட்டுமே அருந்திவிட்டு ஓய்வெடுக்க, குகன் காவல் புரிகின்றானாம். கூடவே காவல் இருந்த லட்சுமணனைக் குகன் படுக்கச் சொல்லியும் படுக்காமல் குகனிடம் தங்கள் குடும்ப நிலவரங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கின்றானாம் லட்சுமணன். பொழுது விடிந்தது. கங்கையைக் கடக்க வேண்டும். குகனின் உதவியால் படகு ஒன்று கொண்டு வரப்படுகின்றது. அனைவருக்கும் அதாவது, சுமந்திரர், குகன் மற்றும் அவன் பரிவாரங்கள் அனைவருக்கும் தசரதனுக்குப் பின் நாடாளப் போகும் பரதனுக்குக் கீழ்ப்படியுமாறு சொல்லிவிட்டுத் தன்னை அங்கேயே தங்கச் சொல்லும் குகனின் வேண்டுகோளை மறுக்கின்றார். மேலும் ஆலமரத்தின் பாலைக் குகனை விட்டுக் கொண்டுவரச் சொல்லி, அதை முடியில் தடவி, லட்சுமணனும், ராமனும் சடை முடி தரித்துக் கொண்டனராம். பின்னர் குகனின் ஆட்கள் படகைச் செலுத்த கங்கையைக் கடக்கின்றனர். கடந்து அக்கரையை அடைந்து லட்சுமணனை முன் போகச் சொல்லி, சீதையை நடுவில் விட்டு ராமர் பின் தொடரப் பயணம் தொடர்கின்றது. காட்டில் ஒரு மரத்தடியில் இரவைக் கழிக்கத் தீர்மானிக்கின்றனர்.
காட்டுக்கு போன் பின் இலட்சுமணன் தூங்கவே இல்லைதானே?
ReplyDelete